மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 03

மனம் கொத்திப் பறவை
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 03

மனம் கொத்திப் பறவை! - 03
மனம் கொத்திப் பறவை! - 03
மனம் கொத்திப் பறவை! - 03
மனம் கொத்திப் பறவை! - 03

ந்தக் கறுப்பினப் பெண்ணின் பெயர் கோலா பூஃப் (Kola Boof). சூடானில் பிறந்து

அமெரிக்காவில் வளர்ந்தவர். அவர் எழுதிய 'காணாமல்போன பெண்ணின் நாட்குறிப்பு' (Diary of a Lost Girl) என்ற புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். மின் கம்பியைத் தொட்ட அதிர்ச்சியைக் கொடுத்த புத்தகம் அது!

மொராக்கோவில், மராக்கெஷ் என்ற ஊரில், ஓர் உணவு விடுதியில் தன் நண்பனோடு அமர்ந்து சிங்கக் கறி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் நைமா என்ற இயற்பெயரைக்கொண்ட கோலா பூஃப். (அது சரி, உங்களில் யாரும் சிங்கக் கறி சாப்பிட்டு இருக்கிறீர்களா?) அப்போது இரண்டு பேர் அவரிடம் வந்து, "அந்த நபர் உங்களை அழைக்கிறார்" என்று ஒருவரைச்சுட்டிக் காட்டுகிறார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 03

"என்னை அழைக்க அவர் யார்? போய்யா, அந்தப் பக்கம்" என்கிறார் நைமா. அமெரிக்கப் பெண்ணாயிற்றே? இதற்கிடையில், கடைக்காரர் வந்து... "அவர் அழைத்துப் போகாவிட்டால், உங்கள் உயிரும் உங்கள் நண்பரின் உயிரும் உங்களிடம் இல்லை" என்கிறார். அதற்குள் இன்னும் ஏழெட்டுப் பேர் வந்து நைமாவின் நண்பரைத் தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

நைமாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுவே அமெரிக்காவாக இருந்தால், நடப்பதே வேறு. கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் வந்து அவரிடம் தவறாகநடந்து கொண்டவர்களைக் கைதுசெய்து இருக்கும். இது அமெரிக்கா அல்ல; மொராக்கோ. இங்கே பணம் படைத்தவர்களும் லோக்கல் தாதாக்களும் வைத்ததுதான் சட்டம். நாட்டின் நிர்வாகத்தையே மாஃபியா கும்பல்தான் கையில் வைத்திருந்தது.

நைமா அந்த நபரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். "ஏன் அந்தக் குரங்குப் பயலோடு அமர்ந்திருக்கிறாய்? இனிமேல் நான்தான் உன் காதலன்" என்கிறார் அவர்.

நிலைமையைப் புரிந்துகொண்ட நைமா, "என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்" என்று கெஞ்சுகிறார்.

"என்னைவிடக் கீழே இருப்பவர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்; அதுவும் நீ ஒரு பெண்" என்கிறார் அந்த ஆள்.

மனம் கொத்திப் பறவை! - 03

பயத்தில் அழ ஆரம்பிக்கிறார் நைமா. அரேபிய, ஆப்பிரிக்க ஆண்களுக்கு யாரும் அழுதால் பிடிக்காது. நைமாவின் கன்னத்தில் பலமான அறை விழுகிறது. அவ்வளவுதான். அடுத்த கணமே அந்த உணவு விடுதியைவிட்டுக் கண்மண் தெரியாமல் ஓடிப்போய், தன் காரை எடுத்துக்கொண்டு... தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பறந்துவிடுகிறார் நைமா.

அன்று இரவு நைமாவின் அறைக் கதவு தட்டப்படுகிறது. வெளியே அந்த நபரும் அவருடைய அடியாட்களும். தன் ஆட்களை வெளியே நிறுத்திவிட்டு சுவாதீனமாக அறைக்குள் வரும் அவர், "இன்றிலிருந்து நீ என் செக்ஸ் அடிமை" என்று சொல்லிவிட்டு நைமாவை மிக மோசமாக வன்கலவி செய்கிறார்.

மனம் கொத்திப் பறவை! - 03

சில தினங்களில் நைமாவை ஒரு மாபெரும் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ப்ரூனே சுல்தானின் மாளிகையும்கூட அப்படி இருக்காது; குளியலறைகூட தங்கத்தால் இழைக்கப்பட்டு இருந்தது என்று எழுதுகிறார் நைமா. ஆறு மாத காலம் அவர் அந்த அரண்மனையில் சிறை வைக்கப்படுகிறார்.

அங்கே நடந்த கதையைப்பற்றி எழுதுவது சிரமம். காரணம், அது ஒரு பெரிய செக்ஸ§வல் ஆர்ஜி. ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். சூடானைச் சேர்ந்த இஸாம் என்ற கனவான் எஜமானரின் விருந்தினராக வருகிறார். இஸாமுக்கும் நைமாவுக்கும் ஏற்கெனவே சூடானில் காதல் மலர்ந்துஇருந்தது. இது நைமாவின் எஜமானருக்குத் தெரியும். ஆனால், நைமா இங்கே செக்ஸ் அடிமையாக இருப் பது இஸாமுக்குத் தெரியாது.

நைமாவை நிர்வாணமாக்கி, அவர் கழுத்தில் நாய் செயினை மாட்டுகிறார் எஜமானர். அவரை நாயைப்போல் நடக்கச் சொல்கிறார். அப்படியே அழைத்துப் போய் இஸா மிடம் காண்பிக்க வேண்டும் என்பது அவர் திட்டம். "முடியாது" என்று மறுத்த நைமாவின் முகத்தில் ஓர் உதை விடுகிறார் எஜமானர். ஆறரை அடி உயரம் உள்ள அவருடைய உதையில், நைமாவின் மூக்கும் தாடையும் உடைந்து ரத்தம் கொட்டுகிறது. உடனே, நாயைப்போல் தவழ்கிறார் நைமா. அப்போது நைமாவுக்குத் தோன்றுகிறது, 'மனித குலத்தில் பிறந்த ஒருவர் இன்னொரு மனிதரை இவ்வளவு கேவலமாக நடத்துவாரா?'.

மனம் கொத்திப் பறவை! - 03

ஆனால், அந்த எஜமானரை வெறும் சேடிஸ்ட் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. பல சமயங்களில் ஒரு விளையாட்டுச் சிறுவனைப்போல் நடந்துகொள்கிறார். சில சமயம் அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் காதலனைப்போல் கொஞ்சுகிறார். இந்த உலகிலேயே விலை உயர்ந்த வைர நெக்லஸைப் பரிசளிக்கிறார். இந்த ஆள் மன வளர்ச்சி குன்றிய குழந்தையா, காதலனா அல்லது சைக்கோவா? நைமாவால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால் நைமா, அவரைத் தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெறுக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.

ஆறு மாதங்கள் இப்படியே செல்கிறது. ஒருநாள் எஜமானர் சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது அவரிடம், "என்னை விட்டுவிடுங்கள்; நான் அமெரிக்கா போய்விடுகிறேன்" என்று கெஞ்சுகிறார் நைமா. எஜமானருக்குப் பல மனைவிகளும் 25 குழந்தைகளும் இருந்தனர். தவிர, அப்போது அவர் ஒரு பிரெஞ்சுப் பெண்ணை செட்டப் செய்துகொண்டு இருந்த நேரம் வேறு. அதன் காரணமாகவோ என்னவோ, நைமாவின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். அதோடு, 20,000 டாலர் பணமும் கொடுக்கிறார்; நைமாவுக்குக் கொடுத்திருந்த நகைகளையும் எடுத்துச் செல்லலாம் என்கிறார்.

மனம் கொத்திப் பறவை! - 03

மறுநாள் நைமா அமெரிக்கா கிளம்ப வேண்டும். அன்றே எஜமானரும் ஏதோ ஒரு வெளிநாடு கிளம்புகிறார். எல்லோரும் கிளம்புவதற்கு முன்பு, அன்றைய இரவு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. விருந்துக்கு வந்தவர்களில் ஒரு பிரமுகர் கறுப்பின மனிதர். எல்லாருடைய முன்னிலையிலும் நைமாவைப் பலாத்காரம் செய்யப் பார்க்கிறார்.அதுவரை எவ்வளவோ அவமானங்களை சகித்துக்கொண்ட நைமா, தன் உயிரே போனாலும் சம்மதிக்க மாட்டேன் என்கிறார்.

அதற்கான காரணத்தைத் தன் நாட்குறிப்பில் விளக்குகிறார். 'கறுப்பின ஆண்கள் எங்களை அரேபியர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்றிருக்கிறார்கள். எங்கள் இனமும் கலாசாரமும் வெள்ளையர்களால் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கப்பட்டது.' அதாவது, இனக்கலப்பு செய்வதன் மூலம் ஓர் இனத்தையே இல்லாமல் ஆக்குவதைக் குறிப்பி டுகிறார் நைமா. இப்போது இலங்கையில் ராஜபக்ஷே செய்வதுபோல!

மனம் கொத்திப் பறவை! - 03

முதல்முறையாக ஒரு கறுப்புப் பெண் தன் கட்டளையை மீறுவதைக் கேட்ட எஜமானர் அவளை நோக்கி வருகிறார். அப்போது நைமா யாரும் எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கிவிட்டு ஓடி, அந்த அரண்மனையின் தோட்டத்தில் ஒளிந்துகொள்கிறார். எஜமானரின் சிரிப்புச் சத்தம் தூரத்தில் கேட்கிறது. அவர் விருப்பப்பட்டால் நைமா ஒளிந்திருக்கும் இடத்தை நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். ஏனென்றால், அவரிடம் பணிபுரியும் அத்தனை பேரின் பற்களிலும் எடுக் கவே முடியாதபடி அவர் ஒரு 'சிப்'பை இணைத்துவிடுவார். அந்த சிப்பைப் பொருத்திக்கொண்டு இருப்பவர் எங்கே சென்றாலும் அந்த இடத்தை எஜமானரின் மானிட்டர் தெரிவித்துவிடும்.

ஆனால், அன்றைய இரவு நைமாவைத் தேடி யாரும் வரவில்லை. மறுநாள் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு மொராக்கோவைவிட்டு அமெரிக்கா கிளம்புகிறார் நைமா.

மனம் கொத்திப் பறவை! - 03

அமெரிக்கா வந்த பிறகு, நைமா என்ற தன் அரேபிய அடையாளத்தை விட்டுவிட்டு, கோலா பூஃப் என்ற ஆப்பிரிக்கப் பெயராக மாற்றிக்கொள்கிறார். அவரை ஆறு மாத காலம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர் யார் தெரியுமா? பின்னாளில் உலகமே அஞ்சி நடுங்கிய ஒசாமா பின்லேடன். நைமா அவரிடம் இருந்தது 1996-ம் ஆண்டு. அப்போது ஒசாமா... இந்த அளவுக்குப் பிரபலம் இல்லை.

கோலா பூஃப் எழுதியிருப்பது எல்லாம் கப்ஸா என்று அமெரிக்காவில் சிலர் சொல்கிறார்கள். உண்மையாக இருந்தால் ஆதாரம் எங்கே என்பது அவர்கள் வாதம். "நானும் ஒசாமாவும் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்; இப்போது என்னிடம் ஒன்றுகூட இல்லை; அந்த ஆள் இவ்வளவு பெரிய டெரரிஸ்ட்டாக மாறுவார் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட் கிறார் கோலா பூஃப்.

அமெரிக்காவுக்கு, அரேபியர்களைக் கண்டால் பிடிக்காது. கோலா பூஃப் தன் புத்தகத்தில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை மட்டுமேவைத்து ஒட்டுமொத்த அரேபியக் கலாசாரத்தையே தாக்குகிறார். அதனால், இது எல்லாமே அமெரிக்காவின் தூண்டுதலாக இருக்குமோ என்று சந்தேகிக்கவும் இடம் இருக்கிறது. ஏனென்றால், இதுவரை அமெரிக்காவை எதிர்த்த அனைவரின் மீதும் (லெனின் முதல் சே குவேரா வரை) இதுபோன்ற செக்ஸ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலும், ஒசாமாவை வைத்துக் காசு பண்ணுவதற்காகவும் கோலா பூஃப் இப்படி எழுதியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், இன்றைய தினம் ஒசாமா பற்றி இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டு உயிர் பிழைக்க முடியுமா? மேலும், கோலா பூஃப் சூடானின் விடுதலை இயக்கத்திலும் முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதுவரை பலமுறை கோலா பூஃபின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டு இருக்கிறது. அவருடைய புத்தகத்தை வெளியிடும் பதிப்பகத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இப்போதும் கோலா பூஃப் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடுதான் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

கோலா பூஃப், கவிதை, சிறுகதை, நாவல் என்று பலவிதமாக எழுதுகிறார். இதில் என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால், அவருடைய எல்லாப் புத்தகங்களின் பின் அட்டைகளில் உள்ள புகைப்படங் களிலும் கோலா பூஃப் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாகவே காட்சி தருகிறார். என்ன காரணம் என்று புரியவில்லை. சூடானின் தேசிய உடையே இதுதானா? அல்லது, 'இந்த உடலால்தானே இவ்வளவு பிரச்னைகளும்? இப்போது இதையே காட்சிப் பொருள் ஆக்குகிறேன்' என்ற விரக்தியா? அல்லது, வியாபாரத் தந்திரமா? தெரியவில்லை!

என் வளர்ப்புச் செல்லம் பப்பு லாப்ரடார் இன நாயாக இருந்தாலும் பார்ப்பதற்கு சிங்கம்போலவே இருக்கும். அதை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லும் வழியில், என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி திடீர் என்று குறுக்கிட்ட ஒரு பெண் "நீங்கதானே சாரு நிவேதிதா?" என்று கேட்டார். பக்கத்தில் நின்றிருந்த சிங்கக் குட்டிக்குக்கூட அவர் பயந்ததாகத் தெரியவில்லை. "இப்போதுதான் விகடனில் பார்த்தேன். இந்தத் தெருவில்தான் இருக்கிறீர்களா, நான் பார்த்ததே இல்லையே?" என்று ஆச்சர்யப்பட்டார். "ஆமாம்... ஆனால், நான் உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்" என்றேன். நட்புடன் கை குலுக்கினார்.

மனம் கொத்திப் பறவை! - 03

என் பலவீனங்களில் ஒன்று, என் வாய். எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பேன். அதன்படி, இந்தச் சம்பவத்தைப்பற்றி அவந்திகாவிடம் ஆச்சர்யத்துடன் சொன்னேன். "சிறு பத்திரிகைகளில் எழுதி வந்த வரை யாருக்கும் என்னைத் தெரியவில்லை. இப்போது பார், பக்கத்து வீட்டுக்கெல்லாம் பரவிவிட்டது." ஆனால், அவந்திகா என் குதூகலத்தைப் பகிர்ந்துகொள்வதாக இல்லை. சற்றே கடுமையான தொனியில் (ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ?) "அந்தப் பெண்ணுக்கு என்ன வயது?" என்றாள்.

நான் கொஞ்சம் வெகுளிதான்; விவரம் தெரியாதவன்தான். ஆனாலும், ஆபத்துக் காலத்தில் என் மூளை சடுதியில் வேலை செய்யும். உஷாரான நான் "14 இருக்கும்" என்றேன். "ஓ, அப்படியா, 14 வயதுப் பெண் விகடன் படிக்கிறாளா?" என்றாள். அந்தப் பெண்ணின் வயது 21 இருக்கும் என்ற உண்மையைச் சொல்லிஇருந்தால், அவந்திகா என்ன சொல்லியிருப்பாள்?

சமயங்களில் வலைப்பூவிலும் (blog) நல்ல சமாசாரங்கள் கிடைக்கின்றன. நண்டு என்ற நண்பரின் வலைப்பூவில் (http://nudenandu.blogspot.com/) பார்த்தது:

பளபளக்கும் லீ கூப்பர்ஷூ
உள்ளுக்குள் கிழிந்த சாக்ஸ்.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்
ஒரு குவளை தேநீர் ஐந்து ரூபாய்.

இந்த நண்டு யார் தெரியுமா? சுந்தர ராமசாமியின் பேரன்!

மனம் கொத்திப் பறவை! - 03
மனம் கொத்திப் பறவை! - 03
(பறக்கும்...)