மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன் - 47

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன் - 47

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47
சிறிது வெளிச்சம்!
எனது மேஜை எந்தக் காடு?
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47

மது வீடுகள் எங்கோ காட்டில் இருந்து வெட்டப்பட்ட மரத்தாலும், ஏதோ மலையில் உடைத்து எடுக்கப்பட்ட கற்களாலும் நீரோடிய ஆற்றின் மணலாலும்தான் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், வீட்டை இயற்கையானது என்று எவரும் நினைப்பதும் இல்லை; உணர்வதும் இல்லை.

காகம் எங்கெங்கோ இருந்து சிறு சுள்ளிகளை எடுத்து வந்து தனக்கான கூட்டினை மரத்தில் கட்டிக்கொள்கிறது. தூக்கணாங்குருவி இன்னும் சற்று ரசனையுடன் மின்மினி விளக்கோடு சுகமாக அலைந்தாடும் ஒரு தொங்கு வீட்டை உருவாக்கிக்கொள்கிறது. அப்படி நமது ரசனையும் பொருளாதாரச் சாத்தியங்களுமே நமது வீடாக உருக்கொண்டு இருக்கிறது.

வீட்டை அலங்கரிக்க நினைக்கும் நாம், அதுவே இயற்கையின் ஒரு பகுதிதான் என்று உள்ளூர உணர்வதே இல்லை. எனது எழுதும் மேஜை எங்கோ காட்டில் இருந்த ஒரு மரம்தானே. அந்த மரம் எங்கே இருந்தது... எவ்வளவு பெரியது... யார் அதன் நிழலில் தங்கிப் போனார்கள். எதுவும் தெரியாது. மரத்தின் முதுகுதான் மேஜையாகி இருக்கிறது. மரம் இப்போது தெரிவது இல்லை.

பயன்பாடு என்ற தளத்துக்குள் நுழைந்தவுடன் இயற்கையின் சாராம்சம் மறைந்துவிடுகிறது. எதைப் பயன்படுத்தத் துவங்கினாலும், அதனால் பிரயோஜனம் இருக்கிறதா என்பதே முதல் கேள்வியாக இருக்கிறது. பயன்படாதவற்றைத் தூக்கி எறிந்துவிடுங்கள் என்பதுதான் நாம் அறிந்துவைத்துள்ள ஒரே அறிவு. ஆனால், இயற்கையில் எல்லாவற்றுக்கும் ஒரு பயனும், தேவையும், அவசியமும் இருக்கிறது. அதை நேரடியாக நாம் புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு சமன். இந்தச் சமனை வெகு ரகசியமாக இயற்கை உருவாக்கிவைத்திருக்கிறது. அந்தப் புதிரை அவிழ்க்க விஞ்ஞானம் பல நூறு வருடங்களாக முயன்றபடியே உள்ளது.

இயற்கையை நோக்கிச் செல்வது என்பது, எங்கோ வனத்துள் போய்விடுவது என்பது இல்லை. நமது வீதியோரங்களில், நமது வீட்டின் அருகில், நமது வீட்டின் திறந்த வானத்தில், நமது அயல்புறங்களில் எத்தனையோ பறவைகள், செடி கொடிகள், பூக்கள், பெயர் அறியாத மரங்கள், சிறியதும் பெரியதுமான விலங்குகள் இருக்கின்றன.

அதை நாம் அரிதாகக் கவனம்கொள்கிறோம். சில நிமிடங்களில் மறந்துவிடுகிறோம். நம்மை உற்சாகம் கொள்ளவைக்க இயற்கை பாடுகிறது. பசுமைகொள்கிறது. பனியும் மழையுமாக உருமாறுகிறது. அதிலிருந்து நம்மைத் துண்டித்துக்கொண்டு அதே விஷயங்களைச் செயற்கையாக உருவாக்கி அனுபவிப்பதற்கே நாம் அதிகம் விரும்புகிறோம்.

கடலில் உள்ள உப்பு கரிக்கக்கூடியது என்பதை கண்களோ, கை கால்களோ, காதுகளோ அறிய முடியாது. அதை உணர்ந்து சொல்வதற்கு நாக்கு அவசியமானது. அப்படி நமக்கு உலகின் ருசியை உணர்ந்து சொல்லக்கூடிய நாக்கு தேவையாக இருக்கிறது. அந்த நாக்குதான் நமது மனது. அது உலகை ருசித்துப் பழக வேண்டும். அதற்குப் பெரும் தடையாக இருப்பது நமது வாழ்க்கை முறை. விடுமுறையை நாம் உறங்குவதற்கும், தொலைக்காட்சிகளுக்கும், மிதமிஞ்சிச் சாப்பிடுவதற்கும் மட்டுமே உரியதாக மாற்றிவைத்திருக்கிறோம்.

உண்மையில், விடுமுறை என்பது நமது தினசரி செயல்பாடுகளில் இருந்து விடுபட்ட, மாறுபட்ட வாழ்வை உருவாக்கிக்கொள்வதே. அந்த விருப்பமும் தேடுதலும் மிகவும் சுருங்கி வருகிறது. விடுமுறை நாளை நாம் பயனற்றதாகக் கழிக்கவே பெரிதும் முயற்சிக்கிறோம். விடுமுறை நம்மைப் புத்துணர்வு கொள்ளவைக்கும் ஒரு வைத்தியம். அது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தக் கூடியது. அதற்குத் தேவை பயணமும் புதியன காணும் வேட்கையுமே.

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47

படிப்பு, வேலை, குடும்பம், சம்பாத்தியம், அதிகாரம், அந்தஸ்து, புகழ் இந்த ஏழு சுற்றுக் கோட்டைகளை வென்று முடிப்பதே வாழ்வின் லட்சியம் என்பதுதான் பொதுப் பழக்கம். ஆனால், இதற்கு வெளியில் உலகம் இருக் கிறது. அதன் வனப்பு நாம் கனவிலும் காணாதது என்று அறிந்துகொள்ளவே இல்லை.

ஹாலிவுட் நடிகர் ஷான் பென் இயக்கிய 'Into the Wild' என்ற படத்தைப் பாருங்கள். அது உங்கள் தினசரி வாழ்க்கையை மறுபரிசீலனை செய்துகொள்ள வைக்கும். உடனடியாக, எங்காவது பயணிக்க வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கும். நம்மைச் சுற்றிய உலகின் மீது அளவில்லாத பிடிப்பும் நேசமும் ஏற்படத் துவங்கும். மனித வாழ்வு எவ்வளவு மகத்தானது என்பதை நீங்களே உணர்வீர்கள்.

எமோரி பல்கலைக்கழகத்தின் படிப்பாளி மாணவன் கிறிஸ்டோபர் மெக்கென்லெஸ். ஒருநாள் இவன் தனது படிப்பு, பணம் அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் ஆளாகக் கிளம்பி இலக்கில்லாமல் பயணிக்கிறான். இவன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் ஆதாரக் கதை. இது ஓர் உண்மைச் சம்பவத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. கதையைச் சொல்பவள் மெக்கின் சகோதரி. அவள் தனது அண்ணன் ஏன் அத்தனையும் உதறிவிட்டுப் போனான் என்று கடந்த காலத்தை விவரிக்கத் துவங்குகிறாள்.

தன்னைச் சுற்றிய உலகம் பணம், அதிகாரம் என்று பேராசை பிடித்து அலைகிறது. நண்பர்கள் பணத்தால் உருவாக்கப்படுவது இல்லை. ஆனால், பணத்தால் பிரிக்கப்படுகிறார்கள். தனது சுயநலத்துக்காக மனிதர்கள் எந்தத் தீங்கையும் எவருக்கும் செய்யத் தயங்குவதே இல்லை. உறவு களை நம்ப முடியவில்லை.

அவன் தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து ஒரு காப்பகத்துக்கு அளித்துவிடுகிறான். தன்னைப்பற்றிய சுயவிவரங்கள், வங்கிக் கணக்குகள் அத்தனையும் அழித்து ஒழிக்கிறான். அடையாளமற்ற எளிய மனிதனாக இயற்கையோடு இணைந்து வாழ்வது மட்டுமே இனி தனது விருப்பம் என்று அவன் மாநகரைவிட்டு நீங்குகிறான்.

கிடைத்த வாகனத்தில் உதவி கேட்டு ஏறிப் பயணம் செய்கிறான். தன் பெயரை மாற்றிக்கொள்கிறான். இரண்டாவது வாழ்க்கை ஒன்று உருவானதுபோல் இருக்கிறது. ஆனால், ஒரு மனிதன் அடையாளமற்று வாழ்வதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதே

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47

இல்லை. காவல் துறையினர் அவனது அடையாள அட்டைகளைத் தொடர்ந்து விசாரிக்கிறார்கள். கண்காணிக்கிறார்கள். பசியைப் போக்கிக்கொள்ள கிடைத்த வேலையைச் செய்கிறான்.

பயணத்தின் நடுவில் மணற்புயலில் சிக்கிக்கொள்கிறான். சாலை நீண்டு சென்றபடியே உள்ளது. ஆறு, பாலை எனக் கடந்து செல்கையில், புதிய நட்பு உருவாகிறது. பிரிவு ஏற்படுகிறது. உலகம் நடந்து தீராத தூரமும் கண்கொள்ள முடியாத அழகும்கொண்டது என்பதை நேரடியாக உணர்கிறான்.

அன்றாட வாழ்க்கை மட்டுமே அவனுக்கு இருக்கிறது. கடந்த காலத்தின் சுமைகள் இல்லை. எதிர்காலம் குறித்த பயம் இல்லை. நட்சத்திரம் ஒன்று உலகைப் பார்த்துக்கொண்டு இருப்பதுபோல அவன் தனியே உலகை அறிகிறான்.

இயற்கை மெள்ள அவனை உள்வாங்கிக்கொள்ளத் துவங்குகிறது. அவனது உடல் மெலிந்து மாறுகிறது. தோற்றம் அடையாளமற்றுப் போகிறது. இயற்கை சாந்தமானது மட்டுமில்லை; மிக உக்கிரமானது என்பதையும் கண்டுகொள்கிறான்.

இயந்திரக் கோளாறு காரணமாக கைவிட்டுப் போய் நிற்கும் துருவேறிய பழைய பஸ் ஒன்றைத் தனது வசிப்பிடமாக மாற்றிக்கொள்கிறான். அதில் தங்கி இரவை ரசிக்கிறான். வாழ்க்கை சவாலாக இருக்கிறது. அதை எதிர்கொள்வதில் அவனது படிப்பும் அறிவும் தாண்டிய ஏதோவொன்று தேவைப்படுகிறது. அதை அனுபவத்தில் உணர்கிறான். பசி தாங்க முடியாத நேரங்களில் கிடைத்த கிழங்குகளை, செடிகளைத் தின்று வாழ்கிறான்.

அடிக்கடி தனது அனுபவங்களை அவனே சுயபரிசீலனை செய்துகொள்கிறான். பிரிந்துபோன தனது நண்பர்களும் குடும்பமும் என்றாவது தன்னோடு ஒன்று சேரக்கூடும் என்று கனவு காண்கிறான். அவன் நினைத்ததுபோல இயற்கையோடு ஒன்றி வாழ்வது எளிதாக இல்லை. அது அவனைத் துரத்துகிறது. எங்கோ மாட்டிக்கொண்டுவிட்டோம் என்றுகூட உணர்கிறான். தன்னை யாராவது காப்பாற்ற வருவார்களா என்றுகூட ஆசைப்படுகிறான். ஆனால், அவன் மனது உள்ளூர தனியே வாழ்வை எதிர்கொள் என்று அவனைத் தைரிய மூட்டுகிறது.
மனிதர்களே அற்ற ஓர் இடத்தில் தனி ஒருவனாக வாழ்கிறான். காற்றும், வானமும், தண்ணீரும், மணலும் துணையாக இருக்கின்றன. ஆனால், அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. போராட்டம்மிக்க வாழ்வு அவனை ஒடுக்கிவிடுகிறது. சோர்வும் அசதியும்கொள்கிறான். தன்னை மரணம் நெருங்கப் போகிறது என்பதை உணர்ந்தபோதும், மனது பயண ஆசையில் இருந்து விடுபட மறுக்கிறது.

தன்னைத்தானே ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது சகோதரிக்கு ஒரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறான். அதன் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் உடலை வேட்டைக்காரர்கள் கண்டுபிடித்து, சகோதரியிடம் ஒப்படைக்கிறார்கள். அதில் தனது அஸ்தியை மேற்குக் கடற்கரைப் பகுதியில் கரைக்கும்படி தங்கையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறான். முடிவில் அஸ்தியாக அவனது அடுத்த பயணம் தொடர்கிறது.

இந்தப் படம் பேசுவது எங்கோ ஒரு மனிதன் விரும்பி மேற்கொண்ட பயணத்தைப்பற்றி மட்டும் இல்லை. மாறாக, நமக்குள் படிந்துபோன சலிப்புத்தன்மை, அலுப்பு, நம்பிக்கைஇன்மை அத்தனையும் மறுவிசாரணை செய்வதுபோலவே இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47

உலக வரைபடத்தை நம்மில் பெரும்பான்மையினர் பார்த்திருக்கிறோம். அதில், நமது ஊர் எங்கே இருக்கிறது என்று ஆசையாகத் தேடிக் கண்டுபிடித்து சந்தோஷப்படுவோம். இவ்வளவு பெரிய உலகில் நாம் ஒரு சிறிய புள்ளியில் மட்டுமே வசிக்கிறோம் என்ற கூச்சம் நமக்குள் உருவாகவில்லை. இந்த உலகின் சிறு பகுதியையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை ஏன் ஏற்படுவதே இல்லை. பெயர்களாக நாம் அறிந்துவைத்துள்ள எத்தனையோ ஊர்களில் நமது காலடி பட வேண்டாமா?

வாஸ்கோட காமாவும் கொலம்பசும் கேப்டன் குக்கும் உலகைக் கண்டுபிடிக்கப் பயணம் சென்றார்கள் என்கிறது வரலாறு. அதன் பின் இந்த நூற் றாண்டில் ஒருவர்கூட உலகை நோக்கித் தனது சாகச பயணத்தை மேற்கொள்ளவில்லையா என்ன? ஏன் அவர்களை நாம் அறிந்துகொள்ளவும் கொண்டாடவும் இல்லை. நாடு பிடிப்பதற்கா கவோ, அதிகாரம் செய்வதற்கா கவோ மேற்கொண்ட பயணங் கள் பேசப்படுகின்றன. சரித்திர மாகி இருக்கின்றன. ஆனால், தன் விருப்பத்தின் பாதையில் சென்ற பயணங்கள் ஏன் முக்கியத்துவம் பெறப்படவே இல்லை?

மெக் மேற்கொண்டதுபோலத் திரும்ப முடியாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், சில நாட்களாவது நமது அடையாளங்களை மறந்து, வயதை மறந்து, இயற்கையை நெருங்கிப் பாருங்கள். சொகுசான அறைகள், உணவகங்கள், வாகனங்கள், வசதிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, சற்று உங்கள் வாழ்வை மாற்றிப்பாருங்கள். சாலைகளிடம் உங்களை ஒப்படைத்துப்பாருங்கள். அது தானே உங்களை அழைத்துச் செல்லும். உலகின் எல்லாசாலை களும் மனிதர்கள் உருவாக்கி யதுதானே. அது உலகின் மீது மனிதர்கள் கொண்டுள்ள தீராத ஆசையின் சாட்சி.

அன்றாட வாழ்வின் கூண்டுகளைத் தாண்டி சற்றுப் பறந்துபாருங்கள். நமது பிரச்னைகள், சிக்கல்கள் நெருக்கடிகள் யாவும் அதன்முன்னே எவ்வளவு சிறியது என்பதை நீங்களே உணர்வீர்கள்!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47

அமெரிக்காவின் டிம் மற்றும் சிண்டி ட்ராவிஸ் தம்பதியினருக்கு சைக்கிளில் உலகைச் சுற்றிவருவது என்பது பெருங்கனவு. 2002-ம் ஆண்டு ஒருநாள் தனது வேலை, சம்பாத்தியம் யாவையும் உதறித் தள்ளிவிட்டு உலகை சுற்றிவருவது என்று முடிவு செய்து சைக்கிளிலே புறப்பட்டனர். உலகின் பாதியைச் சுற்றிவந்துவிட்ட இவர்களது பயணம் இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. சைக்கிள் தங்களோடு பேசக்கூடியது. அது உயிருள்ள குதிரை போன்றது என்று புகழாரம் சூட்டும் இவர்கள், வழியெங்கும் சந்தித்த மனிதர்கள், சம்பவங்களை முன்வைத்து இணையத்தில் தொடர் பதிவுகளை எழுதி வருகிறார்கள்!

 
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! : எனது மேஜை எந்தக் காடு? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 47