கைக்குழந்தைகளோடு
பிச்சையெடுக்கிறார்கள்
தங்க நாற்கரச் சாலைகளில்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
பாடும் குழந்தைகள்
வீடு வீடாய் யாசிக்கிறார்கள்
ஓட்டு கேட்டு.
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி
வந்தது
பதில் அனுப்பலாமென்றால்
பேலன்ஸ் இல்லை.
இரண்டு லட்சம் பேர் குருதியில்
சிவந்த மொழி எங்கள் மொழி
செம்மொழி.
கோயிலுக்குச் சென்றேன்
சாமியைக் காணவில்லை
அவர் சாமியாராகக் கிளம்பிவிட்டாராம்.
செத்துவிடலாம் எனப்
பூச்சி மருந்தைக் குடித்தேன்
போலி மருந்தாம்!
- என்.விநாயக முருகன்
இன்னும்...
எல்லாவற்றையும் இழந்து
உன் முன்
ஏதுமற்றதாய் நிற்கிறது
எங்கள் வரலாறு.
அப்படித்தான்
நம்பிக்கொண்டிருக்கிறாய்
நீயும்.
ஆனால்...
எவரும் அறியாதபடி
எங்கள்
எல்லோரிடமும் இருக்கிறது
கண்ணகியின்
இன்னொரு மார்பு!
- ராசை.கண்மணிராசா
இந்தப் பிஞ்சுகள் விற்பனைக்கல்ல!
நிறுவனத்தின் விளம்பரத்துக்காக
இருபது ரூபாய் பொருளை
பத்து ரூபாய்க்குத் தருவதாக
விற்கிறான்
பேருந்தில் ஒருவன்.
'கை நிறையக் கொட்டி
நெற்றி நிறையத் தேய்க்க
வேண்டாம்' என
வார்த்தை ஜாலம் புரிகிறான்
தைலம் விற்பவன்.
வரைபடமும்
பொது அறிவுப் புத்தகங்களும்
சுமந்து வருபவன்
ஆச்சர்யமூட்டுகிறான்
வினாக்களையும்
விடைகளையும்
வரிசையாகச் சொல்லி.
முகத்துக்கு நேரே நீட்டி
மூன்று கைக்குட்டை பத்து ரூபாய்
என்பவன்
விற்றுவிடுகிறான்
முடிந்த வரை.
கல்லாவைத் தட்டி ஒலியெழுப்பியபடி
பேருந்தைச் சுற்றி வந்து
விற்கிறான் ஒருவன்
வெங்காயம் தூவிய
பட்டாணி சுண்டலும்,
வேர்க்கடலையும்.
ஓடி வந்து ஜன்னலோரம் நின்று
விற்க முடியாத பாட்டி
இருந்த இடத்திலிருந்தே
கண்ணீர் மல்கக்
கதறுகிறாள்
வெள்ளரிப்பிஞ்சும்
அரிசி முறுக்கும் விற்பதாக!
ஆதலையூர் சூரியகுமார்
|