மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! - 14

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! - 14


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! - 14
நீயும்... நானும்! - 14
 
நீயும்...நானும்!
நீயும்... நானும்! - 14
கோபிநாத், படம்: 'தேனி' ஈஸ்வர்

மிழகத் தலைநகரத்தின் பிரதானமான சாலை அது. சிவப்பு விளக்கு விழுந்தவுடன் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கின்றன. எல்லாருக்கும் ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது. ஒரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில். சிக்னல் விளக்கில் 40, 39, 38 என விநாடிகளின் எண்ணிக்கை குறைவதை எல்லாரும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீயும்... நானும்! - 14

நீளமாக நிற்கும் வாகன வரிசையில் முதலில் நிற்கிறது ஒரு கார். 60 வயது தாத்தா ஒருவர் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி பச்சை விளக்குக் காகக் காத்திருக்கிறார். 5, 4, 3என்று வந்துகொண்டு இருக்கையில் எல்லாரும் ரேசுக்குத் தயார் ஆவதைப்போலத் தயாராக நிற்கிறார்கள். பச்சை விளக்கு எரிகிறது... முன் காரில் இருக்கும் தாத்தா கிளட்ச்சை மெதுவாக ரிலீஸ் செய்து, ஆக்சிலேட்டரை அழுத்துகிறார், இரண்டு முறை உதறிய அவரது கார் நின்றுவிட்டது.

நீயும்... நானும்! - 14

அடுத்த நொடிக்குள் ஹாரன்கள் அலறுகின்றன. இன்னும் இருக்கும் 30 விநாடிகளுக்குள் போயாக வேண்டும். ஆனால், தாத்தாவின் வண்டி நகர மறுக்கிறது. ஹாரன்கள் தொடர்ந்து அலறுகின்றன. பின்னால் இருக்கும் இளைஞர் ஏதோ சொல்லித் திட்டுகிறார். தாத்தாவை நோக்கியே எல்லா கண்களும் ஆத்திரமாகப் பார்க்கின்றன. அவர் முகத்தில் பதற்றம். வேகவேகமாக சாவியைத் திருகுகிறார். ஆக்சிலேட்டரை மிதித்துப் பார்க்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. பின்னால் இருப்பவர்கள் கத்துகிறார்கள்.

அந்தப் பெரியவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிக்னல் மறுபடி சிவப்புக்கு வந்துவிட்டது. வழி கிடைக் காத பலரும் தாத்தாவைத் திட்ட... தர்மசங்கடத்துடனும் அவமானத்துடனும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறார்... டிராஃபிக் கான்ஸ்டபிள் உதவியுடன் வண்டி ஓரம் கட்டப்படுகிறது.

வண்டியைத் தள்ள முடியாமல் அந்தப் பெரியவர் தள்ளிக்கொண்டு போனபோதுகூட அவரைச் சிலர் கோபமாகத்தான் பார்த்தார்கள். அடிக்கடி சிக்னல்களில், அவசரமான சாலைகளில், நெருக்கடியான தெருக்களில் இதுபோன்று வண்டிகள் நின்றுபோகும். வண்டியை ஓட்டி வந்தவர் தவியாகத் தவிக்க... அவரை இன்னமும் பதற்றமடையும் விதமாக ஹாரன்கள் மூலம் எல்லாரும் எதிர்ப்பு காட்டுவார்கள். அந்தப் பெரியவரோ அல்லது வேறு யாருமோ அந்த இக்கட்டான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டம் போட்டுச் செய்யவில்லை. நமது காரும் நாளை அப்படி நின்றுபோகலாம். என்ன செய்தாலும் கிளம்ப மறுக்கலாம்.

எல்லாருக்கும் வேலை இருக்கிறது. ஆளாளுக்கு ஓர் அவசரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த ஹாரன்களுக்குப் பின்னால் ஒரு எளியவனின் இயலாமையை ஏளனம் செய்கிற நம்முடைய மனப்போக்குதான் தெரிகிறது. ஐயோ! கார் நின்னுபோச்சே என்று அவர் பதறுகிறபோது, இன்னமும் அவரைப் பதற்றப்படுத்த முனைவது எப்படிச் சரியாகும்?

ஆளாளுக்குத் திட்ட, கையைப் பிசைந்துகொண்டு அவமானத்துடன் பெரியவர் நிற்பதைப்போல யார் வேண்டுமானாலும் நிற்க வேண்டிய நிலை வரலாம். தடித்த இரண்டு உயரமான ஆசாமிகள் பாதையை மறித்துக்கொண்டு, 'ஏ! நீதான் என் காரை இடிச்சடா...' 'யாரைப் பார்த்துடா டான்னு சொல்ற?' என்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு இருக்கிறபோது, பெரும்பாலானவர்கள் வண்டியை வளைத்துக்கொண்டு அந்த இடத்தைத் தாண்டிச் செல்கிறோம்.

தாத்தா வண்டி தடுமாறி நிற்கிறபோது எழுப்பப்பட்ட அந்த எதிர்ப்பு ஹாரன்கள் இப்போது குறைவாகவே ஒலிக்கின்றன. பலசாலியைப்போல பார்வைக்குத் தெரிகிற, ரோட்டை மறித்து காரை நிறுத்தி இருக்கிற அவர்கள் மீது ஆத்திரம் காட்ட ரொம்பவே யோசிக்கிறோம்.

எளியவனாக இருந்தால், அந்தக் கோபம் வெளியே கொப்பளிக்கிறது. பலசாலியாகத் தெரிந்தால் உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொள்கிறோம். ஒட்டுமொத்தத்தில் பொறுத்துக்கொள்ளலும், சகிப்புத்தன்மையும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் 'அவுட் ஆஃப் சிலபஸ்' ஆகி மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் எகிறுகிறது.

எல்லாம் உடனே நடந்துவிட வேண்டும். நினைத்தபடி நடந்துவிட வேண்டும், தடையில்லாமல் கிடைத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதில் இருக்கும் நியாயம், தர்மங்களைப் பார்க்காமல் கோபமடையச் செய்கிறது.

ஒருவருக்கு போன் செய்கிறோம். மணி ஒலிக்கிறது... தொடர்ந்து ஒலிக்கிறது அவர் எடுக்கவில்லை. அநேகமாக அவர் வண்டியில் சென்றுகொண்டு இருக்கலாம். நம்மோடு பேச முடியாத இடத்தில் இருக்கலாம்... மருத்துவமனையில் இருக்கலாம்... தொலைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருக்கலாம் என எதைப்பற்றியும் யோசிக்காமல்... உடனடியாக மீண்டும் மீண்டும் அதே எண்ணுக்கு முயற்சித்துக்கொண்டே இருக்கிற பலரைப் பார்த்திருக்கலாம்.

நீயும்... நானும்! - 14

5 முறை, 6 முறை தொடர்ந்து முயற்சித்துவிட்டு எதிர்முனையில் எந்தப் பதிலும் இல்லை என்ற கோபத்தில் போனைப் போட்டு உடைப்பவர்கள்கூட உண்டு. ஒரு அசாதாரணமான சூழலில், மிக அவசியமான நெருக்கடியில் இருக்கும்போது, அந்தக் கோபம் வருவது இயற்கைதான். சொல்ல விரும்பும் தகவலை எதிர்முனையில் இருப்பவருக்குத் தெரிவிக்கத் தேவையான கால அவகாசம் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்கிற பழக்கம் பலரிடமும் உண்டு.

என் வேலை நடக்க வேண்டும் என்கிற வேகம்... எதிர்முனையில் இருப்பவன் என்ன செய்வான் என்பதை யோசிக்கவே அனுமதிப்பது இல்லை. பரபரப்பாக இயங்குவதாக நினைத்துக்கொண்டு பதற்றமாக, எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொள்கிறோம் என்பதே உண்மை. இதை எல்லாம் தாண்டி என் வேலையும் என் நேரமும்தான் முக்கியம் என்ற சுயநலமே அத்தனைக்கும் காரணம். நான் சிறப்பு அந்தஸ்து பெற்றவனாக நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

ஆனால், ஜனநெருக்கடி அதிகம் நிறைந்த, வேலைப் பளு கூடுதலாக இருக்கிற சமூகச் சூழலுக்குள் பொறுமையாக இல்லாமல், விட்டுக்கொடுக்காமல், பொறுத்துக்கொள்ளாமல் வேலை நடக்காது என்பதை ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும். காரை மிகக் கவனமாக ரிவர்ஸில் எடுக்கிறபோது எதைப்பற்றியும் கவலைப்படாமல் பின்பக்கம் இருக்கிற சிறிய இடைவெளியில் விருட்டெனப் பாய்கிற இரு சக்கர வாகன ஓட்டியின் மீது எக்கச்சக்கமாக ஆத்திரம் வரும். ஆனால், அதே வேலையை நாமும் பலமுறை செய்திருக்கிறோம்.

அடுத்தவரைப் பதற்றப்படவைப்பதிலும், என் வேலைதான் முக்கியம் என்பதிலும் நமக்குள் நிறையக் குரூரம் ஒளிந்திருக்கிறது. இல்லையென்றால், அந்த அப்பாவித் தாத்தாவின் மீது அவ்வளவு ஆத்திரம் வராது.

நம் இயல்பு வாழ்க்கையை, சௌகரியத்தைப் பாதிக்கிற எதன் மீதும் நமக்குக் கோபம் வருகிறது. பக்கத்தில் இருக்கிற கல்யாண மண்டபத்தில் நாளை நடக்கப்போகும் கல்யாணத்துக்காக இப்போது இருந்தே கத்துகிற ஒலிபெருக்கி எரிச்சலூட்டுகிறது. ஆனால், நம் வீட்டுக் கல்யாணத்தில் இதே வேலையைச் செய்கிறபோது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது தொந்தரவாக இருக்குமா, 50 அடி தூரத்தில் இருக்கிற மருத்துவமனையில் பெரியவர்கள் எப்படித் தூங்க முடியும் என எத்தனை பேர் அக்கறையோடு யோசித்து இருப்போம்.

நமக்கு அடுத்தவர் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ, அது அனைத்தையும் நாம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். எல்லார் வீட்டு வாசலிலும் 'நோ பார்க்கிங்' என்ற பலகை தொங்குகிறது. என் வீட்டு வாசலில் எந்தக் காரணத்தைக்கொண்டும் வேறு ஒருவர் வண்டியை நிறுத்தக் கூடாது என விரும்புகிறோம். ஆனால், நாம் எங்காவது செல்கிறபோது யார் வீட்டு வாசலிலேயோதான் வண்டியை நிறுத்த வேண்டி இருக்கிறது.

இது அதிகமான மக்கள் வாழுகிற, இடவசதி குறைவாக உள்ள தேசம். இங்கு இது நடக்கத்தான் செய்யும். அநியாயங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டாம். ஆனால், வாழ்க்கை யதார்த்தச் சிக்கல்களில் அந்த சகிப்புத்தன்மை அவசியம் ஆகிறது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சகிப்புத்தன்மையுடன் இருந்துதான் ஆக வேண்டும்.

விரும்பியே இருக்கலாமே!

 
நீயும்... நானும்! - 14
-ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! - 14