சொல்வனம்
##~## |
குழாயின்
வட்ட வாயில்
குளிர்ந்து தொங்கும்
ஒரு
சொட்டு இரவை
ஜன்னல் ஊடே நுழைந்த
சொற்ப வெயில்
தாகம் தீரப் பருகுகிறது
கொஞ்சமாக!
- இளங்கோ
தேர்வு மயக்கம்
எதைக் கேட்டு எதைப் பெறுவதென
நமக்குள் குழப்பம் வர
இரு விரல் நீட்டி ஒன்றைத் தொடு என்கிறாய்...
ஒளிரும் உனது இரு விரல்களில்
ஒளிந்திருக்கும் இரவை
எனக்குத் தந்துவிட்டு
நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு!
- ஸ்வரூப் மணிகண்டன்

மழலை இலக்கணம்
நேகா குட்டியோடு
அக்கா வீட்டுக்கு வருகிறாள்
என்று தெரிந்ததும்
புத்தகங்களைக் கிழித்துவிடுவாளென்று
உயரத்தில்
பாதுகாப்பாக வைத்தேன்
வீட்டுக்குள் நுழைந்ததும்
'எப்போ வந்தீங்க...’ என்று கேட்டதற்கு
'நாளைக்கு வந்தோம்...’ என்று
அவள் சொன்னதும்
பாதுகாப்பாக வைத்திருந்த
நன்னூல் புத்தகம்
கிழிந்துபோனது!
- கட்டளைஜெயா
தேநீர் வேளை
காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிக்கொள்கிறான்
மகன்.
சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.
பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.
எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!
- விஜய் மகேந்திரன்
மூன்று தலைமுறை சாவி
அம்மா மாதிரியே
சாவி வைத்திருக்கிறாள் இவளும்
அம்மா திறந்த
கதவையே திறக்கிறாள்
நெட்டுப் பத்தி, பட்டாசாலை
என்பாள் அம்மா
ரேழி, ஹால்
என்கிறாள் இவள்
மற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
கதவைப் பூட்டிக்கொள்கிறாள்
என்ன ஒன்று
திண்ணையில் தூங்கிய அப்பத்தா
சாவியைத் திறகுச்சி என்றாள்
சாவியை சாவி என்றாள் அம்மா!
- பா.ராஜாராம்