மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன் - 50

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன் - 50

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50
சிறிது வெளிச்சம்!
கோபம் கொல்லாதே!
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50

கோபத்தைக் குறைப்பது எப்படி, கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் என்னவென்று காலம் காலமாக ஞானிகளும் அறிஞர்களும் அறிவுரை சொல்லி வருகிறார்கள். எனக்கு இதற்கு எதிர்மாறாகத் தோன்றுகிறது.

உண்மையில் நாம் சரியான விஷயங்களுக்காக ஒருபோதும் கோபப்படுவது இல்லை. ஆகவே, கோபப்படக் கற்பிக்க வேண்டும். கோபம் பயில வேண்டும் என்றுதான் எண்ணம் உருவாகிறது. கோபப்படாதே என்று யாராவது சொன்னால், அவர் மீது கோபப்படவே தோன்றுகிறது. ஆனால், சுயநலத்துக்காக, சொந்தப் பிரச்னைகளுக்காக ஒருபோதும் கோபப்படக் கூடாது.

அது வெறுங்கோபம். இயலாமை, ஆத்திரம், பொறாமை, அகங்காரத்தில் வருவது. அது தேவையற்றது. யோசித்துப்பாருங்கள். முன்பெல்லாம் எங்காவது பொது இடத்தில் ஆணோ, பெண்ணோ யாராவது அவமானப்படுத்தபட்டாலோ, குடி தண்ணீர், பேருந்து, மருத்துவம் போன்ற அடிப்படைப் பிரச்னை சார்ந்து மக்கள் 'இப்படி அநியாயமா நடக்குதே' என்று புலம்பினாலோ, 'என்னய்யா... பார்த்துட்டு இருக்கீங்க' என்ற குரல் கேட்கும்.

உடனே, யாரோ ஒருவர் தலையிட்டு, யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று எடுத்துச் சொல்வார். பொது விஷயத்துக்காகக் கோபம்கொள்வார். அந்தக் கோபத்தில் நியாயம் இருக்கும். மனசாட்சியின் குரல்போல ஒலித்த அந்தக் கோபம் காணாமல் போய் பல காலமாகிவிட்டது.

தனது கோபத்துக்கு தான் பொறுப்பாளி இல்லை என்று யார் பக்கமோ கை காட்டுவதே இன்றைய வழக்கமாக இருக்கிறது. கோபம் எதிர்மறையாகவே எப்போதும் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. கோபத்தின் நன்மைகளை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை.

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50

ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது நம்மிடையே கோபத்தை உருவாக்கவில்லை. 10,000 கோடி ஊழல், 15,000 கோடி மோசடி என்று நாளிதழ்களில் செய்திகள் நிரம்பி வழிகின்றன. அதைப் பார்த்துக் கோபம் வரவில்லை. பள்ளிச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். பதின் வயது வேலைக்காரப் பெண்ணை எரித்துக் கொன்றிருக்கிறார்கள். சாதி திமிரில் ஒரு மனிதன் வாயில் மலம் திணிக்கப்படுகிறது. கல்லால் அடித்துக் காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். கடவுளின் தோழர்கள்போல் இருந்த துறவிகள் காமக் களியாட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எதற்கும் கோபம் கொள்வதே இல்லை.

ஒருவேளை மென் உணர்ச்சிகள் அதிகமாகிவிட்டனவா? அதுவும் நிஜம் இல்லை என்று இசை, நாடகம், மற்றும் கிராமியக் கலைகள் பார்வையாளர்கள் இன்றி மெள்ள அழிந்து வருவது காட்டுகிறது.

நல்ல இசை, நல்ல சினிமா, நல்ல இலக்கியம் எதையும் விரும்பித் தேடிப் போகிறவர்கள் குறைந்துபோனார்கள். ரசனைகெட்ட சூழல் அதிகமாகி வருகிறது. இப்படியாக மென் உணர்ச்சியும் இல்லை. கோபமும் இல்லை என்றால் மக்கள் என்னவாகத்தான் ஆகியிருக்கிறார்கள்.

யோசித்தால் கிடைக்கும் ஒரே உண்மை, மக்கள் மண்ணாக இருக்கிறார்கள் என்பதே. மண்ணைப் பழிக்கக் கூடாது என்பார்கள். மக்கள் மனது கசடேறிய மண்ணாக மாறியிருக்கிறது. எதையும் கண்டுகொள்ளாமல், எதற்கும் சலனம்கொள்ளாமல் பட்ட மரம்போல வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஏன் இப்படி நமது வாழ்க்கை அர்த்தமற்றுப்போய் இருக்கிறது. எதற்குமே ஏன் கோபம் வருவது இல்லை?

அஹிம்சையைக் கற்றுக்கொடுத்த அதே காந்திதான் பிடிவாதத்தையும் கற்றுத்தந்தார். யார் தடுத்தாலும், எதிர்த்தாலும் பிடிவாதமாக நியாயத்தை மக்கள் உணரச் செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது அந்தப் பிடிவாதம். கோபம்தான் பிடிவாதமாக மாறியிருக்கிறது. நியாயமான விஷயங்களில் பிடிவாதமாக இருக்க வேண்டும் என்ற காந்தியின் வழிகாட்டல் ஏன் இன்று கைக்கொள்ளப்படுவது இல்லை.

கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள்ளாகவே அமுக்கிவைத்துக்கொள்வதைவிடச் சிறு தீக்குச்சிபோலத் தன்னை எரித்துக்கொண்டு வெளிச்சம் தரும் கோபம் வெளிப்பட வேண்டும். அதன் விளைவு மெள்ள விரிவுகொள்ளும். நாம் கோபம்கொள்ள வேண்டிய அவ்வளவு அநியாயங்களும், மனித அவமதிப்புகளும் கண் முன்னே நடக்கின்றன. ஆனால், அடங்கியே போகிறோம். இதற்கு மாறாக, எளிய மனிதர்களிடம் அடங்கிப் போக வேண்டிய இடங்களில் ஆத்திரப்படுகிறோம்.

மனசாட்சியின் குரல் என்ற சொல்லையே இன்று மறந்துவிட்டோம். முன்பு மனசாட்சிக்குப் பயந்தவர்கள் இருந்தார்கள். மனசாட்சி நமது சரி, தவறுகளைக் கண்காணித்தபடியே இருக்கும் என்ற பயம் இருந்தது. மனசாட்சி விழித்திருக்கிறது என்பதன் அடையாளமே சமூகக் கோபங்கள். அது மறையும்போது மனசாட்சியும் கூடவே மறைந்துபோகிறது.

1947 வருடம் நான்கு மாநிலங்கள் ஒன்றிணைந்த சென்னை ராஜதானியின் முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பணிஆற்றிய காலத்தில், ஒரு முறை அவர் அரசு வேலையாகக் குற்றாலம் சென்றிருக்கிறார். அங்கே உள்ள தங்கும் விடுதியில் ஒரு இரவு தங்கி, மறுநாள் சென்னைக்குக் காரில் திரும்பி இருக்கிறார்.

முதல்வரின் கார் டிரைவர், அந்தப் பயணியர் விடுதியில் இருந்த ஒரு பலாப் பழத்தை அறுத்து எடுத்து, காரின் டிக்கியில் போட்டு சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டார். இந்தச் செய்தி ஓமந்தூராருக்குத் தெரியவருகிறது.

உடனே, டிரைவரை அழைத்து உனக்கு பலாப் பழம் எப்படிக் கிடைத்தது என்று விசாரித்திருக்கிறார். காசு கொடுத்து வாங்கினேன் என்று டிரைவர் பொய் சொன்னதும், அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உண்மையைச் சொல் என்று மிரட்டியதும் பலாப் பழத்தை குற்றாலத்தில் இருந்து திருடி வந்த விஷயத்தை டிரைவர் ஒப்புக்கொண்டுவிட்டார். உடனே ஓமந்தூரார், 'நீ இப்போதே குற்றாலம் சென்று, இந்தப் பழத்தை உரியவரிடம் ஒப்படைத்து எழுதி வாங்கிக்கொண்டு வா' என்று உத்தரவிட்டார்.

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50

'பலாப் பழம் விலை இரண்டு ரூபா இருக்கும். இதுக்குப் போய் யாராவது ஐந்து ரூபா செலவழித்து குற்றாலம் போவார்களா?' என்று டிரைவர் கேட்கவே, உடனே தன்னிடம் இருந்த ஐந்து ரூபாயை எடுத்துத் தந்து 'நீ போய் வா' என்று ஓமந்தூரார் அனுப்பிவைக்கிறார். டிரைவர் குற்றாலத்துக்குப் போய்ப் பழத்தை ஒப்படைத்துவிட்டு, மறுநாள் பணிக்குத் திரும்பி வருகிறார். பழம் ஒப்படைக்கப்பட்ட ஆதாரக் கடிதத்தை முதல்வரிடம் தருகிறார்.

அன்று கார் ஓட்டும்போது டிரைவர் முகம் இறுக்கமாகவே இருக்கிறது. வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. சிடுசிடுப்பாகவே இருக்கிறார். அன்றிரவு முதல்வர் டிரைவரைத் தனியே அழைத்து, 'என்னப்பா, என் மேல கோபமா?' என்று கேட்டு இருக்கிறார்.

'ஆமாங்க! சின்ன விஷயம், இதுக்குப்போய் இப்படி அவமானப்படுத்திட்டீங்க' என்று புலம்பியிருக்கிறார். அதற்கு ஓமந்தூரார், 'இது சின்ன விஷயம் இல்லை. நீ பலாப் பழத்தைத் திருடிட்டு வந்தவுடனே அந்த டிராவலர்ஸ் பங்களா நிர்வாகி என்ன சொல்லியிருப்பார் தெரியுமா. டிரைவர் பலாப் பழத்தைத் திருடுறான். அப்போ முதலமைச்சர் என்னவெல்லாம் திருடுவானோ என்று திட்டியிருப்பான். இதுவே, நீ பலாப் பழத்தை ஒப்படைத்தபோது ஒரு பலாப் பழத்தையே இவ்வளவு கவனமாகப் பார்த்துக்கிறாரே, அப்போ மக்களை எவ்வளவு கவனமா, நியாயமாப் பர்£த்துக்குவார் என்று நம்பிக்கை உண்டாகிஇருக்கும். அதை அவன் நாலு பேர்கிட்டே சொல்வான். அதற்காகத்தான் உன்னை அனுப்பிவைத்தேன்' என்றார்.

ஓமந்தூராரின் மனதைப் புரிந்துகொண்ட டிரைவர், 'இப்போதாங்க உண்மை புரிந்தது' என்று சொன்னதும் 'உண்மையைப் புரிஞ்சுக்கிட்டது சரி, ஆனா நீ என்கிட்டே ஐந்து ரூபா கடன் வாங்கிட்டுப் போய்தான் பழத்தை ஒப்படைச்சிட்டு வந்தே. அந்தப் பணத்துக்கு என்ன கணக்கு? நீ செஞ்ச தப்புக்கு நான் ஏன் தண்டம் கட்டணும். அதனால, உன் சம்பளத்துல மாசம் ஒரு ரூபா பிடிக்கச் சொல்லிட்டேன்' என்று சொல்லிச் சிரித்திருக்கிறார். இந்தச் சம்பவம் ஓமந்தூரார் பற்றிய 'விவசாய முதலமைச்சர்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மனசாட்சி விழித்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதைவிடவா சாட்சி வேண்டியிருக்கிறது!

கடவுளின் இருப்பிடம் கள்வர்களின் குகையாக மாறிவிட்டதே என்று இயேசு கோபம்கொண்டு இருக்கிறார். ஆற்று நீரைப் பகிர்ந்துகொள்வதில் மக்கள் சண்டையிடுகிறார்களே என்று புத்தர் கோபம்கொண்டு இருக்கிறார். தன்னை அவமதித்ததைக்கூடத் தாங்கிக்கொள்ளும் கிருஷ்ணர், தனது தேசத்துப் பெண்களை அவமதித்தவனைக் கொல்லக் கோபத்துடன் ஸ்ரீசக்கரத்தை ஏவிவிட்ட கதையை நமது இதிகாசங்கள் சொல்கின்றன. அநியாயத்துக்கு எதிரான கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கோபம்தான் காந்தியின் முதல் அறப்போராட்டம். ஆக, கோபம் எப்போதுமே மாற்றத்தின் ஆதார விதை போன்று இருந்திருக்கிறது. அந்தக் கோபத்தைத்தான் நாம் தொலைத்துவிட்டோம்.

கோபத்தைத் தனக்குள்ளாகவே புதைத்து வைத்துக்கொண்டு கண்ணீர்விடுபவர்கள், உலகெங்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களின் கோபம் எப்போதுமே புறக்கணிக்கப்படுகிறது. கையறு நிலையில் அழுது தீர்ப்பதைத் தவிர, வேறு வழி இல்லாமல் செய்துவிடுகிறது.

இயலாமையில் உருவான தனது கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் போராடும் ஒரு பெண்ணின் கதைதான் 'கி விவீரீலீtஹ் பிமீணீக்ஷீt', ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ள இந்தப் படம் டேனியல் பியர்ல் என்ற பத்திரிகையாளர் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.

டேனியல் ஒரு பத்திரிகையாளன் - ஆப்கனில் உள்ள தீவிரவாதக் குழுக்கள்பற்றி செய்தி சேகரிப்பதற்காக கராச்சிக்கு கர்ப்பிணியான தனது மனைவியுடன் செல்கிறான். அங்கே தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் ஒரு மதத் தலைவரைச் சந்தித்துப் பேட்டி காண ஏற்பாடு செய்கிறான். அதற்காக ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவே இல்லை. அவன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளான் என்பதை மனைவி தெரிந்துகொள்கிறாள்.

மறுநாள் அவனே செய்தியாகிறான். எல்லாச் செய்திகளையும்போலவே அவனையும் படித்து, சுவாரஸ்யம் காட்டிவிட்டு மக்கள் மறந்துவிடுகிறார்கள். ஆனால், அவன்

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50

உயிரோடு இருக்கிறானா இல்லை, கொல்லப்பட்டு விட்டானா என்று தெரியாமல், அவன் மனைவி அலைந்து திரிந்து படும்பாடு வலியும் கண்ணீரும் வரவழைக்கக்கூடிய காட்சிகளாக நீள்கின்றன.

ஒவ்வொரு நிமிடமும் அவள் தன் கணவன் வந்துவிடக்கூடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள். ஆனால், கிடைக்கும் செய்திகள் அவன் இனி உயிரோடு வர மாட்டான் என்றே உறுதி செய்கின்றன. தன் வயிற்றில் வளரும் குழந்தையுடன் தனது வேதனையைப் பேசுகிறாள். தெரியாத ஊரில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தன்னைச் சுற்றி நடக்கும் அபத்தமான சூழலைக்கண்டு கோபப்படுகிறாள். அந்தக் கோபம் அசலானது. அதற்குப் பதில் எவரிடமும் இல்லை.

முடிவில் தீவிரவாதிகளால் கணவன் கொல்லப்பட்டதை அறிந்துகொள்கிறாள். அந்தச் செய்தியும் பரபரப்பாக ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது. உலகம் டேனியலுக்காகக் கண்ணீர் விடவில்லை. தன் கணவன் உண்மையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக செத்துப் போனான்; அந்தச் சத்திய ஆவேசம் தன்னைச் சுற்றிய ஒருவரிடமும் இல்லை என்பதைக் கண்டு டேனியலின் மனைவி அதிகம் கண்ணீர்விடுகிறாள்.

கோபப்படுவது எளிதானது இல்லை. அதை முறையாகப் பிரயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தின் கடிவாளம் நம் கையில் இருக்க வேண்டும். அதன் பிடிக்குள் நாம் போய்விடக் கூடாது. அது சாத்தியமானால், நமது கோபம்... ஒளிரும் வெளிச்சமாகும்!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50

சீனாவில் வசிக்கும் 50 வயதான லீ சாஞ்சு பல வருடங்களாக இலைகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வருகிறார். பூச்சிமருந்து அடிக்கப்பட்டு விளையும் தானியங்கள், காய்கறிகள் உடல் நலத்தைக் கெடுக்கின்றன. ஆகவே, இயற்கையான உணவைச் சாப்பிட வேண்டும் என்று விரும்பி, அருகில் உள்ள செடிகளின் இலைகளைப் பறித்துச் சாப்பிடத் துவங்கியிருக்கிறார். அந்தப் பழக்கம் உடலை ஆரோக்கியமாக மாற்றியதை உணர்ந்து, இன்றும் பசுமையான இலைகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். மனிதன் மட்டுமே உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறான். அது அவசியம் இல்லாதது. இயற்கையான உணவின் மீதான ருசி இன்னும் மனிதனுக்குப் பழகவே இல்லை. அது சரிசெய்யப்பட்டால் உணவுப் பிரச்னையே வராது என்கிறார் லீ!

 
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! : கோபம் கொல்லாதே! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 50