மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன் - 44

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன் - 44

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44
சிறிது வெளிச்சம்!
ரயில் என்றொரு நண்பன்...
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44
.
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44

த்யஜித் ரேயின் 'பதேர்பாஞ்சாலி' படத்தில் தூரத்தில் தெரியும் ரயிலைப் பார்ப்பதற்காக துர்கா என்ற சிறுமியும் அவளது தம்பி அப்புவும் நாணல் பூத்த நிலப்பரப்பில் ஓடுவார்கள். ரயில் கரும்புகையோடு கடந்து போகும். வியப்போடும் எல்லையற்ற சந்தோஷத்துடனும் அவர்கள் ரயிலைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அந்தப் படத்தை எப்போது பார்க்கும்போதும் மனம் நெகிழ்ந்துவிடுகிறது. இன்று ரயிலைக் காண்பதில் குழந்தைகள் வியப்படைவது இல்லை.

நான் ரயிலைப் பார்க்க ஓடும் சிறுவனாக இருந்திருக்கிறேன். எப்போதாவது ஒரு விமானம் கிராமத்தின்மீது கடந்து போகையில், அது கூடவே சேர்ந்து ஓடியிருக்கிறேன். இன்று 10 நிமிடங்களுக்கு ஒரு விமானம் தலைக்கு மேலாகப் பறந்து போகிறது. அதை ஒரு சிறுவனும் வியப்போடு பார்ப்பது இல்லை. ஒருமுறை பள்ளிச் சிறுவனிடம் விமானம் வானில் பறப்பது உனக்கு அதிசயமாக இல்லையா என்று கேட்டேன். விமானம் ஆகாயத்தில் இருந்து வெடித்துத் தரையில் வீழ்ந்தால் கட்டாயம் வேடிக்கை பார்ப்பேன் என்று பதில் சொன்னான்.

கடந்த காலத்தின் வியப்புகள் எதுவும் இன்று இல்லை. இன்று அரிதாகவே சிறுவர்கள் வியப்படைகிறார்கள். வீடியோ கேம்களில் வெளிப்படும் மிதமிஞ்சிய வன்முறையைத் தவிர, வேறு எதுவும் சிறார்களைக் கிளர்ச்சிகொள்ளச் செய்வது இல்லை.

எத்தனையோ ஆயிரம் முறை ஏதேதோ ஊர்களுக்கு ரயிலில் சென்று வந்தபோதும், அது தரும் மகிழ்ச்சி குறையவே இல்லை. ரயில் பயணம் எதையோ கற்றுத்தருகிறது. ஒவ்வொரு பயணத்தின்போதும் மனசு விகாசமடைவதை உணர்ந்து இருக்கிறேன். ரயில் வேகத்தில் ஓடி மறையும் மரங்கள், தூரத்து அடிவானம், மிதக்கும் சூரியன், பின்னிரவில் ஒளிரும் நிலவு, பாலத்தில் செல்லும்போது தெளிவற்று ஓடி மறையும் ஆறு. எதிரே கடந்து செல்லும் ரயிலில் தோன்றி மறையும் முகங்கள். உறக்கத்திலும் கலந்துவிடும் ரயிலின் ஓசை.

ரயிலும், ரயில் நிலையமும், ரயில் பயணிகளும் என்றைக்கும் வசீகரமாகவே இருக்கிறார்கள். சொல்லப்படாத கதைகள், வலிகள், சந்தோஷங்கள், பிரிவு... ரயில் நிலையங்களில் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்தின் வாசலும் கனவின் நுழைவாயிலே. அது நம்மை எங்கோ அழைத்துப் போகிறது. அல்லது திரும்ப அழைத்து வருகிறது.

ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதும் ரயிலின் வருகையும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களும், நடந்த முக்கியச் சம்பவங்களும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டியவை. இன்னமும் அதை யாரும் முழுமையாக எழுதவில்லை. ரயிலின் வருகை மனிதர்களின் தூரம் செல்ல வேண்டிய பயத்தை விலக்கியது.

கிராமங்களில் சிறுவர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவர் நின்றுகொண்டு ரயில் விளையாட்டு ஆடுவார்கள். அந்த ரயில் எங்கே நிற்கும். யாரை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கும். ரயில் போலவே சத்தமிடுவார்கள். ஒருபோதும் ரயில் ஓட முடியாத கிராமத்தின் வீதிகளில் சிறுவர்களின் ரயில் குதுகுதுவெனச் சத்தத்துடன் ஓடிக்கொண்டு இருக்கும். கேலி செய்வதற்காகச் சில பெண்கள் தாங்களும் ஏறிக்கொள்வதாகச் சொல்வார்கள்.

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44

தங்கள் ரயிலில் பெரியவர்களை ஏற்றிக்கொள்வது இல்லை என்று சிறுவர்கள் மறுத்துவிடுவார்கள். உலகில் எங்காவது சிறுவர்களுக்கு என்று தனியே ரயில் ஓடுகிறதா என்ன? அன்று கிராமங்களில் சிறுவர்கள் ரயில் மண் பாதைகளில் ஓடியது. இருட்டுக்குள்கூடப் பயம் இன்றி ரயில் விளையாட்டுத் தொடரும். நிஜ ரயிலைவிடச் சிறுவர்கள் விளையாட்டு ரயிலை விரும்பினார்கள்.

ரயில் நிலையம் அருகில் உள்ள கிராமங்களை விழிக்கச் செய்வதே ரயில் ஓசைதான். காலை கடந்து செல்லும் ரயிலும் மாலை திரும்பி வரும் ரயிலும் கிராமத்தின் ரயில் நிலையத்தில் நிற்காதபோதும்கூட அந்தச் சத்தம்தான் கடிகாரம்போல அவர்களை இயக்கிக்கொண்டு இருந்தது.

பள்ளிச் சுற்றுலாவுக்கு ரயிலில் அழைத்துச் செல்வார்கள். ரயில் ஜன்னல் முழுவதும் கைகளாக முளைக்க ஊர் போய்ச் சேரும்வரை மாணவர்கள் கூச்சலிட்டபடியே வருவார்கள். அப்போது ரயில் மிக வேகமாகப் போய்க்கொண்டு இருப்பதுபோலவே தோன்றும். ரயிலில் போய்வந்த கதையை நினைத்து நினைத்துச் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

ஒருமுறை பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது ரயில் தண்டவாளத்தில் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு நடக்கலாமா? என்று கேட்டேன் தண்டவாளத்தைவிட்டுக் கீழே இறங்கிவிடாமல் நடக்க வேண்டும், முடியுமா? என்று நண்பன் சவால்விட்டான். ஒப்புக்கொண்டேன். இருவரும் நடக்கத் துவங்கி மெள்ள ஊரைவிட்டு விலகி, நடந்துகொண்டே இருந்தோம். தண்டவாளங்கள் வளைந்தும், நீண்டும், திரும்பியும் போனபடியே இருந்தன. தண்டவாளத்தில் நடப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இருட்டும் வரை நடந்திருப்போம். எங்கள் பின்னால் இருந்த தண்டவாளங்கள் மறைந்துபோயிருந்தன. எங்கே நிற்கிறோம் என்றே தெரியவில்லை. வேலிச் செடிகளும் பனை மரங்களும் வெட்ட வெளியும்கூட இருளில் மறைந்திருந்தன.

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44

நண்பன் செய்வது அறியாமல் அழத் துவங்கினான். ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு அதே ரயில் தண்டவாளத்தில் நடந்து திரும்பிவிடலாம் என்று சொன்னபோதும், அவன் ஆறுதல் அடைய வில்லை. வழியில் ஏதாவது ரயில் வந்துவிட்டால் நம்மை அடித்துப் போட்டுவிடும் என்று பயந்து அழுதான். ரயில் வராது என்று பொய்யாகத் தைரியம் சொன்னேன்.

இருவரும் வேறு வழியில்லாமல் தண்டவாளத்தில் நடக்கத் துவங்கினோம். நாங்கள் பயந்தது போலவே தூரத்தில் ரயில் வருவ தற்கான வெளிச்சம் தெரிந்தது. எங்கே ஒதுங்கி நிற்பது என்று தெரியவில்லை. பயத்தில் தாவி இருட்டுக்குள் குதித்தோம். கண் முன்னே சீற்றத்துடன் ரயில் கடந்துபோனது. ரயிலில் இருந்தவர்கள் எங்களைப் பார்த்திருக்க முடியாது. ஆனால், நாங்கள் ரயிலில் தென்பட்ட முகங்களைப் பார்த்தபடியே இருந்தோம். ரயில் ஓடி மறைந்தவுடன் இருள் மீண்டும் நிரம்பிக்கொண்டது.

தாவிக் குதித்ததில், நண்பன் கீழே விழுந்து கைகளில் சிராய்ப்பு அடைந்திருந்தான். ஆனால், அவ்வளவு நெருக்கத்தில் தண்டவாளத்தில் ஓடும் ரயிலை அதன் முன்பு கண்டதே இல்லை. பயம் அடங்கிக் கிளர்ச்சி மேலோங்கியது. அன்று வீடு திரும்பியபோது மணி ஒன்பதாகி இருந்தது. நண்பனின் வீட்டில் செய்தி தெரிந்து, அவனது அப்பா வீட்டுக்கே வந்து என்னைத் திட்டினார். என்னோடு அவன் பள்ளிவிட்டு வீடு திரும்புவது அன்றோடு முடிந்துபோனது. ஆனால், ரயிலை அவ்வளவு நெருக்கத்தில் கண்ட அந்தக் காட்சி இன்றைக்கும் மனதில் ஒளிர்ந்தபடியே இருக்கிறது.

ரயில் சினேகம் என்பது விசித்திரமான ஒரு குமிழ். அது உருவாகும்போது ஏற்படும் கிளச்சியும் அது வளர்ந்து காட்டும் அழகும் ஒவ்வொருமுறையும் புதிதாகவே இருக்கிறது. நான் அறிந்தவரை உலகிலேயே ரயில் சினேகம்போல மிக வேகமாக வளர்ந்து, வேகமாக முறிந்துபோகும் உறவு வேறு இல்லை.

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44

ஆண்களைவிடப் பெண்கள் ஒருவருக்கொருவர் பார்த்த மறு நிமிடம் பழகிவிடுகிறார்கள். அதுபோலவே உறங்கப் போவதற்குள் பிரிந்தும்விடுகிறார்கள். ஆண்களோ யாரோடு பேசுவது என்று தயங்கித் தயங்கித் தேர்வு செய்கிறார்கள். பிறகு, சிறிய யோசனை. அது கலைந்து ஐந்தாம் நிமிடத்தில் பேசத் துவங்கி, அடுத்த பத்தாம் நிமிடத்தில் வார இதழ்களைப் பரிமாறிக்கொண்டு, அரசியல், சினிமா, நாட்டுநடப்பை விவாதித்தபடியே கொண்டுவந்த உணவைப் பகிர்ந்துகொண்டு நட்பாகிறார்கள்.

இரவு உறங்குவதற்குள் அவரவர் கவலைகள், ஆதங்கங்கள் என வாழ்வின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, விடியும்போது இறங்க வேண்டிய ரயில் நிறுத்தத்தில் முந்தைய நாளின் நினைவு எதுவும் இன்றிப் பிரிந்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பயணத்திலும் யாராவது அறிமுகமாகிறார்கள்.

இப்போது ரயில் சினேகம்கூட அறுபட்டுப்போய் இருக்கிறது. ரயிலில் ஏறினால், அது ஊர் போய்ச் சேரும் வரை செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வாய் ஓயாத செல்போன் உரையாடல்களால் ரயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இன்று ரயில் பயணம் குறித்த கிளர்ச்சியைவிட, குற்றச்சாட்டுகளே அதிகமாகி இருக்கின்றன. வரலாறு, ரயிலையும் சில குறிப்பிட்ட ரயில் பயணங்களையும் தனது கடந்த காலத்தின் மறக்க முடியாத சாட்சியாக வைத்திருக்கிறது. ஹிட்லரின் நாஜி அதிகாரம், யூதர்களை ஆடு மாடுகள்போல கொல்வதற்கு அழைத்துச் சென்ற மரண ரயிலும், தனுஷ்கோடி புயலில் சிக்கிப் பலியான ரயிலும், இன்றும் மனதைத் துயரம்கொள்ளவைக்கின்றன.

அந்த வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் Train to Pakistan. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை யின்போது ஏற்பட்ட வன்முறை யும், கற்பழிப்பும், உயிரிழப்பும் மறக்க முடியாதது. லட்சத்துக்கும் மேலான மக்கள் இதில் பலியாகி இருக்கிறார்கள். இந்தியப் பிரிவினை தமிழ்நாட்டில் வெறும் செய்தி மட்டுமே. வடக்கே பயணம் செய்தால், அதுவும் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் பிரிவினையின் வலி இன்னமும் இருந்துகொண்டே இருப்பதை உணரலாம்.

இந்தத் திரைப்படம் குஷ்வந்த் சிங்கின் நாவலை மையமாகக்கொண்டது. பமீலா ரூக்ஸ் இதை இயக்கியிருக்கிறார். சட்லஜ் ஆற்றின் கரையில் உள்ள மனோ மஜ்ரா என்ற கிராமம் எப்படி இந்தியப் பிரிவினையால் சூறையாடப்படுகிறது என்பதே படத்தின் மையக் கதை. இந்த ஊரில் ஒரு சிறிய ரயில் நிலையம் உள்ளது. லாகூருக்கும் டெல்லிக்கும் இடையில் ஓடும் இரண்டு ரயில்கள் அதைக் கடந்துபோகின்றன. எல்லைப்புறக் கிராமம் அது. இந்தக் கிராமத்தில் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். ஒரே ஒரு இந்துக் குடும்பம் இருக்கிறது.

இந்திய - பாகிஸ்தான் பிரி வினையின்போது இரண்டு பக்கமும் கலவரம் மூள்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளம் பெண்களைக் கூட்டமாக வந்து கற்பழிக்கிறார்கள். எதிர்ப்பவர்கள், அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். உயிர் தப்பி வர ரயிலின் கூரை மீதுகூட ஏறிக்கொள்கிறார்கள். அப்படி லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த ரயிலில் எண்ணிக்கையற்ற மனிதர்கள் உயிரிழந்து, உடமை இழந்து உயிரைக் காப்பாற்றத் தப்பி வருகிறார்கள். இந்தச் சம்பவம், ஒன்றாக வாழ்ந்த கிராம மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டுகிறது. அமைதியாக வாழ்ந்துகொண்டு இருந்த சிறிய கிராமம் பிரிவினை காரணமாகப் பற்றி எரியத் துவங்கி, மயானம் போலாகிறது.

சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44

இந்தியா - பாகிஸ்தான் இரண்டு பக்கத்திலும் வன்முறை ஒன்றுபோலவே இருந்திருக்கிறது. மத, இன அடையாளங்களைத் தாண்டி மனிதர்கள் மீதான வெறுப்பும் வெறியும் தாண்டவமாடி இருக்கிறது. தூண்டிவிடப்பட்ட பேச்சுகள், வதந்திகள், பயம் இவையே வன்முறையின் ஆதார விதைகள். அன்று இருந்த அரசும் அதிகாரமும் இதை ஒடுக்கவே இல்லை. அவர்களது மௌனம் வன்முறையை வளர்த்தெடுத்து இருக்கிறது.

கல்வி, நாகரிகம், அன்பு யாவும் மனிதனுக்கு எதையும் கற்றுத்தரவில்லை என்பதன் வெளிப்படையான சாட்சியாக இருந்தது, இந்திய - பாகிஸ்தான் பிரிவினை. பிரிவினையின்போது காணாமல் போனவர்களைத் தேடும் பணி 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் முடிவடையவே இல்லை. பிரிவினை எனும் இருண்ட அத்தியாயத்தின் ஒரு பகுதியே இந்தப் படம். மனித அவலத்தின் குரலையே இந்தப் படம் வெளிப்படுத்துகிறது.

வரலாற்றில் இருந்து மனிதர்கள் எதையும் கற்றுக்கொள்வதே இல்லை என்பதையே சமகால வன்முறைகள், கலவரங்கள் நிரூபணம் செய்கின்றன. அதற்கும் ரயிலே சாட்சியாக இருக்கிறது!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்

கால்பந்து விளையாடினால் பொழுது போகக்கூடும். ஆனால், அதைவைத்துத் தனது சுற்றுச்சூழலை மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறான், 20 வயது அசோக். மும்பையின் மிகப் பெரிய சேரியில் வசிக்கும் இவன், தன் சுற்றுப்புறத்தில் உள்ள சிறுவர்கள் படிப்பைக் கைவிட்டு, போதைப் பழக்கம் மற்றும் நிழல் உலகக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக அவர்களைக் கால்பந்து விளையாடப் பழக்குகிறான். அவர்களுக்குள்ளாகவே போட்டி நடத்துகிறான். இவனது முயற்சியின் காரணமாக, அம்பேத்கர் நகர் என்ற பகுதியில் இன்று 20-க்கும் மேற்பட்ட கால்பந்துக் குழுக்கள் உருவாகியிருக்கின்றன. அவர்களுக்கான பயிற்சிக்களம், தேவைப்படும் பொருள்கள் மற்றும் தொடர்பயிற்சிகளை அசோக் உருவாக்கித் தந்ததோடு, சிறார்கள் குற்றவாளிகளாக உருவாவதைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறான்!

 
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44
சிறிது வெளிச்சம்! : ரயில் என்றொரு நண்பன்... -எஸ்.ராமகிருஷ்ணன்  - 44