காதலின் விசித்திரம் புரிந்துகொள்ள முடியாதது. 20 வயதில் தோன்றும் காதல் இயற்கையானது. ஆனால், நடுத்தர வயதில் தோன்றும் காதல்? அதை எப்படி எதிர்கொள்வது. எப்படிக் கடந்து செல்வது? 45 வயதில் ஏற்படும் எதிர்பாராத காதல், பல ஆண்களைத் தடுமாறி அலையவைத்திருக்கிறது. தவறான முடிவுகளுக்குக் கொண்டுசென்றிருக்கிறது. அதுபோலவே 30-ஐக் கடந்த பெண்ணுக்கு ஏற்படும் காதலும். குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற இயல்பான உலகில் இருந்து அவளை வெளியேற்றுகிறது. அவளது அன்றாட வாழ்வு சிடுக்கும் சிக்கலும் ஆகிவிடுகிறது.
குடும்பத்துக்காகவும், சமூகக் கட்டுப்பாடுகளுக்காகவும் பெண்ணோ, ஆணோ தங்களது ரகசியக் காதலை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். ஆனால், நடுத்தர வயதில் திடீரெனக் காதல்வசப்படுவது பலருக்கும் நடந்தேறி இருக்கிறது. அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் பின்விளைவுகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் கசப்புமானவை.
தங்கள் வயதை மறந்து அவர்கள் நடந்துகொள்ளும் விளையாட்டுத்தனம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் தங்கள் வயதை நினைத்து அவர்கள் போடும் வேஷங்களும் ஒளிவுமறைவுகளும் இந்தக் காதலைக் குழப்பத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன. அல்லது ஆறாத மன வலியை, ஏமாற்றத்தைத் தருகின்றன.
நடுத்தர வயதின் காதல் அற்ப நாளில் முடிந்து போய்விடும் சிலந்தி வலை போன்றது என்று அறிந்தே காதலிக்கத் துவங்குகிறார்கள். பல நேரங்களில் அதைக் கைவிட முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு துயரப்படுகிறார்கள். நாளிதழ்கள், வார இதழ்களில் காணப்படும் பெரும்பகுதி குற்றச் சம்பவங்களுக்கும் நடுத்தர வயதின் காதலுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது.
யூசுப் சௌராணி என்ற உருது எழுத்தாளரின் 'தொடர்புஎல்லை' என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். காப்பீட்டு வங்கியில் பணியாற்றும் 38 வயதான ஜப்ரா அழகான பெண். திறமையான நிர்வாகி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சொந்த வீடு, சமூக அந்தஸ்து என்று வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டு இருக்கிறது.
ஒருநாள் அவளது காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு வழக்குபற்றிப் புகார் தருவதற்காக இப்ராகிம் என்ற 25 வயது இளைஞன் வருகை தருகிறான். அவன் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றுவதாகச் சொல்கிறான். மற்ற வாடிக்கையாளர்போல இல்லாமல் அவனிடம் ஏனோ ஓர் ஈர்ப்பு அவளுக்கு உருவாகிறது. இப்ராகிமின் பிரச்னையைத் தானே சரிசெய்வதாக ஜப்ரா உறுதி சொல்கிறாள். இப்ராகிம் அடிக்கடி அலுவலகம் வரத் துவங்குகிறான். தொலைபேசியில் பேசுகிறான்.
|