மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 08

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 08

மனம் கொத்திப் பறவை! - 08
மனம் கொத்திப் பறவை! - 08
மனம் கொத்திப் பறவை! - 08
மனம் கொத்திப் பறவை! - 08

சைவ உணவுக்காரர்கள் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடன் படிக்குமாறு

கேட்டுக்கொள்கிறேன். பொதுவாகவே, தங்களுக்கு அந்நியமானவற்றைச் சகித்துக்கொள்ளும் தன்மை மனிதர்களுக்கு இல்லை. இந்தியா மட்டுமல்ல; மேற்கத்திய நாடுகளிலும் இதே நிலைமைதான். கிழக்கு ஜெர்மனியில் சாலையில் தனியாகச் சென்றுகொண்டு இருக்கும்போது திடீரென்று குறுக்கிடும் நியோ நாஜிக்களின் கண்களில் தெரியும் குரூரமும் வன்மமும் மிருகங்களிடம்கூடப் பார்க்க முடியாதது.

ஆனால், சகிப்புத்தன்மை பேசும் எனக்கே ஒரு விஷயத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. நாய்க் கறி. தன் மனைவி மக்களைவிட நாயின் மீது அதிக அன்பு பாராட்டும் ஐரோப்பியர்கள்கூட 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய்க் கறி சாப்பிட்டு இருக்கின்றனர். ஜெர்மனியில் 1986-ல்தான் நாய்க் கறி தடை செய்யப்பட்டது. ஹவாய், கானா, வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாய்க் கறி விசேஷ உணவு. இந்தியாவில் மிசோரம், நாகாலாந்து இங்கெல்லாம் நாய்க் கறி மற்ற மாமிசத்தைவிட விலை அதிகம். விருந்தினர்கள் வந்தால்... நாய்க் கறிதான். கொரியாவில் இன்னும் விசேஷம். நம் ஊரில் சிக்கனைப்போல் அங்கே தெருவுக்குத் தெரு நாய்க் கறிக் கடைகள். அண்டார்டிகா, க்ரீன்லாந்து போன்ற பனிப் பிரதேசங்களைப்பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டை அறுத்துப் பச்சையாகவே தின்பார்கள். வேறு வழி இல்லை. 1912-ம் ஆண்டு

மனம் கொத்திப் பறவை! - 08

அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காகச் சென்ற மூவர் குழு பனிச் சரிவில் சிக்கிக்கொண்டது. ஒருவர் உடனே இறந்துவிட்டார். மற்ற இருவரும் ஸ்லெட்ஜை இழுக்கும் நாய்களையே உணவாகக்கொண்டு 21 நாட்கள் உயிர் பிழைத்திருந்தனர். அந்த பச்சை மாமிசம் ஒப்புக்கொள்ளாமல் 21-ம் நாள் ஒருவர் இறந்துவிட்டார். மூன்றாமவரான Douglas Mawson அதற்கும் மேல் நடந்து சென்று தான் கிளம்பிய கேம்ப்பை அடைந்தார். வெறும் நாய்க் கறியைத் தின்று அவர் கடந்த தூரம் 315 மைல். இப்போது எல்லாம் அண்டார்டிகாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை இல்லை. அதற்காக இட்லி சாம்பார் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. தகவல் தொடர்பு சுலபமாகிவிட்டதால் நாய்க் கறி சாப்பிட்டு உயிர் பிழைக்கும் அளவுக்குத் துன்பம் இல்லை. உலகம் எங்கும் உணவுப் பிரியர்களின் அதிக ஆதரவைப் பெற்றது சுஷி என்ற ஜப்பானிய உணவுதான். அது வேறு ஒன்றும் இல்லை; சமைக்காத பச்சை மீன். உடனே, நம்முடைய மீன் கடைக் கவுச்சியை நினைத்து அருவருப்பு அடையாதீர்கள். துளிகூடக் கெட்ட வாசம் இல்லாமல் 'கடல் புஷ்பம்' என்று சொல்லிக் கொடுப்பார்கள். பார்க்கவும் அப்படித் தான் இருக்கும். ஒரு விள்ளல் சோற்றில் வைத்துக் கொடுக்கப்படும் அதை மீன் என்று நம்பவே முடியாது. தொட் டுக்கொள்ள காரமான ஒரு துவையல். அப்படி ஒரு காரத்தை நம் வாழ்நாளில் சாப்பிட்டு இருக்க மாட் டோம். காரம் எப்படி கண், காது, மூக்கு, வாய் என்று ஆவியைப்போல் பிய்த்துக் கொண்டு போகிறது என்று விசாரித்தேன். பச்சை முள் ளங்கி என்று பதில் வந்தது.

மனம் கொத்திப் பறவை! - 08

னக்கு சங்கர் என்று ஒரு நண்பர். என்னைப்போல் உணவுப் பிரியர். அவரும் நானும் சேர்ந்தால், விதவிதமான உணவு விடுதிகளைத் தேடிப் போவோம். ஒருநாள் திருவள் ளூர் நாயுடு மெஸ்; இன்னொரு நாள் ஊத்துக்கோட்டை செட்டியார் மெஸ். நகரத்தில் உள்ள பிரபலமான ஹோட்டல்களைவிட இப்படிப்பட்ட மெஸ்களில் நான்வெஜ் ரகளையாக இருக்கும். இப்படி ஒருநாள் நாங்கள் கண்டுபிடித்தது நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் கண்பத் ஹோட்டல் அருகில் உள்ள ஒரு ஜப்பானிய உணவு விடுதி. ஒரு சிறிய இடத்தில் 20 ஜப்பானியர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். 'என்ன சாப்பிடலாம்?' என்று ஜப்பானுக்கு அடிக்கடி போய் வரும் ஒரு நண்பரை போனில் விசாரித்தார் சங்கர். அவர் அப்படிக் கேட்கக்கூடியவர் அல்ல. அன்றைக்கு என்னவோ அடி சறுக்கிவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல் அந்த நண்பரும் "தீவிரமான ஜப்பானிய உணவை ஆர்டர் செய்யாதீர்கள். சாப்பிட முடியாது. சிக்கன் வறுவல் சாப் பிடுங்கள்" என்றார். அடக் கடவுளே, சிக்கன் வறுவல் சாப்பிடுவதற்கு ஏன் தேடித் தேடி ஜப்பான் ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, குறுக்கே புகுந்து சுஷியை ஆர்டர் செய்தேன். நான் ஜப்பான் சென்றது இல்லை என்றாலும், ஐரோப்பாவில் சுற்றும்போது ஜப்பானிய ஹோட்டல்களில் சாப்பிட்ட அதே ருசி அந்தக் கடையில் இருந்தது. கூடவே, சாக்கேயும் (Sake) கிடைத்தது.

மனம் கொத்திப் பறவை! - 08

ருமுறை பாங்காக் சென்றுஇருந்தபோது, ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். மென்பொருள் துறையில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விடுமுறைக்காக அங்கே கூடியிருந்தார்கள். தாய்லாந்தின் உணவுப் பழக்கம் மிகவும் விசித்திரமானது. தவளை, ஆமை, பாம்பு, குரங்குத் தலை என்று எந்த உயிரினத்தையும் விட்டுவிடாமல் சாப்பிடுவார்கள். ஆனால், குரங்குத் தலை மட்டும் கிராமப்புறங்களில்தான் கிடைக்கும். ஈசானியம் என்றால் சம்ஸ்கிருதத்தில் வட கிழக்கு என்று பொருள். தாய்லாந்து மொழியில் சம்ஸ்கிருதம் அதிகம். வட கிழக்கு தாய்லாந்தை அவர்கள் ஈசான் என்கிறார்கள். பாங்காக்கில் நான் சந்தித்த வழிகாட்டிப் பெண் ஒருவர் என்னை ஈசானில் இருக்கும் தன் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கிராமத்தை ஒட்டி ஓடுகிறது மெக்கோங் நதி. எதிர்க் கரையில் லாவோஸ். திபெத்தில் இருந்து கிளம்பி சீனா, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் என்று ஏழு நாடுகளைக் கடக்கும் அந்த அற்புதமான நதிக் கரையில் அமர்ந்து தவளைக் கறி சாப்பிட்ட ஒரு மாலை நேரத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. நன்கு கொழுகொழுவென்று வளர்க்கப்பட்ட பச்சைத் தவளையின் கால், சிக்கன் லெக் பீஸைவிட அட்டகாசம். (பச்சை என்றது நிறத்தை; மற்றபடி நன்றாக சமைத்துத்தான் கொடுத்தார்கள்). குரங்கு மூளையை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதை நான் விகடனில் எழுதினால், செழியனின் 'மிஸ்டர் மார்க்' சிறுகதையில் எழுதியதுபோல் டேஷ் டேஷ் என்றுதான் போட வேண்டி இருக்கும்; ஆளை விடுங்கள்.மேற்படி பாங்காக் விருந்தில் ஜப்பானியர்கள் பலர் கலந்துகொண்டதால் மேஜையில் ஒரு விசேஷமான ஜப்பானிய உணவும் இருந்தது. (சிறிது மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்). சினையாக இருக்கும் மாட்டின் வயிற்றில் இருக்கும் மூன்று அல்லது நான்கு மாத கன்றுக் குட்டியை மாட்டின் வயிற்றில் இருந்து அறுத்து எடுத்து, அதில் உப்பும் இன்ன பிறவும் (மசாலா அல்ல) கலந்து அப்படியே முழுசாக bar be que ஸ்டைலில் சுட்டோ, அவித்தோ பரிமாறுவார்கள். மிகப் பெரிய வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே தரப்படும் சிறப்பு உணவு இது. அப்படி வைக்கப்பட்டு இருந்த கன்றுக் குட்டியின் வயிற்றை அந்த நிறுவனத்தின் தலைவரான இச்சிரோ என்ற ஜப்பானியர் கத்தியால் அறுத்தபோது என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவரை நெருங்கி நின்றேன். அதைப் பார்த்து என் நண்பரும் அருகில் வந்தார். அப்போது திடீரென்று அந்த மாமிசத்தில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தைப் பார்த்ததும் என் நண்பர் லேசாக 'ஹ' என்ற சத்தத்தை எழுப்பிவிட்டார். யாருக்கும் கேட்கவில்லை. ஆனாலும், இச்சிரோவுக்குக் கேட்டுவிட்டது என்பதைப் பிறகு அவர் எங்களுடன் பேசியபோது உணர்ந்தோம்.

என் நண்பர் அந்த நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதால் உலகம் பூராவும் சுற்றி வர வேண்டிய பொறுப்பில் உள்ளவர். அதைத்தான் இச்சிரோ சுட்டிக் காட்டினார். வெவ்வேறு கலாசாரங்களைக்கொண்ட மனிதர்களோடு பழக வேண்டிய நிலையில் உள்ள நீங்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடையலாமா? இதைச் சாப்பிடும் நாங்கள் என்ன செத்தா போய்விட்டோம்? எங்களுடைய சராசரி வயது 90 என்று உங்களுக்குத் தெரியுமா? கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் இச்சிரோ.

"அது மட்டும் அல்ல; இந்தியர் களின் முக்கியமான பிரச்னை ஹிப்பாக்ரஸி. கற்பு, நேர்மை, அது இது என்று வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால் நடைமுறையில்?" என்று கேட்டுவிட்டு அங்கிருந்த ஓர் இந்தியரைக் காண்பித்தார். சிப்பந்திகள் மதுவையும் மற்ற குளிர்பானங்களையும் ட்ரேயில் வைத்து விநியோகித்துக்கொண்டு இருக்க, அந்த இந்தியர் மட்டும் நான்கைந்து மதுக் கோப் பைகளை எடுத்துத் தன்னருகே வைத்துக்கொண்டார். கடைசியில் நடந்தது அதைவிட அற்பம். விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு சில பரிசுப் பொருட்களை வழங்கப்போவதாக அறிவித்தார் இச்சிரோ. அந்த விஸ்தாரமான ஹாலின் ஒரு மூலையில் கீ செயின், விலை உயர்ந்த பர்ஸ் போன்ற வஸ்துக்கள் வைக்கப்பட்டு இருந் தன. நான் இரண்டுமே பயன்படுத்துவது இல்லை என்பதால், எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. என் நண்பர் ஒரு பர்ஸை எடுத்தார். என்¬னப்போலவே பலரும் அந்தப் பொருட்களை மேய்ந்துவிட்டுச் சென்றுவிட்டனர். தேவைப்பட்டால்தானே ஒரு பொருளை எடுக்கலாம். அப்போது அந்த இந்தியர் வெகுவேகமாக வந்து பொருட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த எங்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, பர்ஸ்களையும் கீ செயினையும் கை கொள்ளும் அளவுக்கு அள்ளிக்கொண்டு சென்றார். இச்சிரோ என்னைப் பார்த்து மௌனமாகப் புன்னகைத்தார்.

மனம் கொத்திப் பறவை! - 08

மீபத்திய இரண்டு செய்திகள் என்னை மிகவும் அதிர்ச்சிகொள்ளச் செய்தன. ஒரு கார், பைக்கில் மோதிவிட்டது. இதில் என்ன இருக்கிறது, தினமும் பார்க்கும் செய்திதானே என்றால் இல்லை. காரில் வந்த இளைஞர் குடித்திருந்தார். பைக்கில் மோதிவிட்டு வேகமாக காரைச் செலுத்தித் தப்பிக்க நினைத்த அவரைப் பொதுமக்களே பிடித்துத் தர்ம அடி கொடுத்திருக்கின்றனர். வாங்கிய அடியில் செத்தே போய்இருப்பார். போலீஸ் காப்பாற்றிவிட்டது. பைக்கில் வந்தவர்களும் பொறுப்பாக இல்லை. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். அதிலும் ஒன்று ஆறு மாதக் குழந்தை.

இப்போதுதான் இதுபற்றி எழுதி ஈரம்கூடக் காயவில்லை. மீண்டும் அதே போன்ற கோர விபத்து. காரணம், குடி. இதற்கு ஒரே தீர்வு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி மற்றவர்களைச் சாக அடிப்பவர்களுக்குச் சிறைத் தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது; அவர்களின் வாழ்நாள் முழுவதும் அல்லது, 15 ஆண்டுகளுக்காவது வாகனம் ஓட்டும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

குடிப்பது மேல்நாட்டு நாகரிகம் என்கிறார்கள். நான் எத்தனையோ மேலைநாடுகளில் பார்த்திருக்கிறேன். மது விருந்தின் போது பலரும் ஒரு மில்லி மீட்டர் கூடக் குடிக்க மாட்டார்கள். காரணம் கேட்டால், 'காரை எடுத்து வந்துவிட்டேன்' என்பதே அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்னொரு செய்தியும் குடி பற்றியதே. புனே அருகில் ஒரு பண்ணை வீட்டில் நண்பர்கள் தினத்தை மது அருந்திக்கொண்டாடிய 350 மாணவ - மாணவி களை போலீஸார் கைது செய்த செய்தி. ஏதோ கிரிமினல்களைப் பிடிப்பதுபோல் ரவுண்டு கட்டிப் பிடித்திருக்கிறார்கள். மாணவர்கள் படிக்கும் காலத்தில் குடி போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதே தவிர, அது கைது செய்யப்படும் அளவுக்கு கிரிமினல் செயலா? தவறு என்பது வேறு; குற்றம் வேறு. அதிலும் மாணவிகளை மட்டும் விட்டுவிட்டதாம் போலீஸ். இது என்ன அக்கிரமம்? ஆணும் பெண்ணும் சமம் என்பதுதானே இங்கு சட்டம்? குழந்தைகளுக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே எந்தவிதத் தணிக்கையும் இல்லா மல் டி.வி, சினிமா இரண்டையும் பார்க்கவைப்பதை உடனடியாக நிறுத்துவது, கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற செயல் பாடுகள் தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உதவும்.

மனம் கொத்திப் பறவை! - 08

மாணவர்களை கிரிமினல்களைப்போல் பிடித்த இந்தியச் சட்டம், கிரிமினல்களை எப்படி நடத்துகிறது? மும்பையில் தாக்கு தல் தொடுத்து, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதி கஸாபுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தும் அதை நிறைவேற்ற முடியவில்லை. காரணம்? ஏகப்பட்ட சட்ட நெறிமுறைகள். அவனைத் தூக்கில் போடும் வரை எந்தத் தீவிரவாதியும் இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானுக்குக் கடத்திக்கொண்டு போகாமல் இருக்க வேண்டும்.

1999-ல் ஓர் இந்திய விமானம் காந்தஹாருக்குக் கடத்தப்பட்டதை யார் மறந்திருக்க முடியும்? ஏழு நாட்கள் தொடர்ந்த அந்த பயங்கர நாடகத்தின் இறுதியில் மூன்று தீவிரவாதிகளை இந்தியா கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்தது. பிடித்த உடனேயே விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து அவர்களைத் தூக்கில் போட்டிருந்தால், அந்த விமானக் கடத்தலே நடந்திருக்காது. அப்போது விடுதலை செய்யப்பட்ட மசூத் அஸர் என்பவன்தான் இப்போதைய பல தீவிரவாத செயல்களுக்குக் காரணம். இதில் இருந்து இந்தியா ஏதாவது பாடம் கற்றுக்கொண்டதா? இல்லை!

மனம் கொத்திப் பறவை! - 08
மனம் கொத்திப் பறவை! - 08
(பறக்கும்...)