இப்படி எல்லாம் திட்டமிட்ட குறிக்கோள் வைத்திருந்தால்தான், இலக்கை அடைய முடியும் என்று சொல்லலாம். இப்படிக் கட்டுப்பாடான திட்டம் வைத்திருப்பவர்கள்தான் ஜெயிக்கலாம் என்றால், வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் நினைத்தது ஒன்று... செய்துகொண்டு இருப்பது ஒன்று என்று ஏன் சொல்கிறார்கள்?
இலக்குகளை விசாலமாக வையுங்கள். உலகத்தையும் வாய்ப்புகளையும் அகலமாகப் பாருங்கள். குறியீடுகளை மனதில் பொருத்திக்கொண்டு இலக்குகளைத் துரத்தாதீர்கள். இந்தத் துரத்தலால் உங்களை அறியாமல் நீங்களே ஒரு கடிவாளத்தைக் கட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைய வாசல் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறீர்கள்.
உங்கள் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பரிசும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசியும், வரமும் உங்கள் முன்னால்தான் இருக்கிறது. ஆனால், அது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் வடிவில் இல்லை. அவ்வளவுதான். ஆனால், அது வேறு ஒரு வடிவில் இருப்பதால், கவனிக்கத் தவறவிடுவது எவ்வளவு பெரிய தவறு.
ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு ஸ்போர்ட்ஸ் கார் மீது ஆசை. எப்போதும் அது குறித்துதான் சிந்தனை. யார் அது மாதிரி கார் ஓட்டிப் போனாலும், மிக ரசிப்பான். எங்காவது அந்த கார் நின்றிருந்தால், ஒரு காதலியைப் பார்ப்பதுபோல் ரசித்துப் பார்ப்பான். நண்பர்களுடன் பேசும்போதுகூட, அந்த கார்பற்றிதான் பேசுவான்.
அப்பா ஒருநாள் சொன்னார், 'நீ கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு... உனது பட்டமளிப்பு நாளில் அந்த காரைப் பரிசாகத் தருகிறேன்' என்று. இளைஞனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவன் கனவு கண்ட ஸ்போர்ட்ஸ் கார் அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
கார்பற்றிய கனவுகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்த அவன் முதல் வகுப்பில் தேறினான். பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அவன் கனவு நிறைவேறப் போகிற நாள். பட்டத்தைக் கையில் வாங்கிக்கொண்டு அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்தான். அப்பாவிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு நின்றான்.
மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக்கொண்ட தந்தை அருகில் இருந்த அறைக்கு அழைத்துப் போனார். இளைஞனுக்கு ஆர்வம் அளவில்லை. அங்கே அழகாக பேக் செய்யப்பட்டு இருந்த ஒரு பைபிளைப் பரிசாக வைத்திருந்தார் அப்பா. மகனுக்கு மாபெரும் ஏமாற்றம். அப்பா மீது ஆத்திரம்... அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் வேறு.
அந்தப் பரிசை அவன் கையால்கூடத் தொடவில்லை. கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். தந்தை சொல்ல முனைவது எதையும் அவன் கேட்கத் தயாராக இல்லை. கண் முன்னே அவன் ஸ்போர்ட்ஸ் கார் வந்து வந்து போனது. அன்று வீட்டைவிட்டு வெளியேறியவன், 10 வருடங்களில் நன்கு வளர்ந்து இருந்தான்.
|