நம்பிக்கைதானே மருத்துவத்தின் முதல் படி. அதைக் கைவிட்டால் எப்படி நோய் குணமாகும்? கடந்த காலத்தில் டாக்டர்கள் மீது நம்பிக்கை இருந்தது. மருத்துவர் முன்பாகப் போய் உட்கார்ந்த மறு நிமிடமே, தனக்குக் குணமாகப்போகிறது என்ற நம்பிக்கையை நோயாளி உருவாக்கிக்கொள்ளத் துவங்கு வான். மருத்துவரும் மிக அன்பாகப் பேசி அவனை ஆறுதல்படுத்துவதோடு மிகக் குறைவான மருந்துகளால் அவனது நோயைக் குணமாக்க முயற்சிப்பார்.
நோயாளி - மருத்துவர் என்ற உறவு கறாரானது அல்ல; மாறாக, மருத்துவர் மீது நோயாளிகள் மரியாதையுடன் இருந்தார்கள். மருத்துவர்களும் நோயாளிகளின் மீது அதிக அக்கறையும் அன்பும்கொண்டு இருந்தார்கள். அது ஓர் அறமாக இருந்து வந்தது. சிற்றூர்களில் மருத்துவர்களே, நோயாளிகளுக்குப் பேருந்துக்காகப் பணம் தந்து அனுப்பிவைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது போல மருத்துவரைப் பார்க்கச் செல்பவர்கள், அவருக் காகத் தங்கள் நிலத்தில் விளைந்த பழங்கள், தானியங்கள், கீரைகள், மற்றும் பால் பொருட்களைக் கொண்டு போவார்கள். அப்படி இன்று கிராமப்புற மருத்துவ மனைகளில்கூட நடப்பது இல்லை.
இன்றுள்ள மருத்துவமனைகள், சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் பிடிக்கப் போகிற கூட்டத்தைவிட அதிகமான தள்ளுமுள்ளு நடக்கும் இடமாக உள்ளது. ஒரு மருத்துவர், மாலை 4 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் 120 நோயாளிகளைச் சந்திக்கிறார். அப்படி என்றால், ஒரு நோயாளிக்கு மூன்று நிமிடங்கள் செலவழிக்கிறார். அதில் ஒரு நிமிடம்கூட அவர் பேசுவது இல்லை. மீறி அவர் பேசும் ஒன்றிரண்டு சொற்களும்கூட ஆங்கிலத்தில் இருப்பதால் நோயாளிகள் அதிகம் பீதி அடைகிறார்கள்.
எனது அண்ணன் ஒரு மருத்துவர். அவர் வேட்டி கட்டிக்கொண்டுதான் மருத்துவம் செய்கிறார். ஏன் வேட்டி கட்டிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறீர்கள் என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் தமிழில் பேசுவதோ, வேட்டி கட்டியிருப்பதோ அவமானத்துக்கு உரிய ஒன்றா என்ன?
மருத்துவர்களின் கையெழுத்துக்கள் எல்லாக் காலத்திலும் புரியாத ஒன்றாகவே உள்ளது. புரியாத கையெழுத்தில் மட்டுமே மருந்துகளின் பெயர்கள் தரப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியா என்ன?
சொற்கள் மருத்துவக் குணம்கொண்டவை. சரியான, ஆறுதல் தரக்கூடிய சில சொற்களை மருத்துவரிடம் இருந்து நோயாளி கேட்டால் போதும், அது மனதில் விதைபோல விழுந்து முளைக்கத் துவங்கிவிடும். அதை வளர்ப்பதற்குத் தெம்பூட்டும் சொற்களை நோயாளியின் நண்பர்களும் குடும்பமும் தொடர்ந்து சொல்லிச் சொல்லி வலிமை தருவார்கள். இன்று நாம் கைவிட்டது அத்தகைய சொற்களையே.
மருத்துவர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்ல; நம் மனதில் உள்ளதைத் தானே கண்டுபிடிப்பதற்கு. நாம்தான் அவர்களுடன் பேச வேண்டும். அதே நேரம் நோயாளியைப் பேசவிட்டால், அவன் தனது வலியைப்பற்றிய கற்பனையை மிக அதிக மாகவே பேசிக்கொண்டு இருப்பான். ஆகவே, நோயாளிகளுடன் பேசி நோய்மையை அறிந்து கொள்வது ஒரு கலை. அதில் விற்பன்னர்களாக இருப்பவர்களே சிறந்த மருத்துவர்கள்.
நோய், உடலைவிட மனதையே அதிகம் பாதிக்கக்கூடியது. ஆகவே, மனதை நிலைப்படுத்திக்கொள்ளத் தைரியமும் ஆழ்ந்த நம்பிக்கையுமே தேவை. சாவை எதிர்கொள்ளும் நிலையில்கூட நோயாளிகள் நடந்துகொண்ட தைரியமான செயல்பாடுகள் வரலாற்றின் பக்கங்களில் மனித நம்பிக்கையின் சான்றுகளாக உள்ளன. அப்படி ஒரு நோயாளியைப்பற்றிய படம், The Diving Bell and the Butterfly.
2007-ம் ஆண்டு ஃபிரெஞ்சில் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது. ழான் டொமினிக் பௌபே என்ற பத்திரிகையாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் இது. தனது 42-வது வயதில் பௌபே ஒருநாள் பக்கவாத நோயால் தாக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்துபோகிறார். மூன்று வார கோமாவுக்குப் பிறகு கண் விழிக்கிறார். இடது கண்ணைத் தவிர, மற்ற யாவும் இறுகிக்கொண்டன. அரிய நோய் இதுவென மருத்துவர்கள் அவதானிக்கிறார்கள். இனி என்ன செய்வது என்று புரியாமல் நோயாளியாகப் படுக்கையில் கிடக்கிறார். அவரைப் பேசவைப்பதற்காக ஒரு சிறப்பு மருத்துவர் சிகிச்சை அளிக்கத் துவங்குகிறார். அது மிகச் சவாலான வேலையாக இருந்தது.
எழுத்துக்களை பௌபே முன்னால் காட்டினால், அவர் கண்ணைச் சிமிட்டுவதன் வழியே சரியான எழுத்தைத் தேர்வு செய்து தனது எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற பயிற்சியை ஆரம்பிக்கிறார் மருத்துவர். அது செயல்பட ஆரம்பிக்கிறது. இப்படியாக பௌபே கண் சிமிட்டலின் வழியே பேசத் துவங்குகிறார். படுக்கையில் கிடந்தபோது அவருக்குள் தோன்றிய கனவுகள், எண்ணங்களை அவர் ஒரு புத்தகமாக எழுத நினைக்கிறார். ஒவ்வொரு எழுத்தாகக் கண் சிமிட்டிக் காட்டி, அவரால் புத்தகம் எழுதுவது முடியவே முடியாது என்று யாவரும் அவ நம்பிக்கைகொள்கிறார்கள்.
|