மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 24

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 24


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்!  - 24
நீயும் ... நானும்!  - 24
நீயும்... நானும்!
கோபிநாத், படம் :'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்!  - 24
நீயும் ... நானும்!  - 24

ங்கள் மனதுக்குப் பிடித்தவர்கள் எப்போது அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பினால், அநேகமாகப் பலரது பதிலும் 'அவர்கள் உறங்கும்போது' என்பதாகவே இருக்கும். குழந்தைகள் உறங்கும் அழகை ரசிக்கிற அப்பா - அம்மாக்கள், கணவன் தூங்கும் அழகை ரசிக்கிற மனைவி, மனைவி தூங்கும் அழகைக் கவனிக்கிற கணவர் என்று தூக்கம் ரொம்ப அழகானது.

வெளியுலகம் தன்னைக் கவனிக்கிறது என்ற அழுத்தங்கள் இல்லாமல், ஆயாசமாக ஒரு மனிதன் தன்னையும் தன் சுற்றத் தையும் மறந்து லயிக்கிற ஓர் உலகம் அது. சிலர் கையைத் தலையணையாக்கிக்கொள்வார்கள். சிலருக்குக் காலுக்குத் தலையணை வைக்கவில்லை என்றால் தூக்கம் வராது. நைட் லேம்ப்பின் மெல்லிய வெளிச்சம் வேண்டும் சிலருக்கு. எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டுக் கும்மிருட்டில் தூங்குவது சிலருக்குச் சுகம்.

ஒரு சிலர் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள். சிலர் படுத்த இடம் மாறாமல் சிலைபோல் அப்படியே தூங்குவார்கள். சிலர் அறையின் இந்த மூலையில் படுத்தால், எதிர் மூலை வரை உருள்வார்கள். முழங்காலை மடக்கிக்கொண்டு விடியும் வரை அதே நிலையில் தூங்குபவர்களும் உண்டு.

சிலருக்குத் தனியாகத் தூங்கப் பிடிக்கும். சிலருக்குப் பக்கத்தில் யாராவது இருந்தால்தான் தூக்கமே வரும். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோது எங்கள் ஹாஸ்டல் நண்பன் ஒருவனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் போடுவோம். அதுவரை அவன் விழிக்க மாட்டான்.

அலாரம் அடிக்கிற கடிகாரம் தலையில் விழுந்ததைக்கூடச் சட்டை செய்யாமல் தூங்கிய நண்பர்களும் உண்டு. தூங்கும்போது கிரிக்கெட் கமென்ட்ரி சொல்கிறவர்கள், கெட்ட வார்த்தை பேசுபவர்கள், அடுத்தவர் மேல் காலைப்போட்டுத் துன் புறுத்துபவர்கள், குறட்டைவிட்டுக் கொல்கிறவர்கள் என்று தூக்கத்திலும் தூங்குபவர்களிலும் பல வகை உண்டு.

எனக்குத் தெரிந்த ஒருவர், அவர்தான் தூங்குகிறாரே என்று நினைத்து எதுவும் பேசிவிட முடியாது. மறுநாள் காலை வார்த்தை மாறாமல் எல்லாவற்றையும் சொல் வார்.

இப்படி தூக்கம் சுதந்திரமான உலகமாக, கிண்டலும் கேலியும் நிறைந்த கலவையாக, அழகிய கவிதையாகப் பல ரூபங்களில் கவனிக்கப்படுகிறது. அல்லது அதிகமாகத் தூங்குபவர்களைக் கும்பகர்ணன் என்றோ தூங்குமூஞ்சி என்றோ வசவு பாடுகிற மொழியாக இருக்கிறது.

உழைப்பு, விசுவாசம், நன்றிக்கடன் போன்ற பொறுப்பான விஷய மாகத் தூக்கம் பார்க்கப்படுவது இல்லை. ஓய்வு எடுத்தல் என்பது உழைப்புக்குப் புறம்பான விஷயம் என்று பழக்கப்படுத்தப்பட்டு இருப்பதால், தூக்கம் என்பது சோம்பேறிகளின் உலகம் என்ற உணர்வு விதைக்கப்பட்டு இருக்கிறது. உடல் தேவை சார்ந்த, மூளை மற்றும் மனதின் இயக்கம் சார்ந்த இந்த அறிவியல் வெறும் சமூகப் பார்வையோடு கவனிக்கப்படுகிறது.

நீயும் ... நானும்!  - 24

தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு செய்கிற பணிகள் சிறப்பாகக் கவனிக்கப்படுகின்றன. 'ரெண்டு நாளாத் தூங்கலை; ஏகப்பட்ட வேலை' என்று சொல்லிக்கொள்கிறபோது ஒரு பெருமிதம் ஏற்படத்தான் செய் கிறது. இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், தூங்கி வழியும் முகத்தைக் கழுவிவிட்டு காரியசித்தியோடு கடமையாற்று கிறவர்கள் ஆகியோருக்குக் 'கடின உழைப்பாளி' என்ற பட்டமும் பாராட்டும் கிடைக்கிறது.

ஆனால், தேவையான அளவு தூங்கிவிட்டு இந்த வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும் செய்ய முடியும் என்பதுதான் உண்மை. இந்த உடல் ஓர் அபூர்வமான அறிவியல் கருவி. அது தனக்குத் தேவையான ஓய்வை ஏதாவது ஒரு வழியில் பெற்றே தீரும். உண்மையில் சொல்லப்போனால், தூக்கத்துக்கு எதிராகச் செயல்படுவது, இயற்கைக்கு எதி ராகச் செயல்படுவதுதான்.

சுறுசுறுப்பாக இயங்குவதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கும் இளமையில் அதிகம் தூங்க வேண்டியது இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த வயதில் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும் என்று அறிவியல் உலகம் அறிவுறுத்துகிறது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு, 16-ல் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் நாலு முதல் ஆறு மணி நேரம்தான்தூங்குகிறார்கள் என்று சொல்கிறது. அதுவும் ஆழ்ந்த தூக்கமாக இல்லை. பெரு நகரங்களில், வேலை நிமித்தமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, படிப்புச் சுமை காரணமாகவோ இந்த நிலை ஏற்படவில்லை. இணையதளத்தின் வழியாக சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளங்கள் வழியாக நண்பர்களுடனும், முகம் தெரியாத நட்புகளுடனும் நேரம் போவதே தெரியாமல் 'சாட்டிங்' செய்துகொண்டு இருப்பது முக்கியக் காரணமாகிறது.

இளம் பிராயத்தில் தூக்கம் மிக முக்கியமான பங்கு பெறுகிறது. மூளை துடிப்போடு இயங்க, அதற்குத் தேவையான ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதைத் தூக்கமே வழங்க முடியும். இளம் தலைமுறையிடம் அதிகமான மனஅழுத்தமும், படபடப்பும் ஏற்படத் தூக்கமின்மை முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

உடல் நலத்தைத் தாண்டி, இன்றைய இளைஞர்களின் மனநலத்தைத் தூக்கமின்மை பெரிதும் பாதித்துவிடுகிறது என்பதே வருத்தம் அளிக்கிறது. குறைவான தூக்கம் ஹார்மோன் கோளாறுகளை உருவாக்குகிறது. செய்கிற பணியில் ஆழ்ந்து இயங்குகிற ஆற்றலைத் தடுக்கிறது. அர்த்தம் இல்லாமல் கோபம் ஏற்படுத்துகிறது. எதன் மீதும் எளிதாக எரிச்சல்கொள்ளவைக்கிறது. பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்கவைக்கிறது. சின்னத் தடங்கல்களைக்கூட பெரிய தடை யாகத் தோன்றவைக்கிறது.

இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி ஒரு வேலை எப்படி வெற்றி பெறும், போட்டி நிறைந்த உலகில் தூக்கத்தைத் தியாகம் செய்யாவிட்டால், வாழ்க்கை என்ன ஆகும் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டேன். 'தூக்கம் விழித்து நீங்கள் நான்கு மணி நேரத்தில் செய்கிற வேலையைத் தேவையான அளவு தூங்கிவிட்டு, மூன்று மணி நேரத்தில் செய்துவிட முடியும். உறக்கத்தைத் தொலைத்தால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது நீண்ட காலமாக விதைக்கப்பட்டு இருக்கும் நம்பிக்கை. உண்மையில் தேவையான அளவு தூங்கினால்தான் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்' என்று விளக்கம் அளித்தார்.

தூக்கக் குறைவில் இளைஞர் உலகம் சந்திக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்னை. உடல் எடை அதிகரிப்பு. தூக்கம் இன்மை. உணவுப் பழக்கத்தை முறையற்றதாக்கி மீனீஷீtவீஷீஸீணீறீ மீணீtவீஸீரீ என்று சொல்லப்படுகிற அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிற பழக் கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் கண் முன்னே காட்சிப்படுத்தினால், ஆங்காங்கே யாராவது தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அலுவலகங்களில், வகுப்பறையில், கடை கல்லாவில், மீட்டிங்குகளில், கடற்கரைகளில், சினிமா படப்பிடிப்பில் இப்படி இதுதான் இடம் என்றில்லாமல் எல்லா இடங் களிலும் தூங்குகிறோம். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் இருந்ததும், தூங்க முடியாமல் போனதும்தான் இதற்குக் காரணம்.

நீயும் ... நானும்!  - 24

படப்பிடிப்புத் தளங்களில் உதவி வேலைகள் செய்பவர்கள் கிடைக்கிற இடுக்குகளில் தலையைச் செருகிக்கொண்டு தூங்குவார்கள். தலைக்கு மேலே சூரியன் மாதிரி லைட்டுகள் எரியும். அறைக்குள் நிலவும் சத்தம் காதைப் பிளக்கும். இது எதையுமே உணர முடியாமல் அவர்கள் தூங்குவதைப் பார்க்கும்போது மனசு கனக்கும். தூக்கம் எவ்வளவு அற்புதமானது என்று அவர்களைக் கேட்டால் தெரியும்.

பகலில் வேலை நிமித்தம் இழந்த சக்தியை இரவின் தூக்கம் மீட்டுத் தருகிறது. மேற்கு உலகம் இப்போது தூக்கத்தின் அவசியத்தை மேலும் உணர்ந்து இருக்கிறது. படுக்கை அறையை மனசை லேசாக்கும் தன்மைகளோடு வடிவமைப்பது. சுவர்களில் அதற்கு உரிய வண்ணங்கள் பூசுவது என்று அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

தொடர் வேலைகளுக்கு நடுவே 'பவர் நாப்' (Power nap) என்று சொல்லப்படும் குட்டித் தூக்கத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தியச் சூழலிலும் அந்த முறை வந்துகொண்டு இருக்கிறது. ஒருநாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்துக்காகச் செலவிடுவதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கியமான முதலீட்டை நாம் செய்கிறோம்.

டி.வி. பார்த்துக்கொண்டே தூங்குதல், ஏதாவது புத்தகம் படித்தால்தான் தூக்கம் வரும், மதுகுடித்தால் தான் தூக்கம் சாத்தியம், மாத்திரை போடாமல் தூக்கம் வராது என்ற நிலைகளை நிச்சயமாக மாற்றியாக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். தூக்கம் குறித்த நமது பொருட்படுத்தாமைகள் நமது வாழ்க்கைத் தரத்தைச் சிதைத்துவிடும் என்பதும் அவர்கள் எச்சரிக்கை.

அறிவியலின்படி உடல் ஒரு கருவி. ஆன்மிகத்தின்படி அது ஆலயம். எந்தத் தத்துவத்தின்படி பார்த்தாலும் உடலைக் கையாளுதல் என்பதற்குச் சில வழி முறைகள் இருக்கின்றன. கருவி என்றால் அதனை இயக்குவதற்கு உரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் அது பழுதாகும்.

ஆலயம் என்றால், அதற்குள் பிரவேசிக்கவும்இருக்க வும் சில நடைமுறைகள் இருக்கின்றன. தூங்குவதற்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறவர்கள், முடிந்தவரை தூங்கப் பார்க்கிறார்கள். தூங்குவதற்கு வாய்ப்பு இருந்தும் வெறுமனே விழித்துக்கிடப்பவர்கள்தான் தூக்கம் இன்மையால் நிறையப் பாதிக்கப்படுகிறார்கள்.

தூக்கம் விழிக்க என்னால் முடியும் என்று மோதுகிறவர்களுக்கு, மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்க முடியும். ஆனால், எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பீர்கள் என்று ஒரு கேள்வியை மருத்துவ உலகம் எழுப்புகிறது.

படிச்சது போதும், போய்த் தூங்குங்க!

நீயும் ... நானும்!  - 24
நீயும் ... நானும்!  - 24
ஒரு சிறிய இடைவேளை