மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 41

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 41

எஸ்.ராமகிருஷ்ணன்,ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41
சிறிது வெளிச்சம்!
உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்!
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41

மிக உயரமான இரண்டு கம்புகளுக்கு நடுவில் கயிற்றைக் கட்டி அதில், தண்ணீரின் மீது நீர்ப்பூச்சி ஊர்ந்து போவதுபோல மிக இயல்பாக நடந்து செல்லும் கயிற்றில் நடை பயில்பவரைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

நான் சிறுமி ஒருத்தி கயிற்றில் நடப்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் திண்டிவனம் பேருந்து நிலையத்தின் வெளியே பார்த்தேன். அதே சிறுமி இன்னொரு நாள் மெரினா கடற்கரை அருகே கம்பி வளையம் ஒன்றில் நுழைந்து வித்தைகாட்டிக் கொண்டு இருந்தாள். கயிற்றில் நடப்பவர் மீது சிறு வயதில் இருந்தே எனக்குத் தீராத வியப்பு. அவர்கள் கால்கள் பறவையின் கால்களைப்போன்றதா... அவை எப்படி கயிற்றில் நிற்கின்றன... நடக்கின்றன? நம்மால் குறுகலான சுவரின் மீது நடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே என்று யோசிப்பேன்.

கயிற்றில் நடப்பவனைத் தொடர்ந்து கவனித்தபோது எனக்குத் தோன்றியது, அவன் ஒருபோதும் பின்னால் பார்ப்பதே இல்லை. அதுபோல நடுக்கயிற்றில் வந்தபோதும் அவனிடம் தயக்கமே இல்லை. அவன் கயிற்றை ஒரு சாலைபோல நினைக்கிறான். அதில் அவன் தனியே நடக்கிறான். அவனை இயக்குவது அவனது நம்பிக்கையும் வயிற்றுப் பசியுமே. கயிற்றில் நடக்கத் தெரிந்தவன் நிஜ வாழ்வில் வெற்றிபெற முடியாத ஏழ்மையுடனே இருக்கிறான். அது என்ன முரண்?

உண்மையில் கயிற்றில் நடப்பவர்கள் நாம்தான். நமது அலுவலகம், குடும்பம், உறவு யாவும் கண்ணுக்குத் தெரியாத இரண்டு கயிற்று நுனிகளால்தான் கட்டப்பட்டு இருக்கின்றன. அதில் இருந்து நழுவி விழுந்தால் என்ன ஆவோம் என்று தெரியாத பயம் நமக்குள் இருக்கிறது. அந்தக் கயிற்றின் வழியாகவே நாம் தினசரி நடந்து போய் வர வேண்டும். வேறு வழிகள் கிடையாது. ஒவ்வொரு நாளும் அந்தக் கயிற்றில் நாம் சுலபமாக நடக்கத் துவங்கிவிடுகிறோம். நமது பிரச்னை நடுக்கயிற்றில் நின்றபடியே பின்னால் போவதா அல்லது முன்னால் போவதா என்ற தடுமாற்றமே.

நான் அறிந்தவரை இந்தத் தடுமாற்றம் இல்லாத ஒரு மனிதன்கூட இல்லை. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், செல்வம் சேர்ந்து இருந்தாலும், அறிவாளியாக உலகம் கொண்டாடினாலும், அவனுள் இருக்கும் ஒரே ஊசலாட்டம், முன்னால் போவதா அல்லது பின்னால் போவதா? அந்தப் பயமே நம் இயக்கத்தைத் தடை செய்துவிடுகிறது. அப்போதுதான் அந்தரத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு நம்மைக் கவ்விப் பிடித்துவிடுகிறது.

தடுமாற்றத்தின்போது நமது கால்கள் முன்னால் ஓர் அடி செல்வதற்குப் பயப்படுகின் றன. பின்னால் போகவும் யோசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் வாழ்வில் இந்த ஊசலாட் டத்தில் செய்வது அறியாமல் மாட்டிக்கொள்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

எப்படியோ கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கயிற்றைக் கடந்து மறுமுனைக்கு வந்துவிடுகிறார்களே அன்றி, ஒருபோதும் அதன் மீது தனது இயல்பான நடையைக் கொண்டதே இல்லை. வாழ்க்கை ஏன் கயிற்றில் நம்மை நடக்கச் செய்கிறது? அதன் இயல்பே அப்படியானதுதானா?

ஒரு மெக்சிகன் கதை நினைவில் வருகிறது. ஒரு வங்கி மேலாளர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 30-வது தளத்தில் தனியே வசிக்கிறார். அவர் ஒருபோதும் பணத்தை பயன்படுத்துவதே இல்லை. எல்லாவற்றுக்கும் வங்கி அட்டைகள்தான். விதவிதமான கிரெடிட் கார்டுகள் அவரிடம் இருந்தன. யாரோடும் பேசிப் பழகுபவரும் கிடையாது. அலுவலகத்தில் எல்லோர் மீதும் கோபப்படக்கூடியவர். படிப்பு, இசை என எதிலும் நாட்டம் இல்லை. மாலை வீடு திரும்பியதும் வீட்டைப் பூட்டிக்கொண்டுவிடுவார். மறுநாள் காலையில்தான் திறப்பார்.

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41

ஒருநாள் காலை அவர் அலுவலகம் புறப்படும்போது அவரது வீட்டுக் கதவின் சாவி திறக்க முடியாமல் சிக்கிக்கொள்கிறது. தனது பலத்தை உபயோகித்துத் திறக்க முயற்சிசெய்கிறார். பாதிச் சாவி உடைந்து உள்ளே மாட்டிக்கொள்கிறது. எப்படிக் கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே போவது என்று தெரியவில்லை. ஆகவே, அவர் உடனே பூட்டு திறப்பவனுக்கு தொலைபேசி செய்கிறார். அவனும் உடனே வந்து சேர்கிறான்.

வந்தவன் கதவைத் திறக்க வேண்டும் என்றால், தனக்கு 50 டாலர் பணம் வேண்டும் என்கிறான். அவரும் தரத் தயாராக இருக்கிறார். ஆனால், பூட்டு திறப்பவன் சங்கத்தின்படி பூட்டைத் திறப்பதற்குள் பணம் வசூல் செய்தாகிவிட வேண்டும். இல்லாவிட்டால், பணம் தரப்படாமல் போய்விடும் என்று ஒரு விதி இருக்கிறது. ஆகவே, தனது சம்பளத் தைக் கதவு இடுக்கு வழியாக வெளியே தள்ளும்படி கேட்கிறான் பூட்டு திறப் பவன். தன்னிடம் பணம் இல்லை. வங்கிக்குச் சென்று எடுத்துத் தருகிறேன் என்கிறார் மேலாளர்.

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41

அது தனது சங்க விதிகளை மீறுவதுபோலாகும். தன்னால் கதவைத் திறக்க முடியாது என்கிறான் பூட்டு திறப்பவன். அவர் ஆத்திரப்பட்டு பூட்டு திறப்பவனைத் திட்டுகிறார். உடனே, அவன் தன்னை அவர் அவமதித்த காரணத்தால், சங்கத்தில் புகார் செய்யப்போவதாகவும், ஆகவே 'இனி இந்த நகரில் உள்ள பூட்டு திறப்பவன் எவனும் அவருக்கு உதவி செய்ய வர மாட்டான்' என்றும் கத்திவிட்டுப் போகிறான். அதன்படியே, அவர் வேறு எந்த பூட்டு திறப்பவனை அழைத்தாலும், வர மறுக்கிறார்கள். உடனே, தனது அலுவலகத்துக்கு போன் செய்து தனது உதவியாளரிடம் பிரச்னையை எடுத்துச்சொல்லி உடனே வந்து தன்னைக் காப்பாற்றும்படி சொல்கிறார்.

அவனோ, 'ஐயா! நான் இதுபோல ஒரு நெருக்கடியான நேரத் தில் அரை நாள் விடுப்பு வேண்டும் என்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் தரவில்லை. ஆகவே, இப்போது என்னால் உதவ முடியாது. அதே நேரம், நீங்கள் அலுவலகம் வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை என்று தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பிவிடுவேன். இனி, இந்தத் தொலைபேசி லைனும் வேலை செய்யாது' என்று துண்டித்துவிடுகிறார்.

இனி என்ன செய்வது என்று புரியாமல் தனது காதலிக்குபோன் செய்கிறார். அவள் விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டு, 'உனக் காக எத்தனையோ நாட்கள் நான் காத்துக்கொண்டு இருந்திருக் கிறேன். நீ வரவே இல்லை. இன்று ஒருநாள் கிடந்து பார். அப்போது என் வலி புரியும்' என்று போனைத் துண்டித்துவிடுகிறாள்.

அவர் அடுத்த போன் செய்ய முயற்சிக்க, அவரது செல்போன் கணக்கில் போதுமான பணம் இல்லை என்று செயலற்றுப்போகிறது. அவர் தனக்குத் தெரிந்த ஒவ்வொரு வழியாகக் கையாண்டு, வெளியே வரப் பார்த்துத் தோற்றுப்போகிறார். பயம் பிடித்துக்கொள்கிறது. ஒருவேளை இப்படியே வீட்டில் மாட்டிக்கொண்டால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தடுமாறுகிறார். அந்த உயரத்தில் இருந்து காகிதத்தில் உதவி கேட்டு எழுதித் தூக்கி எறிகிறார். சாலையில் கிடக்கும் காகிதத்தை ஒருவர்கூட எடுத்துப் படிக்கவே இல்லை. ஓர் ஆள் கவனமாக அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுப் போகிறான்.

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41

இப்படி ஒருநாள் முழுவதும் அவரால் வெளியே வர முடியவில்லை. பதற்றம், பயம், நெருக்கடி என்று இரவு உறங்கக்கூட முடியவில்லை. மறுநாள் காலை அவர் தன் வீட்டின் கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறார். அற்புதமான சூரிய உதயம். இத்தனை நாள் அதைக் கண்டதே இல்லையே என்று பார்த்தபடியே இருக்கிறார். அதிகாலை நேரம் பறவைகள் வானில் கிழக்கே கூட்டமாகப் பறந்து செல்கின்றன. அதை ரசிக்கிறார். மாடியில் இருந்தபடியே அலுவலகம் போகிறவர்களை, மாணவர்களை ரசித்துப் பார்க்கிறார். திடீரெனத் தான் இதுவரை பார்க்காத உலகம் ஒன்றைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

தான் இத்தனை நாட்கள் எவரோடும் இணக்கமாக இல்லை. எவருடனும் நட்பாகப் பழகவில்லை என்பது புரிகிறது. அதைவிடத் தன் வீட்டை உறங்கவும், சாப்பிடவும் மட்டுமே பயன்படுத்தியது புரிகிறது. மறுநாள் அவருக்கு உதவி கிடைக்கிறது. கதவைத் திறந்து வெளியே வருகிறார். தனது அண்டை வீட்டார் துவங்கி, அத்தனை பேருக்கும் புன்னகையோடு வணக்கம் சொல்கிறார். அலுவலகத்தில் அவரது நடவடிக்கைகள் முழுமையாக மாறியிருக்கின்றன.

அவர் தன்னைச் சுற்றிய உலகம் சலிப்பாக இருந்ததற்குக் காரணம் தான்தான் என்று புரிந்துகொள்கிறார். அதன் பிறகு அவரது வாழ்வு மலர்ச்சிகொள்ளத் துவங்குகிறது. இந்தக் கதை சொல்லும் எளிய உண்மை, நாம் ஏதாவது பிரச்னை ஒன்றில் இருந்தே நம்மைப்பற்றி அறிந்துகொள்ளத் துவங்குகிறோம். மற்ற நேரங்களில் ஒருபோதும் நம்மை நாம் உணர்ந்துகொள்வதே இல்லை என்பதே!

இந்த மேலாளரை எந்த ஞானியும் வந்து அறிவுரை சொல்லி மாற்ற வில்லை. மாறாக, அவர் தன்னை அறிந்துகொள்வதற்குப் பூட்டிய கதவு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தது. திறந்து வெளியேறுவதற்குள் அவர் தனது சிக்கல்களின் ஆணிவேரைத் தெரிந்துகொண்டுவிட்டார். நம்மில் பலரும் இதுபோன்று ஆயிரம் சிக்கல்கள் வந்தபோதும் பிரச்னை யைப் பெரிதாக்க முயல்கிறோமே அன்றி, அதைப் புரிந்துகொள்வதே இல்லை.

இத்தாலியின் மிக முக்கிய இயக்குநரான பெலினியின் 'லாஸ்ட்ரடா', ஊர் ஊராகச் சென்று வித்தை காட்டுபவர்கள் உலகைச் சித்திரிக்கும் அற்புதமான படம். ஆண்டனி குயின் படத்தின் கதாநாயகன். படத்தில் அவனது பெயர் ஜம்பானோ. அவன் இரும்புச் சங்கிலியைத் தன்மார் பில் கட்டி மூச்சு பலத்தால் உடைத்துக் காட்டுபவன். அவனது மனைவி இறந்துபோகவே, சிறிய கடற்கரை நகரம் ஒன்றில் வசிக்கும் அவளின் தங்கை ஜெல்சோமினா என்ற அப்பாவி இளம்பெண்ணைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போகிறான்.

ஜெல்சோமினா, ஓர் அப்பாவி. உலகம் அறியாப் பெண். அவளை ஜம்பானோ தனது முரட்டுத்தனத்தால் பயமுறுத்துகிறான். வன்புணர்ச்சி கொள்கிறான். அடித்து உதைத்து சர்க்கஸ் மிருகம்போலப் பழக்குகிறான். டிரம்பட் வாசிக்கப் பழகித் தருகிறான். வித்தை காட்டும் இடத்தில் சிறிய வேடிக்கை நிகழ்ச்சி செய்கிறாள் ஜெல்சோமினா. ஒருநாள் ஜம்பானோவின் அடி தாங்காமல் அவனைவிட்டுத் தப்பியோடி ஒரு நகரத்துக்கு வருகிறாள்.

அங்கே ஒரு வித்தையைக் காண்கிறாள். மிக உயரமான கட்டடம் ஒன்றில் கயிற்றில் நடக்கும் ஒருவன் வித்தை காட்டுகிறான். அவன் அந்தரத்தில் நடப்பதோடு, பாதிக் கயிற்றில் உட்கார்ந்துகொண்டு தனது இரவு உணவைச் சாப்பிடுகிறான். அதை ஊரே திரண்டு பார்த்து ஆச்சர்யம் அடைகிறது. அவனை ஜெல்சோமினாவும் வியந்து கை தட்டுகிறாள்.

அவன் தன்னோடு வந்துவிடும்படி அவளை அழைக்கிறான். அவள் தயங்குகிறாள். இதற்குள் அவளைத் தேடி வந்த ஜம்பானோ, அவளை அடித்து இழுத்துப் போகிறான்.

சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41

பின்பு அவர்கள் வேலைக்குச் சேர்ந்த சர்க்கஸில் அதே கயிற்றில் நடப்பவனும் வேலைக்குச் சேர்கி றான். அங்கே அவனுக்குக் கயிற்றில் நடப்பது அபாயமாக இல்லையா என்று ஜெல்சோமினா கேட்கிறாள். அதற்கு அவன், அது சாவுக்கான ஒத்திகை என்று சொல்லிச் சிரிக் கிறான். அவ்வளவு கைத்தட்டல்களும் அபத்தமானவை என்று அவளுக்குப் புரிகிறது

முடிவு வரை தன்னை அடித்து, வதைத்து, இம்சை செய்யும் ஜம்பானோவுக்காக வாழ்கிறாள் அவள். முடிவில் அவளுக்குத் தான் செய்த வன்முறைகளை நினைத்துத் தனியே கதறி அழுகிறான் ஜம்பானோ. கழைக்கூத்தாடிக்குள் உள்ள பகிர்ந்துகொள்ளப்படாத அன்பு பீறிடுகிறது. எல்லா வித்தைகளும் மனிதர்களின் முயற்சியால்தான் சாத்தியமாகிறது. மனிதன் முயற்சிக்கத் தயங்கும் ஒன்று தன்னை மாற்றிக்கொள்வது மட்டுமே. அதுதான் உலகின் மாபெரும் விந்தை என்று தோன்றுகிறது!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

Peter Longstaff ஓவிய உலகில் தனித்தன்மை வாய்ந்தவர். இவர் வரைந்த ஓவியங்களைக் காண்பதற்கு உலகெங்கும் பார்வையாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். இந்த ஓவியங்களின் விசேஷம், இவை காலால் வரையப்பட்டவை. கைகள் இல்லாத இவர், தனது வலது காலைப் பயன்படுத்தி ஓவியம் வரையப் பழகியவர். பல ஆண்டுகாலமாக கால்களால்வரைந்து தேர்ச்சிபெற்று, இப்போது மிகச் சுலபமாகத் தனது கால்களால் ஓவியம் வரைகிறார். இப்படி அவர் வரைந்த ஓவியங்கள் மிகச் சிறப்பாக, நேர்த்தியாக இருப்பதுடன், நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கின்றன. தனது ஓவியங்களில் இருந்து கிடைக்கும் பணத்தைத் தன்னைப்போன்ற உடற்குறைபாடு கொண்டவர்களின் கல்விக்காகச் செலவழிக்கிறார் பீட்டர்!

 
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41
சிறிது வெளிச்சம்! - உங்களைப் பூட்டிக்கொள்ளாதீர்கள்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 41