மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 30

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 30


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 30
நீயும் ... நானும்! - 30
நீயும் ... நானும்! - 30
கோபிநாத்,படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 30

து ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த ஒரு பயிற்சி வகுப்பு. என் நண்பர் ஒருவர்

மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். 1,000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.

'நிச்சயம் தருகிறேன்...' எனச் சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?' என்றார் மறுபடியும். எல்லோரும் கை தூக்கினார்கள்.

நீயும் ... நானும்! - 30

'ஓ... அப்படியா?' என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்சியைத் தன்ஷூவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார், 'யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?' கூட்டத்தில் அப்போதும் எல்லோரும் கையை வேகமாக உயர்த்தினார்கள்.

நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!

நீயும் ... நானும்! - 30

இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம், ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம், நசுக்கப்பட்டு இருக்கலாம், கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால், எது வானாலும் உங்களுக்கு மதிப்பு இல்லை, நான் எதற்கும் பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!' என்றார் புன்னகையுடன்.

'1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும் வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்... ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!' என்பதுதான் நண்பரின் செய்தி.

நிறைய ஆளுமைப் பயிற்சி வகுப்புகளில்சொல்லப் படுகிற விஷயம்தான் இது. ஆனால், எத்தனை பேரால் இதைப் பின்பற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.

நாம் நிராகரிக்கப்படுகிறபோது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இன்னொன்று, 'நான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன்' என்று நினைப்பது.

எல்லோருக்குமே வாழ்க்கை எளிதாக அமைந்து விடுவது இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிற சங்கதி எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிற விஷயம்தான்!

நீயும் ... நானும்! - 30

இரண்டாவது, ரோட்டில் கிடக்கிற கல்லை யாரும் உரசிப்பார்ப்பது இல்லை, சட்டை செய்வது இல்லை. அது வைரக் கல்லாக இருந்தால், உரசிப் பார்க்கிறார்கள், உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். நீங்கள் மதிப்பான மனிதர் என்பதால்தான் நீங்கள் கசக்கப்படுகிறீர்கள்... நசுக்கப்படுகிறீர்கள். அந்த 1,000 ரூபாய் நோட்டைப்போல அவற்றை அவமானங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

யார் மிதித்தாலும், ஏளனம் செய்தாலும், உங்கள் மதிப்பு அதன் தரத்தை இழந்துவிடப்போவது இல்லை. உங்கள் திறன் அழிந்துவிடப்போவது இல்லை. அதற்கு என்று ஒரு விலை இருக்கிறது... அதை நம்புங்கள்.

நீயும் ... நானும்! - 30

ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.

மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"

அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"

'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.

இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.

இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.

நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.

வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.

நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?

நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.

நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!

நீயும் ... நானும்! - 30
நீயும் ... நானும்! - 30
- ஒரு சிறிய இடைவேளை