Published:Updated:

பொய் வேட்டைக்குச் செல்லலாமா

பொய் வேட்டைக்குச் செல்லலாமா


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
பொய் வேட்டைக்குச் செல்லலாமா
பொய் வேட்டைக்குச் செல்லலாமா
பொய் வேட்டைக்குச் செல்லலாமா?
கி.கார்த்திகேயன்
பொய் வேட்டைக்குச் செல்லலாமா
பொய் வேட்டைக்குச் செல்லலாமா

'பொய் சொல்லக் கூடாது காதலி...

பொய் சொன்னாலும் நீயே என் காதலி!'

ஓ.கே... காதலி பொய் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்தான் (காதலியாக இருக்கும் வரை மட்டும்!). ஆனால், அப்பா, அம்மா, மகன், தங்கை, நண்பன், ஆசிரியர், ஜூனியர், சக அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் பொய் சொன்னால் ரசிப்போமா? சமூகத்தின் எந்த நிலையில், எந்தப் பருவத்தில் இருந்தாலும் நித்தம் நாம் எதிர்கொள்ள வேண்டிய மைக்ரோ யுத்தம்... பொய்!

'நேத்து வீட்ல பவர் கட். அதான் அசைன்மென்ட் முடிக்கலை', 'ரெண்டு நாளா எனக்கு உடம்பு சரியில்லை. அதான் அந்த க்ளையன்ட்டைப் போய்ப் பார்க்க முடியலை', 'ஆபீஸ்ல ஆடிட்டிங். அதான், சாயங்காலம் சீக்கிரம் வர முடியலை!', 'நம்பும்மா, திடீர்னு அந்த சிடுசிடு புரொஃபசர் வந்து ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டார். அதான் லேட்!', 'ஸாரி சார்... பேட்டரி டவுன். அதான் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு!' ஒருநாளில் எத்தனை எத்தனை பொய்கள். ரகரகமாக, விதவிதமாக, வகை வகையாக, அழகழகாக... இந்தப் பொய்களைச் சமாளிப்பது எப்படி, அவை பொய்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி?

'இது என்ன கேள்வி. பொய் பேசும்போதே கண்டுபிடிக்க வேண்டியதுதானே!' என்கிறார் டேவிட்.ஜே.லீபர் மேன். இவர் எழுதிய Never be lied to again என்ற புத்தகம் ஐந்தே நிமிடங்களுக்குள் ஓர் உரையாடலின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி என்று எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறது. (கொஞ்சம் மாத்தி யோசித்தால், பொய் சொல்லும்போது நாம் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்!)

உடல் மொழி பொய் சொல்லாது!

பொய் வேட்டைக்குச் செல்லலாமா

ஒருவரது வார்த்தைகள்தான் பொய் சுமந்து வருமே தவிர, அவரது விரல்கள், தோள்பட்டை, கால்கள், கண்கள்போன்ற உறுப்புகள் எப்போதும் பொய் சொல்லாது. தங்களது உடல் மொழிக்குப் பொய் சொல்லத் தெரியாது என்பது, பாவம் பொய் சொல்பவர்கள் பலருக்குத் தெரியாது. எதிராளியின் உடல் மொழியைக் கணிக்கத் தெரிந்தால், அவரது வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துகொள்ளலாம்!

உரையாடலின்போது மிகக் குறைந்த அல்லது அறவே தவிர்க்கப்படும் கண்ணுக்குக் கண் தொடர்பு, அலைபாய்ந்துகொண்டே இருக்கும் விழிகள், அடிக்கடி தரை நோக்கித் தாழும் பார்வை... மச்சான் பொய் சொல் கிறார் என்று அர்த்தம். அதுவே அழுத்தம் திருத்தமாக கண்ணுக்குக் கண் உற்று நோக்கி பார்வையை விலக்காமல், இமைக்காமல் பேசுபவர்கள் தங்கள் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்த்த விரும்புகிறார்கள் என்று அர்த்தம்!

உங்களையே உற்றுக் கவனியுங்கள். பொய் சொல்லும்போது உங்கள் கைகள், விரல்கள் ஆகியவற்றின் அசைவுகள் மிக மிக மினிமம் ஆக இருக்கும். மணிக்கட்டு தரை நோக்கி இருக்கும் அல்லது விரல்களை இறுக்கமாக மூடிக்கொள்வீர்கள். பேன்ட் பாக்கெட்டில் கைகளைப் புதைத்தோ, மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டோ, ஒரு தற்காப்பு மனநிலையில் இருப்பீர்கள். மாறாக உண்மை உரைக்கும்போது, வானத்தையே அளப்பதுபோல இரண்டு கைகளும் பரந்து விரிந்து உணர்ச்சிகள் காட்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கி அகலத் திறந்து இருக்கும்!

அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கால்களை எக்ஸ்போல மடித்துக்கொண்டோ, கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டோ, உடலின் அருகில் வைத்துக்கொண்டோ இருந்தால், பார்ட்டி தனக்குள் எதையோ பூட்டிக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். இருக்கை நுனியில் அமர்வது, வசதியாகச் சாய்ந்து அமர்ந்துகொள்ளாமல் ஆகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்துவது போன்றவைகளும் ரெட் சிக்னல்கள்தான்!

பொய் சொல்பவர் எதிராளியுடன் கை குலுக்குவது, தொட்டுப் பேசுவது, விரல்களைப் பின்னிக்கொள்வது, தோளில் தட்டுவதுபோன்ற உடல்ரீதியிலான தொடர்புகளை அறவே தவிர்ப்பார்கள்!

எக்ஸ்பிரஸ் எதிர்மறைப் பதிலா... உஷார்!

பொய் வேட்டைக்குச் செல்லலாமா

ஒரு கேள்விக்குப் பதிலாக வந்து விழும் வார்த்தைகளில் இருந்தே, அது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஆனந்த், நீ என்னை ஏமாற்றுகிறாயா?' என்று காதலி கேட்டதும், 'ச்சேச்சே, உன்னை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன்!' என்று அவசர அவசரமாக சொன்னால், உள்ளே ஏதோ உள்குத்து என்று அர்த்தம். ஒருவரை சந்தேகித்து நாம் ஏதேனும் கேள்வி கேட்கும்போது, நமது கேள்வியில் இருக்கும் வார்த்தைகளைக்கொண்டே உடனடியாகப் பதில் வந்தால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதில் அளிக்காவிட்டால், நமது நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் என்பது நம் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் பிம்பம். அதனால், நமது நேர்மை சோதிக்கப்படும்போது எல்லாம் உடனடியாகப் பதில் சொல்லத்தான் நாம் விரும்புவோம். அந்த சமயம் உண்மையை மறைக்க விரும்பினால், வேறு வார்த்தைகள் மனதில் தோன்றாமல், கேள்வியில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னரே 'இல்லை', 'அப்படியெல்லாம் கிடையாது' என்று எதிர்மறை அர்த்தத்தில் சொல்வோம். அந்த நெருக்கடித் தருணத்தில் பொருத்தமான பதில் சிக்காததால், உடனடிப் பதிலுக்குத் திண்டாடி கேள்வியையே எதிர்மறையாக மாற்றி சமாளிப்போம். எனவே, இனி உங்கள் கேள்விகளுக்கு எதிர்மறை எக்ஸ்பிரஸ் பதில்கள் வந்துவிழும்போது... அலர்ட்!

பதில் இல்லா பதில்!

விமல் முன்பின் பார்த்திராத ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். 'அப்புறம் செல்லம் நீ அழகியா... பேரழகியா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், 'நான் தினமும் ஜிம்முக்குச் செல்வேன். எனக்கு ஏரோபிக்ஸ் தெரியும். பல ஆண் மாடல்கள் என்னை டேட்டிங் குக்குக் கூப்பிடுவார்கள்!' என்று அடுக்குகிறாள். ஊன்றிக் கவனி யுங்கள்.. 'நீ அழகியா?' என்ற கேள்விக்கு, 'ஆம்', 'இல்லை' என்று எந்த நேரிடை பதிலும் சொல்லாமல், 'அழகியாகத்தான் இருப்பாள்' என்று விமலை நம்பச் செய்யும் செய்திகளாக அடுக்குகிறாள். இதுதான் பதில் இல்லா பதில். இன்னோர் உதாரணம் பார்ப்போம்...

வாட்டர்கேட் ஊழல் முதல்முறையாகக் கசிந்தபோது, ஹெலன் தாமஸ் என்ற நிருபருக்கும் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது...

தாமஸ்: "அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி, அதற்கு யாரேனும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்களா?"

ரொனால்ட்: "நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் திரு தாமஸ், வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!"

தாமஸ்: "ஆனால், என் கேள்வி அதுவல்ல. அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி இருக்கிறாரா?"

ரொனால்ட்: "கேள்வி எனக்குப் புரிகிறது. என்னை அதற்குப் பதில் சொல்ல அனுமதியுங்கள். நான் முன்னரே கூறியதுபோலத்தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை எந்த ராஜினாமாக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை!"

'அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்விக்கு இறுதி வரை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் வாட்டர்கேட் விவகாரத்தில் என்ன தில்லுமுல்லு நடந்தது என்பது உலகமே அறியும்.

அந்தப் பதிலில்லா பதில்களின் பின்னணி உணருங்கள்!

பொய் வேட்டைக்குச் செல்லலாமா
பொய் வேட்டைக்குச் செல்லலாமா