மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 12
நீயும்... நானும்! : கோபிநாத் - 12
கோபிநாத், படம்: 'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 12
.

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

ல்லூரிகளில் பேசச் செல்கிறபோது, பெரிய மனிதர்கள் இருக்கிற மேடைகளில் அமர வாய்ப்புக் கிடைக்கிறபோது ஆச்சர்யமான சில மனிதர்களைக் கவனிப்பேன். அமைதியாக இருப்பார்கள். அருகில் வந்து பவ்யமாக ஒருவர் ஏதோ சொல்வார். அதனைக் கவனித்துக் கேட்பார்கள். அதிர்ந்துகூடப் பேச மாட்டார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை அனைவரும் கேட்பார்கள்... மறுக்காமல் செய்வார்கள்.

அந்தக் கல்லூரியின் நிறுவனராகவோ, அல்லது அந்த நிறுவனத்தின் தலைவராகவோ சகல அதிகாரங்கள்கொண்ட மனிதர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் விரல் அசைவுக்குப் பலர் ஓடி வரத் தயாராக இருப்பார்கள். ஆனாலும், அவர்கள் எந்தப் படாடோபமும் இல்லாமல் பாந்தமாக இருப் பார்கள்... நட்பாகச் சிரிப்பார்கள்.

இப்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தபோதும் அப்படி ஒரு மனிதரைப் பார்க்க நேர்ந்தது. மேடையில் பேசுகிற எல்லோரின் பேச்சையும் அவர் கூர்ந்து கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து வருகிறபோது ஒரு தந்தை தன் மகனுடன் வந்து, 'சார்... இவன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான், நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்' என்றார். அந்தப் பையனோ, 'அவர் சொல்றது எல்லாத்தையும் அப்படியே கேட்கணும்கிறார். நான் சொல்ற எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்' என்றான்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

இந்தப் பிரச்னை நம் வீடுகளின் தினசரிப் பிரச்னைதான். நான் அவர்கள் இருவரையும் அந்தப் பெரியவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் இவர்களுக்கு என்ன சொல்லுவார் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாக இருந்தது.

பெரியவர் நீண்ட நேரமெல்லாம் பேசவில்லை. இரண்டே வரிகளில் முடித்துக்கொண்டார். 'நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளை கேட்க வேண்டுமென்றால், உங்கள் பிள்ளை சொல்வதற்குச் செவி கொடுங்கள். உன் அப்பா உன் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீ அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்.'

இப்போது பெரியவரும் நானும் காபி குடித்துக்கொண்டு இருக்கிறோம். நான் மெதுவாகக் கேட்டேன், 'அதிகாரம் கைக்கு வந்துவிட்டால், கீழ்ப்படிதல் தானாக வந்து விடுமா சார்? நான் அப்படிப்பட்ட நிறையப் பேரைப் பார்த்து இருக்கிறேன் என்றேன்.' அவர் அழுத்தமாகச் சொன்னார், 'இல்லை தம்பி. கீழ்ப்படிதலோடு இருந்ததால்தான் அதிகாரம் செய்கிற உரிமை கிடைத்தது. அடுத்தவர்கள் சொல்வதில் இருக்கிற உண்மையையும் நியாயத்தையும் நான் கவனித்துக் கேட்கிறேன். அதனால், நான் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்கள். இது ஒண்ணும் கம்பசூத்திரம் எல்லாம் இல்லை, சாதாரண விஷயம்' என்றார்.

அவர் சாதாரணமாகச் சொன்னாலும், ரொம்பவே ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் அது. 'அப்பாக்கள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை' என்று பிள்ளைகளும், 'என் பிள்ளை சொல்பேச்சு கேட்பது இல்லை' என்று அப்பாக்களும் மாறி மாறிப் புலம்புவது நிறைய வீடுகளில் கேட்கிறது.

வயதுக்கு வந்த பிறகு கீழ்ப்படிதல் என்பது அடங்கிச் செல்லுதல் அல்லது அடிமைபோல் நடத்தப்படுதல் என்ற எண்ணத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்பா இன்னிங்ஸ் முடிஞ்சுபோச்சு, இனி என் ஆட்டம் என்று இளைய தலைமுறை வேகம் எடுக்கிறது. இருவருமே அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், பெரியவர் சொன்னதுதான் உண்மை. அதிகாரம் செய்ய ஆசைப்படுபவன் முதலில் அடுத்தவன் கருத்துக்குக் காது கொடுக்க வேண்டும்.

இங்கே இருக்கிற பெரும்பாலான சூழலில் கீழ்ப்படிதல் அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்டல் என்பது வேறு வழியின்றி நடக்கிற, முணுமுணுப்புடன் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அல்லது பயந்துகொண்டு நிர்ப்பந்தத்துக்காகப் பணிந்துபோவதாக நடக்கிறது.

கீழ்ப்படிதல் என்பது கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாக இருப்பதால்தான், அப்பாவுக்கு முன் பவ்யமாகத் தலையாட்டிவிட்டு, நண்பனிடம் வந்து அப்பாவைத் திட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. அவர் சொல்கிற விஷயத்தில் இருக்கிற நல்லது கெட்டதை ஆராயாமல், இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கவைக்கிறது.

அன்னப் பறவையைத் தூது விடுகிற மாதிரி எல்லா வற்றுக்கும் அம்மாவையே தூது விட்டுக்கொண்டு இருந்தால், அப்பா என்பவர் அதிகாரம் செய்கிற மனுஷராகவும், நீங்கள் அடங்கிப்போகிற சேவகனாகவுமே காலம் தள்ள முடியும். அப்பாவை அதிகாரத்தின் பிரதிபலிப் பாகப் பார்க்கிற காரணத்தால்தான், அவரின் வார்த்தை கள் ஆணைகளாகத் தெரிகின்றன. இந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஏதுவான சூழல் எது கிடைத் தாலும் அதைப் பயன்படுத்துங்கள்.

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

நாம் சொல்வதை நம் பிள்ளை விரும்பித்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு, 'என் பிள்ளை என் பேச்சை மீற மாட்டான்' என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கிற அப்பாக்கள் நிறையப் பேர் உண்டு. கீழ்ப்படிதல் என்ற பெயரில் உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையிலான புரிதலே பொய்த்துப்போகிறது.

திடீரென்று ஒருநாள், 'நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டணுமா?' என்று கேட்கிறபோது, இத்தனை நாள் அப்படித்தானே... இப்ப என்ன என்று அப்பாவுக்கும் கோபம் வருகிறது. இந்த நிலைக்கான காரணம் என்ன? ஆரம்பத்தில் இருந்தே அப்பாவின் பேச்சில் இருக்கும் நியாயத்துக்காக நீங்கள் கீழ்ப்படியவில்லை. அவரை அதிகாரத்தின் பிம்பமாகப் பார்த்தே உங்கள் தலையாட்டல்கள் நடந்திருக்கின்றன.

அப்பாவின் தயவு இல்லாமல் என்னால் எழுந்து நிற்க முடியும் என்ற எண்ணம் வருகிறபோது 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று மனசு பொருமுகிறது. ஆனால், பாவம் உங்களுக்குள் இவ்வளவு மனோரீதியான சங்கடங்கள் இருக்கின்றன என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கீழ்ப்படிதலும், செவிமடுத்தலும் பொய்த்தனங்களோடு நடப்பதில் மீசை முளைக்க ஆரம்பித்த பிறகு, அதைத் தன்மானத்தோடு தொடர்புபடுத்துகிறோம். கீழ்ப்படிதல் என்பது விருப்பத்தோடு கூடிய உணர்வாக வெளிப்பட வேண்டும்... அது உண்மையானதாகவும் உளப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பின்னணியில் நீங்கள் வெளிப்படுத்துகிற கருத்துக்களைப் புரிந்துகொள்ளவே மாட்டார் என்று நீங்கள் நினைக்கிற அப்பாவும்கூடப் புரிந்துகொள்வார்.

கீழ்ப்படிதல் என்பது தண்டனையாக, தன்மானப் பிரச்னையாக, எதேச்சதிகாரத்தின் ஏற்பாடாக மாறிப் போனதற்குக் காரணம், வாலிப வயது வந்த பிறகு அப்பாக்களோடு அளவளாவுதலில் யதார்த்தமாகவே ஓர் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. பேச்சுக்கள் குறைந்துபோவதால் இதைத்தான் செய்ய வேண்டும் என்று அப்பா ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போகிறார். வழக்கம்போல் அடுக்களையில் அம்மாவிடம் வந்து என்ன 'நினைச்சுட்டு இருக்காரு இவரு?' என்று பிள்ளை பொருமித் தள்ளுகிறது.

நீயும்... நானும்! : கோபிநாத் - 12

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைத் தோழனாக நடத்த வேண்டும் என்பது அப்பாவுக்கு மட்டுமல்ல; பிள்ளைகளுக்கும்தான். எத்தனை இளைஞர்களுக்கு அப்பாவை நண்பனாகப் பார்க்கவும், அணுகவும் முயல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது?

நமக்கு உலகத்தைப் புரிந்துகொள்கிற வயது வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்வது உண்மையானால், அப்பாவையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் கவனிக்காத, அம்மாக்களே கவனிக்கத் தவறிய, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையிலான தூரத்தைக் குறையுங்கள். தேவைகள் அடிப்படையில் மட்டும் பேசாமல், நட்புரீதியாகவும் பேசுங்கள்.

அம்மாவிடம் பேசுவதுபோல், அப்பாவிடம் விளையாட்டாகவும் நட்பாகவும் பேசுவது நிறையப் பேருக்குக் கூச்சமாகக்கூட இருக்கலாம். பழகிக்கொள்ளுங்கள். இந்த அப்பாவின் மீதுதான் ஏழு வயது வரை படுத்திருந்தீர்கள்.

கீழ்ப்படிதல் என்பது அடங்கிப்போவது அல்ல; அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதும் அல்ல; இன்னொருவரின் பேச்சில் இருக்கிற நியாயத்தை உணர்ந்துகொள்ள முனைவது. அப்பாவும் இதில் அடக்கம்.

உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால், உங்கள் அதிகாரத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உளப்பூர்வமாகக் கீழ்ப்படியலாம். அதில் தவறேதும் இல்லை. கடைசியாக, உரிமையோடு அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்.

அம்மாக்களுக்கு...

அப்பா என்கிற மனிதரை அச்சுறுத்தும் ஆயுதமாக அதிகாரத்தின் பிம்பமாகி, தண்டனை தருகிற அதிகாரியாகப் பிள்ளைகளின் மனதில் பதியவிடாதீர்கள்.

அப்பாக்களுக்கு...

கௌதம்மேனன் படத்தில் வருகிற அப்பாக்கள் சினிமாவில்தான் வர வேண்டும் என்றில்லை. வீட்டிலும் இருக்கலாம்!

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 12
-ஒரு சிறிய இடைவேளை
நீயும்... நானும்! : கோபிநாத் - 12