மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42
சிறிது வெளிச்சம்!
அமைதியை ருசித்திருக்கிறீர்களா?
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

சித்தன்ன வாசலுக்குச் சென்றிருந்தேன். புதுக்கோட்டை அருகில் உள்ள மிகப் பழைமையான ஓவியங்கள் உள்ள சமண குகைத் தளம். அஜந்தா, எல்லோரா ஓவியங்கள்போன்று அழகான சுவரோவியங்கள்கொண்டது. ஆனால், அஜந்தாவுக்குக் கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும், கவனமும் இதற்குக் கிடைக்கவில்லை. மிகக் குறைவான பார்வையாளர்களே தினசரி வருகிறார்கள்.

நான் சென்றிருந்த நாளில், 20 பேர்களுக்கும் மேலாக இருந்தார்கள். அதில் ஒருவர்கூட எந்த ஓவியத்தின் முன்பாகவும் ஒரு நிமிடம்கூட நின்று பார்க்கவில்லை. சுற்றுலா வழிகாட்டி ஒருவர் வெளிநாட்டுப் பெண்மணியை அழைத்து வந்திருந்தார். அவர் அந்த ஓவியங்களைப்பற்றி பேசத் துவங்கியதும் அத்தனை பேரும் அவரது பேச்சை மிக ஆர்வமாகக் கேட்டார்கள். ஆனாலும், எவருக்கும் ஓவியத்தின் மீது கவனம் திரும்பவே இல்லை.

வியப்பாக இருந்தது. ஏன் எப்போதுமே காட்சியைவிடப் பேச்சே அதிகம் ஈர்ப்புகொள்கிறது? சத்தம் இல்லாத எதுவும் ஏன் கவனிக்கப்படாமலே போகின்றன? மேடைப் பேச்சு, பட்டிமன்றம், விவாதம், வாக்குவாதம், தெருச் சண்டை, வழிச் சண்டை, பேதைப் புலம்பல், அதிகார ஏவல், வீட்டுக் கூச்சல், அலுவலக இரைச்சல், தொலைக்காட்சியின் இடைவிடாத விளம்பரச் சத்தங்கள், ரேடியோவின் வாய் ஓயாத பேச்சு என எல்லா வடிவங்களிலும் சத்தத்தையே நாம் பெருக்கிக்கொண்டு இருக்கிறோம். நிசப்தம் அறிவதற்கும் பழகுவதற்கும் என்ன வடிவங்கள், கலைகள் இருக்கின்றன?

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

கண்களை மூடிச் சில நிமிடங்கள் பேசாமல் இருங்கள் என்றால், தியானம் செய்ய விருப்பம் இல்லை என்றே பதில் வருகிறது. வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் இருப்பதற்குப் பழகினார் எனது நண்பர். சில வாரங்கள் மிகத் தடுமாற்றமாக இருந்தது. அதன் பிறகு, அதற்கு எளிமையாகப் பழகிவிட்டார். எப்படி இருக்கிறது உங்கள் வாய் மூடிய அனுபவம் என்று கேட்டதற்கு, மனதைத் துடைத்துச் சுத்தம் செய்வதுபோல் இருக்கிறது. ஒருநாள் அப்படி இருந்து பார்த்தால்தான் அதன் சுவை புரியும் என்றார்.

உணவை விலக்கி விரதம் இருப்பதுபோல, ஏன் சத்தத்தை விலக்கி ஒருநாள் மௌனமாக இருக்கக் கூடாது? நமக்கு நிசப்தம் என்பது வெறும் சொல் மட்டும்தானா? ஒரு மனிதன் ஒருநாளில் எத்தனை நிமிடங்கள் அமைதியை உணர்கிறான்.

நான் அறிந்தவரை சில நிமிடங்கள்கூட நிசப்தமாக இருப்பதற்கு மனிதர்கள் அச்சம்கொள்கிறார்கள். எங்காவது சத்தம் ஒடுங்கிப்போயிருந்தால், அங்கே போகவே பயப்படுகிறார்கள். இயற்கையான சூழலில் தங்கும்போது இரவில் காற்றின் ஓசை தவிர, வேறு சத்தம் இருப்பது இல்லை. ஆனால், அதைக் கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம். பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் என்று சத்தத்தை நாடி ஓடுகிறோம். ஏதேதோ சத்தங்களால் எப்போதுமே நம்மை நிரப்பிக்கொண்டே இருக்கிறோம். சத்தம் இல்லாமல் இருக்கப் பழகவே இல்லை.

மலைகள் நம் குரலைத்தான் எதிரொலிக்கின்றன. தனது குரலை அவை வெளிப்படுத்துவதே இல்லை. பல நூறு வருடங்கள் கண்ட மரம் தன் இருப்பைக் கத்திக் கூச்சலிட்டு வெளிக்காட்டிக்கொள்வது இல்லை. காற்றின் அசைவையே அது குரலாக்குகிறது. மிருகங்கள் உக்கிரம்கொள்ளும்போதோ, உற்சாகத்திலோதான் சத்தமிடுகின்றன. மற்ற நேரங்களில் நிசப்தமாகவே அலைகின்றன.

நமக்கு மட்டும் எதற்காக இவ்வளவு சத்தம், கூச்சல், தடித்த வார்த்தைகள், வாய்ச் சண்டைகள்? யோசித்துப்பாருங்கள்... ஒருநாள் நமது வாழ்வின் சகல காரியங்களில் இருந்தும் சத்தம் துண்டிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால், இரைச்சல் இருக்காது. சமையல் நடக்கும். ஆனால், ஓசை இருக்காது. உதடுகள் அசையும். ஆனால், பேச்சு இருக்காது. மரங்கள் அசையும். ஆனால், சத்தமிடாது. தண்ணீர் நெருப்பு, யாவும் ஓசையின்றி இயங்கும். உலகம், மாபெரும் ஓவியம் ஒன்றைப்போலாகிவிடும். அதற்குள் நாம் பிரவேசித்து நடந்துகொண்டு இருப்போம்.

உண்மையில் நம்மைச் சத்தங்களே வழிநடத்துகின்றன. வாகனங்கள் எரிபொருளை நிரப்பிக்கொள்வதுபோன்று நாம் சத்தத்தால் நம்மை நிரப்பிக்கொள்கிறோம். செலவழிக்கிறோம்.

ஜப்பானில் ஒரு பௌத்தத் துறவி இருந்தார். அவர் ஃப்யூஜி எரிமலை அருகே உள்ள கிராமத்தில் தங்கியிருந்தார். அவரது தினசரி வேலை, நடந்து சென்று எரிமலை அருகே அமர்ந்து, அதைப் பார்த்துக்கொண்டே இருப்பது. அப்படி அதில் என்னதான் பார்க்கிறார் என்று அவரது சீடர்களுக்குப் புரியவில்லை. அவர்களும் அவரைப்போலவே அந்த மலையைச் சில நிமிடங்கள் பார்ப்பார்கள். பிறகு, கவனம் வேறெங்கோ போய்விடும்.

ஒருநாள் அவர் எதையோ மிக வியப்புடன் பார்ப்பதைக் கவனித்த சீடர்கள், 'குருவே அப்படி என்ன அதிசயம்?' என்று கேட்டனர். அதற்கு அவர், 'ஃப்யூஜி எரிமலையின் மீது ஒரு எறும்பு போய்க்கொண்டு இருக்கிறது' என்றார். 'இவருக்கு என்ன பைத்தியமா? ஏன் இதைப் பார்த்துச் சிரிக்கிறார்?' என்று ஒரு சீடன் ஆதங்கப்பட்டான். அவரிடம் துணிந்து அதைக் கேட்டும்விட்டான்.

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

அதற்கு அவர், 'எறும்பு ஒருபோதும் ஃப்யூஜி எரிமலையைக் கண்டு பயப்படுவது இல்லை. அவ்வளவு அக்னிக் குழம்பைக் கக்கிச் சீறும் எரிமலை எவ்வளவு அமைதியாக ஒடுங்கி இருக்கிறது. அந்த அமைதியை உறுதிப்படுத்துவதுபோலத்தானே இந்த எறும்பு போய்க்கொண்டு இருக்கிறது' என்றார். சீடனுக்கு அப்போதும் தெளிவில்லை. 'எறும்பும் எரிமலையும் ஒன்றில்லையே' என்றான். குரு சிரித்தபடியே, 'எறும்பின் அமைதி எறும்புக்கு. எரிமலையின் அமைதி எரிமலைக்கு. இரண்டுக்குள்ளும் எந்தப் பேதமும் இல்லை. அமைதியில் சிறிய அமைதி, பெரிய அமைதி என்று பேதம் இருக்கிறதா என்ன?' என்று கேட்டார். சீடன் தவற்றை உணர்ந்து அவரது ஞானத்தைப் புரிந்துகொண்டான் என்று முடிகிறது கதை.

கதை சுட்டிக்காட்டும் நிசப்தம் மிக முக்கியமானது. அந்த நிசப்தம் உணரப்பட வேண்டியது. அதை அறியாமல் நாம் தவறவிட்டு வருகிறோம். அன்றாடம் நாம் நிரப்பிக்கொள்ளும் சத்தங்களில் பாதி நமக்குத் தேவையற்றது. அதை விலக்க நாம் பழகவில்லை. அதே நேரம், இயற்கையின் சத்தம் நமக்குள் நுழைவதற்கு நாம் அனுமதிப்பதே இல்லை. பறவையின் குரலைக்கூட நாம் தொலைக்காட்சி வழியாக மட்டுமே கேட்கிறோம். மழை பெய்யும்போது எத்தனை பேர் அதன் தாள லயத்தைக் கேட்கிறார்கள். பூ உதிரும் ஓசை நம் காதில் ஏன் விழுவது இல்லை? தண்ணீருக்குள் நீந்தும் மீனின் ஓசை எப்படி இருக்கும்? இரைச்சல்களை நிரப்பி நிரப்பி நம் செவியின் நுண்மை மந்தமாகிவிட்டது.

உரத்த சத்தம், உரத்த இசை, உரத்த சண்டை என்று எல்லாவற்றிலும் மிகையே நமது இயல்பாகி இருக்கிறது. உண்மையில் சத்தத்தில் இருந்து நாம் துண்டிக்கப்படும்போது நம்மைப்பற்றி யோசிக்கத் துவங்குகிறோம். தன்னைப்பற்றி யோசிக்கவும் அறிந்துகொள்ளவும் யாருக்கு விருப்பம் இருக்கிறது.

ஒருநாள் வீட்டில் ஊமைப் படம் ஒன்றை டி.வி.டி-யில் பார்த்துக்கொண்டு இருந்தேன். தற்செயலாக வந்த நண்பரின் ஆறு வயது மகள் என் அருகில் அமர்ந்து டி.வி-யைச் சில நிமிடங்கள் பார்த்தாள். பிறகு என்னிடம், 'அங்கிள், உங்க டி.வி. ரிப்பேர் ஆகிருச்சா?' என்று கேட்டாள். 'இல்லையே' என்றதும், 'அப்போ ஏன் யாருமே பேச மாட்டேங்குறாங்க?' என்று கேட்டாள். 'இது பேசாத சினிமா.

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

இதற்குப் பேர் ஊமைப் படம்' என்றேன். அவள் தன்னைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, 'பொய் சொல்றீங்க. சினிமாவுல எல்லாரும் பேசுவாங்க. எனக்குத் தெரியும்' என்று சொன்னாள். இது சலனப் படம் என்று விளக்கிச் சொல்லியபோதும் சிறுமிக்கு அதில் கவனம் ஈர்க்கவில்லை. இது யாரோ ஒரு சிறுமிக்குப் பிடிக்காத விஷயம் மட்டும் இல்லை. நம்மில் பெரும்பான்மையினர் மௌனப் படங்களில் ஒன்றைக்கூடக் கண்டது இல்லை. ஒருவேளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சத்தம் இல்லை என்பதால், அதைக் காண விருப்பம் அற்றுப்போய் விடுகிறோம். அது ஏன்?

நாம் விரும்பும் அமைதி நமக்குக் கிடைக்காமல் போவது ஒரு பக்கம் என்றால், யாரும் கவனிக்க மறந்து தன்னைத்தானே நிசப்தத்தில் புதைந்துகொண்டுவிடுவது மறுபக்கமாக இருக்கிறது. எத்தனையோ வயதானவர்கள் தன்னுடைய பேச்சுக்கு இப்போது மதிப்பில்லை என்று வாயைக் கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். அவர்கள் தங்க ளுக்குத்தாமேகூட பேசிக்கொள்வது இல்லை. அதிலும் புகழ் பெற்ற நடிகர்களாகவோ, பாடகர்களாகவோ, அல்லது பேச்சாளராகவோ இருந்து அவர்கள் மீதான ஈர்ப்பு போய்விட்ட காரணத்தால் புறக்கணிக்கப்படும்போது வலியோடு தங்களை நிசப்தத்துக்குள் ஆழமாகப் புதைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

1950-களில் நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்து வந்த வாத்தியக் கலைஞர் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்தேன். அவர் அந்தக் காலத்தில் தான் பங்குபெற்ற நாடகங்களின் நோட்டீஸ்களைப் பத்திரமாக வைத்திருந்தார். 'எனக்காக ஒரு நாடகப் பாட்டு ஹார்மோனியத்தில் வாசித்துக்காட்ட முடியுமா?' என்று கேட்டேன். 'ஹார்மோனியம் எல்லாம் இப்போ யார் கேட்கிறா? ரேடியோ, டி.வி. சினிமா எதிலாவது ஹார்மோனியச் சத்தம் இப்போ இருக்குதா? எல்லாம் மெஷின்!' என்று எரிச்சல்பட்டபடி தன்னால் வாசித்துக் காட்ட இயலாது என்று உறுதியாகச் சொன்னார்.

'ஆசைக்காக ஒரு முறை வாசியுங்கள்' என்று திரும்பக் கேட்டபோது, அவர் உடைந்து போன குரலில், 'ஐயா, நீங்க இன்னிக்கு ஒருநாள் கேட்டுட்டுப் போயிருவீங்க. ஆனா, நாளைக்கு இருந்து என் மனசு ஏங்க ஆரம்பிச்சிரும். இங்கே யாரும் ஹார்மோனியம் கேட்க ஆள் இல்லை. நானே அதை மறந்துபோய் வெறும் ஆளா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நீங்க தேவையில்லாம அதைக் கிளறிவிட்டுறாதீங்க' என்று சொன்னார்.

அவரது மன உளைச்சலைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவர் கைகள் ஹார்மோனியத்தில் இருந்து விலகியிருக்கக் கூடும். ஆனால், மனது எப்போதுமே அதை வாசித்துக் கொண்டேதான் இருக்கும் என்று தோன்றியது. புறக்கணிப்பில் உருவாகும் நிசப்தம் வேதனையானது. ஆற்ற முடியாத ரணம் அது. நம் வீட்டுக்குள்ளேயேகூட மறுப்பில் உருவான நிசப்தம் கரும் புகைபோல் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. புறக்கணிப்பில் உருவாகும் கலைஞனின் வலியைப் பற்றி உருவான திரைப்படம், சாப்ளினின் 'Limelight'.

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

கால்வரோ மேடையில் கோமாளியாக நடித்து பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றவன், காலமாற்றத்தால் பார்வையாளர்களால் புறக் கணிக்கப்படுகிறான். எப்படியாவது தனது திறமையை மறுபடி காட்டி பேர் வாங்கிவிட கால்வரோவின் மனது ஏங்குகிறது. அதே நேரம், தன்னை மக்கள் வெறுக்கிறார்கள் என்று ஆத்திரமாகி இடைவிடாமல் குடித்துத் தன்னை அழித்துக் கொள்ளவும் செய்கிறான்.

ஒருநாள் தற்கொலை செய்ய இருந்த டெரி என்ற பெண்ணைக் காப்பாற்றுகிறான். அவள் தோற்றுப்போன ஒரு நடனக்காரி. அவளுக்குத் தொடர்ந்து ஆறுதல் சொல்லி அவளால் நடனத்தில் சாதித்துக்காட்ட முடியும் என்று தைரியம் ஊட்டுகிறான். அவள், அதை நம்பி நடனத்தில் மறுபடி ஈடுபடுகிறாள். அவளுக்கான பார்வையாளர்கள் உருவாகிறார்கள்.

தனக்கு நம்பிக்கை கொடுத்த கால்வரோவுக்கு மறுபடி வாய்ப்பு உருவாக்கித் தந்து அவனை வெற்றி பெறவைக்க டெரி ஆசைப்படுகிறாள். அவனைத் திருமணம் செய்துகொள்வதாகக்கூடச் சொல்கிறாள். அவளது நிகழ்ச்சியில் மீண்டும் தனது பழைய கூட்டாளியுடன் மேடையேறுகிறான் கால்வரோ. அந்த நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பு பெறுகிறது. அந்தச் சந்தோஷத்தைக் கண்டபடி மேடையில் கால்வரோ இறந்து விடுகிறான்.

படத்தில் சாப்ளின் தோற்றுப்போன கோமாளியின் வலியை நன்றாக வெளிப்படுத்திஇருப்பார். கண்ணாடி முன்பாக அமர்ந்து, அவர் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பார். அதே முகம், அதே பாவனை... ஏன் இப்போது பார்வையாளர்களுக்குத் தன்னைப் பிடிக்க வில்லை என்று கேட்டுக்கொள்வார்.

ஒரு காலத்தில் எதற்காகத் தன்னை ஆயிரமாயிரம் ரசிகர்கள் ரசித்தார்களோ, அது தான் இன்று தனது ஒரே குறையாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். அந்த உண்மையை அவரால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆனால், அதில் இருந்து மீண்டு புதிய கலைத் திறமையைக் காட்டி நடிக்கிறார். அது மீண்டும் வரவேற்புக்கு உள்ளாகிறது.

எப்போதுமே பேச்சைப் புரிந்துகொள்வதை விட, அமைதியைப் புரிந்துகொள்வது கடினம். அமைதி, ஒரு வெளிச்சம். அது நமக்கு வழிகாட்டுகிறது. அதுதான் சாப்ளின் சொல்லும் உண்மையாகவும் இருக்கிறது!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42

புகழ்பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்குக் காது கேட்காதுஎன் பார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் ஈதன் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவன். வாய் பேசவும் முடியாது. ஆனால், அவனுக்குஇசை கற்றுக்கொள்வதில் ஆர்வம். அதிலும் டிரம்ஸ் வாசிப்பதைக்கண்டால், அருகில் நின்று பார்த்துக்கொண்டே இருப்பான். கண்களால் பார்த்தபடியே டிரம்ஸ் அடிக்கக் கற்றுக்கொண்டு இன்று தானும் ஒரு டிரம்ஸ் கலைஞ னாக உருவாகி இருக்கிறான். விளம் பரங்களில் மாடலாகவும் தோன்றி வருகிறான்!

 
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42
சிறிது வெளிச்சம்! - அமைதியை ருசித்திருக்கிறீர்களா? - 42