மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 23

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 23


16 ப்ளஸ்-எனர்ஜி பக்கங்கள்  
நீயும் ... நானும்!  
கோபிநாத்,படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 23
நீயும் ... நானும்! - 23
நீயும் ... நானும்! - 23
நீயும் ... நானும்! - 23

ர்க்கான்சசில், ஒருவர் தண்ணீர் கேட்டு நாம் இல்லை என்று சொன்னால், அது சட்டப்படி தவறு. அங்கே, பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் 'பாப் கட்' செய்து கொண்டால் அவரது சம்பள உயர்வு கட்.

நார்த் டகோட்டாவில், ஷூக்களை அணிந்துகொண்டே தூங்குவது சட்ட விரோதச் செயல்.

ஐயோவாவில், ஒருவர் ஐந்து நிமிடங் களுக்கு மேல் தொடர்ந்து முத்தம் கொடுக்கக் கூடாது.

கலிஃபோர்னியாவில் ஒரு பெண் ஹவுஸ்கோட் அணிந்துகொண்டு கார் ஓட்டக் கூடாது.

பொது இடத்தில் ஏப்பம்விட்டால், குற்றம். பயன்படுத்திய உள்ளாடையினால் கார் கழுவுவது குற்றம் என்று உலகத்தில் பல்வேறுவிதமான சட்டங்கள் உண்டு.

இவற்றைப் படிக்கிறபோது, இரண்டு விஷயங்கள் தோன்றும். இப்படி எல்லாம்கூடவா சட்டம் போடுவார்கள் என்பது ஒன்று. இரண்டாவது, நம் நாட்டிலும் இப்படி நிறையச் சட்டங்கள் இருந்தால் நாடு நன்றாக இருக்குமே என்று.

அமெரிக்காவில் கார்கள் வரிசையாகச் செல்லும். ஐரோப்பாவில், சிக்னலைத் தாண்டிச் செல்ல மாட்டார்கள்.

இந்தச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கிற மனோநிலை, மக்களுக்கான வாழ்வியல் சூழல் இரண்டையும் கவனித்துப் பார்க்க வேண்டும். கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட சமுதாயங்களின் கொள்கைகள் நம்மை எப்போதுமே ஈர்க்கின்றன. சமூக விழுமியங்களாலும் நன்னெறி களாலும் வார்க்கப்படுகிற நம்முடைய சமூக அமைப்பை நாம் பெரிதாக எண்ணுவது இல்லை.

எல்லாவற்றையும் சட்டங்களால் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்றால், இந்த உலகில் குற்றங்களே இல்லாமல் இருந்திருக்கும். சட்டங்களால் மக்களை இயக்குகிற சமூக அமைப்பு அவ்வளவு திருத்தமானது அல்ல. சட்டங்களும் கட்டுப்பாடுகளும் - நெறிமுறைகளாக, வாழ்வியல் போதனைகளாகப் பயிற்றுவிக்கப்படுகிற சமூகம்தான் தன்னை நாகரிக சமுதாயமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.

முன்பு எல்லாம் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு என்று ஒரு பீரியட் உண்டு. இப்போது எல்லாம் அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அது பொறியியல் படிப்பில் சேரவும், மருத்துவக் கல்லூரியில் ஸீட் வாங்கவும் பயன்படப்போவது இல்லை என்பதால், கண்டுகொள்ளாமல்விடப்பட்டது.

ஒரு ஜனநாயகத்தன்மை என்பது நெறிமுறைகளை உணர வைக்கிற சித்தாந்தங்களை உள்ளடக்கியது. நம்முடைய அரசியல் அமைப்புகூட ஒரு தனி மனிதன் நல்லவனாக, தேச நலனில் அக்கறை கொண்டவனாக, சுயநலம் அற்ற மனிதனாக வளர்வதில் தார்மீகப் பொறுப்புகளோடு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறது.

ஆனால், தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை ஒரு நெறிமுறையாக உணர்த்த வேண்டிய நம் சமூக அமைப்பு, தண்டனை தருவதால் உடனடி நிவாரணம் பெறும் அவசர மனோபாவத்துடன்தான் இயங்குகிறது. பள்ளிக்கூடங்களில், கல்லூரி களில் இப்படி எல்லா இடங்களிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

நீயும் ... நானும்! - 23

தாமதமாக வந்தால் தண்டத்தொகை கட்ட வேண்டும் என்ற நடைமுறை ஒரு கட்டுப் பாடாகப் பார்க்கப்படுகிறதே அன்றி, நேரம் தவறுதல் என்பது தீய பழக்கம் என்ற நெறி முறையைச் சொல்லித்தருவது இல்லை. தண்டத் தொகைக்குப் பயந்து பள்ளிக்கூடத்துக்குச் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிற மாணவனின் மனோபாவத்தில், ஒழுங்கீனமாக நடந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் வருவது இல்லை.

கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட மேற் கத்திய நாடுகள் பலவற்றின் மனோபாவம் இதுதான். சட்டத்தையும் கட்டுப்பாடுகளையும் பிரம்புபோலக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டு மந்தைகளை அடித்து ஓட்டுகிற முறைமைக்கு நாமும் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

எல்லா மட்டங்களிலும் தவறோடு தண்டனை தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தத் தவறை நான் செய்தால் எனக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற கோட்பாட்டுச் சிந்தனைக்கு முன்னால், என் தவறால் அடுத்தவன் பாதிக்கப்படுவான் என்று உணர வேண்டிய நன்னெறிச் சிந்தனை பொய்த்துப்போகிறது. உண்மையில், கோட்பாடுகளை முன்வைக்கிற சமூகங்களின் சட்டங்களைவிட, சமூக விழுமியங்களை முன்வைக்கிற நமது சமூகத்தில் நன்னெறிகளாக, போதனைகளாக நம் கூட்டங்கள் வேறு வடிவில் விரிந்துகிடக்கின்றன.

துரதிருஷ்டவசமாக நம் பள்ளிக்கூடங்கள் அதை வெறும் மனப்பாடச் செய்யுள் பகுதியாக மாற்றிவைத்து இருக்கிறது. திருக்குறளிலும், ஆத்திசூடியிலும், திருவாசகத்திலும், நன்னெறி நூல்களிலும் இன்னும் பல இதிகாசங்களிலும், பாட்டி சொன்ன கதைகளிலும் கொட்டிக்கிடக்கிறது நமக்கான வாழ்க்கையும் நெறியும். அதை எந்தச் சட்டமும் சொல்லித்தர முடியாது.

இந்த உடையைத்தான் அணிந்துகொள்ள வேண்டும், இப்படித் தான் நடந்து செல்ல வேண்டும் என்று பல்வேறு சட்டங்களை மேற்கத்திய நாடுகள் முன்வைத்து இருக்கின்றன. அதில் விநோதமான பல சட்டங்களும் உண்டு.

நீயும் ... நானும்! - 23

கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட அந்தச் சமூகங்கள் எதையும் சட்டத்தின் வழியாகச் சந்திக்கின்றன. இங்கு தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் தண்டனை என்று சட்டம் இல்லை. எதிர் வீட்டுக்காரரோடு நட்பு பாராட்டவில்லை என்றால் குற்றம் என்று இல்லை. 'வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், நீ குற்றவாளி' என்று வீட்டுக்கு நோட்டீஸ் வராது. மனைவியை முறை வைத்து முத்தமிட வேண்டும் என்று அரசு ஆணையிடாது. நம் சமூகம் நன்னெறிகளால் வளர்ந்த சமூகம்.

நம்மைச் சட்டம் கவனித்துக்கொண்டு இருப்பதை மனசாட்சி கவனித்துக்கொண்டு இருக்கிறது. 'உன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துத் தவறு செய்யாதே; மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர்கள் சொல்வார்கள். சட்டத்தைவிட இந்த மனோபாவத்துக்குச் சக்தி அதிகம் என்றே தோன்றுகிறது.

எது சரி என்றும் எது தவறு என்றும் உணரவைக்கிற, புரிந்துகொள்ளத் தூண்டுகிற எல்லாமும் நம் கதைகளில், முன்னோர்களின் வாழ்க்கையில் நிரம்பிக்கிடப்பது நமது வரப்பிரசாதம். சட்டங்கள் நம்மை ஆள்வதைவிட, சமூக வாழுமிடங்கள் நம்மை ஆள்வது சிறந்தது.

மனித உரிமை மீறல்களுக்கு, தனி மனித உரிமையை மீட்டெடுப்பதற்கு, ஏற்றத்தாழ்வுகளை உடைப்பதற்கு, தீய சக்திகளை ஒடுக்குவதற்குச் சட்டங்கள், தண்டனைகள் கொண்டுவரப்பட்ட இந்தத் தேசத்தில், சக மனிதனை நேசிக்கவும் அவனை மரியாதை செய்யவும்கூட சட்டங்கள் வருகிற நாள் தூரத்தில் இல்லை.

நமக்கும் நம் வாழ்க்கைச் சூழல்களுக்கும் அது நிச்சயமாக நல்லதல்ல. அக்கம்பக்கம் சட்டம் என்னைக் கண்காணிக்கிறதா என்று கவனித்துக்கொண்டே வாழ்வதைவிட, மனசாட்சிக்கும் அதன் குற்ற உணர்ச்சிக்கும் மரியாதை கொடுக்கிற வாழ்க்கை மேலானது.

இது கோட்பாடுகளின் சமூகம் அல்ல... சமூக விழுமியங்களின் சமூகம், நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் துவக்குங்கள். போலீஸ்காரர் கையில் இருக்கிற பிரம்பைவிட, ஒளவைப் பாட்டி பிடித்துக்கொண்டு நிற்கிற கம்புக்குப் பலம் அதிகம்!

நீயும் ... நானும்! - 23
ஒரு சிறிய இடைவேளை