மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 01

மனம் கொத்திப் பறவை
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 01

மனம் கொத்திப் பறவை! - 01
.
மனம் கொத்திப் பறவை! - 01
மனம் கொத்திப் பறவை! - 01

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் 'கோணல் பக்கங்கள்' எழுதி வந்தேன். வானத்துக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களும் அதில் இடம்பெறும். உடனே, 'ஆகாய விமானம் செய்வது எப்படி?' என்று எழுதினீர்களா என்று கேட்கக் கூடாது. நான் ஓர் இலக்கியவாதி, ஒரு பயணி, உலக இலக்கியத்தின் தீராத வாசகன், ஒரு சினிமா பைத்தியம். இத்யாதி இத்யாதி (இந்த இத்யாதியில் பல சூட்சுமங்கள் உண்டு.) என்ற வகையில் என்னென்ன அற்புதங்களைக் கண்டேனோ, அதை எல்லாம் அந்தப் பத்தியில் எழுதினேன். ஒரே ரகளை, அதகளம் என்று சொல்லலாம். வாசகர் எதிர்வினை பிய்த்துக்கொண்டு போயிற்று. பிறகு, அப்படியே அரபிக் கடலோரம் போய்விட்டேன். (மலையாளப் பத்திரிகைகளில் எழுதியதைச் சொல்கிறேன்.)

இப்போது மீண்டும் விகடனுக்கு வந்திருக்கிறேன், மனம் கொத்திப் பறவையாக!

மனம் கொத்திப் பறவை! - 01

இதில் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவும் இருக்கும். உங்கள் உச்சி முடியைப் பிடித்து இழுக்கும் ஆந்திராவின் கோங்குரா சட்னியும் இடம் பெறும். பறவைக்கு ஆகாயமே வீடு. என்றாலும், அதற்கென்று ஒரு சீரான, இலக்கணச் சுத்தமான பாதை உண்டு. பறவை என்றுமே பாதை மாறாது. ஆனால், இந்த மனம் கொத்திப் பறவை அதன் மனம் போன போக்கெல்லாம் போகும்.

மனம் கொத்திப் பறவை! - 01

இன்னொரு விஷயம்... காலில் செய்தி கட்டிக்கொண்டு போகும் புறாக்களைப் போல் நானும் ஒரு தபால்காரன் மட்டுமே. எனக்குக் கிடைத்ததை உங்களுக்குத் தருகிறேன். இதில், உங்களுக்கு உடன்பாடு என்றால் சந்தோஷம். முரண்பட்டால், இரட்டிப்புச் சந்தோஷம். ஏனென்றால், 'நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம்' என்றே எப்போதும் என் பேச்சை ஆரம்பிப்பேன்!

ஹார்மோனியப் பெட்டியும் புத்தனின் நிழலும்

"மரம் கொத்திப் பறவை தெரியும்; அது என்ன மனம் கொத்திப் பறவை?" என்று கேட்டார் நண்பர்.

"உங்களுக்குக் குளத்தில் குளித்த அனுபவம் இருக்கிறதா? அப்போது மீன்கள் வந்து உங்கள் பாதங்களை லேசாகக் கடிக்கும். குறுகுறுவென்று இருக்கும் அந்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கென்று தனி 'ஸ்பா' (Spa) உண்டு. இப்போது அந்த மீன் மூலம் பெடிக்யூர் செய்யும் மையங்கள் சென்னையிலும் வந்துவிட்டன. (அரை மணி நேரத்துக்கு 500 ரூபாய்!) இப்படி நம் கால்களைக் கொத்தி மசாஜ் செய்யும் மீன்களை டாக்டர் ஃபிஷ் என்கிறார்கள். இந்தக் கட்டுரைத் தொடரில் உங்கள் மனங்களை அந்த டாக்டர் ஃபிஷ் மாதிரி கொத்தப்போகிறேன். அதுதான் அந்தப் பெயர்!" என்று நண்பரிடம் சொன்னேன்.

இயக்குநர்கள் நடிக்க வரும் காலம் இது. இப்போது ஓர் எழுத்தா ளரும். மிஷ்கின், என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவரை எனக் குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. என்னைப் போலவே மனதில் பட்டதைப் பேசு வார். தவிர, இசை, ஓவியம், இலக்கியம் என்று ரசனைக்காரர்.

இரவு 9 மணிக்குத்தான் எனக்கு அழைப்பு வரும். சென்றால், விடிகாலை 5 மணி வரை பேசிக்கொண்டு இருப்போம். ஒருநாள் நான் சென்றபோது அவர் தன் உதவியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். மார்ட்டின் ஸ்கார்ஸஸி இயக்கிய Kundun என்ற படத்தின் இறுதிக் காட்சியில் 10 நிமிடங்கள் ஓடும் இசை வரும். நான் அந்தப் படத்தை அப்போது பார்த்திருக்கவில்லை. மிஷ்கின் கதையைச் சொன்னார்.

1937 முதல் 1959 வரை திபெத்தில் நடந்த சம்பவங்கள்தான் 'குண்டுன்'. மொழி, மதம், கலாசாரம்போன்ற எல்லா விஷயங்களிலும் சீனாவில் இருந்து வேறுபட்டு, தனித்துவம்கொண்ட நாடாக இருந்த திபெத்தைக் கபளீகரம் செய்து, தங்கள் நாட்டோடு சேர்த்துக்கொண்டது மாவோவின் சீனா. இது சம்பந்தமாக, மாவோவை நேரில் சென்று சந்தித்தார் தலாய் லாமா. மதத்தை நம்பும் மூடர்கள் நீங்கள் என்று சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் மாவோ. இதைத் தொடர்ந்து சீனாவை எதிர்த்து திபெத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. தலாய் லாமாவின் உயிருக்கு கம்யூனிஸ்ட் படைகளால் ஆபத்து ஏற்படவே, திபெத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார் தலாய் லாமா. அதோடு படம் முடிகிறது.

தலாய் லாமாவின் அந்தப் பயணத்தில் வரும் பின்னணி இசையைத்தான் மிஷ்கின் அப்போது ஓடவிட்டார். வெறும் இசையை மட்டுமே கேட்டு, தலாய் லாமா எந்தக் கணத்தில் இந்திய எல்லையைத் தொடுகிறார் என்று சொல்ல வேண்டும். அந்த அறையின் மிக மெலிதான வெளிச்சத்தில் இசை மட்டும் ஒலிக்கிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளரான Phillip Glass-ன் இசை. கண்களை மூடிக்கொண்டு அந்தப் பயணத்தில் ஐக்கியமாகிறேன். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எனக்கு நம்பிக்கையின் ஒளிக் கீற்று தெரிகிறது. கண் களைத் திறந்து மிஷ்கினைப் பார்த்துப் புன்னகைக்க, அவரும் சிரிக்கிறார்.

எங்கள் சந்திப்பில், புத்தகம், இசை, சினிமா என்பதோடு, சமயங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் இடம்பெறும். அப்படி ஒருநாள் அவருடைய 'யுத்தம் செய்' படத்தில் வரும் 'கன்னித் தீவு பெண்ணா, கட்டெறும்புக் கண்ணா' என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டேன். அதைப் பார்த்துவிட்டோ என்னவோ, அந்தப் பாடலில் என்னையும் இடம்பெறச் செய்தார் மிஷ்கின்.

ஆறு நாட்கள் நடந்தது அந்தப் பாடல் படப்பிடிப்பு. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. இடையில் ஒருநாள் மழை பெய்து கெடுத்தது. கபிலன் எழுதிய இந்தத் துள்ளல் பாடலுக்காக மிஷ்கினும் அவருடைய குழுவும் ஆறு மாதங்கள் உழைத்ததை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படி அணுஅணுவாகச் செதுக்கினார்கள். எல்லோருமே புதியவர்கள். இசையமைப்பாளர் கே என்ற இளைஞர். (ஆமாம், காஃப்காவின் கதாபாத்திரம் 'கே'தான்). பார்க்க பள்ளி மாணவர் மாதிரி இருப்பார். ஒளியமைப்பு சத்யா. பாடியவர் எம்.எல்.ஆர். கார்த்திக். நடன அமைப்பு பாண்டி.

பாட்டுக்கு ஆடியவர்கள் அமீரும் நீத்து சந்த்ராவும். அவர்களோடு அடியேனும். நான்கு நிமிடப் பாடலில் நான் இடம்பெறுவது 40 நொடிகள். அதற்கே கிறுகிறுத்துவிட்டது. முதல் காரணம், என் வேலை நேரம். நான் காலை 4 மணிக்கு எழுந்து, இரவு 10 மணிக்கு உறங்கச் செல்பவன். யோகா, வாக்கிங் எல்லாம் உண்டு என்பதால் 10 மணி ஆனதுமே தலை கிறங்க ஆரம்பித்துவிடும். அமீரும் நீத்துவும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நானோ தூக்கக் கலக்கத்தில் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறேன். மிஷ்கினுக்கு ஒரே ஆச்சர்யம். "முகத்தில் என்ன இப்படித் தூக்கம் வழிகிறது?" என்கிறார்.

மனம் கொத்திப் பறவை! - 01

மறுநாள் நண்பர் ஒருவர் "என்ன, நீத்துவிடம் கடலை போட்டீர்களா?" என்று கேட்டார். சினிமாவை இருட்டு அறையில் உட்கார்ந்துகொண்டு பார்க்கும்போதுதான் கேளிக்கை. ஆனால், அதை உருவாக்குவது ஒரு போராட்டம். சர்க்கஸில் பார் விளையாட்டைப் பார்த்திருப்பீர்கள். கூடாரத்தின் மேலே அந்தரத்தில் ஆடுவார்கள். சமயங்களில் கீழே வலை இருக்கும். வலையும் இல்லாமல் ஆடுவதுதான் சினிமா. வார்த்தைக்கு வார்த்தை இது உண்மை. அமீரும் நீத்துவும் கேமராவுக்கு முன்னே ஆடும்போது அவர்களைச் சுற்றி, சுமார் 200 பேர் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். 50 அடி உயர கிரேனில் தொங்கியபடி கேமராவை இயக்குகிறார் சத்யா. அதற்கும் மேலே எழுப்பப்பட்ட இரும்பு ஏணியின் மீது போட்டுள்ள ஒரு கூடாரத்தில் இருந்து வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்கள் சிலர். ஹீரோவும் ஹீரோயினும் டான்ஸர்களும் தரையில் ஆடிக்கொண்டு இருக்கும்போது, இப்படி 30 பேர் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

கிரேன் மேன் மணி (மிஷ்கின் உட்பட எல்லோரும் அவரை மணி அண்ணா என்றே அழைக்கிறார்கள்) 'அந்நியன்' பட ஷூட்டிங்கில் ஒருமுறை உயரமான இடத்தில் இருந்து விழுந்த கதையைச் சொன்னார். உடனே, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி, உடம்பு சரியாகும் வரை கவனித்துக்கொண்டார் ஷங்கர் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். விழும்போது சமயோசிதமாக எதையோ பிடித்துக்கொண்டதால், தப்பினாராம். மணி இதைச் சொன்னபோது எனக்கு 'என் உயிர்த் தோழன்' பாபுவின் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு மாடியில் இருந்து விழுந்து பல ஆண்டுகளாக நடமாட முடியாமல் இருக்கிறார் பாபு.

மனம் கொத்திப் பறவை! - 01

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீத்து சந்த்ராவுடன் கடலை போட முடியுமா? ஆனால், அவருடைய ஒப்பனை உதவியாளர் (ஒப்பனையாளர் அல்ல; ஒப்பனையாளருக்கு உதவி) சஞ்சய்யிடம் பேசினேன். அவர் ஓர் அருமையான தகவலைச் சொன்னார். நீத்துவிடம் வருவதற்கு முன் அவர் ஷாரூக்கானிடம் ஒப்பனை உதவியாளராக இருந்திருக்கிறார். ஏழு வருடங்கள். அவரிடம் இருந்து விலகும்போது அடுத்து யாரிடம் செல்கிறார் என்பதை விசாரித்த ஷாரூக், நீத்து வசிக்கும் பகுதியிலேயே சஞ்சய்க்கு 90 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஃப்ளாட்டை வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். எப்பேர்ப்பட்ட மனிதர் பாருங்கள்!

பாடலில் எனக்கு ஹார்மோனியம் வாசிப்பவன் வேடம். நடிப்பு என்பது இவ்வளவு கஷ்டமா? தானானா னா தானானா என்று ராக ஆலாபனை செய்துகொண்டே வாசிக்க வேண்டும். நானோ ஹார்மோனியத்தை அப்போதுதான் முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். இடது கை bellows-ஐ அழுத்த வேண்டும். வலது கை கீ-போர்டில் இயங்க வேண்டும். வாயோ, பின்னணியில் கேட்கும் குரலுக்கு ஏற்பப் பாடி அசைய வேண்டும். இன்னொரு பிரச்னை, ஹார்மோனியத்தின் கனம். தோள்பட்டை பிய்ந்துவிடும்.

எனக்கு இன்னொரு சிரமம், என்னால் ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். இடது கை பெல்லோஸில் இயங்கினால், வலது கை கீ-போர்டை மறந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் பின்னணிப் பாடகர் எங்கே எந்த சொல்லைப் பாடுகிறாரோ, அங்கே சரியாக நான் வாயசைக்க வேண்டும். சரியாகப் பாட ஆரம்பித்தால், ஹார்மோனியத்தை விட்டுவிடுகிறேன். ஹார்மோனியத்தில் கவனம் செலுத்தினால், பாடல் ஓடிவிடுகிறது. யாரோ ஒரு ஹாலிவுட் நடிகரின் பெயரைச் சொன்ன மிஷ்கின் (பெயரை மறந்துவிட்டேன்) அவர் ஒரு படத்தில் சாக்ஸஃபோன் வாசிப்பவராக வருவதால், ஆறு மாத காலம் சாக்ஸஃபோனில் பயிற்சி எடுத்தார்; நீங்கள் ஹார்மோனியத்தில் நாளைக்கு ஒரு மணி நேரம் பயிற்சி எடுங்கள் என்றார்.

இப்போது இதை எழுதும்போதுதான் தோன்றுகிறது. நானும்கூட ஹார்மோனியத்தில் அல்லது வேறு ஓர் இசைக் கருவியில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுப்பேன், முக்கிய வேடம் கிடைத்தால்!

மறுநாள் மிஷ்கின் சொன்னபடியே ஹார்மோனியத்தில் ஒரு மணி நேரம் அல்ல, இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தேன். அதோடு வீட்டிலும் ஆலாபனைப் பயிற்சி. பாடலைப் போட்டுப் போட்டு தானானானா தானானா என்று கத்திக்கொண்டு இருந்தேன். நான் வளர்க்கும் பப்புவும் ஸோரோவும் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மிரண்டு ஓடின.

எந்த இடத்தில் பாடத் துவங்க வேண்டும் என்பதற்கு மிஷ்கினின் உதவியாளர் சாமி ஒரு சிறிய டெக்னிக்கைச் சொன்னார். வாத்தியம் நான்கு முறை ஒலித்ததும் பாடகரின் குரல் கேட்கிறது என்பதை எனக்குப் புரியவைத்தார் அவர். மறுநாள் ஷூட்டிங்குக்குக் கிளம்பும்போது 'தானானா' என்று பாடி ஒழுங்கு காண்பித்தாள் என் மனைவி அவந்திகா. ம்... ஒரு வருங்கால நடிகனுக்கு என்ன ஒரு அவமானம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஷூட்டிங்கின் கடைசி நாள்தான் நான் சற்றும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. செட்டில் ஒளியமைப்புக்காக 40 அடி உயரத் தில் ஒரு மரத்தின் மேல் பலகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதாவது, ஒரு 'ஒய்' வடிவ மரத் தில்... இலை, கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு அதை ஒரு மரத் தூண் மாதிரி செதுக்கி இருந் தார்கள். அதன் மேலே ஒரு பலகை. மரத்தில் ஏறுவதற்கு ஒரு செங்குத்தான இரும்பு ஏணி.

'சாரு, அங்கே மேலே போய் நின்று பாடுங்கள்' என்று சாவகாசமாகச் சொல்லிவிட்டு மானிட்டரின் முன்பு உட்கார்ந்துவிட்டார் மிஷ்கின்.

மனம் கொத்திப் பறவை! - 01

என்னது? இவ்வளவு பெரிய உயரத்தின் மீது ஏறுவதா? எனக்கு உதவியாக மிஷ்கினின் உதவியாளர் கார்த்திக் கிடுகிடுவென்று மேலே ஏறி, கேமராவில் தெரியாதபடி பலகையில் படுத்துக்கொண்டார். அந்த உயரத்தில் என்ன உதவி? எனக்குத் தைரியம் கொடுப்பதற்காகத்தான். இன்னொருவர் ஹார்மோனியத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். சிறிது நேரம் நடுங்கியபடி நின்றேன். 'முடியாவிட்டால் இறங்கிவிடுங்கள் சாரு' என்று குரல் கொடுத்தார் மிஷ்கின். அவருடைய அந்த வார்த்தைகள் என்னை உசுப்பேற்றிவிட்டன. வெறுமனே கீழே இறங்குவதற்கா இவ்வளவு உயரத்தில் ஏறினோம்? நான் வணங்கும் அனந்த பத்மநாப சாமியின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பாட ஆரம்பித்தேன். பிரமாதம் என்றார் மிஷ்கின். அதுவரை எனக்கு இருந்த வர்ட்டிகோ என்ற மனப்பிராந்தி அன்றோடு அகன்றது. (உயரமாக ஏறினால் ஏற்படும் பயத்தின் பெயர் வர்ட்டிகோ).

ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு, அந்த 'குண்டுன்' படத்தைப் பார்த்தேன். தலாய் லாமா இந்திய எல்லையைத் தொடும்போது ஒரு இந்திய சிப்பாய், 'நீங்கள்தான் புத்தரா?' என்று கேட்கிறான்.

'நான் புத்தரின் நிழல்; சந்திரனின் நிழல் தண்ணீரில் தெரிவதைப்போல' என்கிறார் தலாய் லாமா!

மனம் கொத்திப் பறவை! - 01
மனம் கொத்திப் பறவை! - 01
(பறக்கும்...)