மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 21

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 21

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்  
நீயும் நானும்!
நீயும் ... நானும்! - 21
நீயும் ... நானும்! - 21
கோபிநாத் படம் :'தேனி' ஈஸ்வர்
.
நீயும் ... நானும்! - 21
.

நீயும் ... நானும்! - 21

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னதாக ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். சில கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். கேள்விகளுக்கான பதில் எழுத ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிகபட்சம் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆரம்பத்திலேயே இவ்வளவு நிபந்தனை களா என்று கேட்காதீர்கள். எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னவரும் இப்படித்தான் நிபந்தனைகள் விதித்தார். சரி, கேள்வி களுக்குச் செல்லலாம்.

முதல் கேள்வி: உலகின் டாப் 5 பணக் காரர்கள் யார்?

இரண்டாவது கேள்வி: நோபல் பரிசு பெற்ற ஐந்து பேரை எழுதுங்கள்?

மூன்றாவது கேள்வி: ஆஸ்கர் விருது பெற்ற ஐந்து பேரை சொல்லுங்கள்?

நான்காவது கேள்வி: உலக அழகிப் பட்டம் பெற்ற ஐந்து பேரை ஞாபகம் இருக்கிறதா?

கடைசிக் கேள்வி: இதுவரை நிலவுக்குச் சென்று வந்தவர்கள் யார் யார்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

நேரம் முடிந்தது. எவ்வளவு பதில்கள் எழுதி இருக்கிறீர்கள்? எவ்வளவு யோசித்தாலும் அநேகமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்து இருக்காது... அல்லது ஞாபகம் இருக்காது. பாதி பதில் எழுதிய வர்கள், 30 சதவிகிதம் விடை தெரிந்தவர்கள், முக்கால்வாசிக் கிணறு தாண்டியவர்கள் இருக் கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக இருக்கிறவர்கள் யாரும் சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் மிகப் பெரிய சாதனை செய்தவர்கள்தான். காலத்தாலும், வரலாற் றாலும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத மனிதர்கள்தான். ஆனாலும், ஞாபகத்துக்கு வரவில்லையே? இவர்கள் செய்த சாதனைகள், கிடைத்த பாராட்டுக்கள், ஊடக வெளிச்சம்... இப்படி எல்லாமும் நம்மால் மறக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு ஏன்? நேற்று காலை நாம் படித்த செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்திகூட நிறையப் பேருக்கு மறந்துபோய் இருக் கலாம்!

நீயும் ... நானும்! - 21

இப்போது மீண்டும் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதே நிபந்தனைகள்தான். ஐந்து கேள்விகள். அதிகபட்சம் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாம்.

முதல் கேள்வி: நீங்கள் கஷ்டப்பட்டபோது துணை நின்று தோள்கொடுத்த ஐந்து நண்பர்களின் பெயர் என்ன?

இரண்டாவது கேள்வி: நீங்கள் மிகவும் நேசிக்கிற... மரியாதை செய்கிற ஐந்து ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

மூன்றாவது கேள்வி: உங்களோடு நேரம் செலவழிக்க விரும்பும் ஐந்து நபர்கள் யார்... யார்?

நான்காவது கேள்வி: உங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற, உபயோகமான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்த ஐந்து நபர்கள் யார்?

நீயும் ... நானும்! - 21

கேள்வி எண் ஐந்து: அலுவலகச் சூழலில் ஏற்படும் சிரமங்களை, பணிச்சுமையை உங்களோடு யார் பகிர்ந்துகொள்கிறார்கள்?

கேள்வி முடிந்தது. அநேகமாக உங்கள் அனைவரிடமும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் இருக்கலாம். குறைந்தபட்சம் முக்கால் வாசிக் கேள்விகளுக்காவது நிச்சயம் பதில் இருக்கும்.

இவர்கள் நம்முடைய ஞாபகத்துக்கு வருவதற்கு உடனடிக் காரணம் ஒன்றே ஒன்றுதான். நம் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதில் நம் அருகில் இருந்த இந்தச் சாதாரண மனிதர்களுக்கு நிறையப் பங்கு இருக்கிறது. நம் வாழ்க்கையில், கல்வி யில் தொழிலில், முயற்சிகளில் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வது மகாபுருஷர்கள் இல்லை... மிகச் சாதாரண அண்டை வீட்டு மனிதர்கள்தான்.

யோசித்தால்கூட ஞாபகம் வர மறுக்கிற மனிதர் களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தையும்,மரியாதை யையும் நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிற மனிதர்களுக்குப் பல நேரங்களில் தருவது இல்லை. அவர்கள் நமக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, அவர்களது மகத்துவம் மிகச் சாதாரணமாகப் பார்க்கப் படுகிறது.

வீட்டில் நடக்கிற வைபவங்கள், சுபகாரியங்கள் இவற்றில்கூட குடும்பத்துக்குள் இருக்கிற வி.ஐ.பி-க்கள் அல்லது வெளியில் இருந்து வரும் முக்கியஸ்தர்களுக்குத்தான் முதல் வரிசை தரப்படுகிறது. அவர்களின் ஆதரவு வேண்டும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும், அதன் மூலம் எதிர்காலத்தில் சில காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று நமக்குள் ஏதோ ஒரு மனக்கணக்கு ஓடுகிறது.

எல்லோருக்கும் முக்கியமானவராக இருக்கும் ஒரு மனிதரின் நெருக்கமான நண்பராக நம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம் ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் நம் நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த புத்திசாலித் தனமான திட்டத்துக்கு முன்னால் இந்த இடத்துக்கு உயரவும், வளரவும் உறுதுணையாய் நின்ற, இன்னும் நிற்கிற சாமானிய மனிதர்கள் மறக்கப் படுகிறார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை ஆழமாகக் கவனிக்க வேண்டும். எல்லோரும் கொண்டாடும் அந்த முக்கியமான மனிதருக்கு நீங்கள் பத்தோடு பதினொன்றுதான். அவரால் உங்களுக்கு நடக்கப் போகும் சாதகங்கள் என்று நீங்கள் வைத்து இருக் கும் பட்டியலில் ஒன்றுகூட நடக்காமல் போகலாம். ஆனால், அருகில் இருக்கிற உங்களது பொருட் படுத்தாமையைக்கூட உணராமல் உங்களை நேசிக்கிற அந்தச் சாதாரண மனிதர்கள்தான் கடைசி வரை உங்கள் வாழ்க்கையில் பல சிறப்பான மாற்றங்களை உருவாக்கப் போகிற வர்கள்.

இந்தக் குணம் இளைஞர்கள் உலகம் வரை விரிந்துகிடக்கிறது. நிறையப் பணம் வைத்திருக்கிற, அதிகாரம் செய்யும் தகுதி இருக்கிற நண்பனைக் கொண்டாட, அவனைச் செவிமடுக்கத் தயாராக இருக்கும் பலரும்... எல்லா காலத்திலும் துணை நிற்கிற அந்த எளிமையான நண்பனைக் கொண் டாடுவது இல்லை. அவன் எப்படியும் என்னோடு தான் இருப்பான் என்ற அலட்சியமும் பொருட் படுத்தாமையும் இயல்பாகவே நமக்கு வந்து விடுகிறது.

நட்பிலும் சரி, உறவிலும் சரி, பெரும்பாலும் பலம்கொண்ட மனிதர்களின் குறைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. குற்றங்கள் மன்னிக்கப்படு கின்றன. அநேக நேரங்களில் சாமானிய மனிதர் களை, கூடவே இருக்கிற நல்ல இதயங்களிடம் குற்றம் காணுவதும், குறை சொல்வதும் நமக்குச் சுகமாக இருக்கிறது.

அருகில் இருக்கிற மனிதன் அரிதானவனாக இல்லை என்பதற்காக அவன் முக்கியமானவன் இல்லை என்று பொருள்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்த பிறகு கிடைக்கிற உறவுகள் உங்களிடம் எதையோ எதிர் பார்க்கின்றன. உங்கள் வளர்ச்சிக்காக உதவிய இதயங்களை அந்தக் காலகட்டத்தில் கவனிக்கத் தவறாதீர்கள். அவர்களின் தவறுகளையும் குறை களையும் மன்னிக்கவும் மறக்கவும் பழகுங்கள்.

இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தில் பயணித்துக்கொண்டு இருந்தபோது தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்தது. அதில் ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டான். அடி வாங்கியவன் அழுதுகொண்டே 'என் நண்பன் என்னை அடித்துவிட்டான்' என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். சிறிது நேரம் கழித்து ஓரிடத்தில் ஆழமான பள்ளத்துக்குள் தவறி விழப்போனான் அடிவாங்கியவன்... சடாரென ஓடி வந்த நண்பன், உயிரைப் பணயம்வைத்து அவனைக் காப்பாற்றினான்.

இப்போது நண்பன் அருகில் இருந்த பாறை யில் செதுக்கிவைத்தான், 'என் நண்பன் என்னைக் காப்பாற்றினான்' என்று. காப்பாற்றிய நண்பனோ, 'நான் உன்னை அடித்ததை மண்ணிலும் காப்பாற்றியதைப் பாறையிலும் ஏன் எழுதிவைத்தாய்?' என்று கேட்டான்.

'நீ எனக்கு இழைத்த தீங்கு காற்றால் மறைந்து போகட்டும் என்று மண்ணிலும், நீ செய்த உதவி மறக்கப்படக் கூடாது என்பதற்காகப் பாறையிலும் எழுதிவைத்தேன்' என்றான் நண்பன்.

எளிய மனிதர்கள் உங்களுக்குச் செய்தவற்றை இதயப் பாறைகளில் செதுக்கிவையுங்கள்.

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய, மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவது மகா புருஷர்கள் அல்ல... அருகில் இருக்கிற சாமானியர்கள்தான். அவர்களை முக்கியமானவர்களாக நடத்துங்கள்!

- ஒரு சிறிய இடைவேளை
நீயும் ... நானும்! - 21
நீயும் ... நானும்! - 21