செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்க ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம். அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்ட முடியாது.
நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத் தன்மைகள், நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை. அழகான ஆங்கிலம் பேசுகிற, அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற, பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம். பிறகு, அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம். அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம். அதை ஏற்காதவரை ரசனை இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.
இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்னம் படம் ஓடும், பேரரசு படம் ஓடும், கௌதம் மேனன் படம் ஓடும், எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும், மகேந்திரன் பாணி படங்கள் ஓடும், சசிகுமார் ஒரு பக்கம் தன் படைப்பை முன் வைப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இன்னொரு படைப்பை முன்னிறுத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.
இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும், வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது. பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை, கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை.
உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ, அதேபோல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாதத்தையே காட்டுகிறது.
ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்க முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது, இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.
சில இசைக்கு தலை ஆடும், சில இசைக்குக் கால் ஆடும். ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும், ஒரு நிறம் கண்ணைப் பறிக்கும், ஒரு நிறம் லேசாய் மிளிரும், ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும், இன்னொன்றில் கோடுகள்தான் புரியும். கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை, உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை. இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.
நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம். அப்படி இருக்க, ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை.
ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு. அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப் பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. உங்கள் ரசனைகளையும் ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள்.
என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார், அவர் எது அணிந்தாலும் அவ ருக்கு அது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த் ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒரு முறை அதை கேட்க வும் செய்தேன். "நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.
என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ, அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை. நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ, அதைப் பின்பற்றுவது ரசனை இல்லை. 'நானும் இருக்கிறேன்... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்பதற்கான முயற்சி.
|