ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.
மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"
அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"
'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.
இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.
நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.
வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.
நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?
நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.
நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!
|