மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன் - 38

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன் - 38

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38
சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38
சிறிது வெளிச்சம்!
உங்களை இயக்கும் ஒரே சக்தி?!
சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38
.

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38

யந்து பயந்து சாப்பிடுவதைப்போன்ற கொடுமை உலகில் வேறு எதுவுமே இல்லை. சாப்பாட்டை அள்ளி விழுங்குவது அதற்குச் செய்யும் அவமானம். ஆனால், அந்த அவமானம் பலரது வாழ்விலும் சில முறையாவது நடந்தேறி இருக்கும்.

சார்லி சாப்ளினின் எல்லாப் படங்களிலும் கட்டாயம் சாப்பிடும் காட்சி ஒன்று இடம்பெறும். அதில், சாப்ளின் பசியால் வாடி, எதையாவது திருடிச் சாப்பிட முற்படுவார். யாராவது அவருக்குச் சாப்பாடு போடுவார்கள். அதை யாராவது தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற பயத்தோடு அவர் அவசர அவசரமாக விழுங்குவது மிக வேடிக்கையாக இருக்கும். இது நமக்கு வேடிக்கை. சாப்ளினுக்கோ, அவரது கடந்த வாழ்க்கையின் வடு.

தன்னை எப்போதுமே இயக்கிக்கொண்டு இருக்கும் ஒரே சக்தி பசிதான் என்கிறார் சாப்ளின். 'கோல்டு ரஷ்' என்ற சாப்ளின் படத்தில், பசி தாங்க முடியாத ஒரு தங்க வேட்டைக்காரன், சாப்ளினை ஒரு கோழியென நினைத்து, அடித்துச் சாப்பிடத் துரத்துவான். அவனிடம் இருந்து தப்பி ஓடுவார் சாப்ளின். அவராலும் தனது பசியைத் தாங்கிக்கொள்ள முடியாது. வேறு வழி இல்லாமல், தனது பூட்ஸை வேகவைத்துச் சாப் பிடுவார். தோலால் ஆன பூட்ஸை அவர் ரசித்துச் சாப்பிடும்போது, அவரது முகத்தில் தோன்றி மறையும் ஆனந்தம் மனிதனின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று.

இன்றைக்கும் சில வயதானவர்கள், ஓரமாக யாரும் பார்க்காமல் தனியே உட்கார்ந்துதான் சாப்பிடுகிறார்கள். அதற்குக் காரணம், தன்னை யாராவது உற்றுப்பார்க்கிறார்களோ என்ற சந்தேகம். அதுபோலவே இன் னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டால், ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்து டன் சாப்பிட்ட தட்டை வெறித்துப் பார்ப்பார்கள். பசியோடு உள்ளவர்களின் கண்கள் பேசக்கூடியவை. அவை வார்த்தைகள் இல்லாமல் யாசிக்கின்றன.

உலக யுத்தத்தின்போது, ரஷ்யப் படை ஒன்று ஜெர்மன் எல்லைக்குள் நுழைகிறது. ரஷ்ய ராணுவ வீரன் ஒருவனுக்குக் கால் உடைந்துபோகிறது. அவனது படைப்பிரிவு அவனைத் தனியே விட்டுவிட்டுப் போய்விடுகிறது. வீரனால் நடந்து போக முடியவில்லை. பசியும் தாங்க முடியவில்லை. கையில் துப்பாக்கி மட்டுமே இருக்கிறது. ஏதாவது சாப் பிடக் கிடைக்குமா என்று, கைக ளால் ஊன்றி ஊன்றி அலைந்து, நான்கு நாட்கள் தேடுகிறான். எதுவும் கிடைக்கவில்லை.

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38

ஓர் இரவு, அவன் கையூன்றி நடந்தபோது தொலைவில் ஒரு வீடு கண்ணில் தென்படுகிறது. பதுங்கிப் பதுங்கி அந்த வீட்டை நெருங்கிச் சென்று, துப்பாக்கி முனையில் அங்குள்ள வயதான ஜெர்மனியப் பெண்ணை மிரட்டுகிறான். அவள் தன்னிடம் உணவு எதுவும் இல்லை என்று சொல்கிறாள். 'ஏதாவது சாப்பிடத் தா! இல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்' என்று கத்துகிறான். அந்தப் பெண் தன்னிடம் இருந்த தானியத்தைக்கொண்டு சூடாகக் கஞ்சி தயாரித்துத் தருகிறாள்.

கஞ்சியைக் கண்டதும், ராணுவ வீரன் வாய்விட்டுக் கதறி அழுகிறான். அவனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கேவிக் கேவி அழுகிறான். அந்தப் பெண் ஒரு குழந்தையைத் தூக்கிவைத்து உணவு புகட்டுவதைப்போல, ரஷ்ய வீரனுக்கு உணவு புகட்டுகிறாள். சாப்பிட்டு முடித்துவிட்டு, அவன் தன் துப்பாக்கியைத் தூக்கி எறிந்துவிட்டு, அவள் கால்களைப் பற்றிக்கொண்டு, 'பசியோடு அலைந்தபோது கடவுள் என்ற ஒருவர் உலகில் இல்லை என்று ஆத்திரமாகக் கத்தினேன். இப்போது கடவுள் இருப்பதை உணர்கி றேன். நீதான் எனது கடவுள்!' என்று புலம்புகிறான்.

பசியின் முன்னால் நண்பர்கள் - எதிரிகள் இல்லை. நம் வயதும் படிப்பும்கூடக் காணாமல் போய்விடுகிறது. பசித்த வயிறுதான் உலகை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளத் தவறும் புள்ளியில் இருந்தே பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

'இரண்டு குழந்தைகள்' என்று ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதிஇருக்கிறார். பசியைப்பற்றிய மிக அற்புதமான கதை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்ச காலத்தில் பிழைக்க வழியில்லாமல் சிவப்பி என்ற பெண் தன் குழந்தையோடு தஞ்சைப் பகுதிக்குச் செல்கிறாள். அங்கே ஓடியாடி வீட்டு வேலைகள் செய்கிறாள். கிடைத்ததைவைத்து வயிற்றை நிரப்புகிறாள். அவளுக்கு ஒரு பையன். எப்போதும் அம்மாவின் இடுப்பிலே தொற்றிக்கொண்டு இருக்கிறான்.

ஏதாவது வேலை வரும்போது பையனை ஓர் இடத்தில் உட்காரவைத்து, அவன் கையில் ஒரு முறுக்கைக் கொடுத்துவிட்டு சிவப்பி அந்த வேலையைக் கவனிக்கப் போய்விடுவாள். சிவப்பி எங்கே சுற்றினாலும், மதிய நேரம் சுப்பையர் வீட்டுக்குப் போய்விடுவாள். அதற்கு முக்கியக் காரணம், அவர்கள் வீட்டில் கிடைக்கும் வடித்த கஞ்சி. அந்தக் கஞ்சியின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்தமானது. அதற்காகத் தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டுபோய் வடிகஞ்சியை யாசிப்பது வழக்கம்.

சுப்பையரின் மனைவிக்கு அவள் மீது வாஞ்சை உண்டு. ஆனால், சுப்பையர் வடிகஞ்சியில் நாலைந்து பருக்கைகள் சேர்ந்து விழுந்துவிடுகின்றனவா என்று கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கக்கூடியவர். வடிகஞ்சியைக் குடித்தே இந்தப் பெண் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறாளே என்று எரிச்சலும் படக்கூடியவர்.
அதனால், மனைவி யாரோ ஒரு வேலைக்காரப் பெண்ணுக்கு வடிகஞ்சியைத் தானம் கொடுப்பதைத் தாங்க முடியாமல், 'இனிமேல் சாதத்தைப் பொங்கிவிடு. வடிக்காதே!' என்று திட்டுகிறார். 'ஒரு குவளை வடித்த கஞ்சியைத் தருவதால் என்ன

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38

குறைந்துவிடப்போகிறது?' என்று மனைவி மறுமொழி தரும்போது, 'நெல்லு ஒண்ணும் உங்க அப்பன் வீட்டில் இருந்து வந்ததில்லை' என்று குத்திக்காட்டுகிறார். இதனால், அந்த வீட்டில் வடிகஞ்சிச் சண்டை நித்தம் நடைபெறுகிறது.

ஒருநாள் மதியம், பசி தாங்க முடியாமல் சிவப்பி அந்த வீட்டின் வாசலில் நின்று குரலிடுகிறாள். அன்று சுப்பையர் வீட்டில் விருந்து. ஆகவே, அவர்கள் அவளைக் கவ னிக்கவே இல்லை. குழந்தை பசி தாங்க முடியாமல் கதறுகிறது. சிவப்பியைக் கண்ட மாமி, அவளைக் கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்றச் சொல்கிறாள். வேறு வழி இல்லாமல் அவள் குழந்தையை வாசலில் பசியோடு உட்காரவைத்துவிட்டுப் போகிறாள். வேலைக்காரியின் பிள்ளை இவ்வளவு திடமாக, ஆரோக்கியமாக இருக்கிறானே என்று அந்தக் குழந்தையின் மீதும் ஐயருக்கு எரிச்சல். ஆகவே, அவனை ஒரு விளையாட்டுப் பொம்மை போலத் தன் பேத்திக்கு வேடிக்கை காட்டுகிறார்.

வேலைக்காரியின் மகனோ, நோஞ்சானாக உள்ள சுப்பையரின் பேத்தி அழுவதைக்கண்டு வாய்விட்டுச் சிரிக்கிறான். அதை அவரால் தாங்க முடியவில்லை. அந்தக் குழந்தையை அவமானப்படுத்த, சாப்பிட்ட எச்சில் இலையில் கிடக்கும் ஜாங்கிரியை எடுத்துச் சாப்பிடும்படியாகத் தூண்டிவிடு கிறார்.

குழந்தை, இனிப்பு கிடைக்கிறதே என்று எச்சில் இலையில் கிடந்த ஜாங்கிரியை எடுத்துச் சுவைக்கிறான். இதைக் கண்டு ஓடி வரும் சிவப்பி, 'உனக்காகத்தானே நான் உழைத்து உயிரைவிடுகிறேன். ஏன் இப்பிடி எச்சில் இலையில் உள்ளதை எடுத்துத் தின்கிறாய்?' என்று மகனை அடிஅடியென அடிக்கிறாள். அந்தச் செயலுக்குக் காரணம் யார் என்று அவளுக்குத் தெரிகிறது. அவரைக் கோபத்துடன் முறைத்து விட்டு, தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு போகிறாள். அதன் பிறகு, அந்த வீட்டுக்கு சிவப்பி வரவேயில்லை என்று கதை முடிகிறது.

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38

பசி எப்போதுமே அவமானத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது என்பதையே இந்தக் கதை மறுபடியும் நினைவு படுத்துகிறது. இன்னொரு பக்கம் குழந்தைகளைக்கூட பேதம் பார்க்கவும், அவர்களின் பசியை ஏளனம் செய்யவும் பழகி இருக்கிறோம் என்ற அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரம், எளிய மனிதர்கள் பசித்த வயிறுடன் இருந்தாலும், தன்மானத்தை இழப்பதில்லை என்பதையும் கதை நினைவூட்டுகிறது.

பசித்த மனிதனின் கண்கள் உலகை எரிக்கின்றன. அவன் தன் பசியை வாய்விட்டுச் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், உலகம் தன்னை ஏன் இவ்வளவு கீழான நிலையில்வைத்திருக்கிறது என்று உள்ளூர அழுகிறான். காரணம் அறியாமல், தன் மீதே கோபப்படுகிறான்.

சில ஆண்டுகளுக்கு முன், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் பட்டறையில் ஒரு மெக்கானிக்கைப் பார்த்தேன். அவர் நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். 'ஏன், அப்படி உட்கார்ந்து சாப்பிடலாமே?' என்றேன். 'இப்படியே பழக்கமாகிவிட்டது சார்' என்று சிரித்தார். '18 வயதில் இதுபோல ஒரு மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்த போது, ஒருநாளும் என்னை உட்கார்ந்து சாப்பிடவிட மாட் டார்கள். தினமும் மதியச் சாப்பாடு நாலு மணிக்குத்தான் கிடைக்கும். அதுவும் நின்றபடியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் முதலாளி கத்துவார். அப்படியே பழகிவிட்டது. சொன்னால் சிரிப்பீர்கள், வீட்டில்கூட நான் உட்கார்ந்து சாப் பிடுவதில்லை' என்றார்.

உழைப்பு அந்த மனிதரை இன்று முதலாளியாக்கி இருக்கிறது. ஆனால், பசி ஆறாத அடிமனது இன்றும் அவரை நிற்கவைத்திருக்கிறது. இந்த ஆறாத ரணம், பலரையும் இன்றும் சாப்பிடும் வேளைகளில் பதற்றம்கொள்ளவைக்கிறது. பசியின் சரித்திரம் மிகப் பெரியது. அதை எழுதித் தீர்த்துவிட முடியாது.

Chicken ala Carte என்ற குறும்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். ஆறு நிமிடங்களே ஓடக்கூடியது. உலகின் மிகச் சிறந்த குறும்படங்களில் ஒன்றாக விருது பெற்றிருக்கிறது. இரவு நேரம் இரண்டு இளம் பெண்கள் ஓர் உணவகத்துக்குச் செல்கிறார்கள். சாப்பிடுவதற்காகப் பொரித்த சிக்கன் மற்றும் சாதம் ஆர்டர் செய்கிறார்கள். சூடான உணவு தயாராகி வருகிறது. அதை எடுத்து இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் செல்போன் அடிக்கத் துவங்குகிறது. யாருடனோ பேசியபடியே அந்தப் பெண்கள் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியேறிப் போகிறார்கள்.

இரவில் வீணடிக்கப்பட்ட உணவுப்பொருட்களைச் சேகரித்துச் செல்ல தள்ளுவண்டியில் ஒரு மனிதன் வருகிறான். அவன் குப்பைத்தொட்டியில் இருந்து மீதமான உணவைச் சேகரித்துப் போகிறான். அதே நகரின் இன்னொரு பகுதியில் வசிக்கும் பசித்த வயிறுடைய ஏழைக் குழந்தைகள் இந்த உணவை நாய்களுடன் போட்டியிட்டு அள்ளிப் பகிர்ந்து சாப்பிடத் துவங்குகின்றன. அந்தக் குழந்தைகளின் தலையில் சோற்றுப்பருக்கைகள் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. யாரோ தின்றுபோட்ட கோழிக்கறி தனக்குக் கிடைத்ததற்குக் குழந்தை கடவுளுக்கு நன்றியுடன் பிரார்த்தனை செய்கிறது. ஆசையோடு உணவைச் சாப்பிட்டு மனம் நிறைந்து சிரிக்கிறது.

சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38

'இந்தச் சிரிப்பு எனக்கு அழுகையைத் தூண்டுகிறது' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. 'ஒவ்வொரு நாளும் பசியால் உலகில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவே, உணவை வீணடிக்காதீர்கள்' என்ற வாசகத் தோடு படம் நிறைவுபெறுகிறது.

பெரும்பான்மைத் திருமண வீடுகளில் உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. ஒருவர் எவ்வளவு சாப்பிட முடியும் என்பதைத் தாண்டி, தான் எவ்வளவு பணம் படைத்தவர் என்பதைக் காட்டுவதற்காகவே விருந்து அளிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் கோயிலில் மாலை மாற்றித் திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை, பெண் உள்ளிட்ட குடும்பம் ஹோட்டலில் அளவுச் சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கிச் சாப் பிடும் காட்சியும் கடந்துபோகிறது.

அன்றாடம் உணவகம், வீடுகள் என்று வீணடிக்கப்படும் உணவின் அளவு, நாம் உட்கொள்ளும் அளவைவிட அதிகமானது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் எங்கோ உலகின் மூலையில் இருந்து பசித்த கண்கள் நம்மை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதை உணருங்கள். உணவு, வெறும் பொருள் அல்ல... அது அக்கறை! அது உயிர் வளர்க்கும் சக்தி. பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய சந்தோஷம். அந்த நினைவு இருந்தால் நாம் பசியைப் புரிந்துகொள்ளவும் ஆற்றுப்படுத்தவும் முடியும்!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

சித்த மனிதர்களைப்பற்றியே கவலைப்படாதவர்கள் மத்தியில் பசித்த நாய்கள், பூனைகள், பறவைகள் உள்ளிட்ட 750 உயிரினங்களுக்குத் தினமும் உணவு படைத்துவருகிறார் கென்யாவைச் சேர்ந்த பவுல் ரவுசபெங்கா. இவர் தெரு நாய்கள், பூனைகள் போன்றவற்றுக்கு மூன்று வேளையும் உணவு தருகிறார். இதற்காக அண்டை அயலார் வீட்டில் மீதமான உணவைச் சேகரிப்பதுடன், தெருவில் நின்று பிச்சையும் எடுக்கிறார். தனது யாசித்தல் காரணமாக மிருகங்கள் சந்தோஷமாக வாழ்கின்றன என்று பெருமையுடன் கூறும் இவர், உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் தன்னுடையது என்கிறார் மலர்ச்சியாக!

 
சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38
-
சிறிது வெளிச்சம்! - உங்களை இயக்கும் ஒரே சக்தி?! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 38