மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன் - 48

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன் - 48

எஸ்.ராமகிருஷ்ணன் ,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48
அறியாத வயசு!
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

புயல் எந்தத் திசையில் கடலைக் கடக்கப்போகிறது என்பதை கண்டுபிடித்துவிட முடிகிறது. எரிமலை எப்போது வெடிக்கும் என்றுகூட எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், பதின்வயதில் உள்ள பையனோ... பெண்ணோ என்ன நினைக்கிறார்கள்? ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எந்த அறிவாளியாலும் கண்டுபிடிக்க முடியாது. தரையில் வீழ்ந்த பாதரசத்தைக் கையில் அள்ள முயற்சித்தால், அது எப்படி நழுவி ஓடிக்கொண்டே இருக்குமோ, அத்தகைய மனது பதின்வயதில் உருவாக ஆரம்பிக்கிறது.

அந்த வயதை, கண்ணாடி பார்க்கும் காலம் என்றே சொல்வேன். முன் எப்போதையும்விட பதின்வயதில்தான் ஆணும் பெண்ணும் அதிகம் கண்ணாடி பார்ப்பதும் தனது நிறைகுறைகளைப்பற்றியே தொடர்ந்து யோசிப்பதுமாக இருக்கிறார்கள். திடீரெனத் தன்னைப் பிடிக்காமல் போய்விடுகிறது. தீவிரமாகக் கவலைப்படுவதும் அழுவதுமாக இருக்கிறார்கள். நினைத்தாற்போலத் தன்னை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

குண்டாகிவிடுவேன். அழகாக இல்லாவிட்டால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று சாப்பாட்டை வெறுக்கத் துவங்குகிறார்கள். நண்பர்கள் மட்டுமே உலகமாகத் தோன்றுகிறது. அடுத்த சில நாட்களிலே நண்பர்களைப் பிடிக்காமல் போய்விடுகிறது. கடிகாரத்தின் பெண்டுலம்கூட சீராகத்தான் இடவலமாக ஆடுகிறது. ஆனால், பருவ வயதின் மனதோ தீர்மானிக்க முடியாத வேகத்தில் ஊசலாடுகிறது.

நேற்று வரை பிடித்தமானதாக இருந்த வீடும், அப்பாவும், அம்மாவும், அண்ணன், தங்கைகளும் வேற்று மனிதர்கள்போலத் தெரியத் துவங்குகிறார்கள். மீசை முளைக்கத் துவங்கிய பையனும் பருவம் எய்திய பெண்ணும் உடலை அப்போதுதான் உற்று நோக்குகிறார்கள். அதுவரை வெறும் காகிதம்போல் இருந்த உடல், அந்த வயதில் கட்டுப்பாடு இல்லாமல் அலைவுறுகிறது. உடலின் ரகசியக் கதவுகள் திறந்துகொள்கின்றன. அதன் வழியே கனவுகள் ஊற்றுபோலப் பெருகுகின்றன. தனக்குத்தானே சிரித்துக்கொள்ளவும், தன்னைத்தானே திட்டிக்கொள்ளவும் ஆசைப்படும் அந்த வயதின் ஒரே குறை, தன்னை யாருமே புரிந்துகொள்வது இல்லை என்பதே!

15 வயதில் மகளோ, மகனோ உள்ள பெற்றோர் அவர்களைப்பற்றிய புகார்களை, கவலைகளை, வியப்பை நிறையச் சொல்கிறார்கள். அதைக் கேட்கையில் எல்லாக் காலத்திலும் வயதின் தடுமாற்றங்கள், குழப்பங்கள் ஒன்றுபோலவே இருப்பதை உணர முடிகிறது. புத்தர் மூன்று காட்சிகளால் தூண்டப்பட்டு தன் அரண்மனையில் இருந்து வெளியேறித் துறவு மேற்கொண்டார் என்பார்கள். பதின் வயதினரைப்பற்றிய இந்த மூன்று காட்சிகள் ஓர் எளிய உண்மையை நமக்குப் புரியவைக்கின்றன.

முதல் காட்சி...

பள்ளி இறுதி ஆண்டில் படிக்கும் 15 வயதான நிஷா ஒருநாள் காலை வகுப்புக்குப் போகாமல் படுத்துக்கிடக்கிறாள். வேலைக்குச் செல்லும் அவளது அம்மா, 'என்னடி ஆச்சு... உடம்புக்கு முடியலையா?' என்று அக்கறையாகக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டாள். மகளிடம் பதிலே இல்லை. நிஷா காலையில் எழுந்ததில் இருந்து காபி குடிக்கவில்லை. குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. படுக்கையிலேயே கிடக்கிறாள். யார், எது கேட்டாலும் கோபப்படுகிறாள். அவளுக்கான காலை உணவு, மதிய உணவு அத்தனையும் உணவு மேஜையில் எடுத்துவைத்துவிட்டு,

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

கைச்செலவுக்குக் காசு கொடுத்துவிட்டு அப்பா, அம்மா இருவரும் வேலைக்குப் போய்விடுகிறார்கள். வீட்டில் தனியாக இருக்கிறாள். டி.வி. பார்க்கவோ, பாடல் கேட்கவோ அவளுக்கு விருப்பம் இல்லை.

தன் செல்போனில் யார் யாருக்கோ எஸ்.எம்.எஸ். அனுப்பியபடியே இருக்கிறாள். பகல் மிக மெதுவாகப் போகிறது. நிஷா அதைக் கண்டு எரிச்சல்படுகிறாள். மதிய நேரம் எழுந்து, கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்க்கிறாள். இடது கன்னத்தில் சிறிய மரு தெரிகிறது. ஆத்திரத்துடன் அதைக் கிள்ளி எடுக்கப்பார்க்கிறாள். தன் உயரம் சற்று அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எக்கி நின்று பார்க்கிறாள்.

கூந்தலைத் தடவிப் பார்த்து அது மிருதுவாக இல்லையே என்று எரிச்சல்படுகிறாள். செல்போனை அடிக்கடி எடுத்துப் பார்க்கிறாள். தலையணையில் முகம் புதைத்து எதையோ நினைத்து அழுகிறாள். கவலையும் விரக்தியும் ஒருநாளில் அவள் தோற்றத்தை மாற்றிவிடுகிறது. மாலை வீடு திரும்பும் அம்மா, தன் மகளின் தோற்றம் கண்டு பயப்படுகிறாள். மகளுக்கு என்னவானது என்று புரியாமல் புலம்புகிறாள்.

இரவில் நிஷாவின் அப்பா அருகில் வந்து உட்கார்ந்து, 'என்னம்மா கோபம்? யாராவது ஏதாவது சொன்னார்களா? ஏதாவது வேண்டுமா?' என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு பேசுகிறார். அவள் உடைந்து அழுதபடியே, 'எனக்கு உடல் நலமில்லை என்று என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் எஸ்.எம்.எஸ். அடித்தேன். ஒருத்திகூட பதில் அனுப்பவில்லை. என்னைப்பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. ஆனால், நான் திவ்யாவுக்கு உடல்நலமில்லை என்று தெரிந்தபோது, எத்தனை போன் செய்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்' என்று குமுறுகிறாள்.

'உனக்கு உடம்புக்கு என்ன செய்கிறது?' என்று அப்பா கேட்கிறார். 'எனக்கு ஒன்றும் இல்லை. இப்படிச் செய்துபார்த்தால், நண்பர்கள் நிஜமாக நம் மீது அக்கறையுடன் இருக்கிறார்களா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்று விநோதினி சொன்னாள். அவள் சொன்னபடியேதான் நடந்தது. என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. எல்லோரும் நடிக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள்' என்று அழுகிறாள் நிஷா. எப்படிச் சமாதானம் செய்வது என்று அப்பாவுக்குப் புரியவில்லை. அவளாகத் தீர்த்துக்கொள்ளும்படி விட்டுப் போகிறார்.

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

மறுநாள் நிஷா இயல்பாகப் பள்ளிக்குப் போகிறாள். முந்திய நாளின் சுவடே இல்லை. தான் பழைய நண்பர்களை விலக்கிவிட்டதாகவும் புதிதாக இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் உற்சாகமாகச் சொல்கிறாள். அத்துடன், ஒரு ஆளுக்கு எவ்வளவு எஸ்.எம்.எஸ். வருகிறதோ, அதை வைத்துத்தான் அவர்களின் பாப்புலாரிட்டி. எங்கள் வகுப்பிலே எனக்குத்தான் அதிக எஸ்.எம்.எஸ். வருகிறது என்று மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள். அப்பா, அம்மா இருவரும் தங்கள் மகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாமல் தலையாட்டுகிறார்கள்.

இரண்டாம் காட்சி...

அருண் 10-ம் வகுப்புப் பையன். அவனுக்கு வீட்டில் தனி அறை. அதை எப்போதுமே பூட்டிவைத்துக்கொள்கிறான். வீட்டில் இருப்பது அப்பா, அம்மா இருவர் மட்டுமே. பின் எதற்காக எப்போதும் கதவைப் பூட்டிக்கொள்கிறான் என்று அவர்களுக்குக் கோபம். யாராவது நண்பர்கள் வந்தால்கூட அறைக்குள் கூட்டிச் சென்று கதவை மூடிவிடுவான். அதேபோல பாத்ரூமுக்குள் மணிக்கணக்காக உட்கார்ந்துகொள்கிறான். என்னதான் செய்கிறான் என்று புரியவில்லை.

நன்றாகப் படிக்கிறான். ஆனால், யாரோடும் பேச விரும்புவது இல்லை. எதற்காக அறைக் கதவைச் சாத்திக்கொள்கிறான் என்று தினமும் ஒருமுறை அப்பா அவனோடு சண்டை போடுகிறார். அவன் அதுபோன்ற நேரங்களில் தலை கவிழ்ந்தபடி நகத்தைக் கடித்துக் கடித்துப் புண்ணாக்கிவிடுகிறான். எதையாவது மறைக்க விரும்புகிறானா? அல்லது ஏதாவது ரகசியமாகச் செய்கிறானா?

அம்மா மட்டுமே அறையைச் சுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறாள். இரவெல்லாம் அந்த அறையில் விளக்கு எரிகிறது. வீட்டுக்குள்ளேயே ஒரு தீவுபோல வாழ்கிறான் என்று அப்பா கோபப்படுகிறார். குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் அவன் கலந்துகொள்வது இல்லை. அப்பாவுடன் பூங்காவில் நடப்பதற்கோ, உணவகத்தில் போய்ச் சாப்பிடவோகூட விரும்புவது இல்லை. தன் பையன் தன்னிடம் இருந்து அந்நியமாகிப்போவதை அப்பாவால் தாங்க முடியவில்லை. அது தீராத கோபமாக வெளிப்படுகிறது.

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

சாப்பிடும் நேரம் ஒரு இட்லியை அவன் அரை மணி நேரம் மென்றுகொண்டே இருக்கிறான். என்னடா பழக்கம் என்று அப்பா ஒருநாள் ஆத்திரத்தில் அடித்துவிட்டார். வீட்டில் அப்பாவுக்கும் பையனுக்கும் எப்பவும் சண்டைதான். அம்மா அலுத்துக்கொள்கிறாள். மகனின் தனிமை அப்பாவை அச்சமூட்டுகிறது. அப்பாவின் கோபம் மகனைத் தனிமைக்குள் தள்ளுகிறது.

மூன்றாம் காட்சி...

ப்ளஸ் டூவுக்காக ஒரே வகுப்பில் படிக்கும் சங்கரும் மணிகண்டனும் ஒன்று சேர்ந்து படிக்கிறார்கள். இருவரும் ஐந்து வருட நண்பர்கள். தினசரி எட்டு மணிக்கு மணிகண்டன், சங்கர் வீட்டுக்கு வந்துவிடுவான். சங்கர் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு சேர்ந்து படிப்பார்கள். பெரும்பாலும் மணிகண்டன் அங்கேயே இரவு தங்கிவிடுவான்.

ஒருநாள் இரவு எட்டு மணிக்கு சங்கர் தன் அம்மாவிடம், 'மணி வந்தால் நான் வெளியே போயிருக்கேன்னு சொல்லித் திருப்பி அனுப்பிவிடு' என்று தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறான். அம்மாவுக்கு எதற்கு என்று புரியவில்லை. மணிகண்டன் வந்து சேர்கிறான். சங்கர் வெளியே போயிருப்பதாக அம்மா சொன்னதும், வரும் வரை காத்திருப்பதாகச் சொல்லி வரவேற்பறையில் உட்கார்ந்துகொள்கிறான்.

ஒன்பது மணியாகிறது. சங்கர் அறைக் கதவைத் திறந்து வெளியே வருகிறான். மணி மிக இயல்பாக, 'உள்ளேயா இருந்தே?' என்று கேட்க, சங்கர் பேசவே இல்லை. அம்மா இருவருக்கும் சாப்பாடு போடுகிறாள். சங்கர் முகத்தைக் கோபமாகவைத்துக்கொண்டு, 'நான் தனியாப் படிக்கப் போறேன். இனிமே வராதே' என்று சொல்கிறான். மணி எதற்கு என்று புரியாமல், 'என்னடா ஆச்சு?' என்று கேட்கிறான். சங்கர் ஆத்திரத்துடன், 'அது என் இஷ்டம். நீ சாப்பிட்டுக் கிளம்பு' என்று விரட்டுகிறான். மணி சாப்பிடவில்லை. தன்னை மீறி அழுகிறான். அம்மா மணியைச் சமாதானம் செய்கிறாள். ஆனால், அவன் வலியோடு எழுந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விடுகிறான்.

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

'ஏன்டா இப்படிச் செய்தே?' என்று அம்மா கேட்கிறாள். 'பின்னே என்னம்மா, நான் சொல்லித்தர்ற முறையில் படிச்சு இவன் ஈஸியா பரீட்சை எழுதி என்னைவிட அதிக மார்க் வாங்கிடுறான். ரிவிஷன் டெஸ்ட்ல அவன்தான் ஃபர்ஸ்ட்' என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான் சங்கர். முறிந்த நட்பின் வலியை மகன் உணரவில்லையா என்று அம்மா புரியாமல் நிற்கிறாள். அதன் பிறகு சங்கர் வீட்டுக்கு மணி வரவே இல்லை.

பதின்வயதின் இந்தச் சிக்கல்கள் மேற்குலகில் இன்னும் கூடுதலாக இருக்கிறது. அங்கே பெற்றோர் கவலைப்படும் முக்கிய விஷயம், பாலுறவு. பள்ளி வயதில் பாலுறவு வேட்கை துவங்கிவிடுகிறது. படித்து முடிக்கும் முன்பு தன் மகள் கர்ப்பிணியாகிவிடக் கூடாதே என்பதுதான் பெற்றோரின் முக்கிய கவலை. அப்படிக் கர்ப்பமான சில பள்ளி மாணவிகள்பற்றிய உண்மைக் கதைகளும் வெளியாகி உள்ளன. அதை மையமாகக்கொண்ட படமே 'யிஹிழிளி.'

16 வயதான பள்ளி மாணவி ஜுனோ கர்ப்பமாகிவிடுகிறாள். அதைக் கலைக்க விருப்பம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்கிறாள். இதனால் ஏற்படும் உடல், மனச் சிக்கல்களே படம். அறியா வயதில் கர்ப்பிணியான மாணவியின் மனத் தடுமாற்றங்கள் காட்சிகளாக விரிகின்றன.

பதின் வயதின் இந்த புரிந்துகொள்ளப்படாத காட்சிகள் மூன்றிலும் உள்ள ஒரே அம்சம் தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். தனது செயல்கள், தோற்றம் விருப்பம் மட்டுமே முதன்மையானது என்று எண்ணுகிறார்கள். அதை மற்றவர் புரிந்துகொள்ளத் தவறும்போது சிக்கலும் சிடுக்கும் உருவாக ஆரம்பிக்கிறது!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48

ஒன்றரை வயதில் ஓவியம் வரையத் துவங்கிய எலிடா வண்ணங்களை மிக அழகாகப் பயன்படுத்துகிறாள். இரண்டு வயதில் அவளது ஓவியக் கண்காட்சி மெல்பர்ன் மியூஸியத்தில் நடைபெற்றிருக்கிறது. அது சிறந்த வரவேற்பைப் பெற்றதோடு நல்ல விலைக்கு விற்பனையும் ஆகியுள்ளது. எலிடா உலகின் மிகவும் இள வயது ஓவியராக இன்று புகழ்ந்து கொண்டாடப்படுகிறாள்!

 
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48
சிறிது வெளிச்சம்! : அறியாத வயசு! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 48