மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 09

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 09

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 09
நீயும்... நானும்! : கோபிநாத் - 09
கோபிநாத், படம்: 'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 09
நீயும்... நானும்! : கோபிநாத் - 09

து ஒரு 'நீயா - நானா' நிகழ்ச்சி. கல்லூரியில் படிக்கிற நகரப் பின்னணிகொண்ட மாணவர்கள் ஒருபுறமும், கிராமங்களில் இருந்து வந்து நகரத்துக் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுமாக இரு அணிகள். நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்தன.

''இந்த சிட்டிப் பசங்க பெரிய பந்தா பார்ட்டிங்க. ஏதோ வானத்துல இருந்து குதிச்சுவந்த வங்க மாதிரி ஸீன் போடுவானுங்க'' என்றனர் கிராமத்து இளைஞர்கள்.

''சார், இந்தக் கிராமத்துப் பசங்க அவங்க மட்டும் டீம் போடுவாங்க. நாம போய்ப் பேசினாக்கூட மூஞ்சியைத் திருப்பிக்கிட்டுப் போயிடுவாங்க...'' - இது எதிர்த் தரப்பு.

''சும்மா ஏதாவது அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. நாம கிட்ட போனோம்னா, பெரிய வெள்ளக்கார துரை மாதிரி இங்கிலீஷ் பேசுவானுங்க, அதுவும் பொம்பளப் புள்ளைங்களைப் பார்த்துட்டாப் போதும், ஒரே பீட்டருதான்!'' - இது கிராமத்து மாணவர்கள்.

''ஏதோ சண்டைக்காரனைப் பார்க்கற மாதிரியே பார்க்கிறாங்க சார். எதுனா ஒரு ஐடியா கொடுத்தாக்கூட உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ, எல்லாம் எங்களுக்குத் தெரியும்னு போயிடுறாங்க. இவங்ககூட எப்படிப் பழக முடியும்? வில்லேஜ்ல இருந்து வர்ற பசங்களுக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கு!'' - இது சிட்டி.

''சிட்டி பசங்களுக்கு பைக் வெச்சிருக்கிறோம்கிற சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். பணக்காரத் திமிரு!'' - கிராமத்து இளைஞர் களின் பதிலடி.

ஏற்றத்தாழ்வுகள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டவும், பழகவும் வாய்ப்பு அதிகம் இருக்கிற கல்லூரிச் சூழலுக்கு உள்ளேயே இத்தனை தீர்மானிக்கப்பட்ட அபிப்ராயங்கள்.

நகரத்து இளைஞர்கள் திமிர் பிடித்தவர்கள் - கிராமத்து மாணவர்கள் புரிந்துகொள்ளத் தெரியாதவர் கள். சிட்டி மாணவர்கள் பணக்காரனோடுதான்பழக்கம் வைத்துக்கொள்வார்கள் - கிராமத்து மாணவர்கள் தங்கள் ஊர்க்காரர்களோடுதான் நட்பு பாராட்டுவார் கள் என 'இவங்க எப்பவுமே இப்படித்தான்' என்ற ஒரு பொதுவான முடிவுக்கு வருவதன் மூலமாக, வேறு ஒரு பின்னணியில் இருந்து வந்த சக மனிதன் மீது அன்பு செலுத்தவோ, நட்பு பாராட்டவோ மனசு இடம் கொடுப்பது இல்லை. இவர்களில் பலர் பெரும்பாலும் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவு களை எடுப்பது இல்லை... எல்லாமே சொல்லக்கேள்வி தான்.

கல்லூரிக்குள் மட்டும் இல்லை; சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் யாரோ ஒன்றிரண்டு பேர் செய்த செயலை அல்லது நடவடிக்கையை வைத்து தனி மனிதர்களின் தன்மைகளைத் தீர்மானிக்கிற மனோபாவம் நிரம்பிக்கிடக்கிறது. இந்த மனோபாவம் அருகில் இருக்கிற அருமையான மனிதனையும் அவன் அன்பையும்புரிந்து கொள்ளவிடாமல் முடமாக்கிவிடுகிறது.

சென்னையில் இருந்து கோயமுத்தூருக்குச் சென்றுகொண்டு இருந்தேன். என் எதிர் இருக்கையில் ஓர் இளைஞர். கையில் ஆங்கிலப் புத்தகம், முகத்துக்குப் பொருத்தமான ஒரு கண்ணாடி, ஜீன்ஸ், டி-ஷர்ட், களையான முகம்... பார்த்தவுடன் பேச வேண்டும் என்று நினைக்கவைக்கிற தோற்றம்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 09

என் அருகில் வெள்ளை ஜிப்பாவுடன் ஒரு நடுத்தர வயதுக்காரர்... வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எதிர் ஸீட் இளைஞரிடம் பேச்சு கொடுத்தார். ''தம்பிக்கு கோயமுத்தூர்தான் சொந்த ஊரா?''

''ஆமா சார், எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''

''அதான் முகத்துல அந்தக் களை தெரியுதுல்ல! என்ன படிக்கிறீங்க தம்பி, ரொம்ப நேரமாஒரே பக்கத்தைப் படிச்சுட்டு இருக்கீங்களே?''

''இந்தியாவோட வளர்ச்சி விகிதம்பற்றிய ஒரு கட்டுரை. சரியாப் புரியலை. அதான் கவனிச்சுப் படிக்கிறேன் சார்.''

''ம்ம்... தம்பி ரிஷப ராசிதானே..?''

''கரெக்ட் சார், எப்படிச் சொல்றீங்க?'' ஆச்சர்யம் மேலிடக் கேட்டார் அந்த இளைஞர்.

''நீங்க படிக்கிற பாணியிலேயே தெரியுதுல்ல ரிஷபம்னு...''

மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினார் அந்த இளைஞர். அடுத்த கேள்வியைக் கேட்டார் வெள்ளை ஜிப்பா. ''தம்பிக்கு ஓவியம், கவிதை எழுதுறதுல ஆர்வம் உண்டுல்ல?''

இளைஞர் தலையை உயர்த்தா மல் ஆமோதிப்பதைப் போல தலையை அசைத்தார். அருகில் இருந்த எனக்கும் ஆச்சர்யமாகஇருந் தது. 'எப்படி இதெல்லாம் இவரு கரெக்டாச் சொல்றாரு?' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே வெள்ளை ஜிப்பா அடுத்த கேள்வி கேட்டார்... ''தம்பிக்குக் கொஞ்சம் கண் பார்வைல பிரச்னை இருக்கணுமே?''

''அசத்துறீங்களே சார்'' என்று இளைஞர் ஆச்சர்யத்தை வெளிப்படுத்த, ஜிப்பாக்காரருக்குப் பெருமிதம். இப்போது இளைஞர் பேசினார்... ''ஏன் சார் இவ்வளவு விஷயங்களைக் கணிச்சுச் சொல்றீங்களே. ஆனா, நான் பொய் சொல்லிட்டுஇருக் கேன்னு மட்டும் உங்களால் கணிக்க முடியலையா?'' என்றவுடன் ஜிப்பா காரருக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிவிட்டது

நீயும்... நானும்! : கோபிநாத் - 09

''நான் கோயமுத்தூர்காரனும் இல்லை. ரிஷப ராசியும் இல்லை. ஸ்டைலா இருக்குமேன்னு கண்ணாடி போட்டது ஒரு குத்தமா? ஆளை விடுங்க சார்!''

ஜிப்பாக்காரருக்கு மட்டும் இல்லை; எல்லாருக்குமே ஒரு மனிதரின் தோற்றம், ஊர், நிறம் இவற்றை வைத்து அவரின் குணங்களைக் கணிக்க முயலுகிற பழக்கம் இருக்கிறது. நல்ல நண்பர்களை அமைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் இந்தக் குணம் பரவி இருப்பது வருத்தத்துக்கு உரியது.

கோயமுத்தூர்க்காரர்கள் குசும்பர்கள், மதுரைக்காரர்கள் கோபக்காரர்கள், சென்னைவாசிகளுக்கு மரியாதை தெரியாது, வட இந்தியர்கள் காரியவாதிகள். இந்த சாதிக்காரர்கள் இப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் பரப்பப்பட்டு இருக்கும் தவறான அபிப்ராயங்களும், பொய்க் கணிப்புகளும் சமூகத்துக்குத் தீங்கு.

ஒரு கல்லூரி வளாகத்துக்குள் அருகில் இருக்கும் மாணவனின் பின்னணி, ஊர், மதம், சாதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பழகுவது எப்படி ஆரோக்கியமான நட்பை உருவாக்கும்?

நீயும்... நானும்! : கோபிநாத் - 09

ஒரு மனிதரோடு பழக ஆரம்பிப்பதற்கு முன், அவர் சரியான மனிதரா, நல்ல குணம் படைத்தவரா என்று அறிந்துகொள்ள முயல்வது ஆரோக்கியமானதுதான். ஆனால், 'இவர் இப்படித்தான் இருப்பார்' என்று முடிவு கட்டிக்கொண்டு பழக ஆரம்பிப்பது ஏமாற்றங்களையே தரும்.

பாகிஸ்தானில் இஜாஸ் அஹமது என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இருக்கிறார். சர்வதேசச் செய்தியாளர்கள் மாநாட்டில் அவரைச் சந்தித்தேன். 'வணக்கம். நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்' என்று என்னை அறிமுகம் செய்துகொண்டபோது, ஏனோ அவர் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.

பாகிஸ்தான்காரர்ளுக்கு நம் மீது விரோதம். அதுதான் நம்மிடம் அவர் சரியாகப் பேசவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஏனைய நாட்டு நண்பர்களிடம் நான் மிக நெருங்கினாலும், அவரிடம் மட்டும் அதன் பிறகு நான் பேசுவது இல்லை. அவரும் பெரும்பாலும் யாரிடமும் பேச மாட்டார். அவர் என் எதிரில் வந்தால்கூட நான் சிரிப்பது இல்லை... 'என் எதிரியைப் பார்த்து நான் ஏன் சிரிக்க வேண்டும்?'

அன்று வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த கூட்டம் இருந்தது, அந்த நிகழ்வுக்கு முன்னதாக இஜாஸ் என்னிடம் ஏதோ பேச வந்தார். இந்த முறை நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்... 'அப்பாடா, பழிக்குப்பழி வாங்கியாகிவிட்டது!'

கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் உறவுபற்றி பேசப்பட்டது. அப்போது நான் எழுந்தேன். 'நாங்களும் பாகிஸ்தானும் பங்காளிகள். காஷ்மீர் எங்கள் சொந்தப் பிரச்னை. அதில் ஏன் அன்னிய நாடுகள் தலையிட முயற்சிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். எனக்கு சில வரிசைகள் முன்பு அமர்ந்திருந்த இஜாஸ் உடனே எழுந்தார். சரிதான்... சண்டைக்கு வருகிறார் என்றே நினைத்தேன். அவர் மேடையில் நின்ற அதிகாரிகளிடம் (மேரே பாயி கோ ஜவாப் தோ) ''என் சகோதரனின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்'' என்று என் சார்பாக வாதாட ஆரம்பித்தார். நான் நெகிழ்ந்துபோனேன். என்னை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். அதன் பிறகு நிறையப் பேசினோம். எனக்கு இப்போது பாகிஸ்தானில் ஓர் அண்ணன் இருக்கிறார்.

நான் ஊருக்கு வருகிறபோது நிறையப் புத்தகங்கள் வாங்கிப் பரிசளித்தார். கடைசி நாள் வரை ஒருசகோதர னாகவே என்னை நடத்தினார். அடிப்படையில், இஜாஸ் அமைதியான மனிதர். பெரிய அறிவாளி.

ஆனால், அவர் பாகிஸ்தான்காரர், அதனால்தான் என்னை எதிரியாகப் பார்க்கிறார் என்ற எனது யூகமும், முன்கூட்டிய தவறான முடிவும் அவரை எதிரியாகப் பார்க்கவைத்தது. அவரிடம் நட்புகொள்ள வேண்டிய வாய்ப்பைத் தடுத்தது.

இப்படிக் கணிப்புகளின் அடிப்படையில் முடிவெடுக்கிற மனோபாவம் அதிகரித்ததன் விளைவுதான் இன்று கல்லூரிக்குள் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்துகிடக்கிறார்கள். தனக்கு முன் அறிமுகமே இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை, அனுபவத்தை, பண்பாட்டை, வாழ்வியல் விழுமியங்களை வேறு ஒரு தளத்தில் இருந்து வருகிற ஒரு நண்பனே அறிமுகம் செய்துவைக்கிறான். முன்கூட்டியே நீங்கள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் அவரை நீங்கள் புறக்கணித்தால், வாழ்க்கை உங்களைப் புறக்கணிக்கும்.

உயரமானவர்களே தலைவர்களாக இருக்க முடியும். ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் நாகரிகமானவன். சில குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே வர்த்தகம் கைகூடும். பெருநகரங்களுக்கு வந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். குடும்பத்தில் நிறையப் பேர்படித்து இருந்தால்தான் அடுத்தத் தலைமுறைக்கும் படிப்பு ஏறும் என்ற பல்வேறு யூகங்களும் கணிப்புகளும் எல்லா காலக்கட்டங்களிலும் தகர்க்கப்பட்டே வந்திருக்கின்றன.

அருகில் இருப்பவர் நல்லவரா, கெட்டவரா என்று ஆராயுங்கள் - இவர் இப்படித்தான் இருப்பார் என்று முன்கூட்டியே முடிவுக்கு வராதீர்கள்

கல்லூரியில் உங்கள் அருகில் அமர்ந்து இருக்கிறவனின் பின்னணி குறித்துக் கணக்கு போடுவதை, யூகிப்பதை நிறுத்திவிட்டு, பரந்த மனதோடு அவருடன் கை குலுக்குங்கள்... அது இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைக்கப்போவதற்கான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 09
நீயும்... நானும்! : கோபிநாத் - 09