அர்க்கான்சசில், ஒருவர் தண்ணீர் கேட்டு நாம் இல்லை என்று சொன்னால், அது சட்டப்படி தவறு. அங்கே, பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் 'பாப் கட்' செய்து கொண்டால் அவரது சம்பள உயர்வு கட்.
நார்த் டகோட்டாவில், ஷூக்களை அணிந்துகொண்டே தூங்குவது சட்ட விரோதச் செயல்.
ஐயோவாவில், ஒருவர் ஐந்து நிமிடங் களுக்கு மேல் தொடர்ந்து முத்தம் கொடுக்கக் கூடாது.
கலிஃபோர்னியாவில் ஒரு பெண் ஹவுஸ்கோட் அணிந்துகொண்டு கார் ஓட்டக் கூடாது.
பொது இடத்தில் ஏப்பம்விட்டால், குற்றம். பயன்படுத்திய உள்ளாடையினால் கார் கழுவுவது குற்றம் என்று உலகத்தில் பல்வேறுவிதமான சட்டங்கள் உண்டு.
இவற்றைப் படிக்கிறபோது, இரண்டு விஷயங்கள் தோன்றும். இப்படி எல்லாம்கூடவா சட்டம் போடுவார்கள் என்பது ஒன்று. இரண்டாவது, நம் நாட்டிலும் இப்படி நிறையச் சட்டங்கள் இருந்தால் நாடு நன்றாக இருக்குமே என்று.
அமெரிக்காவில் கார்கள் வரிசையாகச் செல்லும். ஐரோப்பாவில், சிக்னலைத் தாண்டிச் செல்ல மாட்டார்கள்.
இந்தச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கிற மனோநிலை, மக்களுக்கான வாழ்வியல் சூழல் இரண்டையும் கவனித்துப் பார்க்க வேண்டும். கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட சமுதாயங்களின் கொள்கைகள் நம்மை எப்போதுமே ஈர்க்கின்றன. சமூக விழுமியங்களாலும் நன்னெறி களாலும் வார்க்கப்படுகிற நம்முடைய சமூக அமைப்பை நாம் பெரிதாக எண்ணுவது இல்லை.
எல்லாவற்றையும் சட்டங்களால் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்றால், இந்த உலகில் குற்றங்களே இல்லாமல் இருந்திருக்கும். சட்டங்களால் மக்களை இயக்குகிற சமூக அமைப்பு அவ்வளவு திருத்தமானது அல்ல. சட்டங்களும் கட்டுப்பாடுகளும் - நெறிமுறைகளாக, வாழ்வியல் போதனைகளாகப் பயிற்றுவிக்கப்படுகிற சமூகம்தான் தன்னை நாகரிக சமுதாயமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.
முன்பு எல்லாம் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு என்று ஒரு பீரியட் உண்டு. இப்போது எல்லாம் அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அது பொறியியல் படிப்பில் சேரவும், மருத்துவக் கல்லூரியில் ஸீட் வாங்கவும் பயன்படப்போவது இல்லை என்பதால், கண்டுகொள்ளாமல்விடப்பட்டது.
ஒரு ஜனநாயகத்தன்மை என்பது நெறிமுறைகளை உணர வைக்கிற சித்தாந்தங்களை உள்ளடக்கியது. நம்முடைய அரசியல் அமைப்புகூட ஒரு தனி மனிதன் நல்லவனாக, தேச நலனில் அக்கறை கொண்டவனாக, சுயநலம் அற்ற மனிதனாக வளர்வதில் தார்மீகப் பொறுப்புகளோடு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறது.
ஆனால், தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை ஒரு நெறிமுறையாக உணர்த்த வேண்டிய நம் சமூக அமைப்பு, தண்டனை தருவதால் உடனடி நிவாரணம் பெறும் அவசர மனோபாவத்துடன்தான் இயங்குகிறது. பள்ளிக்கூடங்களில், கல்லூரி களில் இப்படி எல்லா இடங்களிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.
|