படிக்கிற மாணவர்கள், கௌரவம் பார்க்காமல் சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்க்கிறபோது கொஞ்சம் புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இதுபோன்ற இளைஞர்கள்பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஏ.சி. பொருத்துபவருக்கு உதவியாளர், இரவு நேர ஆட்டோ டிரைவர், விடுமுறை நாட்களில் கணக்கு எழுதிக் கொடுப்பது. மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது எனப் பல்வேறு விதமான பகுதி நேரப் பணிகள் இங்கும் நடந்துகொண்டு இருக் கின்றன.
இப்படிப் படிக்கிறபோதே வேலை செய்வது, வெளி நாடுகளில் ஒரு கலாசாரமாகவும் வாழ்க்கை முறை யாகவும் மாறி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது இத்தகைய வேலைகள் பணத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்யவும், கைச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்கவுமே மேற் கொள்ளப்படுகிறது. அப்பா, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால், தேவை கருதி நடக்கும் இந்தப் பணிகளை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் அவசிய மாகி இருக்கிறது.
படிப்பதே ஒரு வேலையைப் பெறுவதற்குத்தான் என்கிற மனோபாவத்தில் இருந்து, வெளியே வந்து சுயமாகச் செயல்படவும் வகுப்பு அறைகளுக்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையின் அனுபவங்களை உணரவும் இந்தப் பகுதிப் நேர பணிகள் நிச்சயம் பயன்படும். வெகுஜன மக்களின் குணாதிசயங்கள் என்ன? விதவிதமான மனிதர்களின் தேவைகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் உதவும்.
பாடப் புத்தகங்களில் சொல்லித்தரப்படாத அல்லது சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வாழ்க்கைச் சூத்திரங்களை இந்தப் பகுதி நேரப் பணிகள் சொல்லித் தரும்.
பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லித் தரும் நம் சமூகம், பெரும் பாலான நேரங்களில் அதைக் கையாள்வது குறித்து, தெளிவாகச் சொல்வது இல்லை. அப்பாவின் பணத்தைச் செலவழிப்பதில் இருக்கிற சுகமும், தான் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வதில் இருக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.
சுயமாகச் சம்பாதித்து அதைக் கையாள ஆரம்பிக்கிறபோது, ஓர் இளைஞன் தன் வாழ்வின் மிக முக்கியமான அம்சத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த அவசியமான அனுபவத்தை ஒரு சமூக ஆசிரியராக நின்று, பகுதி நேரப் பணிகள் சொல்லிக்கொடுக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துவிட்டு, வேலையில் சேர்ந்த பிறகு, 'பொறுப்பான பிள்ளையாக' மாற வேண்டும் என்கிற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாகவே மாறிப்போய் இருக்கிறது.
கொஞ்ச காலம் வரை படிக்கிற இயந்திரமாகவும் பிறகு, சம்பாதிக்கிற இயந்திரமாகவும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்துவிட்டதற்கு அதுவே காரணம்.
இந்த மூச்சுப் பிடிக்கிற பயணத்தில் 1,000 ரூபாயைச் சம்பாதிக்க ஒரு சராசரி இந்தியன் எவ்வளவு உழைக்க வேண்டும்... எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி நேரப் பணிகள் உணர்த்துகின்றன.
எப்போதும் கண்டுகொள்ளாமல் விடப்படும் சராசரி இந்தியப் பிரஜையின் கஷ்டங்களைக் கவனிக்கவும், அதைவிட மேலாகப் படிக்க வேண்டிய வயதில் புத்தகங்களைத் தொலைத்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக ஓடிக்கொண்டு இருக்கும் சமகால இந்தியாவை உணரவும் இந்தப் பகுதி நேரப் பணிகள் அவசியம்.
நமது சூழலில் வாழ்க்கையின் காயங்களையும் அதற்கு மருந்து போட வழி இல்லாமல் தவிக் கும் மனிதர்களையும் இந்திய இளைஞனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதன் வாயிலாகவும், வாய்ப்பாகவும்கூட இந்தப் பகுதி நேரப் பணிகள் அமையலாம்.
ஓர் உணவகத்தில் பில் போட்டுக் கொடுக்கும் பகுதி நேரப் பணி செய்யும் ஓர் இளைஞன், கொல்லைப்புறத்தில் சாக்கடைக்கு அருகே அமர்ந்து, எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்காமலா போவான்? ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பகுதி நேரப் பணியில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன், தன் தங்கையின் வயதில் இருக்கும் சிறுமி அற்ப சம்பளத்துக்குத் தன் உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் சூழலை அறிந்துகொள்ளாமலா போவான்.
படித்து முடித்து வேலையில் இருக்கும்போதும் இவை எல்லாம் கண்ணில்படுமே என்று கேள்வி வரலாம். அந்தச் சூழ்நிலையில், சம்பாதிப்பதற்காக வேலை பார்க்கும் இயந்திரமாகத்தான் இந்திய இளைஞன் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறான். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வைகள் அந்தக் காலகட்டத்தில் பலம் இல்லாததாகவே இருக்கின்றன.
|