ஒரு கேள்விக்குப் பதிலாக வந்து விழும் வார்த்தைகளில் இருந்தே, அது உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்துவிடலாம். 'ஆனந்த், நீ என்னை ஏமாற்றுகிறாயா?' என்று காதலி கேட்டதும், 'ச்சேச்சே, உன்னை நான் எப்போதும் ஏமாற்ற மாட்டேன்!' என்று அவசர அவசரமாக சொன்னால், உள்ளே ஏதோ உள்குத்து என்று அர்த்தம். ஒருவரை சந்தேகித்து நாம் ஏதேனும் கேள்வி கேட்கும்போது, நமது கேள்வியில் இருக்கும் வார்த்தைகளைக்கொண்டே உடனடியாகப் பதில் வந்தால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... எந்தக் கேள்விக்கும் உடனடியாகப் பதில் அளிக்காவிட்டால், நமது நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகும் என்பது நம் அனைவரின் மனதிலும் பதிந்து இருக்கும் பிம்பம். அதனால், நமது நேர்மை சோதிக்கப்படும்போது எல்லாம் உடனடியாகப் பதில் சொல்லத்தான் நாம் விரும்புவோம். அந்த சமயம் உண்மையை மறைக்க விரும்பினால், வேறு வார்த்தைகள் மனதில் தோன்றாமல், கேள்வியில் இருக்கும் வார்த்தைகளுக்கு முன்னரே 'இல்லை', 'அப்படியெல்லாம் கிடையாது' என்று எதிர்மறை அர்த்தத்தில் சொல்வோம். அந்த நெருக்கடித் தருணத்தில் பொருத்தமான பதில் சிக்காததால், உடனடிப் பதிலுக்குத் திண்டாடி கேள்வியையே எதிர்மறையாக மாற்றி சமாளிப்போம். எனவே, இனி உங்கள் கேள்விகளுக்கு எதிர்மறை எக்ஸ்பிரஸ் பதில்கள் வந்துவிழும்போது... அலர்ட்!
பதில் இல்லா பதில்!
விமல் முன்பின் பார்த்திராத ஒரு பெண்ணுடன் போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். 'அப்புறம் செல்லம் நீ அழகியா... பேரழகியா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண், 'நான் தினமும் ஜிம்முக்குச் செல்வேன். எனக்கு ஏரோபிக்ஸ் தெரியும். பல ஆண் மாடல்கள் என்னை டேட்டிங் குக்குக் கூப்பிடுவார்கள்!' என்று அடுக்குகிறாள். ஊன்றிக் கவனி யுங்கள்.. 'நீ அழகியா?' என்ற கேள்விக்கு, 'ஆம்', 'இல்லை' என்று எந்த நேரிடை பதிலும் சொல்லாமல், 'அழகியாகத்தான் இருப்பாள்' என்று விமலை நம்பச் செய்யும் செய்திகளாக அடுக்குகிறாள். இதுதான் பதில் இல்லா பதில். இன்னோர் உதாரணம் பார்ப்போம்...
வாட்டர்கேட் ஊழல் முதல்முறையாகக் கசிந்தபோது, ஹெலன் தாமஸ் என்ற நிருபருக்கும் அமெரிக்க அதிபர் நிக்ஸனின் செய்தித் தொடர்பாளரான ரொனால்டுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது...
தாமஸ்: "அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி, அதற்கு யாரேனும் தங்கள் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்களா?"
ரொனால்ட்: "நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் திரு தாமஸ், வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!"
தாமஸ்: "ஆனால், என் கேள்வி அதுவல்ல. அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி இருக்கிறாரா?"
ரொனால்ட்: "கேள்வி எனக்குப் புரிகிறது. என்னை அதற்குப் பதில் சொல்ல அனுமதியுங்கள். நான் முன்னரே கூறியதுபோலத்தான் வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை எந்த ராஜினாமாக்களும் சமர்ப்பிக்கப்படவில்லை!"
'அதிபர் யாரையேனும் பதவி விலகச் சொல்லியிருக்கிறாரா?' என்ற கேள்விக்கு இறுதி வரை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பதில் கிடைக்கவில்லை. ஆனால், பின்னர் வாட்டர்கேட் விவகாரத்தில் என்ன தில்லுமுல்லு நடந்தது என்பது உலகமே அறியும்.
அந்தப் பதிலில்லா பதில்களின் பின்னணி உணருங்கள்!
|