மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன் - 43

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன் - 43

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43
சிறிது வெளிச்சம்!
திருடன் ஏன் திருடுகிறான்?
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43

விசித்திரங்களுக்கும் திருடர்களுக்கும் எப்போதும் அதிக நெருக்கம் உண்டு போலும். சமீபத்தில் ஒரு திருடனைப்பற்றிய செய்தியை வாசித்தேன். பெர்லின் நகரில் பிடிபட்டஅவன் செல்போன் திருடுவதில் கில்லாடி. யாரிடம் செல்போனைத் திருடினாலும், அந்த செல்போனில் உள்ள எல்லாத் தொடர்பு எண்களுக்கும், 'இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்' என்று உற்சாகமான வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுவான்.

எத்தனை பேர் அதற்குப் பதில் அனுப்புகிறார்கள் என்று காத்துக்கொண்டு இருப்பான். பதில் அனுப்பாத எண்களுக்கு தானே தொடர்புகொண்டு திட்டுவான். பிறகு, தான் திருடிய செல்போனை ரயிலில் அல்லது பரபரப்பான வணிக மையத்தில் வேண்டும் என்றே தவறவிடுவான். அதை யார் ரகசியமாக எடுத்துபோகிறார்கள் என்று கவனிப்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம்.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடி அலைந்த அவனை சமீபத்தில் காவல் துறை கைது செய்திருக்கிறார்கள். அவனிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி மாணவன் என்றும், மனிதர்களின் மனசாட்சியை அறிந்து கொள்வதற்காகவே திருட்டில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கிறான்.

திருடுவதற்கு எல்லோருக்குள்ளும் ஆசை இருக்கிறது. பயம்தான் பலரையும் தடுத்துவைத்திருக்கிறது. திருட்டில் ஈடுபடாத நபர் என ஒருவர்கூட இந்த நகரில் இல்லை என்று செல்போன் திருடன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறான்.

யோசித்துப்பார்த்தால் அது நிஜம் என்றே தோன்றுகிறது. தன்னை உலகின் கண்கள் கவனிக்கவில்லை என்று உறுதியானால் திருடுவதற்கு எவரும் தயங்குவது கிடையாது.

மலையாளத்தில் சென்ற ஆண்டு 'திருடன் மணியம்பிள்ளையின் சுயசரிதை' என்றபுத்தகம் வெளியாகி பரபரப்பாக விற்பனையானது. வீடு வீடாகப் புகுந்து திருடும் மணியம்பிள்ளை என்ற திருடனின் வாழ்க்கைக் கதையை இந்துகோபன் என்ற எழுத்தாளர் கேட்டு எழுதியிருக் கிறார். தன் குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதை எப்படிச் செய்தேன், அந்த சூழ்நிலையில் எதுபோன்ற மனிதர்களைச் சந்தித்தேன் என்று விரிவாக விளக்கும் மணியம்பிள்ளை, 'சந்தர்ப்பமே மனிதனைத் திருடனாக்குகிறது' என்கிறார். திருட்டு ஒரு குற்றம் என்றபோதும் திருடனின் மனநிலை எப்போதுமே வியப்பானதே!

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43

கொரிய இயக்குநரான கிம் கி டிக் '3- Iron' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமகால உலகத் திரைப்படங்களில் மிக முக்கியமானது. வெறுமையான மனநிலைகொண்ட ஒரு திருடனின் கதையைப்பற்றியது. டி சுக் என்பவன் பகல் நேரங்களில் அடுக்குமாடிக்குடியிருப்பு களுக்குச் சென்று பீட்சா உணவக விளம்பர அட்டைகளை வீடு வீடாகப் போட்டு வருவான். அதே வீடுகளுக்கு மறுநாள் போவான். ஏதாவது வீடுகளில் ஆள் இல்லாமல், விளம்பர அட்டைகள் வாசலிலேயே கிடந்தால், அந்த வீட்டைத் திறந்து உள்ளே போய்விடுவான்.

அவனது நோக்கம், திருடுவது அல்ல. மாறாக, அடுத்தவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கே குளித்து, விரும்பிய உணவைச் சமைத்துச் சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு பிறகுதான் அந்த வீட்டில் இருந்த அடையாளத்துக்காக ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவான். அப்படித் திருட்டுதனமாக நுழைந்து வீட்டைப் பயன்படுத்திக் கொண்டதற்குக் கைமாறாக அந்த வீடுகளில் உள்ள அழுக்குத் துணிகளை தானே துவைத்துப்போடுவான். வீட்டுத் தோட்டத்தைச் சரிசெய்வான். வீட்டை அழகுபடுத்துவான். சமையல் பாத்திரங்களைக் கழுவிவைப்பான். கழிப்பறையைச் சுத்தம் செய்வான். இப்படி அவனால் முடிந்த சேவையை அந்த வீட்டுக்குச் செய்துவிட்டுத்தான் போவான்.

அவனது அவதானிப்பில் எந்த வீடும் முறையாக இல்லை. அலுவலகத்துக்குக் கிளம்புகிற அவசரத்தில் குழந்தைகளின் துணிகள், காலணிகள் ஒரு பக்கம் கவனமில்லாமல் கிடக்கின்றன. சமையலறை சுத்தம் செய்யப்படாமலே இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டியை யாரும் அக்கறையுடன் கவனித்துப் பராமரிப்பது இல்லை. பாதி உணவுகள் வீணடிக்கப்பட்டு இருக்கின்றன. வீட்டு ஷோகேஸில் தூசியும் குப்பையும் சேர்ந்து போயிருக்கிறது.

கழிப்பறைகள் சரியாகப் பராமரிக்கபடுவது இல்லை. அவசரம் மனிதர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் உறங்குவதற்கும், இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்வதற்கும், சமைத்துச் சாப்பிடுவதற்கும் உரியதாக மட்டுமே வீட்டை நினைக்கிறார்கள். தனது வீட்டினை ரசித்து எவரும் வாழ்வதே இல்லை என்று கண்டுகொள்கிறான்.

அதனால்தான் திருட்டுதனமாகச் செல்லும் வீடுகளை அவன் அழகுபடுத்துகிறான். நிம்மதியாக ஷவரில் குளிக் கிறான். வாங்கிவைத்து ஒருபோதும் வீட்டுக்காரர்கள் கேட்காத புதிய இசைத்தட்டுகளைப் பிரித்து பெரிய ஸ்பீக்கரில் பாட்டுப் போட்டு ரசித்துக் கேட்கிறான். நிதானமாகச் சமைக்கிறான். உணவை ருசித்துச் சாப்பிடுகிறான். பிறகு சோபாவில் படுத்துக்கொண்டு ஜாலியாகப் படம் பார்க்கிறான். வீட்டின் ஒவ்வொரு சிறிய பகுதியையும் அவன் அனுபவிக்கிறான். பிறகு தன்னால் முடிந்த சேவையை நிறைவேற்றிவிட்டுப் போய்விடுகிறான்.

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43

மாலையில் வீடு திரும்பும் வீட்டின் உரிமையாளர்கள் தன்னுடைய வீடு எப்படி உருமாறியிருக்கிறது என்று சந்தேகம்கொள்கிறார்கள். யார் தனது அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்தது என்று திகைக்கிறார்கள். யாரோ திருடன் வந்திருக்கக்கூடும் என்று பயந்து அவசரமாகத் தங்களது பணம், நகைகளைச் சரிபார்க்கிறார்கள். எதுவும் திருடுபோகவில்லை. ஆனால், ஒரு திருடன் வீட்டுக் குள் நுழைந்திருக்கிறான். எதற்காக அவன் உள்ளே வந்தான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. அவன் மீது எவரும் காவல் துறையில் புகார் தரவும் இல்லை.

திருடன் ஒருமுறை இதுபோல யாருமில்லாத வீடு ஒன்றில் திருடப்போகிறான். மிகப் பெரிய வீடு. ஆனால், அலங்கோலமாக இருக்கிறது. அதைச் சுத்தம் செய்துவிட்டு சமைக்க உள்ளே நுழையும்போது, ஒரு பெண்ணை யாரோ அடித்துக் கட்டிப்போட்டு இருப்பதைக் காண்கிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெண் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ஏன் பூட்டப்பட்ட வீட்டில் ஒரு பெண் கட்டிப்போடப்பட்டிருக்கிறாள் என்று யோசிக்கிறான்.

திருடனைப் பார்த்த பயம் அந்தப் பெண்ணின் கண்களில் இல்லை. மாறாக, தன்னை அவன் விடுவிக்க வேண்டும் என அந்தப் பார்வை கெஞ்சு கிறது. அவளை விடுவிக்கிறான். அவள் தன்னை எப்படியாவது அங்கிருந்து வெளியே கொண்டுபோய்விடும்படிக் கெஞ்சுகிறாள். அவள் யார். எதற்காக அங்கே அடைப்பட்டு கிடக்கிறாள் என்று கேட்கிறான். தனது கணவன் தன்னை அடித்துக்கொடுமைப் படுத்துவதாகவும், அவன் ஒரு சந்தேகப்பிராணி என்று அழுகிறாள். அவளைக் காப்பாற்ற முடிவு செய்து அழைத்துக்கொண்டு புறப்படும் நேரம் அந்தப் பெண்ணின் கணவன் காரில் வந்துவிடு கிறான். வேறு வழியில்லாமல் அவனை அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வெளியே அழைத்துப் போகிறான்.

புறநகர்ப் பகுதி ஒன்றில் அவளை விட்டுவிட்டுப் பிரிந்து போக நினைக்கிறான். அந்தப் பெண் தன்னை வெளியே அனுப்பினால், கணவன் பிடித்துச் சென்று கொன்றுவிடுவான். ஆகவே, அவனோடு வருவதாகச் சொல்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவளைத் தன்னோடு அழைத்துப் போகிறான்.

அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாக முன்புபோல யாரும் இல்லாத வீடுகளில் பகல் நேரங்களில் நுழைகிறார்கள். அந்தப் பெண் வீட்டைச் சுத்தம் செய்கிறாள். அவன் சமைக்கிறான். அந்தப் பெண் துணி துவைப்பாள். அவன் இஸ்திரி போடுவான். இப்படித் தங்களால் முடிந்த சேவையை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அதே நேரம் அவர்கள் இருவரும் அந்த வீட் டைத் தங்களது புதிய வீடுபோல கொண்டாடுவார்கள். புதிதாகத் திருமணமாகி வந்தவர்கள்போல கேலி செய்வதும், சிரிப்பதும், ஒன்றாகச் சாப்பி டுவதும், டி.வி பார்ப்பதும் என்று அந்த வீட்டில் தங்கும் பகலினை முழுமையாக அனுபவிப்பார்கள். மாலையில் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஒருமுறை திருடன் அந்தப் பெண்ணிடம் சொல்கிறான்... 'யாராவது ஒரு வீட்டில் முகம் அறியாத நமக்கு இதுபோல உணவும் உபசரிப்பும் தருவார் களா என்ன? சுயநலம்தான் திருட்டை உருவாக்குகிறது. என்னை எவரும் எங்கேயும் அனுமதிக்கவே இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. உலகின் கண்களுக்கு நான் ஒரு உதவாக்கரை. வெட்டி ஆள். ஆகவேதான் நான் அவர்கள் மீது எனக்குள்ள உரிமையை நானே எடுத்துக்கொண்டேன். என்னை அவர்களுக்கு ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், நானும் இந்த வீட்டில் ஒருநாள் வசித்திருக்கிறேன். விசித்திரமான உறவில்லையா?' என்று கேட்பான்.

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43

ஒருநாள் திருடன் ஒரு வீட்டில் நுழையும்போது அங்கே வயதான மனிதர் ஒருவர் மாரடைப்பால் இறந்துகிடப்பதைக் காண்கிறான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கு இருந்த டைரியில் தேடி அவரது மகன் மற்றும் மகளுக்குத் தொலைபேசி செய்து தகவல் சொல்கிறான். அவர்கள் ஆளுக்கு ஓர் ஊரில் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சேரும் வரை இறந்தவரின் உடல் அப்படியே கிடக்கக் கூடாது என்று அதை முறையாகச் சுத்தம் செய்து, பௌத்த முறைப்படி ஓர் அறையில் கிடத்தி ஊதுவத்தி வைத்து, அவருக்காகப் பிரார்த்தனையும் செய்கிறான். அப்பா இறந்துபோனதை அறிந்த பிள்ளைகள் ஊரில் இருந்து வந்து சேர்கிறார்கள். தங்களால்கூட இப்படிச் செய்திருக்க முடியாது என்று அஞ்சலி அறையின் நேர்த்தியைக் கண்டு வியக்கிறார்கள்.

தன் மனைவியை ஓர் ஆள் கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று புகார் தந்த கணவன் திருடனைத் தேடுகிறான். ஒருநாள் திருடன் பிடிபடுகிறான். சிறைக்கும் போகிறான். அங்கே அவன் ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுவதைவிட அனைவரும் இருக்கும்போது உள்ளே நுழைந்து தான் விரும்பியதை எப்படிச் செய்வது என்று பயிற்சி செய்கிறான். அதன்படியே சிறையில் இருந்து வெளியாகி வந்து, தன்னோடு சுற்றிய பெண்ணின் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறான். அங்கே உள்ள அத்தனை பேர் கண்களையும் மீறி நிழல்போல அவன் ஆடும் நாடகம் வேடிக்கையானது.

அத்துமீறி வீடு புகுவதில் துவங்கிய படம் மெள்ள மனிதர்களின் நெருக்கடியான வாழ்க்கையை, அதன் அபத்தத்தை, கவனமின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. மனதின் இருட்டுப் பிரதேசங்களின் மீது படும் வெளிச்சமாக வளர்கிறது. உண்மையில் நம் வீடுகளை நாம் அக்கறைகொள்ள மறந்துபோயிருக்கிறோம். நமக்கு வரும் கடிதங்களுக்கு நாம் பதில் எழுதுவது இல்லை. பகல் நேரங்களில் யாரோ தொலைபேசியில் அழைக்கிறார்கள். பூட்டப்பட்ட வீட்டில் அந்த மணியோசை கேட்டபடியே இருக்கிறது. நமது தோட்டத்துப் பூக்களை நாம் ரசிப்பது இல்லை. ஆசையாக வாங்கிய பல பொருட்கள் வீட்டில் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. அதை முறையாக நாம் உபயோகிப்பது இல்லை.

படிக்க வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் தூசியேறிக் கிடக்கின்றன. அதைப் புரட்டிப் படிக்க நேரம் இல்லை. நம்மைத் தவிர நமது உலகில் வேறு யாருக்கும் இடம் இல்லை. ஆனால், உலகம் நம்மோடு முடிந்துவிடுவது இல்லை. வெளியே ஆயிரமாயிரம் மனிதர்கள் இருப்பிடமின்றி, முறையான உணவின்றி, பணமின்றி, சொல்ல முடியாத பிரச்னைகள் நிரம்ப அல்லாடுகிறார்கள். அவர்கள் மீது நமது துளிக் கவனம்கூட செல்வதே இல்லை.

நிஜத்தில் நாம் திருடனை உருவாக்குகிறோம். பிறகு அவனைக் கண்டு பயங்கொள்கிறோம். திருடனாக நினைத்துக்கொண்டு சகமனிதர்கள் யாவரையும் சந்தேகம்கொள்கிறோம். விலகிப் போகிறோம். அடுத்த மனிதன் மீதான அக்கறை புறக்கணிக்கபடும்போதுதான் திருட்டு உருவாகத் துவங்குகிறது. யோசிக்கையில், யார் குற்றவாளி என்ற கேள்விக்கான பதில் எப்போதுமே நம்மை நோக்கியே சுட்டிக்காட்டுகிறது!

இன்னும் பரவும்...


பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43

எவரெஸ்ட் சிகரம் என்றால், அதில் ஏறிச் சாதனை படைத்த டென்சிங் ஹிலாரியின் நினைவு வருகிறது. அந்தச் சாதனையைவிட மிக அரியதாக நான் நினைப்பது 2001-ம் ஆண்டு Erik Weihenmayer என்ற பார்வையற்றவர் எவரெஸ்ட் சிகரம் ஏறிச் சாதனை படைத்தது. எரிக், ஹாங்காங்கில் பிறந்தவர். 13 வயதில் நோயால் முழுமையாகப் பார்வை போனது. அதை ஒரு குறையாகக்கொள்ளாமல் மலை ஏறுவதில் ஆர்வம் காட்டி, தொடர்ந்து பல்வேறு மலைகளில் ஏறிப் பயிற்சிகொண்டார். இடைவிடாத முயற்சியின் முடிவில், எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்திருக்கிறார். தற்போது, தன்னைப்போலவே பார்வைக் குறைபாடுகொண்டவர்களுக்கான மலையேறும் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்!

 
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43
சிறிது வெளிச்சம்! : திருடன் ஏன் திருடுகிறான்? -எஸ்.ராமகிருஷ்ணன்  - 43