எளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு!
##~## |
''படிப்பு முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தை அம்மா கையில் கொடுத்து,

1,000 மட்டும் தனியாகத் தரும்படி கேட்டேன். 'எதற்கு?’ என்று கேட்டார் அம்மா. 'உன் மகன் மட்டும் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் போதுமா? வாய்ப்பு இல்லாமல் இருக்கும் எத்தனையோ பேருக்கு, வாய்ப்பு கிடைத்த நான் உதவ வேண்டாமா?’ என்று கேட்டேன். மறுபேச்சு பேசவில்லை அம்மா.

என் அலுவலகத் தோழர்களும் கை கொடுக்க,

4,000 சேர்ந்தது. சிறுமூர் என்ற கிராமத்தில் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் சீருடைகளும் வாங்கிக் கொடுத்தோம். அதுதான் துவக்கம்!'' என்கிற கார்த்தீபன் 'எவரெஸ்ட் இந்தியா’, 'சர்வ் இந்தியா’ என்று இரண்டு இணையதளங்கள் மூலம் அமைப்புக்கு உறுப்பினர்களைச் சேர்க்கத் துவங்கினார். இப்போது எவரெஸ்ட் அமைப்பில் 2,526 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இதுவரை 36,192 நபர்களும் பயன் அடைந்து இருக்கிறார்கள்!

ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மட்டும் இணைந்த நிலை மாறி, இப்போது 'எவரெஸ்ட் இந்தியா’வில் கல்லூரி மாணவர்கள், பலதரப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களும் இணையத் துவங்கியுள்ளனர். கல்லூரி மாணவராக இருந்தால், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பது, நிறுவன ஊழியர்கள் என்றால், பள்ளிகளுக்கு வகுப்பறை, குடிநீர் வசதிகள் செய்துகொடுப்பது என்று நீள்கிறது இவர்களின் சேவைப் பட்டியல். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, பொம்மை வேடம் அணிந்து விழிப்பு உணர்வு பிரசாரம் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் உணர்த்துகிறார்கள், இவ் அமைப்பின் பள்ளி மாணவர்கள்.


இவர்களின் சீரிய செயல்பாடுகளுக்கு ஒரு சோறு பதம் உதாரணம்... திவ்யா! செங்கல்பட்டு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, ப்ளஸ் டூ-வில் 1,142 மதிப்பெண்கள் எடுத்து இருந்தும் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. காரணம், பெற்றோர் இல்லாத திவ்யாவுக்கு தாத்தாவின் பென்ஷன் மட்டுமே வாழ்வாதாரம். 'எவரெஸ்ட் இந்தியா’வுக்குத் தகவல் வந்து சேர, இப்போது திவ்யா செங்கல்பட்டில் பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவி. இப்போது, ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்து வருகிறார் திவ்யா.
'வீக் எண்ட்’ என்று வார இறுதிக் கொண்டாட்டங்களில் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் சேர்த்துவைத்தாலே பலரின் கல்விக்கு உதவ முடியுமே என்கிறார்கள் 'எவரெஸ்ட் இந்தியா’வின் இளைஞர்கள். நிஜம்தானே!
- யா.நபீசா
