Published:Updated:

உயிர் மொழி! - 03

உயிர் மொழி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 03

உயிர் மொழி!  - 03
உயிர் மொழி!  - 03
உயிர் மொழி!  - 03
டாக்டர் ஷாலினி
படம் : கே.ராஜசேகரன்
உயிர் மொழி!  - 03

தாயா, தாரமா என்ற குழப்பத் தில் நிறைய ஆண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்தியத்

திருமணத்தில் ஏற்படும் மிக மோசமான விரிசல்களுக்குக் காரணம், இந்த சமன்பாட்டுக் கோளாறுதான். அம்மா சென்டிமென்ட்களைக் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு இதை நாம் பேசுவோம்.

அம்மா பிள்ளையாக வளர்ந்தவர் ரகு. திருமணத்துக்குப் பிறகும் அப்படியே. அம்மாவின் பேச்சைக் கேட்டு தினமும் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார் ரகு. அவளை யும் அவள் குடும்பத்தையும் குறை சொல்வது, மட்டம் தட்டிக் கட்டம் கட்டுவது, நொட்டை சொல்லிக்கொண்டே இருப்பது... என இப்படியே போனால் பாவம், மனைவி என்னதான் செய்வாள்?

உயிர் மொழி!  - 03

வேலைக்குப் போயாவது சற்று நேரம் குடும்பப் பிரச்னைகளை மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று வேலைக்குப் போனாள். அதற்கும், 'படிச்ச திமிர், வேலைக்குப் போற மெதப்பு' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி... சமையல், குழந்தைப் பராமரிப்பு மாதிரியான விஷயங்களில் பிரச்னைகளை ஆரம்பித்தார் மாமியார். இதைத் தட்டிக்கேட்கத் துப்பு இல்லாமல், 'பெரியவங்கன்னா அப்படித்தான் பேசுவாங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகத் தெரியலைன்னா, நீயெல்லாம் என்ன பொம்பளை?' என்று அதற்கும் மனைவி மேலேயே பழியைப் போட்டு எஸ்கேப் ஆனார் ரகு.

பொறுக்க முடியாமல் 'தனிக் குடித்தனம் போயிடலாமே?' என்று மனைவி மன்றாடிய போது, 'எங்கம்மாகிட்டே இருந்து என்னைப் பிரிக்கப் பார்க்கி றியா?' என்று சண்டை. இந்த விவகாரம் இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போது, மாமியார் - மாமனார் எல்லாம் என்ன செய்தார்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? மகன் தன்னைவிட்டுப் போய்விடுவான் என்கிற ஆதங்கத்தில் மாமியார், 'நான் செத்துப்போறேன்' என்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டார். மாமனார் அவசரமாக அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ரகசியமாக என்னை வந்து பார்த்துச் சொன்னது இதுதான், "என் மருமகள் பாவம், படாதபாடுபடுகிறாள். ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே இப்படித் துன்புறுத்துவதைச் சகிக்கவே முடியவில்லை. என் மனைவியை எந்தக் காலத்திலும் என்னால் அடக்க முடிந்ததே இல்லை. அழுகை, உண்ணாவிரதம், ஒப்பாரி, 'வீட்டைவிட்டுப் போறேன்', 'செத்துப்போறேன்' என்று ஏதோ ஓர் அஸ்திரத்தை வீசிக்கொண்டே இருப்பாள். நான் அவளை இங்கு அட்மிட் செய்ததே கொஞ்ச நாளைக்காவது நாங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றுதான். இந்த இடைவெளியில் எப்படியாவது அவளைத் திருத்திவிடுங்கள்" என்றார்.

உயிர் மொழி!  - 03

மாமியார்களைத் திருத்துவது ரொம்ப சுலபம் மாதிரி அவர் சொல்லிவிட்டுப் போனார். ஆனால், அது ரொம்பக் கஷ்டமான காரியம். பால் வடியும் முகமும் என்னைப்போலப் பாவமான பெண் உலகிலேயே இல்லை என்ற பாவ்லாவுமாகப் படுத்திருந்தார் மாமியார். தன் மகனைப் பெற்று வளர்க்க அவர் பட்ட பாடுகளை அடுக்கி, இப்படியெல்லாம் பாடுபட்டு வளர்த்துஆளாக் கிய தன் மகனை, "அந்தச் சிறுக்கி தலையணை மந்திரம் ஓதி கைக் குள் போட்டுக்கொண்டாள்" என்று ரீ-மிக்ஸ் கதை சொன்னார். கடைசியாக, "அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா டாக்டர். ஆனா, இன்னொரு அம்மா கிடைப்பாளா?" என்று பஞ்ச் டயலாக் வேறு.

கடைசியில் நான், "இவ்வளவு பாடுபட்டு பையனை வளர்த்து ஆளாக்கினதுக்கு, பிரயோஜனமே இல்லாமப்போச்சு போங்க" என்றதும் மாமியார் யோசிக்க ஆரம்பித்தார்.

உயிர் மொழி!  - 03

புழு, பூச்சியில் தொடங்கி சிங்கம், புலி, கரடி, மனிதன் வரை எல்லா ஜீவராசிகளிலும் தாய் என்பது குட்டிகளுக்காக மெனக்கெடத்தான் செய்கிறது. எந்தக் குட்டியும் 'என்னைப் பெற்றுக்கொள், எனக்காகச் சிரமப்படு' என்று தாயிடம் வேண்டிக்கொண்டு பிறப்பது இல்லை. தாயிடம் இருந்து இயல்பாகவே இந்த ப்ராசஸ் நடக்கிறது. தன் உடலை வருத்தி தாய் ஏன் வம்சவிருத்தி செய்ய வேண்டும்? காரணம், அவள் மரபணுக்களைப் பரப்பிக்கொள்ள இருக்கும் ஒரே வழி அது மட்டும்தான். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மனித இனம் தொடர்ந்து நிலைத்து இருப்பதற்கான சுயநல ஏற்பாடுதான் இனவிருத்தி. அது மனித சித்தத்துக்கு அப்பாற்பட்டு தன்னியல்பாகவே நடக்கிறது.

இந்த இனவிருத்தியை மனிதத் தாய் மட்டும் செய்யவில்லை. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் செய்யும் அனிச்சைச் செயல் இது. மனுஷிக்காவது பிரசவிக்க, டாக்டர், பயிற்றுவிக்க வாத்தியார், கட்டுப்படுத்த சட்டம் என எத்தனையோ ஊன்றுகோல்கள் உள்ளன. ஆனால், பிற ஜீவராசிகள் எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஆக, தாய்மைச் சுமை என்று பார்த்தால், மனிதத் தாயைவிட பிற ஜீவராசிகளுக்குத்தான் அதிக பளு. ஆனால், பிற ஜீவராசிகள் தங்களின் கஷ்டத்தைச் சொல்லிக்காட்டி, அதற்குப் பிரதி உபகாரம் எதிர்பார்ப்பது இல்லை. பிற ஜீவராசி குட்டீஸ§ம் இதை ஓவர் சென்டிமென்ட்டலாக அணுகுவது இல்லை. பிறந்தோமா, வளர்ந்தோமா, இனப்பெருக்கம் செய்தோமா, அடுத்த தலைமுறை எனும் தொடர் சங்கிலியை உரு வாக்கினோமா என்று மிக கேஷ§வலாக வாழ்கின்றன. காரணம், இயற்கையைப் பொறுத்தவரை குட்டி வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து, தன் முந்தைய தலைமுறையிடம் பெற்ற மரபணுக்களைச் சேதாரம் இன்றி,அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே தாய்க்கு ஆற்றும் உதவியும் நன்றியும் ஆகும். இதை மீறி குழந்தை, தாய்க்குச் செய்ய வேண்டிய வேறு கடமைகள் இல்லை. கூட்டமாக வாழும் யானை, டால்ஃபின், குரங்கு மாதிரியான ஜீவராசிகளில் முதுமையில் குட்டிகள், பெருசுகளைப் பராமரிக்கும். ஆனால், அதில் பாசம் இருக்குமே தவிர, கண்மூடித்தனமான அம்மா சென்டிமென்ட் இருக்காது.

உயிர் மொழி!  - 03

மற்ற ஜீவராசிகளில் எந்தத் தாயும், 'நான் உன்னைப் பெற்றேனே, வளர்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?' என்று பேரம் பேசி, தாய்ப் பாசத்தைப் பண்டமாற்றுப் பொருளாக்குவதும் இல்லை. மனிதத் தாய் மட்டும்தான் கொஞ்சமும் சங்கோஜப்படாமல், மிக வெளிப்படையாகத் தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்கிறாள். சில சமயம், தன் குட்டியின் இனப்பெருக்கமே தடைபடும் அளவுக்கு!

மற்ற ஜீவராசி எவற்றிலுமே இல்லாத இந்த விசித்திரம், மனிதத் தாய்களில் மட்டும், அதிலும் சிலருக்கு மட்டும் நிகழ்வது ஏன் என்று யோசிக்கிறீர்களா? இதற்கு விவகாரமான சில காரணங்கள் உள்ளன. அவை...

உயிர் மொழி!  - 03
உயிர் மொழி!  - 03
(காத்திருங்கள்)