மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46


சிறிது வெளிச்சம்! - 46
சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46
சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46
பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை!
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46
.

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

யல்வெளியின் ஊடே சட்டித் தலையும், பொத்தான்கள் சரியாகப் போடாத பருத்த வயிறும், அழுக்கேறிய முக்கால் பேன்ட்டுமாக நிற்கும் வைக்கோல் பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். மழையில், வெயிலில்நனைந்த படியே அது தனியாக நின்றுகொண்டு இருக்கி றது. பறவைகளை அச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் பொம்மை உருவாக்கப் பட்டு உள்ளது. பறவைகளை ஏன் அச்சுறுத்த வேண்டும்? விளைச்சலைச் சாப்பிட்டுவிடும் என்பதாலா? பறவைகள் சாப்பிட்டுப் போவதற்காகக் கையளவு தானியம் தருவதற்குக்கூட ஏன் நாம் தயாராக இல்லை? என்னை வசீகரிப்பது, அச்சமூட்டுவதற்கு ஏன் நம்மைப் போன்ற உருவம் செய்யப்பட்டது என்பதே!

வைக்கோல் பொம்மையும் பேன்ட் - ஷர்ட் அணிந்திருக்கிறது. அது யாருடையது? அந்த ஆள் எப்போதாவது தன் உடைகளை வைக்கோல் மனிதன் அணிந்திருப்பதைக் கண்டு வெட்கப்படுவானா? வைக்கோல் பொம்மைகள் தனித்தே இருக்கின்றன. சினேகமற்று, யாருடனும் உறவாடாமல் தனியே போய்விடுவதுதான் அச்சமூட்டுவதற்குக் காரணமா? வைக்கோல் பொம்மைகள் மனிதர்களைப்போல வாய் ஓயாமல் பேசுவது இல்லை என்பது மட்டுமே குறை.

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

பறவைகளை மிரட்ட வைக்கோல் பொம்மை உருவாக்கியதைப்போல நமது குடும்பத்தை, சக மனிதர்களை மிரட்ட எத்தனையோ பொம்மைகள், வடிவங்களை நாம் உருவாக்கிவைத்திருக்கிறோம். அல்லது நாமே அப்படி உருமாறி விடுகிறோம். உண்மையில், அச்சத்தை உருவாக்க வேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் யாவையும்விட, அதிகமாக அச்சமூட்டுவது மனிதனே!

இன்று பறவைகள் மனிதர்களைக் கண்டே பயப்படுவது இல்லை. வைக் கோல் பொம்மைகளுக்கு எப்படிப் பயப்படப்போகிறது? ஆனாலும், ஒரு நம்பிக்கை. யாரோ நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள ் என்ற அச்ச உணர்வு பறவைகளுக்கு இயல்பாகவே இருக்கிறது. அந்தப் பய உணர்வை வைக்கோல் பொம்மைகள் உருவாக்குகின்றன.

பறவைகள் எளிதில் ஏமாறக்கூடியவை இல்லை. அவை ஒரு சில நாட்களிலேயே வைக்கோல் பொம்மைகள் தங்களை ஒன்றும் செய்யாது என்று அறிந்துகொள்கின்றன. அதன் பிறகு, அவை வைக்கோல் பொம்மைகளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தங்கள் இரையைத் தின்கின்றன. வைக்கோல் பொம்மை முன்பாகப் போய் விளையாடுகின்றன. என்றாவது வைக்கோல் பொம்மைக்கு உயிர் வந்து அது தன்னைத் துரத்திவிடுமோ என்ற மெலிதான அச்சம் அதன் மனதுக்குள் இருக்கக் கூடும்.

வைக்கோல் பொம்மைகள் மனிதர்கள்போலவே இருக்கின்றன. ஆனால், அது நிஜ மனிதன் இல்லை. நாமும் இந்த வைக்கோல் பொம்மைகள்போல யாரையோ அச்சப்படுத்துவதற்காக நமக்குள் எதை எதையோ திணித்துக்கொண்டு இருக்கிறோம். அதிகாரம், ஆணவம், பேராசை, பகட்டு என்று நம்மை ஊதிப் பெருக்கவைக்கக்கூடிய அத்தனையும் நமக்குள் நிரப்பிக்கொண்டு இருக்கிறோம். நம்மைக் கண்டு சகஜீவிகள் அச்சப்படுகிறார்கள். அல்லது விலகிப் போய்விடுகிறார்கள்.

பறவைகளை விரட்டி அடிப்பதற்கு வைக்கோல் பொம்மையைக் கண்டுபிடித்த நாம், பறவைகளை அருகில் வரவழைக்கும் ஏதாவது ஒரு பொம்மையை உருவாக்கி இருக்கிறோமா? மரத்தின் கிளையில் வந்து இயல்பாகப் பறவை அமர்வதைப் போல என்றாவது நமது தோள்களில் ஒரு பறவையாவது வந்து அமர்ந்து இருக்கிறதா? பறவைகள் ஒருபோதும் மனிதனை நம்புவதே இல்லை. அவை மனிதர்களைவிட்டு விலகியே பறக்கின்றன.

பறவைகள்போல ஆக வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள்கூடப் பறவைகளை நேசிப்பது இல்லை. இது பறவை விஷயத்தில் மட்டும் அடங்கிவிடக்கூடியது அன்று. நமது பெருமைக்கு உரிய சுய அடையாளங்களாகக் கருதப்படுவை, இன்று அடுத்தவரை அச்சம்கொள்வதற்கான மிரட்டல் குறிகளாக மாறி இருக்கின்றன என்பதே நிஜம்.

ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'The Birds'. பறவைகளுக்கும் நமக்குமான இயல்பான உறவு எந்தப் புள்ளியிலும் திசைமாற்றம் கொண்டுவிடும் என்ற பயமே இந்தப் படத்தின் ஆதாரம்.

மெலனி ஒரு பணக்காரி. அவள் காதல் பறவைகள் வாங்குவதற்காக ஒருநாள் பறவைகள் விற்கும் கடைக்குச் செல்கிறாள். அங்கே வரும் வழக்கறிஞர் மிட்ச், அவளைக் கடையின் பணிப் பெண்ணாக நினைத்துக்கொண்டு தனது தங்கைக்காக ஒரு ஜோடி காதல் பறவை வேண்டும் என்று கேட்கிறான். அவனிடம் வேண்டுமென்றே நாடகமாடுகிறாள் மெலனி. உண்மையில் மிட்சுக்கு அவள் யார் என்ற உண்மை தெரிந்தாலும், வேண்டும் என்றே அவன் தன்னிடம் விளையாடி இருக்கிறான் என்று அறிந்துகொண்ட மெலனி கோபப்படுகிறாள்.

ஆனாலும், மிட்ச் மீதான ஈர்ப்பால் அவனுக்குத் தெரியாமல் அவனது தங்கையின் பிறந்த நாளுக்காகக் காதல் பறவைகளை வாங்கிக்கொண்டு அவனைத் தேடி பசிபிக் கடற்கரையோரம் உள்ள சிறிய கிராமத்துக்குச் செல்கிறாள். அது ஒரு சிறிய துறைமுகக் கிராமம். அங்கே கடல் பறவைகள் நிறையக் காணப்படுகின்றன.

மெலனி முதன்முறையாக மிட்சைச் சந்திக்கப் போகும்போது பறவைகள் கடலின் மீது இயல்பாகப் பறந்து அலைகின்றன. ஆனால், மிட்ச்சின் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு மெலனி போனபோது, எதிர்பாராமல் கடல் காகங்கள் அவர்களைத் தாக்கத் துவங்குகின்றன. அந்தத் தாக்குதல் திடீரென அதிகமாகி வீட்டுக் கண்ணாடிகள் உடைகின்றன.

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

மனிதர்களைப் பறவைகள் தீராத விரோதம்கொண்டு தாக்குவதுபோலத் துரத்தித் துரத்தி அடிக்கின்றன. கண் முன்னே ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. பறவைகளுக்கு என்னவானது என்று அறிய முடியவில்லை. ஆனால், ஈசல்கள் பெருகுவதைப்போல பறவைகள் கூட்டமாக வந்து தாக்குகின்றன. அது உலகம் அழியப்போவதன் அறிகுறி என்கிறான் ஒரு மீனவன். அந்தத் தாக்குதலில் இருந்து மெலனி எப்படித் தப்புகிறாள் என்பதே படம்.

படம் முழுவதும் ஆயிரக்கணக்கான பறவைகள் மனிதர்களைத் துரத்துகின்றன. வீடுகள், பாதுகாப்பான அறைகள் அத்தனையும் உடைத்து உள்ளே புகுந்து அலகால் கொத்துகின்றன. உயிர் தப்பிக்க ஓடுகிறார்கள். ஒரே நாளில் பறவைகள் கொடூரத்தின் வடிவமாகிவிடுகின்றன. தான் தினமும் பார்த்து ரசித்த பறவைகள் இத்தனை உக்கிரமானவையா என்று மக்கள் பயந்து அலறுகிறார்கள். இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் இடையில் ஒரு லயத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. அது சீர்கெட்டுப் போகும்போது மனிதர்களை இயற்கை துரத்தி அடிக்கவே செய்யும் என்கிறார் ஹிட்ச்காக்.

பறவைகளுக்கு மட்டும் இல்லை; பொதுவாகவே தன்னைக் கண்டு இன்னொரு மனிதன் பயப்படுவதை ரசிக்கும் குணம் அனைவருக்குள்ளும் இயல்பாகவே இருக்கிறது. ஓர் அலுவலகத்தில் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு கடைநிலை ஊழியராக இருப்பவர்கூட, வீட்டில் மனைவி, பிள்ளைகள் தன்னைக் கண்டு பயப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறவராகவே இருக்கிறார். அடுத்தவரைத் தனது பயத்தின் காரணமாக ஒடுக்கிவைத்துக்கொள்ளும் அடிமை புத்தி மாறவே இல்லை.

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

யோசிக்கும்போது, நம்மைப் பயங்கொள்ளவைக்கும் நிறைய விஷயங்களோடு நமக்கு நேர் பரிச்சயமே கிடையாது. ஆனால், அச்சம் நமக்குள் ஆழமாக வேரோடி இருக்கிறது. ஒவ்வொருவருக்கு உள்ளும் அச்சமூட்டும் மனிதர்கள், விஷயங்கள் என்ற ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் அண்டை வீட்டார் துவங்கி, ஆபத்தான தீவிரவாதிகள் வரை பல்வேறு மனித முகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நமது பயத்தின் பட்டியல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேஇருக் கிறது. புதிய நோய்கள், புதிய ஏமாற்றுத்தனங்கள், புதிய ஆயுதங்கள் என்று பயத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை தனது வகுப்பில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப்பற்றி இணையத்தில் எழுதியிருந்தார். முதலாம் வகுப்பில் படிக்கும் இரண்டு சிறுவர்கள், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு சிறுவனை மிரட்டி, அவன் தங்களுக்கு அடிமை என்று பயமுறுத்தி, தங்களது புத்தகப் பையைச் சுமக்கவைப்பது, பூட்ஸைத் துடைக்கச் சொல்வது, உட்காரும் பெஞ்ச்சை கர்சீப்பால் துடைக்கவைப்பது என்று மாறி மாறித் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பையனும் பயந்துகொண்டு வெளியே இதைப்பற்றிச் சொல்லவேஇல்லை.

ஆனால், ஒருநாள் அவர்கள் தங்கள் அடிமைகுடிக் கும் தண்ணீர் பாட்டிலில் மூத்திரம் பெய்து குடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் முறையிட, விஷயம் பெரிதாகி பள்ளியில் விசாரணை நடைபெற்றிருக்கிறது. ஒரு சிறுவனை அடிமையாக்க வேண்டும் என்ற ஐடியா எப்படி அவர்களுக்கு வந்தது என்று கேட்டதற்கு, அந்த இரண்டு சிறார்களும் டி.வி-யில் அப்படி ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதில் ஒருவனை மற்றவன் அடிமை ஆக்கிக்கொள்கிறான் என்று அழுதபடியே சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில், இது தொலைக்காட்சியில் இருந்து மட்டுமே உற்பத்தியாகிற விஷயம் இல்லை. பல நேரங்களில் நாம் அடுத்தவரை அடிமைபோலத்தான் நடத்துகிறோம். அது நம் குடும்பத்தில் துவங்கி அலுவலகம், வெளியிடம் என எங்கும் நீள்கிறது. அதை ஒவ்வொருவரும் அவரவர் அளவில் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.

யோசிக்கும்போது வியப்பாக இருக்கிறது. அத்தனை ஊடகங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் பயம் கசிந்து நம் வீட்டுக்குள் வந்தபடியே இருக்கிறது. தனியாக இருக்காதீர்கள், இருட்டில் வெளியே போகாதீர்கள், அடுத்த மனிதனை நம்பிப் பேசாதீர்கள், உதவி செய்யாதீர்கள் என்று ஊடகங்கள் பயத்தை உற்பத்தி செய்தபடியே இருக்கின்றன.

எனது பால்ய காலங்களில் தீவிரவாதி என்ற சொல்லையே கேள்விப்பட்டு இருக்கவில்லை. கிராமத்துக்கு யாராவது வெளியாட்கள் வந்தால் அவர்களை விசாரித்து, எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வார்கள். தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். சாப்பாடும் தங்கும் இடமும்கூடக் கிடைப்பது உண்டு. சந்தேகம் உருவானால், விசாரித்து இங்கே தங்கக் கூடாது என்று அனுப்பிவிடுவார்கள். மனிதர்கள் மீதான அச்சம் அன்று அதிகம் இல்லை.

பயம் முழுவதும் பேய், பிசாசுகள், ஆவிகள் மற்றும் பாம்பின் மீதே குவிந்திருந்தன. ஐந்து தலைப் பாம்பு வந்து கொத்திவிடும். பறக்கும் பாம்பு இருக்கிறது. அது கண்ணைக் கொத்திக் குருடாக்கிவிடும் என்று உருவாக்கப்பட்ட பயம், யாவர் மனதிலும் இருந்தது. தனியே இருட்டில் நடந்தால் பேய் பிடித்துவிடும் என்று ஊரே பயந்தது. இன்று பேய்கள், பிசாசுகள் மீதான பயம் பெரும்பாலும் போய்விட்டது. ஆனால், அந்த இடத்தை மனிதர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். இன்று பயமே நம்மை வழிநடத்துகிறது.

எதையும் அடிமையாக்கவும் அச்சமூட்டுவதற்கும் மட்டுமே பழகிய நாம், வசீகரிப்பதற்கும் நெருங்கி அன்புகொள்வதற்கும் என்ன சாத்தியங்களை உருவாக்கப்போகிறோம்? இந்தக் கேள்வியின் விடையில்தான் நமது எதிர்காலத்தின் அமைதி அடங்கி இருக்கிறது!

சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46

டெல்லியின் சாந்தினி சௌக்கில் பறவைகள் மருத்துவமனை ஒன்று 1956-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சமண மதத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தப்

பறவைகள் மருத்துவமனையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 முதல் 60 வரை அடிபட்ட, நோயுற்ற புறா, கிளி, வாத்து, காகம் போன்ற பறவைகள், சிகிச்சைக்காகக் கொண்டுவரப்படுகின்றன. பறவைகளுக்காகத் தனித் தனி வார்டுகள் உள்ளன. குடிநீரும் உணவும் தந்து பறவைகளை நேசிக்கும் இந்த மருத்துவமனையின் சேவை மெச்சத்தக்க ஒன்று!

 
சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - பறவைகள் மனிதர்களை நம்புவதில்லை! -எஸ்.ராமகிருஷ்ணன் - 46