மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55


சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55
சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55
பலூனுக்குள் இருப்பது காற்றல்ல!
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

லகின் ஆச்சர்யங்களில் ஒன்று... பலூன். அழுது போராடி ஒரு பலூனை அடைவதில் சிறுவர்களுக்கு உள்ள ஆனந்தம் மிகப் பெரியது. கையில் ஒரு பலூனை வைத்திருக்கும் குழந்தையின் முகத்தைப் பாருங்கள். உலகின் அதி உன்னதமான பொருள் ஒன்றை தான் அடைந்துவிட்டோம் என்ற சந்தோஷம் அதில் ஒளிரும். இன்றைக்கும் வானில் ஒரு பலூன் பறப்பதை வியப்போடு வேடிக்கை பார்க்கிறோம். நமது ஆசைகள் தான் பலூன்களாகப் பறக்கின்றனவோ என்னவோ?

சிறுவயதில் ஆசையாக வாங்கி விளை யாடிய பலூனை 40 வயதில் கையால் தொடுவதற்குக்கூட விருப்பமற்றுப் போகி றோமே, ஏன்? கடற்கரையில் ஒருநாள் பார்த்தேன். ஒரு சிறுமி தான் வைத்திருந்த ஆப்பிள் பலூனைத் தனது தாத்தாவிடம் கொடுத்துவிட்டு ஐஸ்க்ரீம் வாங்க ஓடி னாள்.

வயதானவர் சுமக்க முடியாத ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பதைப் போல இறுகிய முகத்தோடு அந்தப் பலூனை வைத்திருந்தார். ஒரு முறைகூட ஆசையாக அதைத் தொட்டுப்பார்க்கவோ, காற்றில் பறக்கவிட்டுக் காணவோ

ஆசைப்படவில்லை.

திடீரென, அவர் தான் புகைத்துக் கொண்டு இருந்த சிகரெட் நுனியால் அந்தப் பலூனைத் தொட்டு வெடிக்க வைத்தார். பலூன் வெடிப்பதைக் காணும்போது அவர் முகத்தில் தோன்றிய சந்தோஷம் என்னை அச்சமூட்டியது. வயது ஏற ஏற, பலூனை வெடிக்கவைப் பதில் மனது ஏன் குரூர ஆசைகொள்கிறது என்று யோசித்தபடியே இருந்தேன்.

வயது நம்மை ஏன் சிறு பொருள் களைக்கூட ரசிக்கவிடாமல் செய்கிறது. ஒரு முதியவர் பலூன்விடுவது தவறு என்று யார் சொன்னது. அல்லது நடுத்தர வயதுக்காரன் ஆசையாக ஒரு பலூனை வாங்கினால் உடனே, அவன் முட்டாள் ஆகிவிடுவானா என்ன? இவை நமது கற்பிதங்கள். சிறு வயதை எந்த வடிவத்தி லும், எந்தச் செயலிலும் யாரும் நினைவு படுத்திவிடக் கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கவனமாக இருக்கிறோம். உண்மையில் நாம் பால்யத்தில் இருந்து விடுபடும்போது பால்யத்தின் வசீகர மான பொருட்களில் இருந்தும் விடு படுகிறோம். வளர்ந்த மனிதன் ஏன் பலூன்களுக்கு எதிராக மாறிவிடுகிறான். அல்லது பெரியவர்கள் ஏன் பலூன் களை வெறுக்கிறார்கள் என்று புரியவே இல்லை.

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

பலூனை விசித்திரமான பழம் என்று நினைத்துக் கடித்துத் தின்ன ஆசைப்படும் சிறுவர்களைக் கண்டு இருக்கிறேன். அவர்கள் பலூனை அணைத்துக்கொள்கிறார்கள். முத்தம் இடுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். சாதம் ஊட்டுகிறார்கள். கூடவே பேசு கிறார்கள். கட்டிக்கொண்டு உறங்க ஆசைப்படுகிறார்கள். எதிர்பாராமல் பலூன் உடைந்துவிட்டால், அதற்காக விக்கிவிக்கி அழுகிறார்கள். உடைந்த பலூன் துண்டுகளைத் தேடி எடுத்து மறுபடியும் ஊதி பலூன் ஆக்கமுடியா மல் வருத்தம்கொள்ளும் குழந்தைகள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். அது துடைக்கவே முடியாத வேதனை.

20 வருடங்களுக்கு முன்பு கடையில் 10 பைசா தந்து ரப்பர் பலூன் வாங்கி அதை ஊதித் தருவதற்கு ஆள் தேடிச் சிறுவர்கள் அலைவார்கள். பலூனை ஊதுவது பெரிய கலை. மூச்சை இழுத்துக் கவனமாக ஊத வேண்டும். வேகமாக ஊதினால் வெடித்துவிடும். சிறுவர்களுக்குக் கண் முன்னே பலூன் வெடிப்பதைவிட மிகப் பெரிய சோகம் எதுவுமே இல்லை.

கவனமாக ஊதி அழகான வடிவம் கொண்ட பலூனை நூலால் கட்டி, அந்த நூலைக் கையில் பிடித்தவுடன் சிறுவனின் மனதும் பறக்கத் துவங்கி விடும். வானைத் தன்னால் தொட்டுவிட முடியும் என்று அவன் நம்புவான். தன்னால் பலூனைக்கொண்டு பறவை போல் பறக்க முடியும் என்று கனவு காண்பான். பலூன்களோடு வீதியில் ஓடும் சிறுவர்கள் தாங்கள் உலகிலே பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்றே கருதுகிறார்கள்.

இன்றைக்குக் கடையில் பலூனை வாங்கி அதை ஊதுவதற்கு ஆள் தேடும் சிறுவர்கள் எவரும் இல்லை. காற்று அடைத்து விற்கப்படும் பலூன்களை மட்டுமே வாங்குகிறார்கள். தானாகக் காற்றடைத்துப் பார்க்கும் ஆர்வம் சிறார்களிடம்கூட இல்லை. அதைவிட, பலூன் இன்றைக்கு பார்ட்டிக்கான பொருளாகிவிட்டது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட பலூன்கள் வாங்கினால், உடனே வீட்டில் பார்ட்டியா என்று கேட்கிறார்கள்.

பலூன் எதைக் கற்றுத்தருகிறது? அதைப் பார்க்கப் பார்க்க மனதில் நிறையத் தோன்றுகிறது. 'உள் இழுத்த காற்றை வெளியேவிட்டா, கதை முடிஞ்சிபோச்சு' - இது வாழ்க்கையின் தத்துவம். அதைத்தான் பலூன்கள் நினைவுபடுத்துகின்றனவா? இல்லை, நமது சுய பெருமைகள் யாவும் நாமாக ஊதிப் பெருக்கவைத்தவை. அவை ஒருநாள் தானே உடைந்துவிடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறதா? இல்லை, காற்று தான் இருப்பதைக் காட்டிக் கொள்வதற்கு பலூன்களைத் தனது வடிவமாகத் தேர்வு செய்திருக்கிறதா?

பலூன்கள் நம் வயதைக் கரைத்துவிடுகின்றன. ஆசையாக ஒரு சிறுமி பலூனைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காண்பதே மனதை நெகிழச் செய்கிறது. பால்ய வயதின் கனவுகள் யாவும் இந்தப்பலூன்கள்போல அற்ப நேரம் நம்மை மகிழ்வித்துவிட்டு பின்பு வெடித்துச் சிதறிப்போனவைதான் இல்லையா?

எனது பால்ய வயதில் பலூன்காரர்கள் வருகை அபூர்வமானதாக இருக்கும். எங்கோ திருவிழாவில், பண்டிகை நாட்களில் அபூர்வமாக ஒரு பலூன்காரன் வருகை தருவான். அது ஏதோ ஒரு தேவதூதன் கிராமத்துக்குள் வந்துவிட்டதுபோன்று இருக்கும். சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் என்று கண்ணைப் பறிக்கும் நிறங்களில் ஊதிய பலூன்களுடன் அவன் மூங்கில் சட்டகம் ஒன்றைத் தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு நடந்துவருவான். அவன் தோளில் அழுக்கடைந்துபோன ஒரு ஊதாப் பை தொங்கிக்கொண்டு இருக்கும். அது அத்தனையும் ஊதப்படாத பலூன்களே.

அவனைக் கண்டதும் சிறுவர்கள் தேனீக்களைப் போல மொய்த்துக்கொள்வார்கள். ஒரு சிறுவன் பலூன் வாங்குவதை மற்றவன் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பான். பலூன் வாங்கவே முடியாத சிறுமிகள் கண்களால் பலூனைப் பறித்துக் கையில் வைத்துக்கொள்வதைப்போலப் பாவனை செய்வார்கள். அந்த வயதில் பலூன்காரர் யார். எங்கிருந்து வருகிறார். எதற்காக இதைத் தொழிலாகத் தேர்வு செய்தார். அவர் வீட்டில் உள்ள பிள்ளைகள் பலூன்வைத்து விளையாடுமா? என்று நிறையக் கேள்விகள் தோன்றும். எதையும் அவரிடம் கேட்டதே இல்லை.

எல்லா ஊர்களின் பலூன்காரர்களும் ஒன்று போலவே இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத் தைச் சுமந்து வருகிறார்கள். சந்தோஷத்தின் கயிற்றைச் சிறுவர்கள் கையில் தந்து விளையாட வைக்கிறார்கள். பெற்றோர்கள் தராத அபூர்வ சந்தோஷம் இது. திருவிழா முடிந்து வீடு திரும்பும் குழந்தையின் கையில் உள்ள பலூன், விழாவை எப்போதுமே நினைவுபடுத்திக்கொண்டே இருக் கிறது.

இன்றைக்கு கடற்கரையில், கோயில் முன்பாக பலூன்காரர்களைப் பார்க்கிறேன். சாயல் ஒன்று போலவேதான் இருக்கிறது. யார் அவர்? பலூன் களை விற்பதில் என்ன ஆர்வம் என்று மனது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. உடையாத பலூன் என ஒன்று வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத சிறுவர்களே இல்லை. உடைந்து விடுவதுதான் பலூன்களின் அழகுபோல, அது மாறாமல் அப்படியே தொடர்கிறது.

பலூன்களைக் கண்டுபிடித்தவர் யார்? சிறு வயதில் இந்தக் கேள்வியைப் பள்ளி ஆசிரியர் களிடம் கேட்டு இருக்கிறேன். படிக்கிற வழியைப் பாருடா என்று வாயைப் பொத்தி கேள்வியை எனக்குள்ளாகவே அடக்கிவிட்டார்கள். பின்பு, ஒரு முறை கலைக்களஞ்சியத்தை வாசித்து நானே தெரிந்துகொண்டேன்.

லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர். 1709-ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை. அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது. பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது.

பலூன்கள் எப்போதுமே கற்பனைகளைத் தூண்டுகின்றன. அதைக் கையில் வாங்கியதும் நடந்து சுற்றிய தெருக்களை மிதந்து காண வேண்டும் என்று மனது பேராசைகொள்ள ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பலூனைப்பற்றிய ஒரு கதையைத் தனக்குள்ளாகக் கொண்டு இருக்கிறது. அதை வெறும் விளை யாட்டுப் பொருளாக மட்டுமே கருதுவது இல்லை.

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

ஆல்பெர்ட் லேமோர்சே என்ற பிரெஞ்சு இயக்குநர் 'ரெட் பலூன்' என்ற 30 நிமிடங்கள் ஓடும் படம் ஒன்றை இயக்கியுள்ளார். உலகத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகள் பெற்ற திரைப்படம் அது.

பாஸ்கல் என்ற பள்ளிச் சிறுவனுக்குத் தம்பி, தங்கை யாரும் கிடையாது. நாய்க் குட்டிகளோடு நட்புகொள்கிறான். அதையும் அம்மா அனுமதிக்க மறுக்கிறாள். தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு அவனுக்குள் மேலோங்கி இருக்கிறது. ஒருநாள் அவன் சாலையோரம் சிவப்பு நிறப் பலூன் ஒன்று தந்திக்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறான். யாருடையது என்று தெரியவில்லை. அவனுக்கோ அதை எடுத்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது. ரகசியமாகக் கயிற்றை அவிழ்த்து அதைக் கையில் எடுத்துக்கொண்டு பள்ளி நோக்கிப் புறப்படுகிறான்.

பேருந்தில் பலூனை வைத்துக்கொள்ள அனுமதி மறுக்கிறார்கள். ஆகவே, நடந்தே பள்ளிக்குப் போகிறான். அதனால் தாமதம் ஆகிவிடுகிறது. பள்ளியில் இருந்து துரத்தப்படுகிறான். பலூனைக் கையில் வைத்தபடியே அவன் பாரீஸ் நகரமெங்கும் அலைகிறான். மாலை வீடு திரும்புகிறான். அம்மா நடந்ததை அறிந்து ஆத்திரமாகி, அவனது பலூனை பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே எறிகிறாள்.

பலூன் காற்றில் பறந்துவிடும் என்று பாஸ்கல் நினைக்கிறான். ஆனால், அது பறக்காமல் ஜன்னலுக்கு வெளியே நின்றபடியே அவனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆச்சர்யத்துடன் அதை உள்ளே வா என்கிறான். மறுநிமிடம் பலூன் உள்ளே வருகிறது. தன்னைப்போலவே பலூனும் சுயமாகச் சிந்திக்கும் மனதைக்கொண்டு இருக்கிறது என்று நம்பும் பாஸ்கல், பலூனைத் தனது நண்பனாக்கிக்கொள்கிறான்.

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

அதன் மறுநாளில் இருந்து அவன் பள்ளிக்குப் போகும்போது பலூன் கூடவே போகிறது. வகுப்பு அறையில் ஓரமாகப் போய் நில்லு என்றால் நின்று கொள்கிறது. அதை மற்ற சிறுவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆசிரியர் பலூன் எப்படி வகுப்புக்குள் வந்தது என்று திட்டுகிறார். உடனே, வெளியே போய்விட்டு பிறகு வா என்கிறான். பலூன் வெளியே பறந்து போய்விடுகிறது. இப்படிச் சிந்திக்கும் ஒரு பலூனுக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையில் உருவான நட்பே காட்சிகளாக விரிவடைகின்றன. முடிவில் பலூனை முரடர்கள் சிலர் பிடித்து உடைத்து விடுகிறார்கள். சிறுவன் அதற்காகக் கண்ணீர் விடுகிறான்.

படம் முழுவதும் பாரீஸ் நகரத் தெருக்களில் சிறுவன் பலூனை பின்தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறான். சில நேரங்களில் அது ஒரு தேவதை வழிகாட்டுவதுபோல அவனைக் கூட்டிப் போகிறது. சில நேரம் ஒரு கோமாளிபோல அவனைச் சந்தோஷப்படுத்துகிறது. சில நிமிடங்கள் ஒரு ஞானிபோல மௌனமாக அவனைப் பார்த்தபடியே இருக்கிறது. இந்தத் திரைப்படம் பலூனை நமது ரகசிய ஆசைகளின், கடந்த காலத்தின் குறியீடாக மாற்றி அதன் பின்னே நம்மைத் தொடரச் செய்கிறது.

நாம் யாராக இருந்தாலும் ஆசைகள் வெடித்துப்போகும் நிமிடத்தில் உள்ளுக்குள் அழவே செய்கிறோம். அதைத்தான் பலூன்கள் எப்போதும் நினைவூட்டிக்கொண்டு இருக்கின்றனபோலும்!

பார்வை வெளிச்சம்

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55

லிஃபோர்னியாவில் வசிக்கும் ஜான் கோடார்ட் தனது 15-வது வயதில் எதிர்காலத்தில் தான் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று 127 ஆசைகளைப் பட்டியலிட்டான். இமய மலையில் ஏறுவது, நைல் நதி உள்ளிட்ட உலகின் முக்கிய ஏழு நதிகளைச் சுற்றிவருவது, ஆப்பிரிக்க ஆதிவாசிகளைச் சந்தித்துப் பழகுவது, விமானம் - கப்பல் என அனைத்து வாகனங்களையும் ஓட்டிப் பழகுவது, 120 நாடுகளுக்குப் போவது, கடலின் அடியாழத்தில் சென்று ஆய்வு செய்வது, விஷப் பாம்பினைக் கையில் பிடிப்பது, இசைக் கலைஞராவது, உலக இலக்கியங்களைக் கற்பது, புகைப்படக் கலைஞர் ஆவது... என நீளும் இந்த விசித்திரப் பட்டியலில் நிலவுக்குப் போவது. சிம்பன்சி குரங்கை விலைக்கு வாங்குவதுபோன்ற சிலவற்றைத் தவிர, மற்ற 109 விருப்பங்களைப் போராடி நிறைவேற்றி, நினைத்ததை முடிக்கும் சாதனை நாயகராகக் கொண்டாடப்படுகிறார்!

சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55
இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - பலூனுக்குள் இருப்பது காற்றல்ல! - 55