மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53


சிறிது வெளிச்சம் (53)
சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53
சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53
 
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53
அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா?

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53

பிரார்த்தனை என்பது கடவுளுடன் உரையாடுவது. அதாவது, கடவுள் கேட்டுக்கொண்டு இருப்பார்... நம் மீது அக்கறைகொள்வார் என்று மனத் துயர்களைப் பகிர்ந்துகொள்வது. அதற்காகத்தான் பெரும்பான்மையினர் கோயில்களுக்குப் போகிறார்கள்... வழிபடுகிறார்கள்.

கோயில் என்றதும் மனதில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம், அகன்ற வாசல் கதவுகள். வெண்கலக் குமிழ் பதித்த படிகள். கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூண்ட யானை. உள்ளே நடந்தால் செவியை நிறைக்கும் நாகஸ்வர மேளத்துடன் கூடிய மங்கள இசை. அபூர்வமான சிற்ப வேலைப்பாடு நிறைந்த தூண்கள். சுவர் ஓவியங்கள். அந்த ஓவியங்களைக்கூட உயிர்பெறச் செய்யும் ஓதுவாரின் தெய்விகக் குரல். கல் விளக்குகள். அதன் ஒளிர்விடும் சுடர்கள்.

பகலிலும் பாதி இருண்ட கர்ப்பக்கிரகம். தீப ஒளியில் காணும் தெய்வ உருவங்கள். அதன் சர்வ அலங்காரம். பூ வேலை. மனதை ஒருமுகப்படுத்தும் மணியோசை. கண்மூடிக் கைகூப்பித் தன்னை மறந்து நிற்கும் மனிதர்கள். அவர்களின் மெல்லிய உதட்டு அசைவுகள். அவரவர் பிரார்த்தனைகள். சூடம் எரியும் மணம். சந்தனம். விபூதி, குங்குமம் அல்லது துளசி தீர்த்தம். நீண்ட அமைதியான பிராகாரம். அங்கே அமர்ந்து ருசிமிக்க பிரசாதம் உண்டு, பிரச்னைகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி, நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம்கொள்ளும் முகங்கள்.

கோயிலைவிட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும். இதுதான் கோயில் குறித்த எனது கடந்த கால நினைவுகள். இந்தியாவின் பழமையான, முக்கிய, பெரும்பான்மையான கோயில்களுக்குச் சென்று இருக்கிறேன். வழிபாடுகள், பிரார்த்தனைகளைவிடவும் கோயில் சார்ந்த சிற்ப ஓவியக் கலைகள் மற்றும் இசை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காகத் தேடித் தேடிப் பார்த்துஇருக்கிறேன். சில கோயில்களை அதன் வடிவமைப்புக்காகவும் அங்கு நிரம்பியுள்ள நிசப்தத்துக்காகவும் தேடிப் போய் வருவேன்.

ஆனால், நடைமுறையில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசல்படியில் ஆரம்பித்து, வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல்வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்குள் செல்லும்போது குற்றவாளிகூட மனத் தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ, கோயிலுக்குச் சென்று நிம்மதியைத் தொலைத்து வந்த கதை தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது. கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள், கையூட்டுகள், அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53

சில வாரங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று புகழ்பெற்ற கோயில் ஒன்றுக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தார். வழிநெடுகப் பேசிக்கொண்டே காரில் போகலாம் என்று என்னையும் உடன் அழைத்துஇருந்தார்.

பயணம் இனிமையாக இருந்தது. கோயில் அருகில் உள்ள விடுதியில் இரவு தங்கினோம். காலை 6 மணிக்குக் குழந்தைகள் மொட்டை போடும் இடத்துக்குச் சென்றோம். ஒரே கூட்டம். அதற்கான கட்டணச் சீட்டு வழங்கும் இடத்துக்குச் சென்று, சீட்டு வாங்கி ஒரு நாவிதர் முன்பு குழந்தையோடு உட்கார்ந்தவுடன், அவர் தனக்குத் தனியாக 50 ரூபாய் தர வேண்டும் என்றபடியே குழந்தையின் தலையில் தண்ணீர் தெளித்தார். அதற்குத்தானே இந்தச் சீட்டு என்று நண்பர் கட்டணச் சீட்டைக் காட்டியதும், அது அப்படித்தான்... கொடுங்கள் என்று 50 ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

குழந்தையின் தலையை அவர் கையாண்ட விதம் பெற்றோர்களைப் பயமுறுத்தியது. குழந்தை பயத்தில் அழுது வீறிட்டது. சுகாதாரம் அற்ற பிளேடு. வேகமாக இழுத்ததில் தலையில் ரத்தம். டெட்டால் பாட்டில்கூட அருகில் கிடையாது. அழுக்குத் துண்டால் குழந்தையின் தலையைத் துடைத்துவிட்டு, அழைத்துப் போய்க்குளிக்க வையுங்கள் என்றார். எங்கே என்ற தும் அழுக்கான தண்ணீர்க் குழாயைக் காட்டினார். அங்கே எப்படிக் குளிக்கவைப்பது என்றதும், அருகில் உள்ள குளியல் அறையில் போய் குளிக்க இன்னொரு 50 ரூபாய் கொடுங்கள் என்றார். அதைத் தந்து குழந்தையைக் குளிக்கவைத்து, சந்தனம் தடவினார்கள். சந்தனம் வாசனையே இல்லை. கடலை மாவு போன்று இருந்தது. ஆனால், அதன் விலை 40 ரூபாய்!

கோயில் உள்ளே செல்லும் முன்பாக பூஜைப் பொருட்கள் வாங்கலாம் என்றால், அந்தக் கடைகளில் தேங்காய், பழத்தின் விலை 60 ரூபாய் என்றார்கள். ஒரு தேங்காய், இரண்டு வாழைப் பழம் 60 ரூபாயா என்று யாரும் கேட்கவில்லை. பூ மாலை 200 ரூபாய். அதையும் மறுப்பு இன்றி வாங்கிக்கொண்டார்கள். செருப்பு விடும் இடத்தில் கட்டணம் எதுவும் இல்லை என்று போட்டு இருந்தது. ஓர் ஆள் ஐந்து ரூபாய் வசூல் செய்துகொண்டு இருந்தான். அதுவும் மறுபேச்சு இன்றித் தரவேண்டியதாகியது.

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53

உள்ளே செல்லும்போது பொது தரிசனம், சிறப்புத் தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என்று மூன்று வகை. ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம். அதில் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்து சிறப்புத் தரிசன டிக்கெட் வாங்கிக்கொண் டார்கள். அந்த வரிசையும் நீண்டு இருந்தது. அந்த வரிசையில் முன்னே அழைத்துப் போகிறேன், தனியாக 100 ரூபாய் கொடுங்கள் என்று கோயில் ஊழியர் ஒருவர், தனியே அழைத்துப் போனார். அங்கே பணியில் நின்றிருந்த காவலர், தனக்கு ஏதாவது தரும்படியாகக் கேட்டதும் அவருக்குத் தனியே 50 ரூபாய் தரப்பட்டது.

சரி, சாமியைப் பார்க்கப் போகிறோம் என்று உள்ளே சென்றால், அங்கே முக்கியப் பிரமுகரின் குடும்பம் ஒன்று சாவகாசமாக சாமியை மறைத்து உட்கார்ந்துகொண்டு பூஜையில் இருந்தது. வீட்டில் நடப்பது போன்றுஅவர் களுக்காகவே ஒரு சிறப்பு பூஜை நடந்துகொண்டு இருந்தது. அது முடியும் வரை மற்றவர்கள் காத்திருங்கள் என்றார்கள். குழந்தை காற்று இல்லாமல் அழுதது. அதை இடையூறாகக் கருதிய முக்கியப் பிரமுகர், குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்று கோபப்பட்டார்.

அந்தப் பிரமுகருக்கு மாலை மரியாதை அணிவிக்கப்பட்டு, தட்டில் அவர் சில 500 ரூபாய்களை அள்ளிப்போட்டு எழுந்த பிறகு, கடவுள் மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். கூட்டம் அதிகம். சாமியைப் பார்த்தது போதும்... வெளியே போங்கள் என விரட்டிக்கொண்டு இருந்தார்கள். உண்டியலில் பணம் போட வேண்டாம், தட்டு காணிக்கை போடுங்கள் என்ற குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கூட்டத்தில் சிக்கிய குழந்தை அழுது, உதடு துடித்துப் போனது. அவசரமாகக் குழந்தையைக் கடவுள் முன் காட்டிவிட்டு வெளியே வந்தோம். குழந்தைக்குத் தாகமாக இருக்கக் கூடும் என்று பாட்டி சொன்னார். தண்ணீர் எங்கே கிடைக்கும் எனத் தேடினால், கோயிலில் சுகாதாரமான குடிநீர் கிடையாது. வெளியேதான் போக வேண்டும் என்றார்கள். பிராகாரத்தில் அமர்ந்தபடியே ஏன்டா கோயிலுக்கு வந்தோம் என்று ஒரு குடும்பம் புலம்பிக்கொண்டு இருந்தது. ஒரு வெள்ளைக்காரர் அங்கிருந்த ஒரு சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கோயில் ஊழியர் மிரட்டியதும், அவர் தன் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து நீட்டினார். வாங்கிக்கொண்டு அந்த ஊழியர் சிரித்தபடியே வெளியேறினார்.

சரி, பிரசாதமாவது வாங்கி வருகிறேன் என்று போன நண்பர் அசதியோடு திரும்பி வந்து, ஒரே கொள்ளையா இருக்கு. பிரசாதம் விலை அதிகம். வாய்ல வைக்கவே முடியலை என்று புலம்பினார். கோயிலுக்கு வந்ததுக்கு சாமிப் படம் ஒன்று வாங்கிக்கொள்ளலாம் என்று அருகில் இருந்த கடைக்குப் போய், நண்பரின் மனைவி விலையைக் கேட்டதும் அவருக்குத் தலை சுற்றியது.

ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது. காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை அருகில் சென்று வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில், கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தி' படத்தில் குணசேகரன். ஆனால், இன்று தமிழகக் கோயில்களைப்போல பக்தர்களைத் துச்சமாக, அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஹரித்துவாரின் கும்பமேளாவில் ஓர் இடம்கூட அசுத்தமாக இல்லை. குப்பைகள், கழிவுகளைக் காண முடியாது. அவ்வளவு தூய்மை பராமரிக்கப்படுகிறது. தரிசனம் துவங்கி, சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம். ஆனால், தொடரும் தமிழகக் கோயில்களின் அவலத்தைப் போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிடவேண் டும் என்றால்கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான்.

சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53

சத்யஜித் ரே 'ஜனசத்ரு' என்ற ஒரு வங்காளப் படத்தை இயக்கி உள்ளார். அற்புதமான படம். இப்சனின் நாடகத்தை மையமாகக்கொண்டது. ஒரு கோயில் குளத்தில் உள்ள தண்ணீர் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், கிருமிகள் நிறைந்திருந்தன. அதைத் தீர்த்தமாகப் பக்தர்களுக்குத் தருகிறார்கள். அதனால், ஒரு நோய் பரவத் துவங்குகிறது. இதைப்பற்றி ஆராய்ந்த மருத்துவர் ஒருவர், கோயில் குளம்தான் இதற்குக் காரணம். எனவே, அதைத் தற்காலிகமாக மூடிவிடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.

அதை ஒருவரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அத்துடன், கடவுளின் புனிதக் குளத்தை ஏளனம் செய்கிறார் என்று அவர் மீது கோபப்படுகிறார்கள். அவரோ தான் சொல்வது மக்கள் ஆரோக்கியம் தொடர்பான அக்கறை. அதில் புனித மறுப்பு என்று எதுவும் இல்லை. தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் என்கிறார். சொந்தக் குடும்பம்கூட அதைப் புரிந்துகொள்ளாமல் போகிறது. மக்கள் விரோதியாக அவர் சித்திரிக்கப்பட்டு, அவருக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது. பக்தியின் பெயரால் நாம் ஏன் பகுத்தறிவை, விஞ்ஞானத்தை மறந்து போனோம் என்று மருத்துவர் கவலைப்படுகிறார். இந்தக் கவலை திரைப்படத்தில் இடம்பெற்ற விஷயம் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றிய கோயில்களின் முறைகேடுகளைக் காணும்போதும் அதே கேள்வியே மனதில் எழுகிறது. அதற்கான மாற்றுவழிதான் தெரியாமல் இருக்கிறது!

பார்வை வெளிச்சம்!

தெருக் கூத்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகப் புகழ்-பெற்ற கலை வடிவம். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நார்த்தேவன் குடிகாடு என்ற ஊரில் நடைபெறும் இரணியன் தெருக் கூத்தின் விசேஷம், ஊர் மக்களே வேஷமிட்டு நடத் துவதுதான். அத்துடன், முக்கி யக் கதாபாத்திரங்களானஇரணி யன், லீலாவதி, பிரகலாதன் ஆகி-யவற்றை இரட்டை வேடங் களாக இருவர் ஏற்று நடிக்கிறார்கள். இப்படி ஒரு வாரக்கூத் தில், தினம் ஒரே கதாபாத்திரத் துக்கு வேறு வேறு ஆட்கள் டபுள் ஆக்ட் போடுவது இங்கு மட்டுமே காண முடிகிறது!

 

 
சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - அந்தக் கடவுளுக்கு இது தெரியுமா? -எஸ்.ராமகிருஷ்ணன் - 53