அடுத்த நொடிக்குள் ஹாரன்கள் அலறுகின்றன. இன்னும் இருக்கும் 30 விநாடிகளுக்குள் போயாக வேண்டும். ஆனால், தாத்தாவின் வண்டி நகர மறுக்கிறது. ஹாரன்கள் தொடர்ந்து அலறுகின்றன. பின்னால் இருக்கும் இளைஞர் ஏதோ சொல்லித் திட்டுகிறார். தாத்தாவை நோக்கியே எல்லா கண்களும் ஆத்திரமாகப் பார்க்கின்றன. அவர் முகத்தில் பதற்றம். வேகவேகமாக சாவியைத் திருகுகிறார். ஆக்சிலேட்டரை மிதித்துப் பார்க்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. பின்னால் இருப்பவர்கள் கத்துகிறார்கள்.
அந்தப் பெரியவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிக்னல் மறுபடி சிவப்புக்கு வந்துவிட்டது. வழி கிடைக் காத பலரும் தாத்தாவைத் திட்ட... தர்மசங்கடத்துடனும் அவமானத்துடனும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறார்... டிராஃபிக் கான்ஸ்டபிள் உதவியுடன் வண்டி ஓரம் கட்டப்படுகிறது.
வண்டியைத் தள்ள முடியாமல் அந்தப் பெரியவர் தள்ளிக்கொண்டு போனபோதுகூட அவரைச் சிலர் கோபமாகத்தான் பார்த்தார்கள். அடிக்கடி சிக்னல்களில், அவசரமான சாலைகளில், நெருக்கடியான தெருக்களில் இதுபோன்று வண்டிகள் நின்றுபோகும். வண்டியை ஓட்டி வந்தவர் தவியாகத் தவிக்க... அவரை இன்னமும் பதற்றமடையும் விதமாக ஹாரன்கள் மூலம் எல்லாரும் எதிர்ப்பு காட்டுவார்கள். அந்தப் பெரியவரோ அல்லது வேறு யாருமோ அந்த இக்கட்டான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டம் போட்டுச் செய்யவில்லை. நமது காரும் நாளை அப்படி நின்றுபோகலாம். என்ன செய்தாலும் கிளம்ப மறுக்கலாம்.
எல்லாருக்கும் வேலை இருக்கிறது. ஆளாளுக்கு ஓர் அவசரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த ஹாரன்களுக்குப் பின்னால் ஒரு எளியவனின் இயலாமையை ஏளனம் செய்கிற நம்முடைய மனப்போக்குதான் தெரிகிறது. ஐயோ! கார் நின்னுபோச்சே என்று அவர் பதறுகிறபோது, இன்னமும் அவரைப் பதற்றப்படுத்த முனைவது எப்படிச் சரியாகும்?
ஆளாளுக்குத் திட்ட, கையைப் பிசைந்துகொண்டு அவமானத்துடன் பெரியவர் நிற்பதைப்போல யார் வேண்டுமானாலும் நிற்க வேண்டிய நிலை வரலாம். தடித்த இரண்டு உயரமான ஆசாமிகள் பாதையை மறித்துக்கொண்டு, 'ஏ! நீதான் என் காரை இடிச்சடா...' 'யாரைப் பார்த்துடா டான்னு சொல்ற?' என்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு இருக்கிறபோது, பெரும்பாலானவர்கள் வண்டியை வளைத்துக்கொண்டு அந்த இடத்தைத் தாண்டிச் செல்கிறோம்.
தாத்தா வண்டி தடுமாறி நிற்கிறபோது எழுப்பப்பட்ட அந்த எதிர்ப்பு ஹாரன்கள் இப்போது குறைவாகவே ஒலிக்கின்றன. பலசாலியைப்போல பார்வைக்குத் தெரிகிற, ரோட்டை மறித்து காரை நிறுத்தி இருக்கிற அவர்கள் மீது ஆத்திரம் காட்ட ரொம்பவே யோசிக்கிறோம்.
எளியவனாக இருந்தால், அந்தக் கோபம் வெளியே கொப்பளிக்கிறது. பலசாலியாகத் தெரிந்தால் உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொள்கிறோம். ஒட்டுமொத்தத்தில் பொறுத்துக்கொள்ளலும், சகிப்புத்தன்மையும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் 'அவுட் ஆஃப் சிலபஸ்' ஆகி மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் எகிறுகிறது.
எல்லாம் உடனே நடந்துவிட வேண்டும். நினைத்தபடி நடந்துவிட வேண்டும், தடையில்லாமல் கிடைத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதில் இருக்கும் நியாயம், தர்மங்களைப் பார்க்காமல் கோபமடையச் செய்கிறது.
ஒருவருக்கு போன் செய்கிறோம். மணி ஒலிக்கிறது... தொடர்ந்து ஒலிக்கிறது அவர் எடுக்கவில்லை. அநேகமாக அவர் வண்டியில் சென்றுகொண்டு இருக்கலாம். நம்மோடு பேச முடியாத இடத்தில் இருக்கலாம்... மருத்துவமனையில் இருக்கலாம்... தொலைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருக்கலாம் என எதைப்பற்றியும் யோசிக்காமல்... உடனடியாக மீண்டும் மீண்டும் அதே எண்ணுக்கு முயற்சித்துக்கொண்டே இருக்கிற பலரைப் பார்த்திருக்கலாம்.
|