Published:Updated:

உயிர் மொழி! - 02

உயிர் மொழி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 02


.
உயிர் மொழி!  - 02
உயிர் மொழி!  - 02
உயிர் மொழி!  - 02
டாக்டர். ஷாலினி
படம்: கே.ராஜசேகரன்
உயிர் மொழி!  - 02

ஜெயந்தியின் முன்னாள் கணவர் ராஜுவுக்குப் பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏன், இவர்களின் திருமணத்துக்கு என்ன ஆச்சு? அதை நம் ஊர் நீதிமன்றம் செல்லாத் திருமணம் எனத் தள்ளு படி செய்துவிட்டது. ஏன், எதனால் அந்தத் திருமணம் செல்லாமல்போனது?

விஷயம் இதுதான். திருமணம் ஆன நாள் முதலாக ஜெயந்திக்கும் ராஜுவுக்கும் இடையே தாம்பத்திய உறவே நடக்கவில்லை. முதலிரவில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் ஜெயந்திக்கு இருந்ததோ இல்லையோ... மாப்பிள்ளை சாருக்கு எக்கச்சக்கமாக இருந்தது. 'சரி... முதல் நாள்தானே' என ஜெயந்தி விட்டுக்கொடுத்தாள். ஆனால், எல்லா ராத்திரிகளும் இப்படியே இருந்தால்?

ராஜுவுக்கு என்னதான் பிரச்னை? பிரச்னை, அவன் மனதில் இருந்தது. ராஜுவுக்குத் திருமணம் என்றால் என்ன, மனைவியை எப்படிக் கையாள வேண்டும், செக்ஸ் என்றால் என்ன, ஒரு பெண்ணின் உளவியல் என்ன... ம்ஹூம், எதுவும் தெரியவில்லை. இருந்தது எல்லாம் பயமும் பதற்றமும் மட்டுமே. அவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வேறு வழியின்றிதான் ஜெயந்தி கோர்ட்டுக்குப் போனாள். விவாகரத்து முடிந்தது என்று நிம்மதியாக இருந்தவள் பதற்றத்தோடு என்னைத் தேடி ஓடிவந்தது, ராஜுவுக்கு இன்னொரு கல்யாணம் என்று கேள்விப்பட்டதால்தான்.

உயிர் மொழி!  - 02

'அவன் என்னைப் படுத்தினது போதும். அவனால் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. முதலில் அவனைக் கூப்பிட்டு கல்யாணம்னா என்ன, எப்படி நடந்துக்கணும்னு புரியற மாதிரி சொல்லுங்களேன்' என்று பொது நலன் கருதி ஜெயந்தி என்னிடம் முறையிட்டாள்.

'இதுகூடவா தெரியாது? இதை எல்லாமா சொல்லித்தர முடியும்?' என்று நீங்கள் நினைத்தால்... ஸாரி! நிஜமாகவே ஆண்கள் பலருக்குத் திருமணம் குறித்த தெளிவான புரிதல்கள் இல்லை. ஜெயந்தி தன் முன்னாள் கணவனுக்காக வைத்த இதே கோரிக்கையை, இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் நிகழ்காலக் கணவனுக்காகக் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இன்றும் நிறைய ஆண்களுக்குத் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, 'அம்மா, அப்பா ஆசைப்படுறாங்க. எல்லோரும் செய்துக்கிறாங்க. நானும் செய்யலைன்னா அசிங்கமாப்போயிடும்' என்பதற்காக நடக்கும் ஒரு சடங்கு மட்டுமே. பெண்களையாவது சின்ன வயதில் இருந்தே, 'இன்னொருத்தன் வீட்டுக்குப் போகப்போறவ' என்று சொல்லிச் சொல்லியே ஓர் அளவுக்குத் தயார் செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு இத்தகைய தயாரிப்பு எதுவும் இல்லை. அதனால்தான் திருமணம் என்கிற அமைப்பே ஆண்களை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவர்களின் அறியாமை பெண்களையும் படுத்தி எடுக்கிறது!

உயிர் மொழி!  - 02

திருமணத்தின் முதல் நிலை: துணைக்கான தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே... நரேஷ், மெத்தப் படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். '30 வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே.' என்றெல்லாம் பலவாறாக யோசித்து, 'பொண்ணு பாருங்க' என்று ஜாடைமாடையாக வும், அது பலிக்காதபோது நேரடியாகவும் சொல்லிவிட்டான் வீட்டில். ஜாதகம், நிறம், வசதி, வருமானம், அந்தஸ்து, இத்யாதி, இத்யாதிகளுடன் பெண் தேடினர். இறுதிக்கட்டத் தேர்வில் மூன்று பெண்கள் மிஞ்சினர். அதில் ஒருத்தியைக் காட்டி, 'இந்தப் பொண்ணு' என்று அம்மா சொல்லிவிட, நரேஷ§ம் சுறுசுறுப்பாக அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்தான். ஆனால், அந்தப் பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்குச் சரி வரவில்லை. லிஸ்ட்டில் அடுத்த பெண்ணைப் பார்த்தான். அவளை நரேஷ§க்குப் பிடித்துப்போனது. அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்குக் குழப்பம். தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பதா? தனக்குப் பிடித்த பெண் என்றால், அது அம்மாவுக்குச் செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்குப் பிடித்த பெண் என்றால், குறைந்தபட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள். அம்மாவுக்காகத் தியாகம் செய்துவிட்டால் என்ன என்பது பையனின் பெருங்குழப்பம்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'அம்மாவுக்குத் தெரியாததா? அவங்க சொல்கிற பெண்ணை ஏத்துக்கிட்டா, போகப்போக தானா ஆசை வந்திரும்' என்கிற கட்சியா நீங்கள்? அல்லது 'கல்யாணம் யாருக்கு? உனக்குத்தானே. நீதானே வாழப்போற? உனக்குப் பிடிச்ச பெண்ணாப் பாருப்பா' என்கிறீர்களா? உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

1. 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம். இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமுதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால்தான் திருமணம் முடிந்த உடனேயே சாந்தி முகூர்த்தம் என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.

2. இப்படி ஓர் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஸ§வல் கெமிஸ்ட்ரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்தக் கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம். இதில் பெற்றவர்கள்கூடக் கருத்து சொல்ல முடியாது.

3. அம்மா, அப்பாவைத் திருப்திப்படுத்த அவர்களைப் பார்த்துக்கொள்ள என்ற காரணங்களுக்காக ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தம். மனித விதிகளின்படி, 'அடடா, என்ன ஒரு அம்மா சென்டிமென்ட்' எனத் தோன்றலாம். ஆனால், இயற்கையின் விதிப்படி மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுதான் உயிரினத் தோற்றத்தின் அடிப்படையான அம்சம்.

அதற்காக அம்மா - அப்பாவை அம்போஎன விட்டுவிடுவதா? நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை உதாசீனப்படுத்துவது அநியாயம் இல்லையா? அதுவும் சரிதான். என்ன செய்யலாம். இந்தச் சமன்பாட்டை எப்படிச் சரிசெய்யலாம்?

உயிர் மொழி!  - 02
உயிர் மொழி!  - 02
(காத்திருங்கள்)