மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 07

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 07

மனம் கொத்திப் பறவை! - 07
மனம் கொத்திப் பறவை! - 07
மனம் கொத்திப் பறவை! - 07
மனம் கொத்திப் பறவை! - 07

ந்த அமெரிக்க எழுத்தாளரின் வயது 73. ஏழு நாவல்கள் மட்டுமே எழுதி

இருக்கிறார். ஆனால், மைக்கேல் ஜாக்சன் அளவுக்கு உலகம் பூராவும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவுக்கும் அவருடைய நாவல்களை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் வெகு அரிது. அந்த நாவல்களை விளக்கியே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வந்துள்ளன. அவர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்பதால், நானும் அவருடைய ரசிகனே. (எப்படியும் விரைவில் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்). இவருடைய Gravity's Rainbow என்ற நாவலை இதோடு ஏழு முறை படித்துவிட்டேன். பல இடங்கள் புரியவில்லை. தெர்மோ டைனமிக்ஸின் இரண்டாவது விதி தெரிந்தால்தான் புரியும் என்றார்கள். அந்த விதியைப் படித்தேன். ஏதோ entropy, δq/T என்றெல்லாம் வருகிறது. இதை எல்லாம் புரிந்துகொள்ள நம் தலைவிதிதான் சரியில்லை என்று ஓடி வந்துவிட்டேன். அந்த எழுத்தாளரின் பெயர் தாமஸ் பிஞ்ச்சன் (Thomas Pynchon). இன்று வரை அவர் எப்படி இருப்பார், எங்கே வசிக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஒரு பேட்டிகூடக் கொடுத்தது இல்லை.

பிஞ்ச்சன் அப்படி இருக்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனான நான் அப்படி இருக்க முடியுமா? என் புத்தகங்களின் பின் அட்டையில் உள்ள என் புகைப்படங்களை ஒரு சென்டிமீட்டர் பெரிதாகப் போட்டால் என்ன என்று என் பதிப்பாளரிடம் அவ்வப்போது நான் சண்டை போடுவது உண்டு. 'பக்கத்துக்குப் பக்கம் உங்கள் போட்டோவைப் போட்டுவிடுகிறேன்!' என்று சொல்லிவிட்டு, ஏற்கெனவே வெளியிடும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவில் மேலும் ஒரு மில்லிமீட்டர் குறைத்துவிடுவார் பதிப்பாளர்.

என் எழுத்தில் மது விலக்கை அமல்படுத்துவது என்று முடிவு செய்து இருக்கிறேன். காரணம், சமூகவியலும் அரசியலும் சார்ந்தது. நம் நாட்டில் நடப்பது ஜனநாயகமே அல்ல என்பது என் கருத்து. ஜனநாயகத்தில் பொதுஜனமே நாயகர்கள்; ஆட்சியில் இருப்போர் நாயகர்களுக்காகச் சேவை செய்யும் சேவகர்கள். ஆனால், இந்திய நிலைமை அப்படியா இருக்கிறது? ஒருமுறை என் ஐரோப்பியப் பயணத்தின்போது லக்ஸம்பர்க் சென்று இருந்தேன். ஃபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடு களுக்கு நடுவில் உள்ள மிகச் சிறிய நாடு அது. இந்த உலகின் சொர்க்க பூமி களில் ஒன்று. ஒருநாள் இரவுக் காட்சிக் காக அங்கு இருந்த உட்டோப்பியா என்ற சினிமா தியேட்டருக்குச் சென்று இருந்தேன். வரிசையில் என்னுடன் நின்றுகொண்டு இருந்த நண்பர் காதைக் கடித்தார். எனக்குப் பின்னால் நின்று கொண்டு இருந்தவர் அந்த நாட்டின் பிரதம மந்திரி என்று!

நம் நாட்டில் இப்படி எதிர்பார்க்க முடியுமா? ஜனாதிபதி துவங்கி அதிகாரத்தில் உள்ள யாராக இருந்தாலும் சரி, அவர் போக்குவரத்து விதிகளை மீறினால் ஒரு டிராஃபிக் போலீஸ் அவருக்கு அந்த இடத்திலேயே அபரா தம் விதிக்க வேண்டும். இதுதான் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள யதார்த்தம். நம் தேசத்தில் இப்படிச் செய்தால், அந்த போலீஸ்காரரின் நிலை என்னவாகும்?

மனம் கொத்திப் பறவை! - 07

மேலைநாடுகளில் பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவரைப் பெயர் சொல்லி அழைக்க முடியும். இங்கே? சமீபத்தில் நான் ஓர் இலக்கியப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் 'தமிழக முதல்வர் கருணாநிதி' என்று எழுதியிருந்தேன். ஆனால், பத்திரிகையில் கலைஞர் என்று மட்டுமே வந்திருந்தது. கேட்டால் 'அது அப்படித்தான்' என்றார் ஆசிரியர். இலக்கியப் பத்திரிகையே இந்த லட்சணமா என்று நினைத்துக்கொண்டேன். என் கவலை என்னவென்றால், இப்போது நான் 'கலைஞர்' என்று எழுதினால்... அடுத்த ஜெ. ஆட்சியில் (கோவையில் கூடிய கூட்டத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!) 'புரட்சித் தலைவி' என்று எழுத வேண்டியிருக்குமே என்பதுதான்.

நாட்டு நடப்பைப்பற்றி யோசித்துப்பார்த்தால், முடியாட்சியைத்தான் கொஞ்சம் அங்கே இங்கே தட்டி ஒட்டி, ஈயம் பூசி ஜனநாயகம் என்று பெயர் இட்டு வைத்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

இதேதான் குடி விஷயத் திலும். வெளிநாடுகளில் குடி என்பது ஒரு கொண்டாட்டம். ஆனால், இங்கே அது குடியைக் கெடுக்கும் ஆபத்தான விஷயம். அதுவும் குடிப்பவரின் குடியை மட்டும் அல்லாமல் அடுத்தவரின் குடியையும் கெடுக்கிறது. சீர்காழியில் இருந்து இரவில் சென்னைக்குக் கிளம்பிய ஒரு கார், நள்ளிரவில் சென்னைக்கு அருகில் ஒரு ஷேர் ஆட்டோ மீது மோதியது. காரை ஓட்டியவர் குடித்திருந்தார். பெரிய ஆடம்பரமான கார் என்பதால், காரில் இருந்தவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், ஷேர் ஆட்டோவில் இருந்த வர்கள் கூலித் தொழிலாளர்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காகத் தங்கள் சொந்த கிராமத்துக்குச் சென்றுகொண்டு இருந்தவர்கள். மூன்று தொழிலா ளிகளின் உயிர் பறிபோயின. காரணம், குடி. (இதுவே மேற்கத்திய நாடுகளில் நடந்து இருந்தால் காரை ஓட்டியவருக்கு இனிமேல் ஜென்மத்தில் லைசென்ஸ் கிடைத்திருக்காது; ஆனால், இங்கே பணம் பத்தும் செய்யும்)!

இந்தியாவில் எனக்குப் பிடித்த நகரங்களில் ஒன்று டெல்லி. பார்ப்பதற்கு ஓர் ஐரோப்பிய நகரத்தைப் போலவே இருக்கும். டெல்லி மாநகரின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும் - அவர்கள் பி.ஜே.பி-யாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, அந்த நகரை அவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள். அதை நீங்கள் நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பார்க்கலாம். நம் ஊரில் இருப்பதைப்போன்ற ஒரு டாஸ்மாக் கடையை அங்கே பார்க்க முடியாது. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி, ஓர் அழகு. 'என் குழந்தைகள் குடிப்பதை நான் ஆதரிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் குடித்தால் அந்த இடம் கேவலமாக இருக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்' என்றார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித். என் குழந்தைகள் என்று அவர் சொன்னது டெல்லி வாழ் இளைஞர் களை!

மனம் கொத்திப் பறவை! - 07

டெல்லிக்கு அடுத்தபடியாக என்னைக் கவர்ந்த நகரம், பெங்களூரு. எந்த வேலையும் இல்லாமல் அந்த ஊரை அனுபவிக்க வேண்டும் என்றே சில தினங்கள் அங்கே தங்கினேன். 'பாஷ்' ஏரியாவான கோரமங்கலா. காலை உணவுக்காக வெளியே சென்றபோது வழியில் எதிர்ப்பட்டது ஜோதி நிவாஸ். சாப்பிடும் இடம் என்று நினைத்துவிடாதீர்கள். அது ஒரு மகளிர் கல்லூரி. ஆனால், பார்ப்பதற்கு ஏதோ ஃபேஷன் ஷோ நடக்கும் இடம் மாதிரி தெரிந்தது. அடடா, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அழகான பெண்கள். அதைவிட என்னைக் கவர்ந்தது அவர்களின் உடைகள். ஸ்கர்ட், ஜீன்ஸ், டிரவுசர், மிடி என்று பின்னிப் பெடலெடுத்தார்கள். (என்னு டைய சாய்ஸ் டிரவுசர்). எனக்கு ஒரு வீக்னஸ் உள்ளது. இன்பத்தை அனுபவிக்கும்போதே துன்பத்தையும் நினைத்துப் பார்ப்பேன். வேறென்ன? நம் ஊர் கல்லூரி மாணவிகள் அனுபவிக்கும் கொடுமைதான். அவர்கள் ஜீன்ஸும் மிடியும் போட்டாலே, நம் ஆண்கள் எல்லாம் காமக் கொடூரன்களாக மாறி விடுவார்களா என்ன? உண்மையில் இப்படிப் பட்ட சர்வாதிகார, பழமைவாத சட்டங்களைக் கொண்டுவருபவர்கள் பெண்களை மட்டும் அல்லாமல்... ஆண்களையும் சேர்த்தே அவமதிக் கிறார்கள். எந்த ஊரிலும் மாணவ சமுதாயத்தின் மீது இப்படிப்பட்ட அடக்குமுறை திணிக்கப்பட்டது இல்லை.

மனம் கொத்திப் பறவை! - 07

எப்போது பார்த்தாலும் பெங்களூரு திருவிழாக் கோலம் பூண்டதுபோலவே இருக்கிறது. இதற்குக் காரணம், நம்மைவிட பெங்களூருவாசிகள் வாழ்க்கையை பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கே உள்ள மகாத்மா காந்தி சாலையைப் பார்த்தாலே, அது புரிந்துவிடும். பெங்களூரின் ஹேப்பனிங் ப்ளேஸ் என்றால் அதுதான். கொச்சியின் மகாத்மா காந்தி ரோடும் அப்படியே. ஏதோ ஒரு ஸ்பானிஷ் நகரத்துக்குள் நுழைந்துவிட்டதுபோல் இருக்கும். ஆனால், நம் சென்னையின் உத்தமர் காந்தி சாலை (மகாத்மா என்று சொன்னால் தமிழுக்கு ஆகாதாம்!) நம்மைப்போலவே சிடுமூஞ்சித்தனமாக இருக்கிறது. சாலை முழுவதும் அரசு அலுவலகங்கள். கேட்க வேண்டுமா? ஒரே ஆறுதல், அங்கு உள்ள காதர் நவாஸ் கான் ரோடு.

'வெயிலு'க்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்குமார் அந்த அளவுக்குக் கொடுக்கவில்லை. உ.ம்: 'குசேலன்', 'ஆயிரத்தில் ஒருவன்'. சமீபத்தில் 'மதராசபட்டினம்' படம் பார்த்தபோது 'மேகமே, ஓ மேகமே' என்ற பாடலைக் கேட்டதும் தியேட்டரைவிட்டு ஓடி வந்துவிடலாம் என்று தோன்றியது. பக்கத்தில் அவந்திகா இருந்ததால் முடியவில்லை. அவளுக்கு ஆபாசம், வக்கிரம் இல்லாத இதுபோன்ற படங்கள் பிடிக்கும். ஆனால், அதற்குப் பிறகு வந்த 'பூக்கள் பூக்கும் தருணம்' என்ற பாடலைக் கேட்டுச் சொக்கிப்போனேன். (இதுபோல் இன்னும் நாலு பாடல்கள் கொடுத்தால்போதும், பிரகாஷ்குமாருடன் 'பழம்' விடுவேன்!) 'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ', 'மலரே மௌனமா' போன்ற அற்புதமான பாடல்களுக்கு இணையான பாடல். இதை எழுதிய நா.முத்துக்குமார், இனிமேல் முதல்வரின் பாராட்டு விழாக்களில் கலந்துகொள்வதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு இதைப்போல் பல பாடல்களை இயற்ற வேண்டும்!

மனம் கொத்திப் பறவை! - 07

'மதராசபட்டின'த்தின் மற்றோர் அற்புதம் நாயகி எமி. இப்படி ஓர் அமைதியான நடிப்பைச் சமீபத்தில் கண்டது இல்லை. ஆனாலும், படம் எனக்குப் பிடிக்கவில்லை. காதில் ஓவராகப் பூ சுற்றுகிறார் இயக்குநர். 1947-ல் காதலன் பரிதியைப் பிரிந்து எமி லண்டன் சென்றுவிடுகிறார். அதற்குப் பிறகு, அவர் தன் உயிருக்கு உயிரான காதலனைப் பார்க்க இந்தியாவுக்கே வராமல் 2010-ல்தான் வருகிறார். என்ன கொடுமை இது? படம் நடப்பது கி.பி-யா அல்லது கி.மு. 1947ஆ?

ஒரு லெட்டர் போட்டு இருந்தால்கூட ஆர்யா லண்டனுக்குப் பறந்து வந்திருப்பாரே? இயக்குநர் இதைக் கவனிக்காமல் இல்லை. ஒரு கேரக்டர் மூலமாக வயதான எமியைக் கேட்கவைக்கிறார். 'ஏன் இவ்வளவு நாளாக பரிதியைத் தேடி இந்தியா வரவில்லை?' அதற்கு எமி சொல்லும் பதில்: 'என் விதி!'. கையில் துப்பாக்கியுடன் ஆர்யாவோடு சண்டை போடும் அத்தனை போலீஸ்காரர்களையும் ஆர்யா குச்சியைப்போல் உடைத்து உடைத்துப் போடுவதைப் பார்த்தபோது, சுதந்திரம் வாங்குவதற்கு இவர் ஒருவர் போதுமே என்று தோன்றியது. இத்தனை சிக்கலிலும் படம் ஹிட் ஆகி இருப்பதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, கூவத்தில் படகுகள் செல்வது. பழைய மெட்ராஸ் எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள விரும்பும் மக்களின் நாஸ்டால்ஜியா. இரண்டாவது, விஜய்யும் அஜீத்தும் இப்படி 'சுறா', 'அசல்' என்று மொக்கை படங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தால், தமிழ் ரசிகர்கள் என்னதான் செய்வார்கள்?

என் நாவல் 'ஸீரோ டிகிரி'யின் ஆங்கில மொழிபெயர்ப்பு கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் சமகாலத்திய ஏசியன் க்ளாஸிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைக்கப்பட்டு உள்ளதால், எனக்குச் சில அமெரிக்க விசிறிகளும் உண்டு. அதில் ஒருவர் லிண்டா. அவர் சமீபத்தில் டெக்ஸாஸ் சென்று இருந்தபோது பார்த்த ஒரு விளையாட்டுப் பொருளைப்பற்றி எழுதி இருந்தார். அதன் பெயர் Mancala. அச்சு அசல் நம்முடைய பல்லாங் குழி. இது ஆப்பிரிக்க நாடுகளிலும் விளையாடப் படுவதால் இதன் தோற்றம் ஆப்பிரிக்கா என்று ஆய்வுக் குறிப்புகளில்

எழுதிவைத்திருக்கிறார்கள். தவிர, பல்லாங்குழி பல ஆசிய நாடுகளிலும் விளையாடப்படுவதால், இப்போது எனக்கு இதன் தோற்றம்பற்றிய சந்தேகம் வந்துவிட்டது. தமிழ் நாட்டில் இருந்துதான் ஆப்பிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் போனதா? அல்லது, வெளியில் இருந்து வந்ததா?

சின்ன வயதில் என் தெருவில் முதிர்கன்னிகளாக வீட்டில் இருந்த அக்காக்களுடன் அரிக்கேன் வெளிச்சத்தில் பல்லாங்குழி ஆடியது ஞாபகம் வருகிறது. இப்போது அமெரிக்காகாரன் பல்லாங்குழி ஆடுகிறான். நாம் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கிறோம். டி.வி. என்ற சுனாமியில் அடித்துக்கொண்டு போன பல விஷயங்களில் ஒன்று பல்லாங்குழி. (சரி, என்னோடு யாரும் பல்லாங்குழி ஆட வருகிறீர்களா?)

மனம் கொத்திப் பறவை! - 07
மனம் கொத்திப் பறவை! - 07
(பறக்கும்...)