மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 49

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 49

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49
சிறிது வெளிச்சம்!
கல்விக் கடைகள்!
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

வ்வொரு வருடமும் கோடை விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து புதிய பிரச்னைகளையும் நெருக்கடிகளையுமே உருவாக்குகிறது. இன்று, பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களை அற்பப் புழுக்களைப்போல நடத்துகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். ஆட்டோ ஓட்டுநர் தன் ஆற்றாமை தாங்க முடியாமல் புலம்பியபடியே வந்தார். என்ன விஷயம் என்று கேட்டபோது, தன் இரண்டு பிள்ளைகளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கவைப்பதாகவும் அந்தப் பள்ளி நிர்வாகம் தன்னை மிகக் கேவலமாக நடத்துவதாகவும் சொன்னார். எதற்காக அப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டேன்.

இப்போதுதான் பள்ளி முடிந்து விடுமுறை ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், ஒரு வாரத்துக்குள் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாகக் கட்டிவிட வேண்டும். பள்ளியில் மட்டுமே யூனிஃபார்ம், நோட்டு, புத்தகங்கள் வாங்க வேண்டும். அவர்கள் சொல்லும் கடையில் போய்த்தான் ஷூ வாங்க வேண்டும். இப்படி ஆயிரம் கெடுபிடிகள். மிரட்டல்கள். கேள்வி கேட்க முடியாது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டாலோ, அல்லது ஏன் இவ்வளவு கட்டணம் என்று கேட்டாலோ, பிள்ளையை வேறு பள்ளிக்கு மாற்றிக்கொண்டு போ என்று கோபப்படுகிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் கூட்டினால் கோபப்படும் மக்கள், ஒரு குயர் நோட்டின் விலை 60 ரூபாய், யூனிஃபார்ம் தைக்க 2,000 ரூபாய், ஓர் அடையாள அட்டைக்கு 350 ரூபாய் என்று பள்ளி நிர்வாகம் கேட்கும்போது, வாயைப் பொத்திக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறார்கள். அது ஏன் என்றுதான் புரியவே இல்லை.

ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னை படிக்காத முட்டாள் என்று திட்டி அனுப்பிவிட்டார்கள். பிள்ளைகளை அடுத்த பள்ளியில் சேர்ப்பது என்பது இன்னும் மோசமான அனுபவம். இதைப்பற்றி புகார் செய்வது என்றால்கூட அதே பள்ளி நிர்வாகத்தில்தான் செய்ய வேண்டும். அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? என்ன செய்வது என்றே தெரியவில்லை? பிள்ளைகளுக்காக இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று வேதனைப்பட்டார்.

இது, யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுநரின் ஆதங்கம் மட்டுமில்லை; பெரும்பான்மை பெற்றோர்களின் மனநிலை இதுதான். கல்வித் துறையைப் பெரும் வணிகமாக்கிவிட்டோம். கல்வி அடிப்படை உரிமையாகிவிட்டது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே சூழலில், சிறுவர் சீர்திருத்த நிலையங்கள்போலப் பள்ளிகள் உருமாறிவிட்டதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

எதற்காக என்று எந்த விளக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் பள்ளி பணம் கேட்கிறது. தையல் கடை, செருப்புக் கடை, துணிக் கடை, டை, பெல்ட், அடையாள அட்டை, நோட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் என்று எல்லாரோடும் ஓர் உள் ஒப்பந்தம் செய்துகொண்டு, கமிஷன் ஏஜென்ட்டுகள்போலச் செயல்படுகிறார்கள்.

கட்டணத் தொகையை விசாரிக்க வரும் ஆங்கிலம் அறியாத பெற்றோர்கள் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியைவிடவும் கூனிக் குறுகி, பள்ளி அலுவலகம் முன்பாகப் பெற்றோர்கள் பணம் கட்டத் தவணை கேட்டுத் தயங்கி நிற்கிறார்கள். நிர்வாகம் தயவுதாட்சண்யம் எதுவும் இன்றி அவர்களைக் கொச்சையாகத் திட்டுகிறது. வெளியேற்றி அனுப்புகிறது. பள்ளி குறித்து புகார் செய்வதற்குப் பள்ளி நிர்வாகத்தைவிட்டால் வேறு வழி இருப்பது இல்லை.

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

கல்வி அமைச்சகம், இதற்கு எனத் தனியே ஒரு கண்காணிப்புப் பிரிவை உருவாக்கி, அவர்கள் மூலம் இதை ஒழுங்குக்குள் கொண்டுவரலாம். அவசர போலீஸ் எண், ஆம்புலன்ஸ், தொலைபேசி எண்போல பள்ளி நிர்வாகம் குறித்த முறைகேடுகளைப் பதிவு செய்யும் சிறப்புத் தொலைபேசி எண்கள் மற்றும் இணைய வசதி உடனே உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இதைத் தீர்க்க முடியும்.

1,000 ரூபாய் பணம் லஞ்சம் வாங்குபவனை உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து, விசாரணை செய்வதுடன் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் பெயர், விவரங்களை வெளியிடுகிறது. ஆனால், ஆயிரம் ஆயிரமாகக் கொள்ளையடிக்கும் ஏதாவது ஒரு பள்ளி, அதன் நிர்வாகி மற்றும் முதல்வர்பற்றிய விவரங்கள் நாளிதழ்களில் வந்திருக்கின்றவா என்ன?

இந்தக் குளறுபடிகள் ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் பாடப் புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் பெருகி இருக்கின்றன. பாடம் என்ற பெயரில் அபத்தமான கருத்துகள், தகவல்கள் அதிகம் உள்ளன. அதைச் சீர்செய்யாமல் அப்படியே மாணவர்கள் தலைக்குள் திணிக்கிறார்கள். டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், கூடுதல் பயிற்சி என்று மாணவன் கல்வி பயிலச் செலுத்தும் கட்டணத்தைவிடப் பல மடங்கு பணம் உபரியாகப் பறிக்கப்படுகிறது.

ஒருநாள் விடுப்பு எடுத்தால் 50 ரூபாய் அபராதம். மாதப் பரீட்சையில் ஃபெயிலாகிப் போனால் 1,000 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் கழிப்பறையைப் பயன்படுத்தினால், 10 ரூபாய் அபராதம். மாணவர்கள் குடிப்பதற்குச் சுகாதாரமான தண்ணீர் கிடையாது. தூய்மையான கழிப்பறை வசதி இல்லை. காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகள் என்று கோளாறுகளின் உச்சமாகவே பல பள்ளிகள் உள்ளன.

பெற்றோர், தங்கள் பிள்ளையின் ஆசிரியர் யார் என்று தெரிந்துகொள்ள முடியாது. ஒருவேளை தெரிந்துகொண்டாலும் அவர்களைச் சந்தித்து தன் பிள்ளையின் கல்விபற்றி அறிந்துகொள்ள பள்ளி அனுமதிப்பது இல்லை. யார், எந்த வகுப்புக்கு, என்ன பாடம் எடுக்கிறார்கள்? அவர்களின் கல்வித் தகுதி என்ன? பெயர், விவரம், முகவரி, தொலைபேசி எண்களைப் பெற்றோர்களுக்குத் தருவதற்கு பள்ளி நிர்வாகம் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. சிறைச்சாலைகளில்கூட இவ்வளவு கடுமையான விதிகள் பின்பற்றப்படுவது இல்லை. ஆனால், சிறைச்சாலைகளைவிட மோசமாக பெற்றோர்களையும் மாணவர்களையும் பள்ளி நடத்துகிறது. இது குறித்த எதிர்ப்புக் குரல் பெற்றோர்கள் மனதுக்குள்ளாகவே ஒடுங்கிப்போய்விடுகிறது.

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

உண்மையில் இந்தப் பிரச்னைகள் அரசுப் பள்ளிகளில் அரிதாகவே இருக்கிறது. பெரும்பான்மை அரசுப் பள்ளிகள் முறையாக நடைபெறுகின்றன. கற்றுத்தருதலும், மாணவர்கள் மீதான அக்கறையும் பிற பள்ளிகளைவிடக் கூடுதலா கவே உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள் என்றாலே மக்களுக்கு அது தரம் குறைந்தது என்ற தவறான எண்ணம் உள்ளது. 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வில், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களில் அதிகம் பேர் அரசுப் பள்ளிகள் மற்றும் சிறு நகரப் பள்ளிகளில் படித்து வந்தவர்களே.

தனியார் வங்கிகள், தனியார் வணிக நிறுவனங்கள் என்று அனைத்துக்கும் தணிக்கையும், கண்காணிப்பும், பிரச்னைகள் மீதான உடனடி சட்ட நடவடிக்கைகளும் சாத்தியமாகி வரும் சூழலில், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவோ, கெடுபிடிகளைச் சீர்செய்யவோ மட்டும் ஏன், இத்தனை தயக்கம், கண்டுகொள்ளாமை?

இராக் யுத்தத்தில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு பள்ளி முற்றிலும் சிதைந்துபோய்விட்டது. அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இனி என்ன செய்வது என்று புரியாமல் வேறு வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். ஜபார் என்ற ஆசிரியர் எறிகுண்டு வீச்சில் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஒரு யோசனை உருவானது. அதன்படியே தன்னிடம் படித்த மாணவர்களுக்கு தொலைபேசி வழியாகவே வகுப்பு எடுப்பது என்று முடிவு செய்து, தினசரி ஒரு மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தொலைபேசியில் அழைப்பார்.

அவன் பாடப் புத்தகத்தை எடுத்து கையில்வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டும். அதைப்பற்றி அவர் விளக்கம் தருவார். இப்படியாக ஆறு மாதங்கள் அந்த ஆசிரியர் படுக்கையில் கிடந்தபடியே மாணவர்களை உருவாக்கினார். ஆசிரியரின் பிரச்னையைப் புரிந்துகொண்ட ஒரு மாணவனின் அப்பா, தானே ஒரு பண்பலை ரேடியோவை உருவாக்கி, அதன் வழியே குறிபிட்ட நேரத்தில் ஆசிரியர் நடத்துவதை அனைவரும் கேட்குமாறு செய்தார்.

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

அந்த ரேடியோ பிரபலமாகி இன்று மாணவர்களுக்கான கல்விப் பண்பலையாகச் செயல்படுகிறது. அதன் மூலம் விட்டுப்போன கல்வியை மாணவர்கள் முடித்திருக்கிறார்கள். இதற்கு ஒரு பைசா கட்டணம் இல்லை. கல்வியின் மகத்துவம் குறித்த இதுபோன்ற உண்மை நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது, 'கற்றுத்தருவதை ஒரு தொழிலாக மாற்றிவிடாதீர்கள்' என்பதைத்தான்.

நிகோலஸ் பிலிபெர்ட் என்ற பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த இயக்குநரின் 'To Be and To Have' என்ற ஆவணப் படம், கல்வி குறித்த புதிய பார்வைகளை நமக்கு அறிமுகம் செய்கிறது. 104 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் ஓராசிரியர் பள்ளி ஒன்றைப் பற்றியது. பிரான்ஸின் கிராமப்புறம் ஒன்றில் உள்ள ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றும் ஜார்ஜ் லோபஸ் என்ற ஆசிரியர் மற்றும் அவரது மாணவர்களைப் பற்றியதே இந்தப் படம்.

அந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வரை ஆரம்ப வகுப்புகள் ஒன்றாக ஒரே அறையில் உள்ளன. நான்கு வயதில் இருந்து 12 வயது வரை உள்ள 14 மாணவர்கள் அங்கே படிக்கிறார்கள். லோபஸ் அந்தப் பள்ளியில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி இருக்கிறார். அவரிடம் படித்த மாணவர்கள் அறிவாளிகளாக வாழ்க்கையில் உயர்ந்து, வெவ்வேறு துறைகளில் நல்ல வேலையில் பணியாற்றுகிறார்கள். படம் 2000-மாவது ஆண்டில் அவரது பள்ளி துவங்குவதில் ஆரம்பித்து, ஒரு வருடம் அங்கே என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது.

வெவ்வேறு வயதுள்ள குழந்தைகளை ஒரே வகுப்பில்வைத்திருப்பது குறித்து ஆரம்பத்தில் நமக்கே என்ன இது என்ற எரிச்சல் உருவாகிறது. ஆனால், லோபஸ் அவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி முறை ஒன்றை வைத்திருக்கிறார். தனித் தனியாகப் பாடங்கள் இருக்கின்றன. ஆனால், அதைக் கற்றுத்தரும் முறை அலாதியானது. அதாவது பெரிய மாணவர்களைக்கொண்டே சிறிய மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறார். ஓவியம் வரைவது, பாடல்கள் பாடுவது, கவிதை வாசித்தல் என்று மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள். இணைந்து கற்றுக்கொள்கிறார்கள். வெறும் பாடப் புத்தகங்களுடன் நின்றுவிடாமல் அவர்களுக்கான தனித் திறன் வளர வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுக்கிறார் லோபஸ்.

மாணவர்களை இயற்கையை நேசிக்கச் செய்கிறார். எவ்வளவு முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காமல் பாடத்தைப் புரியவைக்கிறார். மாணவர்களை அவர் நடத்தும்விதம் அற்புதமாக இருக்கிறது. அவர் கோபம்கொள்வதே இல்லை. வண்ணத்துப்பூச்சிகள் நம் உடல் மீது வந்து உட்கார்ந்தால், அதை எவ்வளவு கவனமாக ரசித்து வியப்போமோ. அதுபோன்று தனது மாணவர்களை அவர் வியக்கிறார். பாராட்டுகிறார். அந்தப் பள்ளியில் அதிக வசதிகள் இல்லை. ஆனால், அது கற்றுத்தருதலில் முன்னோடியான அத்தனை அம்சங்களையும்கொண்டு இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

மாணவர்கள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக அவர் கணினியும் கற்பிக்கிறார். அதே வேளை நினைவாற்றல் இல்லாமல்போனால் மாணவன் வெறும் சக்கையாகிவிடுவான் என்று சுயமாக நினைவாற்றலை வளர்ப்பதற்கும் உத்திகள் கற்றுத்தருகிறார். சிறார்களுக்குக் கற்றுத்தருவதை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது. துடுக்குத்தனம் மிக்க மாணவர்களை அவர் நேசிக்கிறார். கற்றுத்தருவதன் வழியேதான் குழந்தைப் பருவத்தை மறுபடி மறுபடி அடைவதாகப் பெருமையுடன் கூறுகிறார். கல்வி குறித்து அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய படம் இது.

வெறும் வணிக நிறுவனமாக மட்டுமே செயல்படும் பள்ளிகள் எப்படி நமது குழந்தைகளை அறிவாளிகளாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும். அவர்களை நம்பி ஏன் நம் பிள்ளைகளை அனுப்பிவைக்கிறோம் என்ற கவலை மிக ஆழமாக மனதைப் பாதிக்கிறது. அந்த வலி ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் சமகால நிஜம்!

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49

கற்றுத்தருவதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ரோஸ் கில்பெர்ட். தனது 88 வயதில் இன்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பணி ஓய்வு பெற்ற பிறகும் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் ஆசையை விடவில்லை. ஆகவே, சிறப்பு அனுமதி பெற்று ஒரு பள்ளியில் அவர் ஆசிரியராக வேலை செய்கிறார். கோடிக்கணக்கில் அவரது கணவர் பணம் சம்பாதித்துள்ளபோதும் கற்றுத்தருவது மட்டுமே தன்னை ஆனந்தப்படுத்துகிறது என்கிறார் உலகின் மிக வயதான ஆசிரியை!

 
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! : கல்விக் கடைகள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 49