மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57


காடுதான் எங்களின் தாய்!
சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57
சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57
எஸ்.ராமகிருஷ்ணன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57
சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

ந்தியா எங்கும் ஆதிவாசிகளின் அரசியல் எழுச்சிபற்றி தினசரிச் செய்திகள். அது குறித்துப் பெரும்பாலும் ஏளனமாகவும் எதிர்மறையாகவுமே ஊடகங்கள் சித்திரிக்கின்றன. 'அவதார்' படம் பார்த்துவிட்டுத் தங்களின் ஆதார உரிமைகளுக்காக அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் நேவிகளுக்காகக் கண்ணீர்விட்ட பொதுமக்கள் எவரும், உள்ளூர் ஆதிவாசிகள் பற்றியோ அவர்களின் முடிவுறாத போராட்டம் பற்றியோ கவனம்கொள்ளவில்லை.

நூற்றாண்டுகளாகவே ஆதிவாசிகள் என்ற வுடன் நம் மனதில் படிப்பறிவு இல்லாத, இலை தழைகளை உடையாக அணிந்து வேட்டையாடிப் பிழைக்கும் ஏளனத்துக்கு உரிய, ஒதுக்கப்பட்ட மனிதர்கள்பற்றிய பிம்பமே தங்கி இருக்கிறது. இன்றைக்கும் பள்ளிகளில் மாறுவேஷப் போட்டியில் ஆதிவாசியாகச் சிறுவர்கள் எளிதாக வேஷமிட்டு, கையில் ஈட்டியோடு குதிக்கிறார்கள். இதுதான் பெரும்பான்மை மக்களின் மனதில் உள்ள பிம்பம்.

பிஹலி, சக்மா, டங்கி, தொடியா, துந்தாரி கடிகாலி, கசாரியா. கோஷ்ரி, ஹல்பி, கோட்டா, ஹின்பி, லம்பானி, லாரியா, மாவிச்சி, மன்வாரி, சர்கோடி, தாகூகுரு, வர்லி, ஹாரோ, மரிங், மம்பா, சுலாங், தோடா, பூச்சோரி, சேமா, ஷெர்பா, கொண்டி, ஹதார், அசூரி, நிகோபாரிசி, வாஞ்சோ, நிமாரி... இதெல்லாம் என்னவென்று பார்க்கிறீர்களா?

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

-இவை அனைத்துமே இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆதிவாசிகள் பேசும் மொழிகள். இதன் பெயர்களைக்கூட நாம் கேள்விப்பட்டது இல்லை. இந்த மொழிகளைப்போல இன்னும் 100 ஆதிவாசிகளின் மொழிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை இன்று அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. காட்டில் இருந்து ஆதிவாசி துரத்தப்படும்போது முதலில் அழிக்கப்படுவது அவனது மொழியே. அதை காலனிய அதிகாரிகள் மிகக் கவனமாகச் செயல்பட்டு அழித்து ஒழித்தனர்.

2001-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வசிக்கும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை 84 மில்லியன். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 8.2 சதவிகிதம். 461 வகையான ஆதிவாசிகள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நம்மோடுதான் சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற அடிப்படைப் பிரக்ஞையைக்கூட பொதுத் தளங்களில் காண முடியாது.

ஆதிவாசிகளை அவர்கள் இருப்பிடங்களில் இருந்து துரத்துவது உலகெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முக்கியக் காரணம், அங்கு உள்ள இயற்கை

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

வளங்களைத் தனிநபர்கள் சுரண்டல் செய்வதற்கு ஆதிவாசிகள் தடையாக உள்ளார்கள் என்பதே. அத்துடன் சுய லாபங்களுக்காக இயற்கையை அழிப்பதை ஆதிவாசிகள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. வனவாசிகளை நிழல் உருவங்கள்போல யதார்த்த உலகின் கண்களில் இருந்து இருட்டடிப்புச் செய்வதுடன், அவர்களின் ஆதாரப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும்போது எல்லாம் வன்முறையால் அதை ஒடுக்கி, அவர்களை அடையாளம் அற்றுப்போகச் செய்வதே நடந்து வருகிறது.

நூற்றாண்டு காலமாக இயற்கையை நம்பி வாழ்ந்த ஆதிவாசிகள் ஏன் இன்று போராடுகிறார்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அவர்களின் குரல்கூட வெளியே கேட்பது இல்லை என்பதுதான் அவர்களின் ஆதாரக் கோபம்.

ஆதிவாசிகளின் போராட்டம், தண்ணீரை, மரங்களை, கானுயிர்களைப் பாதுகாப்பதற்காகவும், இயற்கை வளங்களை அநியாயமாகக் கொள்ளையடிப்பதைத் தடுக்கவுமே துவங்கப்பட்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இன்றும் அவர்களுக்கு முறையான கல்வி வசதியோ, மருத்துவ வசதியோ, அடிப்படை உரிமைகளோ செய்து தரவில்லை. இரண்டாம்பட்சக் குடிமக்களாகவே ஆதிவாசிகள் எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படுகிறார்கள்.

மலைப் பயணங்களுக்குச் செல்லும் மக்கள், ஆதிவாசிகளைக் காண்பதை ஒரு வேடிக்கையாகவே கருதுகிறார்கள். அவர்களை, அவர்களின் வசிப்பிடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் காட்டும் அக்கறையை அவர்கள் வாழ்நிலை மீது ஒருபோதும் காட்டுவதே இல்லை.

அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்களின் தலைவனாக இருந்த சியாடில், இயற்கையை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பிய அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடினார். அந்தப் போராட்டத்தின்போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. அவரது உரையில் மறக்க முடியாத சில பகுதிகள் உள்ளன.

'தூய்மையான காற்றை, பெருகியோடும் ஆற்றை, மலைகளின் மௌனத்தைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகாரவர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப்படும் பொருட்களைப்போலவே கருதுகிறார்கள். இயற்கை ஒரு வணிகப் பொருள் அல்ல; கானகத்தில் உள்ள அத்தனையும் இங்கு வாழ்பவர்களின் அடையாளங்கள்.

இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம். இங்கு உள்ள ஒரு பாறை வெறும் பாறை இல்லை. அது எங்கள் தாயைப் புதைத்த இடம். இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்துபோன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு. காடுதான் எங்களின் வீடு. காடுதான் எங்களின் தாய் - தகப்பன். எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணைகொண்டு விரட்டி இதைக் கைப்பற்றவும்கூடும். ஆனால், இதன் புனிதத்தை நீங்கள் புரிந்துகொள்ளாமல் சிதைத்துவிடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டியிருக்கிறது.

உங்களுக்கு நிலம், விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள். எங்களுக்கு அதுவே வாழ்க்கை. ஆகவே, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான நிலத்தை நீங்கள் எங்களிடம் கேட்டால் நாங்கள் முன்வந்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்ள நிலம் கேட்கிறீர்கள். இந்தக் காற்றில் எங்களின் பாட்டன் பூட்டன்களின் மூச்சுக் காற்று கலந்து இருக்கிறது. இதைவிட்டு எங்களை விரட்டினால் அவர்களோடு உள்ள அரூபமான தொடர்பு அற்றுப்போகும் என்பதை, ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?

விதி வலியது என்று நாங்கள் நம்புகிறோம். அதுதான் உங்களை அனுப்பி எங்களோடு சமர் செய்கிறது. எங்களின் ரத்தம் இந்தப் பூமிக்குத் தேவைப்படுகிறது என்பதால், உங்களோடு போராட நாங்கள் முன் நிற்கிறோம். நாங்கள் இறந்துபோனாலும் எங்களின் அழியாத சொற்கள் உங்களை நட்சத்திரம்போல வானில் இருந்து பார்த்தபடியேதான் இருக்கும்!'

சியாட்டிலின் உரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்டு இருந்தபோதும் இன்றைய சூழலிலும் அப்படியே பொருத்தமாக இருக்கிறது. ஆதிவாசிகளைக் கேலிக்குரிய பிம்பமாக மாற்றியதில் ஹாலிவுட் சினிமாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று வரை ஹாலிவுட்டில் வெளியாகும் பெரும்பான்மைப் படங்கள், ஆதிவாசிகளை எப்படி நாகரிகமான மனிதர்கள் ஒடுக்கி அவர்களை நல்வழிப்படுத்தினார்கள், புதையலை எடுத்தார்கள் என்பதையே விளக்குகிறது.

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

'அவதார்' படத்தில்கூட நேவிகளுக்காகப் போராட ஒரு வெள்ளைக்கார ஜாக் தேவைப்படுகிறான். இதன் ஒரு பகுதியாகவே டார்ஜான் கதைகளைக் காண வேண்டும். காட்டில் வளர்க்கப்படும் டார்ஜான் ஒரு வெள்ளைக்காரக் குழந்தையே. அவன்தான் காட்டினை வழி நடத்துகிறான். போராடுகிறான். ஆதிவாசிகள் இலக்கியம், சினிமா என எதுவும் இந்த 50 வருடங்களில் வளர்ச்சி அடையவே இல்லை.

இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற பட்டியலில் திரிபுரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட YARWNG (Roots) என்ற படம் தேசிய விருது பெற்றது. அப்படி ஒரு படம் வெளியாகி உள்ளது என்ற தகவலைக்கூட ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. இந்தப் படம் நீர் மின்சக்தித் திட்டத்துக்காக ஆதிவாசிகள் தங்கள் மலைவாழ் வசிப்பிடத்தில் இருந்து இடம்பெயரவைக்கப்படும் பிரச்னையை முன்வைக்கிறது.

நாகாலாந்தில் தயாரிக்கப்பட்ட Tattooed Head Hunters என்ற ஆவணப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளது. ஆனால், இந்தப் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வருவதற்கு இன்னும் 50 வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியதுதான் நமது சூழலாக உள்ளது.

நர்மதா அணைக்கட்டுப் பிரச்னை, கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்றும் அதற்கான தீர்வு எட்டவில்லை. போராடும் நர்மதா மலைவாழ் மக்கள் நம்பிக்கை இழக்கவே இல்லை.

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

ஜீவன் சாலா என்ற ஓர் ஆவணப் படத்தைப் பார்த்தேன். அது நர்மதா அணைக்கட்டுப் பகுதியில் உள்ள ஆரம்பக் கல்விபற்றியது. நர்மதா அணை திட்டப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் பள்ளிகளே இல்லை. ஒரேயரு பள்ளி செயல்படுகிறது. ஆனால், அங்கே ஆசிரியர்கள் வருவது இல்லை. ஆகவே, நர்மதா அணைக்கட்டுப் போராட்டத்துக்கு மேதா பட்கருடன் இணைந்து செயல்பட வந்த, பல துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அறிஞர்கள் யாவரும் ஒன்றுகூடி மலைவாழ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜீவன் சாலா பள்ளிகள்.

இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் ஊதியம் இல்லாத சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்கும் இடம், உணவை மலைவாழ் மக்களே கவனித்துக்கொள்கிறார்கள். பள்ளிக்குச் சிறிய கட்டடம் ஒன்றை மண்ணால் அவர்களே உருவாக்கித் தருகிறார்கள். மலைவாழ் மக்களுக்கான, தனித்த கல்வி புகட்டும் முறை மற்றும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

சிறுவர்கள் மழையோடும் பனியோடும் பள்ளிக்கு வந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் வந்து பள்ளிக்கூடத்தை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. புதிய பள்ளிக்கூடம் கட்டும் வரை சிறார்கள் திறந்த வெளியில் படிக்கிறார்கள். அவர்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக மூலிகைச் செடிகளை அடையாளம் காண்பது, கானுயிர்களுக்கு உதவுவதுபோன்றவை இடம்பெற்று இருக்கின்றன. பள்ளி, போராட்டங்களுக்கு நடுவே சிறப்பாக நடக்கிறது.

ஆனால், அவர்களுக்குத் தேர்வு நடத்தி, சான்றிதழ் தருவதற்கு அரசு மறுக்கிறது. அத்துடன் உடனடியாக இதுபோன்ற பள்ளிகள் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆணையிடுகிறது. ஜீவன் சாலா நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். வழக்கு நடக்கிறது. படித்த மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் காத்திருக்கிறார்கள். முடிவில் அரசுப் பள்ளியில் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அரசு, பரீட்சை முடிவுகளை அறிவிக்க மறுக்கிறது. மீண்டும் நீதிமன்றம் செல்கிறார்கள். படித்து பாஸ் செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57

ஜீவன் சாலா பள்ளிகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று இந்திய அளவில் அறிவுஜீவிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் போராடி... இன்று அனுமதிபெற்று இருக்கிறார்கள். சம்பளம் வாங்கும் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர் யாரும் செல்ல முன் வராத மலைவாழ் கிராமங்களுக்கு, சம்பளம் இல்லாமல் வேலை செய்ய... அமெரிக்காவில் தான் பார்த்துவந்த வேலையைத்துறந்து விட்டுச் சில இளைஞர்கள் முன் வருகிறார்கள். இந்த மாற்றத்தை ஓர் ஆவணப் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இது பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ளது.

'படித்தவர்கள் சூரியனைப் பார்த்துத் தலை நிமிர்ந்து நடப்பதில் பெருமைகொள்கிறார்கள். நாங்கள் பூமியைப் பார்த்துக் குனிந்து நடப்பவர்கள். பூமியுடன் பேசத் தெரிந்தவர்கள். பூமி எங்களுக்குக் கற்றுத் தருகிறது. பூமியைக் கண்களால் மட்டும் புரிந்துகொள்வது கடினம். நாங்களும் அப்படியானவர்களே' என்று செவ்விந்தியர்களின் முதுமொழி சொல்கிறது.

அது உலகெங்கும் உள்ள எல்லா ஆதிகுடிகளுக்கும் பொருந்தக்கூடியதே!

சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57
சிறிது வெளிச்சம்! - காடுதான் எங்களின் தாய்! - 57
இன்னும் பரவும்...