மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 11

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 11

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 11
நீயும்... நானும்! : கோபிநாத் - 11
கோபிநாத், படம்: 'தேனி'ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 11
நீயும்... நானும்! : கோபிநாத் - 11

ன் பள்ளி நாட்களில்... இரண்டு நண்பர்களுக்கு இடையே ஒரு சண்டை. விஷயம் இதுதான். அவர்கள் இருவரில் யார் சிவப்பு என்பதுதான் கேள்வி. இந்தப் பஞ்சாயத்து இன்னொரு நண்பனின் முன் வந்தது. அவனிடம் இரண்டு பேரும், 'டே... நல்லாப் பார்த்துச் சொல்லு. நான்தானே சிவப்பு!' என்றார்கள்.

நண்பன் கொஞ்சம் யோசித்தான். உடனே ஒருவன், 'முகத்தை மட்டும் பார்க்காதே. என் கையைப் பாரு. எவ்வளவு வெள்ளையா இருக்கு. நல்ல முடிவாச் சொல்லு' என மன்றாடினான். பஞ்சாயத்து பண்ணிய நண்பன் ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான். 'உங்க கேள்வியே தப்பு. உங்க ரெண்டு பேர்ல யார் ரொம்பக் கறுப்புன்னு வேண்ணா சொல்றேன். அதுதான் நியாயம்' என்றான். ஆம், அந்த இரண்டு நண்பர்களுமே அவ்வளவு கறுப்பாக இருப்பார்கள்.

இது மாதிரி வேடிக்கையான விஷயங்கள் உங்களுடைய கல்லூரி வளாகத்திலும், அலுவலகத்திலும்கூட நடக்கலாம். கறுப்பைப் பரிகாசம் செய்வதும், அதை மதிப்பீட்டுக் குறைவுடன் அணுகுவதும் பன்னெடுங்காலமாக இருக்கும் விஷயம். அது விளையாட்டாக இருக்கும் வரை சரி. வேதனைப்படுத்தும்விதமாக அமைந்துவிட்டால், ஆபத்து.

நிறத்தின் மீதான பழக்கப்படுத்தப்பட்ட பார்வை தனி மனிதனுக்குள் தன்னம்பிக்கைக் குறைவை ஏற்படுத்திவிடுகிறது. 'நிறம் ஒரு பொருட்டல்ல' என்று உணர்வதற்கு முன்னதாகவே அது தொடர்ப£ன கேலியும் கிண்டலும் சிலரை அவர்கள் அறியாமலே ஒடுங்கிப்போகச் செய்துவிடுகிறது. நாமும் அப்போதைய சந்தோஷத்துக்காக இந்தக் கிண்டல்களின் வீரியம் தெரியாமல் விளையாடி வருகிறோம்.

சென்னையில் ஒருநாள் இரவுக் காட்சி சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். படம் ஆரம்பித்து சற்று தாமதமாக வந்த ஒரு மாணவர், தன் நண்பனின் பெயரைச் சத்தமாகச் சொல்லி 'பல்லைக் காட்டிச் சிரி... நீ எங்கே இருக்கேன்னு தெரியலை' என்றார். தியேட்டர் அமைதியாக இருந்த நேரத்தில் அவர் சொன்னதால், எல்லாருமே சிரித்துவிட்டார்கள். அந்தப் பையன் யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனாலும், சம்பந்தப்பட்ட இளைஞர் சங்கடப்பட்டு இருப்பார் என்று தோன்றியது.

உலக வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நிற பேதத்துக்கு எதிரான புரட்சி மிகப் பெரியது. இன்று அதைத் தாண்டிய இடத்துக்கு வந்தாலும், நிறம் தொடர்பான மனத் தடைகள் அப்படியேதான் இருக்கின்றன.

நம் தலைவர்கள், ஹீரோக்கள், நிஜ வாழ்வில் கடினமாக உழைத்து முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள் எனப் பலரும் கறுப்பு நிறமாக இருந்தாலும், சிவப்பாக மாற வேண்டும் என்ற உந்துதல் அதிக மானவர்களிடம் இருக்கிறது. 'வசீகரத்தின் அடையாளம், அங்கீகாரத்தின் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம் கறுப்பு அல்ல' என்று ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இன்றைக்குக் கல்லூரி அளவிலும் அலுவலகச் சூழலிலும் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் செயற்கையான புறச் சூழல்களால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள், விளம்பரங்கள் வாயிலாக சிவப்பாக இல்லை என்றால் உன்னால் வெற்றி பெற முடியாது என்ற கருத்தாக்கம் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது.

வெள்ளை வெளேர் என்று இருக்கும் ஐரோப்பியர்கள் தோல் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறவும் சூரிய ஒளி படும்படி சன் பாத் எடுத்துக்கொண்டு இருக்கையில், அத்தகைய சருமத்தை இயற்கையிலேயே பெற்று இருக்கிற நாம் சிவப்பாக மாற என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துக்

நீயும்... நானும்! : கோபிநாத் - 11

கொண்டு இருக்கிறோம். கறுப்பு நிறத் தோல் அடர்த்தியானது. இதில் மெலனின் அதிகமாக இருப்பதால் அது ஆரோக்கியமானதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்கொண்டதாகவும் இருக்கிறது என அறிவியல் உறுதி செய்திருக்கிறது.

இந்தத் தகவல் பலருக்கும் தெரியும். ஆனாலும், சிவப்பாக மாற வேண்டும் என்ற தாகம் யாருக்கும் தீரவில்லை. அந்தத் தாகம் அடங்கிவிடாமல் பன்னாட்டு அழகுச் சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் பார்த்துக்கொள்கின்றன. உண்மையில் இன்றைய சூழலில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சிவப்பாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆரோக்கியம்பற்றிய பேச்செல்லாம் அப்புறம்தான்.

குறைந்தபட்சம் முதல் தலைமுறையாக நன்றாகச் சம்பாதிக்க ஆரம்பித்து இருக்கும் ஆண்-பெண் மத்தியில் இந்த உணர்வே மேலோங்கி இருக்கிறது. 'அழகாக இருக்க வேண்டும் என்றால், சிவப்பாக இருக்க வேண்டும்' என்கிற எண்ணம் வளர்க்கப்பட்டு இருப்பதன் பின்னணியில் மிகப் பெரிய வியாபாரத் தந்திரம் ஒளிந்திருக்கிறது.

90-களுக்குப் பிறகு, அழகுச் சாதனப் பொருள்களை விற்பனை செய்வற்கான ஒரு மிகப் பெரிய சந்தையாக இந்தியாவை உலக நாடுகள் அடையாளம் கண்டுகொண்டன. உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை, பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள், வளர்ந்து வரும் பொருளாதாரம்... இவை அனைத்தையும் தாண்டி, நீண்ட காலமாகவே சிவப்புதான் அழகு என்று நம்பிக்கொண்டு இருக்கும் மனோபாவம்...

அழகுச் சாதனப் பொருட்களைக் கொட்டி விற்க இதைவிட வேறென்ன காரணங்கள் வேண்டும். அதுநாள் வரை, உலக அழகிப் போட்டிகளில் கால் இறுதி வரைக்கும்கூட வராத இந்தியப் பெண்கள் வரிசையாகப் பிரபஞ்ச அழகி, உலக அழகி எனப் பட்டம் சூட்டப்பட்டார்கள். அழகு என்பதும் வசீகரம் என்பதும் கறுப்பு அல்ல என்ற கருத்தாக்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இப்படி செயற்கையாக உரமேற்றப்பட்ட அழகியல் சித்தாந்தம்தான் இன்றைய சமூகத் தளத்திலும் பிரதிபலிக்கிறது.

பார்த்தவுடன் கவனிக்கவைக்கிற வசீகரம் என்பது ஒருவருக்குக் கூடுதல் சிறப்பம்சம்தான். ஆனால், அந்த வசீகரம் நிறத்தால் நிர்மாணிக்கப்படுவதும் அதை இளைஞர்கள் நம்புவதும் வருத்தம் அளிக்கிறது.

அழகுக்கும் நிறத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இருக்கிறது என்று முடிவு எடுத்துக்கொண்டவர்களால் இன்றைக்குச் சமூகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வேலைவாய்ப்பில், திருமணத்தில், உறவுபேணுவதில், சலுகைகள் தரப்படுவதில் என அனைத்திலும் நிறம் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழ அதுவே காரணம்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 11

ஒரு நிலையில் இந்த மனோபாவம் வளரும் தலைமுறைக்கு இடையே புரிதல் குறைவையும், இடைவெளியையும் ஏறபடுத்திவிடுகிறது. நிறத்தில் தன்னைப்போல் இல்லாத இன்னொருவனை வேறொரு மனிதனாகப் பார்க்கிற மனோபாவத்தை வளர்த்துவிடுகிறது. இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் கூட்டினால் அது தேசத்தின் ஆற்றல் வெளிப்பாட்டுத் திறனையே கேள்விக்குறி ஆக்குகிறது.

கேரம் சாம்பியன் இளவழகியின் பேட்டி ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். சர்வதேசப் போட்டிகளுக்குச் செல்லும்போது வெளிநாட்டு வீராங்கனைகளிடம் இருந்து ஒதுங்கியே இருப்பாராம். ஆனால், அவர்கள் இளவழகியிடம் தாமாக வந்து பேசி, எவ்வளவு திறமையானவர் நீங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று நட்புப் பாராட்டி இருக்கிறார்கள்.

உழைப்பும் வெற்றியும்தான் நம்மை அழகாக்குகிறது. நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் ஒரு செயலை அணுகுகிறபோது வசீகரம் தானாக வந்து சேர்கிறது. நிறம், அழகின் அடையாளம் அல்ல. உழைப்பு தருகிற வெற்றி நம்மை மட்டுமல்ல... நம் சூழலையும் அழகாக்குகிறது.

சக மனிதனை உண்மையாக நேசிக்கிறபோதும் வாஞ்சையோடு அரவணைத்துக்கொள்கிறபோதும் வெளிப்படுகிற அழகைவிட வேறு எதுவும் அழகாகத் தெரியவில்லை. அன்பு, நேர்மை உள்ள மனசுக்குச் சொந்தக்காரர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் அழகாகவே இருக்கிறார்கள்.

இது வெறும் தத்துவம் என்று நினைப்பவர்கள் உங்கள் அம்மாவையும் அப்பாவையும் கவனித்துப்பாருங்கள்.
நிறத்தின் பொருட்டு தீர்மானிக்கப்படுகிற அழகியல் அடுத்த தலைமுறைக்கேனும் இல்லாமல் போகட்டும். இந்த உலகில் மிகச் சிறந்த மனிதநேயவாதிகள், உழைப்பாளிகள், வெற்றியாளர்கள், கறுப்பு, சிவப்பு என இரண்டு நிறங்களிலும் இருந்திருக்கிறார்கள். கொடுங்கோலர்களும் அப்படித்தான்.

சிவப்புதான் அழகு என்ற செயற்கை ஏற்பாடு அடிமனதில் ஆழமாகப் பதிந்துபோனதால்தான் இன்றைக்கு யாரோ மாதிரி மாற வேண்டும் என்ற மன நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. நீங்களே அழகுதானே... அந்த அழகை ஆராதியுங்கள். அதன் நளினத்தை ரசியுங்கள்.

அழகு என்று இலக்கணங்கள் வகுக்கப்படுவது எல்லாம் அறியாமையின் வெளிப்பாடு, வியாபாரத் தந்திரங்களின் விபரீத புத்தி.

'அவரவர் நிறமே அவரவரின் அடையாளம்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 11

அதுவே அவரின் அழகு'.

நிறம் குறித்த புரிதல் நிறைய இருந்தாலும், நிறம் சார்ந்து பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சமூகத் தளங்களில் எதிரொலிக்கிறது. அழகையும் சிவப்பையும் தொடர்புபடுத்தி பழகிப்போன பழைய தலைமுறையின் மனப்போக்குதான் அது.

நிறையப் படித்திருக்கிற இப்போதைய இளைய தலைமுறை அதை மாற்றும் என்று அழுத்தமாக நம்பலாம். அழகைத் தொடர்புபடுத்த அறிவு, சிந்தனை, உழைப்பு, வெற்றி, மனிதநேயம், பாசாங்கு இல்லாத உறவுகள் என ஆயிரம் காரணிகள் இருக்கின்றன.

குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்று குங்குமப் பூவைப் பாலில் கலந்து சாப்பிடுகிற அம்மாக்கள் கொஞ்சம் மாற வேண்டும். அழகு குங்குமப் பூவில் இல்லை. உங்களிடம் இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்களும், சுஷ்மிதா சென்களும் மட்டுமல்ல; நம் அம்மாக்களும் அக்காக்களும் அழகுதான்!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 11
- ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 11