இந்தப் பிரச்னை நம் வீடுகளின் தினசரிப் பிரச்னைதான். நான் அவர்கள் இருவரையும் அந்தப் பெரியவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் இவர்களுக்கு என்ன சொல்லுவார் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாக இருந்தது.
பெரியவர் நீண்ட நேரமெல்லாம் பேசவில்லை. இரண்டே வரிகளில் முடித்துக்கொண்டார். 'நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளை கேட்க வேண்டுமென்றால், உங்கள் பிள்ளை சொல்வதற்குச் செவி கொடுங்கள். உன் அப்பா உன் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீ அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்.'
இப்போது பெரியவரும் நானும் காபி குடித்துக்கொண்டு இருக்கிறோம். நான் மெதுவாகக் கேட்டேன், 'அதிகாரம் கைக்கு வந்துவிட்டால், கீழ்ப்படிதல் தானாக வந்து விடுமா சார்? நான் அப்படிப்பட்ட நிறையப் பேரைப் பார்த்து இருக்கிறேன் என்றேன்.' அவர் அழுத்தமாகச் சொன்னார், 'இல்லை தம்பி. கீழ்ப்படிதலோடு இருந்ததால்தான் அதிகாரம் செய்கிற உரிமை கிடைத்தது. அடுத்தவர்கள் சொல்வதில் இருக்கிற உண்மையையும் நியாயத்தையும் நான் கவனித்துக் கேட்கிறேன். அதனால், நான் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்கள். இது ஒண்ணும் கம்பசூத்திரம் எல்லாம் இல்லை, சாதாரண விஷயம்' என்றார்.
அவர் சாதாரணமாகச் சொன்னாலும், ரொம்பவே ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் அது. 'அப்பாக்கள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை' என்று பிள்ளைகளும், 'என் பிள்ளை சொல்பேச்சு கேட்பது இல்லை' என்று அப்பாக்களும் மாறி மாறிப் புலம்புவது நிறைய வீடுகளில் கேட்கிறது.
வயதுக்கு வந்த பிறகு கீழ்ப்படிதல் என்பது அடங்கிச் செல்லுதல் அல்லது அடிமைபோல் நடத்தப்படுதல் என்ற எண்ணத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்பா இன்னிங்ஸ் முடிஞ்சுபோச்சு, இனி என் ஆட்டம் என்று இளைய தலைமுறை வேகம் எடுக்கிறது. இருவருமே அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், பெரியவர் சொன்னதுதான் உண்மை. அதிகாரம் செய்ய ஆசைப்படுபவன் முதலில் அடுத்தவன் கருத்துக்குக் காது கொடுக்க வேண்டும்.
இங்கே இருக்கிற பெரும்பாலான சூழலில் கீழ்ப்படிதல் அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்டல் என்பது வேறு வழியின்றி நடக்கிற, முணுமுணுப்புடன் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அல்லது பயந்துகொண்டு நிர்ப்பந்தத்துக்காகப் பணிந்துபோவதாக நடக்கிறது.
கீழ்ப்படிதல் என்பது கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாக இருப்பதால்தான், அப்பாவுக்கு முன் பவ்யமாகத் தலையாட்டிவிட்டு, நண்பனிடம் வந்து அப்பாவைத் திட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. அவர் சொல்கிற விஷயத்தில் இருக்கிற நல்லது கெட்டதை ஆராயாமல், இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கவைக்கிறது.
அன்னப் பறவையைத் தூது விடுகிற மாதிரி எல்லா வற்றுக்கும் அம்மாவையே தூது விட்டுக்கொண்டு இருந்தால், அப்பா என்பவர் அதிகாரம் செய்கிற மனுஷராகவும், நீங்கள் அடங்கிப்போகிற சேவகனாகவுமே காலம் தள்ள முடியும். அப்பாவை அதிகாரத்தின் பிரதிபலிப் பாகப் பார்க்கிற காரணத்தால்தான், அவரின் வார்த்தை கள் ஆணைகளாகத் தெரிகின்றன. இந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஏதுவான சூழல் எது கிடைத் தாலும் அதைப் பயன்படுத்துங்கள்.
|