மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 27

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 27


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 27
நீயும் ... நானும்! - 27
நீயும் ... நானும்! - 27
.
கோபிநாத், படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 27

பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி...

பெயின்ட் வாங்க வந்த ஒருவர், "வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும்? இருக்கிறதுலயே நல்ல கலர் எது?" என்று கேட் டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்... "கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒண்ணும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ, அது நல்ல கலர். உங்களுக்குப் பிடிக்காத கலர், இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு ரசனை இருக்கிறது. அதைக் கவனிப்பதைவிட, அதை ரசிப்பதைவிட, அடுத்தவரின் ரசனைபற்றியே அதிகம் யோசிக்கிறோம். நம் சமூகச் சூழலும் நல்ல ரசனை, மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.

ரசனை என்பது அவரவரின் தனிப்பட்டகுணாம் சம். சாந்தமாக, வாழ்வியல் சூழல் சார்ந்ததாக, அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது, உயர்வான ரசனை, மட்டமான ரசனை என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

நீயும் ... நானும்! - 27

ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம் தான். ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப் பட்டதால், அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவது இல்லை.

நாம் கொண்டாடுகிற, பெருமை பேசிக் கொள்கிற உயர்வினை, மதிப்பீடுகளாக நாமே சித்திரிக்கிற நமது பல ரசனைகள், புறச் சூழல் களாலும், செயற்கையான ஏற்பாடுகளாலும் நம்முள் புகுத்தப்பட்டவைதான். இதில் உயர் வான ரசனை, கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?

இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்ற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக் கூட்டமும் பிடித்து இருக்கலாம். தத்தித் தத்தி ஓடும் அணில் அழ கானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன் னொருவரின் ரசனையாக இருக்கலாம்.

அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்வது, உண்மையில் போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.

நீயும் ... நானும்! - 27

செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்க ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம். அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்ட முடியாது.

நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத் தன்மைகள், நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை. அழகான ஆங்கிலம் பேசுகிற, அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற, பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம். பிறகு, அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம். அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம். அதை ஏற்காதவரை ரசனை இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.

இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்னம் படம் ஓடும், பேரரசு படம் ஓடும், கௌதம் மேனன் படம் ஓடும், எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும், மகேந்திரன் பாணி படங்கள் ஓடும், சசிகுமார் ஒரு பக்கம் தன் படைப்பை முன் வைப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இன்னொரு படைப்பை முன்னிறுத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.

இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும், வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது. பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை, கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை.

உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ, அதேபோல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாதத்தையே காட்டுகிறது.

ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்க முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது, இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.

சில இசைக்கு தலை ஆடும், சில இசைக்குக் கால் ஆடும். ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும், ஒரு நிறம் கண்ணைப் பறிக்கும், ஒரு நிறம் லேசாய் மிளிரும், ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும், இன்னொன்றில் கோடுகள்தான் புரியும். கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை, உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை. இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.

நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம். அப்படி இருக்க, ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை.

ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு. அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப் பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. உங்கள் ரசனைகளையும் ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள்.

என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார், அவர் எது அணிந்தாலும் அவ ருக்கு அது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த் ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒரு முறை அதை கேட்க வும் செய்தேன். "நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.

என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ, அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை. நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ, அதைப் பின்பற்றுவது ரசனை இல்லை. 'நானும் இருக்கிறேன்... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்பதற்கான முயற்சி.

நீயும் ... நானும்! - 27

நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால், அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறு ஒரு ரகம். முடிந்தால், அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். நீரோடையின் அழகை ரசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, நீரோடைக்கு அப்பால் அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம். பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துகிடக்கலாம்... காய்ந்துகிடக்கும் கரு வேல மரங்களைக் கவனித்துக்கொண்டு இருப்பவரின் ரசனைக்கும் காரணம் இருக்கும்.

மேல்தட்டு வாழ்க்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர் வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தைப்போலவே இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் உயர்வென்ன... தாழ்வு என்ன?

எல்லா ரசனைகளும் மேலானதுதான். அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாது.

முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் ரசனைகளையும் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்!

நீயும் ... நானும்! - 27
நீயும் ... நானும்! - 27
- ஒரு சிறிய இடைவேளை