மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 28

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 28


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்  
நீயும் ... நானும்! - 28
நீயும் ... நானும்! - 28
நீயும் ... நானும்! - 28
கோபிநாத்
படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 28

ன்னை அவமானப்படுத்திய எதிரியிடம் கோபம் கொப்பளிக்க ஹீரோ சொல்வார்,

'இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு எதிரி. உன்னை ஒழித்துவிட்டுத்தான் என் அடுத்த வேலை' என்பார். தியேட்டரில் கை தட்டல் சத்தம் காதைப் பிளக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் ஹீரோ எடுக்கும் முடிவை அனைவரும் ஆர்வத்தோடு வரவேற்கிறோம்.

கோபப்பட்டு உணர்ச்சிபூர்வமாகி எடுக்கப்படும் முடிவுகளில் ஒரு ஹீரோயிசமும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தும் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறோம். சினிமாவில் சரி, நிஜ வாழ்க்கையில் கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும் சரியாக இருக்குமா? அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள், ஆய்வுகள் அற்ற... புரிதல் அற்ற அந்தத் தீர்மானம் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?

நீயும் ... நானும்! - 28

ஆனாலும், பல முடிவுகள் கோபத்திலும் அது தரும் உந்துதலிலும்தான் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு பல கதைகளும் உண்டு. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாமும் பல நேரங்களில் அத்தகைய முடிவுகளை எடுத்து சூடு போட்டுக்கொண்டது ஞாபத்துக்கு வரலாம்.

கோபம்பற்றிப் பல்வேறு விதமான பார்வைகள் உண்டு. அவரவரின் அனுபவம், சுற்றுச்சூழல், சமூக அழுத்தம் இப்படிப் பல காரணிகளைப் பொறுத்து அந்தப் பார்வைகள் அமையும். கோபமே படக் கூடாது. சாந்தமாக இருங்கள். கோபப்படலேன்னா வேலை நடக்காது. சரியான இடத்துல, சரியான நேரத்துல கோபப்படணும் - கோபப்படலாம். ஆனா, அதை வெளிப்படுத்தக் கூடாது - கோபத்தை வெளிப்படுத்தலேன்னா அது மனசுக்குள் தங்கிச் சிக்கலை உண்டாக்கிவிடும் - இப்படி நிறையப் பார்வைகள்.

கோபம், சுயநலத்தின் வெளிப்பாடு என்று ஒரு பார்வையும் உண்டு. அவன் மேல எனக்கு செம கடுப்பு. ஆத்திரம்னா அவ்வளவு ஆத்திரம். போனைப் போட்டு திட்டுதிட்டுனு திட்டித் தீர்த்துட்டேன். இப்போதான் மனசு நிம்மதியா இருக்கு என்று சிலர் சொல்வார்கள். அடுத்தவரின் மனநிலையும் சூழலும் என்ன என்ற கவலைகள் எதுவும் இன்றி என் கோபத்தைக் கொட்டியாயிற்று.

நீயும் ... நானும்! - 28

கோபத்திலும் 'காரியக்கார' கோபம் ஒன்று உண்டு. எவரால் தனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ, அவருக்கு எதிராகச் சேர்த்துவைத்திருக்கும் ஆத்திரம் அனைத்தும் அனலாகக் கொப்பளிக்கிற உத்தி அது.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எதாவது கோபத்தில் இருந்தால், போனை எடுத்து எடுத்துப் பார்ப்பார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று ஒருநாள் விசாரித்தேன். 'அது ஒண்ணுமில்லை... நான் கோபமாக இருக்கிற நேரத்தில் கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வேணுமா என்று முகம் தெரியாத ஆட்கள் போன் செய்தால், அவர்களைத் திட்டுத் திட்டு என்று திட்டித் தீர்ப்பேன். எனக்கு மனசுல இருக்கற பாரம் எல்லாம் குறைந்துபோகும். அதான்' என்றார்.

எதிர்ப்பதற்கு வலு இல்லாத, முகம் தெரியாத மனிதர்களிடம் கோபத்தைக் காட்டுவது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான வடிகால் என்று அதை ஓர் உத்தியாகக் கையாளுகிற புத்திசாலி கோபக்காரர்கள் நிறைய உண்டு. கஸ்டமர் சர்வீஸில் இருந்து போன் செய்தவர், போனை வைத்தபிறகு அநேகமாக ஆபீஸ் பையனை அழைத்து காட்டுக் கத்தல் கத்தியிருப்பார்.

ஒரு தனி மனிதரின் கோபம் அவரோடு நின்றுவிடுவது இல்லை. அது ஒரு சங்கிலித் தொடர்போல நிறையப் பேருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. நிறைய மனங்களைக் காயப்படுத்துகிறது. தன் கோபத்தை வெளிப்படுத்த வலு இல்லாத ஒரு எதிராளியைத் தேடுகிற காரியக்கார கோபவாதிகளாகத்தான் நிறையப் பேர் இருக்கிறோம்.

மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை அப்பா, அம்மா மீது காட்டுகிறார். அம்மா, பிள்ளை மீது காட்டுகிறார். அந்தப் பிள்ளை, தன் தம்பி மீதோ, தங்கை மீதோ காட்டுகிறார். அவர் அந்தக் கோபத்தைத் தன் நண்பரிடம் வெளிப்படுத்துகிறார். அவர் தன் ஆத்திரத்தை இன்னொருவரிடம் கொட்டுகிறார். அந்த இன்னொருவர் தன் கோபத்தை வெளிப்படுத்த, அடுத்த ஆளைத் தேடுகிறார்.

உங்கள் ஒருவரின் கோபம் உங்களைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; உங்களோடு தொடர்பில் இல்லாத பலரையும் சங்கடத்துக்கு ஆளாக்குகிறது. கோபம்பற்றி இவ்வளவு ஆராய வேண்டாம்... கோபம் வந்தால் யாரையாவது பிடிச்சுத் திட்ட வேண்டியதுதான். அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற மனோபாவமும் உண்டு. மன்னிப்புக் கேட்பதால், உங்கள் மனசு சாந்தம் அடையலாம். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கோபம்பற்றி பிரபலமான ஒரு கதை உண்டு. நீங்களும் கேள்விப்பட்டு இருக் கலாம். ஒரு பையனுக்கு பயங்கரமான கோபம் வருமாம். ஆத்திரம் வந்தால் அனைவரையும் திட்டித் தீர்ப்பார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அப்பா ஓர் உத்தி சொன்னார்... 'உனக்குக் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்பக்கத்தில் இருக்கிற மரப்பலகையில் ஒரு ஆணி அடித்து வை' என்றார். மகனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். கோபம் வருகிறபோது எல்லாம் சுத்தியலையும் ஆணியையும் எடுத்துக்கொண்டு மரப்பலகையை நோக்கிக் கிளம்பிவிடுவார். ஒரு நிலையில் மரப்பலகை முழுக்க ஆணிகளாக இருந்தன. ஒரு மனிதர் எவ்வளவு நாட்கள்தான் இப்படிச் செய்ய முடியும். ஆணி அடிக்கிற வேலையைச் செய்வதற்கு அலுத்துக்கொண்டு கோபத்தைக் குறைத்துவிட்டார் அந்த பையன்... கொஞ்ச நாளில் அவருக்குக் கோபமே வருவது இல்லை.

அப்பாவிடம் போய் சந்தோஷமாக தகவலைச் சொன்னார் மகன். அப்பா இப்போது இன்னொரு யோசனை சொன்னார். 'இனி, கோபம் வராத சமயங்களில் எல்லாம், அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கு' என்றார். சில நாட்களுக்குப் பிறகு அப்பாவிடம் சென்ற மகன், 'அப்பா, என்னோடு வந்து அந்த மரப் பலகையைப் பாருங்கள். இப்போது அதில் ஒரு ஆணிகூட இல்லை' என்றார்.

மரப்பலகையைப் பார்த்துவிட்டு அப்பா சொன்னார், 'மகனே, உனக்கு இப்போது கோபமே வருவது இல்லை. மகிழ்ச்சி. ஆனால், அத்தனை ஆணிகளையும் பிடுங்கிய பின்னரும் ஆணி அடித்த தடம் இருக்கிறதே அதை என்ன செய்ய முடியும்?' என்றார்.

நீங்கள் கோபப்பட்டதற்கும் கொட்டிய வார்த்தைகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், அது ஏற்படுத்திய காயங்கள் மாறாது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. இரவு நன்றாகக் குடித்துவிட்டு, கூட இருப்பவர்களிடம் வம்பிழுத்துத் திட்டிவிட்டு, மறுநாள் காலை மன்னிப்புக் கேட்கிற செயலுக்கும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு, ஸாரி சொல்கிற குணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கோபத்தை எங்கே, எப்படி, யாரிடம் எந்த வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அதன்படி கோபப்படுகிற சக்தி பெரும்பாலானவர்களிடம் இருப்பது இல்லை. கோபப்படாமல் இரு என்று பொத்தாம் பொதுவாக சொல்லித் தருகிற சமூகமும், ஒரு மனிதனால் கோபப்படாமல் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் அதைச் சொல்கிறது. அப்படி ஒற்றை வரியில் சொல்லிவிடுவது எளிதாகவும் இருக்கிறது.

கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறைய உத்திகள் சொல்லித்தரப்படுகின்றன. ஆனாலும், எந்தக் குறுக்கு வழியும் கோபத்தைக் கையாள்வதற்கான நிரந்தர வழியைச் சொல்லித்தருவது இல்லை.

கோபம் வந்தால், தண்ணீர் குடியுங்கள், கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் வந்தால், தனி அறைக்குள் போய் அடைந்துகொள்ளுங்கள், கோபம் வந்தால், மெல்லிய இசை கேளுங்கள், கோபம் வந்தால், யோகா செய்யுங்கள், கோபம் வந்தால், டி.வி-யில் காமெடி பாருங்கள், கோபம் வந்தால், இளைத்தவன் யாராவது இருந்தால் அவனை எட்டி உதையுங்கள், கோபம் வந்தால், வெறித்தனமாக விளை யாடுங்கள்... இப்படி நிறைய வழிகள் உண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்த.

நீயும் ... நானும்! - 28

இதைவிட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. 'கோபம் வந்தால், அதற்கான காரணத்தைக் கவனியுங்கள். கோப மனநிலையில் நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், அதனால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அதற்கான ஒரு வாய்ப்பை மேற்சொன்ன உத்திகள் உங்களுக்கு வழங்கலாம். மற்றபடி, அவை தற்காலிக ஏற்பாடுகள்தான்'.

கோபத்தைக் கட்டுப்படுத்துவதைவிட நெறிப்படுத்துதல்தான் அவசியம். பொதுமைப்படுத்திச் சொல்வதுபோல, கோபம் ஒன்றும் கெட்ட குணம் இல்லை. அதுவும் ஆளுமையின் அடையாளம்தான். உங்கள் கோபம் எதை நோக்கியது என்பதுதான் கேள்வி.

அது ஓர் ஆணவத்தின் வெளிப்பாடா? அதிகாரத்தின் துணிச்சலா? வெற்று வேடமா? சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியா என்பதை அறிந்துகொள்ள வேண்டியதுதான் அவசியம்.

பாரதிக்குக் கோபம் இருந்தது, பெரியாருக்குக் கோபம் இருந்தது, நேதாஜிக்குக் கோபம் இருந்தது, சே குவேராவுக்குக் கோபம் இருந்தது... அவை எல்லாம் அர்த்தமற்ற கோபங்கள் இல்லை. அவசியமான கோபங்கள். சமூகத்தின் அவலங்கள் மீதான கோபங்கள், சாதியக் கட்டுமானத்தின் மீதான கோபங்கள், அடிமைத்தனம் மீதான ஆத்திரங்கள், புரட்சிக்கு வழிவகுத்த கோபங்கள்.

இளைத்தவனை ஏறி மிதிப்பதற்கான உத்தியாக நாம் வெளிப்படுத்துவது கோபம் அல்ல; அகம்பாவம். அந்தக் கோபத்தால் நம் சுற்றத்தை மாசுபடுத்துகிறோம். இயலாதவனின் நிலையை ஏளனம் செய்கிறோம். அடையாளங்களின் மீது ஆபரணப் பூச்சு செய்யப் பார்க்கிறோம்.

எதிரில் இருப்பவனின் உண்மை பேசுவதற்கான வெளியைக் குறைக்கிறோம். அவரைப் பொய்யராக்குகிறோம். ஒரு ரம்மியமான சூழலைக் கலவரமாக்குகிறோம். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால், இன்னொரு மனிதனின் நியாயமான உரிமைகளையும் நமது நியாயமற்ற கோபங்கள் பறித்துவிடுகின்றன. உங்கள் கோபத்துக்குப் பயந்தே, பலரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், வார்த்தை களையும் புதைத்துவிடுகிறார்கள். இந்தக் கோபத்தால் யாருக்கு என்ன லாபம்?

கோபத்தைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதனை நெறிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த நெறிப்படுத்தல் சமூகத்தின் எல்லாத் தளங்களையும் சலவை செய்யும். தனி மனித உரிமைக்காக வாதாடும். உண்மைக்காகப் போராடும். தவறுகளைத் தட்டிக் கேட்கும். அநியாயத்தை அடக்கப் பார்க்கும். அடக்குமுறையை எதிர்த்து நிற்கும். அரசியலைக் கேள்வி கேட்கும்.

கோபம் ஓர் அற்புதமான சக்தி. சமூக மாற்றங்களுக்கான திறவுகோல். அதை அற்ப காரணங்களுக்காகச் செலவிடுவது மூடத்தனம்.

உங்கள் கோபம் நியாயமானதா இல்லையா? என்பதை உங்களைவிட வேறு யாரால் சரியாக உணர முடியும். அந்த உணர்தல் நிச்சயமாக அதைக் கையாள்வதற்கான நெறிமுறையைச் சொல்லித்தரும்.

கோபம் தரும் வெப்பத்தையும் அனலையும் சமூக அவலங்களுக்கு எதிராகத் திருப்புங்கள்.

தங்களுக்கு அடுத்த தலைமுறை, கோபம் என்ற ஆற்றலைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நிறைய 'நியாய கோபக்காரர்கள்' மரித்துப்போய் இருக்கிறார்கள்.

எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படுவோம். அது, இன்னொருவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, காயங்களுக்கு மருந்து போடும் என்று முழுமையாக நாம் நம்பும் பட்சத்தில்... கோபப்படுங்கள்!

நீயும் ... நானும்! - 28
நீயும் ... நானும்! - 28
ஒரு சிறிய இடைவேளை