மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! : கோபிநாத் - 08

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! : கோபிநாத் - 08

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! : கோபிநாத் - 08
நீயும்... நானும்! : கோபிநாத் - 08
கோபிநாத், படம் : 'தேனி'ஈஸ்வர்
நீயும்... நானும்!
நீயும்... நானும்! : கோபிநாத் - 08
.
நீயும்... நானும்! : கோபிநாத் - 08

2004 டிசம்பர் 26... 'கடல் தண்ணீர் ஊருக்குள்ள வருது, சீக்கிரமா ஓடியாங்க' என யாரோ ஒரு நண்பர் போன் பண்ண... கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். ஏதோ கடல் உள்ளே வந்திருக்கும். பார்க்க அழகா இருக்கும் என்றெல்லாம் கற்பனை.

நான் போய்ச் சேர்வதற்குள் ஆழிப்பேரலை நிறைய பேரைக் கொன்று ஏப்பம் விட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் அழுகுரல்களும் அரற்றலும், காணாமல் போனவர்களைத் தேடி உறவுகள் வயிற்றில் அடித்துக்கொண்டு அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு ஓடியதை நினைத்தால், இன்னமும் மனசு வலிக்கிறது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் எல்லாப் பக்கங்களிலும் பிணங்கள். கனவுகளோடு வளர்க்கப்பட்ட பிள்ளைகள், கடற்கரைக்கு வாக்கிங் போன பெரியவர்கள் எனச் சடலங்கள். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தோடு போன எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இந்த ரணம் ஆறவே ஆறாது. இனி என்ன செய்யப் போகிறார்கள்... அவ்வளவுதான், வாழ்க்கை முடிஞ்சு போச்சு... இந்த இழப்பில் இருந்து மீளவே முடியாது என்று எல்லோர் மனதிலும் அழுத்தமாகப்பட்டது. சென்னையில் மட்டுமல்ல... நாகப்பட்டினம், கடலூர் என்று எங்கு பார்த்தாலும் மரண ஓலம்.

டி.வி-யைப் போட்டால், இலங்கையில் இவ்வளவு பேர் மரணம்... தாய்லாந்தில் எண்ணிலடங்காச் சடலங்கள் என்று செய்திகள். எல்லா இடங்களிலும் அந்த நேரம் தோன்றிய எண்ணம் 'வாழ்க்கை முடிஞ்சுபோச்சு' என்பதுதான். ஆனால், அந்தத் துயரங்களின் வலி ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தான் இருக்கிறோம்.

இப்படி 'எல்லாம் முடிஞ்சுபோச்சு' என்று நினைக்கவைத்த சம்பவங்கள் எத்தனையோ. ஆனால், அத்தனையும் கடந்து, காலம் நம்மை அடுத்த இடத்தை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறது. இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று எண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ முறை இங்கு வந்தது உண்டு.

வரலாற்றில் மட்டுமல்ல... தனி மனித வாழ்க்கையிலும் 'இனி ஒன்றுமே இல்லை என்று' வாழ்க்கை ஒரே இடத்தில் தங்கிவிடுவது இல்லை. ஆனால், எல்லாம் முடிந்துவிட்டது என்ற கவலையும் ஆற்றாமை யும் அடுத்த இடத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.

காயப்பட்ட மனமும் அதனால் சுணங்கிப் போயிருக்கும் மூளையும், இழந்ததைப்பற்றியே தீவிரமாகக் கவலைகொள்கிறது... வருந்துகிறது... சுயபச்சாதாபத்தோடு ஒரே இடத்தில் முடங்கிவிடச் செய்கிறது. இழப்பைப்பற்றி வருந்துகிற மனசும் மூளையும் இழப்புக்கான காரணத்தை யோசிக்க அனுமதிப்பது இல்லை. பிசிலி நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் ஒரு விஷயம் சொல்வார், 'நீ தடுமாறி விழுவது தவறே இல்லை. ஆனால், எந்த இடத்தில் தடுமாறினோம்... ஏன் விழுந்தோம் என்பதற்கான காரணத்தைக் கண்டறிவது அவசியம்!'

இழப்பின் சோகத்தைச் சுமப்பதில் நமக்கு அலாதிப் பிரியம் உண்டு. நிறையப் பேர் ஆறுதல் சொல்வார்கள். அனுசரணையான வார்த்தைகள் கிடைக்கும். 'பாவம், எல்லாத்தையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறான்' எனச் சில இடங்களில் சிறப்புக் கவனிப்பு கிடைக்கலாம். ஆனால், எல்லாம் எத்தனை நாளைக்கு... அவர்களுக்கு அடுத்த வேலை வரும் வரை.

சோகத்தைச் சுமப்பது சுகமாக இருப்பதால், இழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில் ஆர்வம் இருப்பது இல்லை. இன்றைக்கும்கூட சுனாமி சுருட்டிக் கொண்டுபோன உயிர்களைப்பற்றிய கவலையையும் வலியையும் சுமக்கிற நாம், 'சுனாமி வந்ததற்கான காரணம் என்ன, மீண்டும் சுனாமி வந்தால் பாதிப்பு இல்லாமல் இருக்க என்ன வழி? அதற்கு சமூகரீதியாக என்னுடைய பங்கு என்ன?' என்பது குறித்து தீவிரமாக யோசித்தது இல்லை.

நீயும்... நானும்! : கோபிநாத் - 08

சுனாமியால் தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் இறந்தார்கள்? தாய்லாந்தில் எத்தனை பேர் மடிந்தார்கள்? இலங்கையில் உயிர் இழப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு, சுனாமி என்றால் என்ன? அது இன்னொரு முறை வராமல் தவிர்க்கவோ, வந்தால் பாதிப்பு இல்லாமல் பிழைக்க என்ன வழி என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை.

ஆனால், காலம் காட்டும் பாதையில் பயணிக்கிறபோது இந்தக் கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறோம். 'இழந்ததை நினைத்து ஒன்றும் ஆகப்போவது இல்லை' என்று ஒரு நிலையில் தேற்றிக்கொள்கிறோம். அடுத்தடுத்து வரும் பிரச்னைகள், தேவைகள், அவசரங்கள், பொறுப்புகள் இப்படிப் பல்வேறு சமூகக் காரணிகளும், காலத்தின் துணையோடு நம்மை வேறு ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன.

நீயும்... நானும்! : கோபிநாத் - 08

இந்தப் பயணத்தில் நாம் கவனிக்காமல்விட்டது ஒன்றுதான்... அது இழப்புக்கான காரணம். துக்கத்தில் இருந்து மீண்டு வருவதே பெரிய சாதனை என்று நினைக்கிறோம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், காலம் அந்த வேலையைச் செய்துவிடும்.

நாபாம் குண்டுகளால் வியட்நாமில் விளைந்த மரணங்கள், ஹிட்லரின் ஆணைப்படி உலகெங்கும் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது, இரண்டாம் உலக யுத்தம் தந்துவிட்டுப் போன பேரழிவு, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவிகள், ஹீரோஷிமா - நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டால் ஏற்பட்ட எண்ணற்ற உயிரிழப்புகள், இப்படி எல்லா பெரிய இழப்புகளுக்கும் காலம் மருந்து தந்திருக்கிறது.

இழந்ததை நினைத்தே ஜப்பான் அழுதுகொண்டு இருந்திருந்தால் இன்றைக்கு இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்க முடியாது. எல்லாம் முடிஞ்சுபோச்சு. அதனால் என்ன, இனி புதுசா வாழ்க்கையைத் தொடங்குவோம் என்று நம்பிக்கையோடு உழைக்க ஆரம்பித்ததன் அடையாளம்தான், நம் வீடுகளில் ஓடிக்கொண்டு இருக்கும் சோனி டி.வி. அந்த நம்பிக்கையின் வேகம் இன்று அணுகுண்டால் ஏற்பட்ட தலைமுறை பாதிப்புகளை நீக்குவதற்கான கண்டுபிடிப்புகள் வரை நீண்டு இருக்கிறது.

இந்த பூமிப் பந்தில் ஒளிந்துகொள்ளக்கூட இடம் இல்லை. இனி, வாழ்க்கையே இல்லை என்று இருந்த யூதர்கள்தான், இன்று அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறார்கள். 'முடிஞ்சுது கதை' என்று முடங்கிப்போயிருந்தால், இன்று இஸ்ரேல் இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அமெரிக்காவை ஆட்டிவைக்கிற யூத குலம் இழந்ததைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கவில்லை. கண்ணீரைத் துடைத்துவிட்டுக் களத்தில் இறங்கியது.

இழப்புகளின் கவலைகளில் இருந்து மீள்வதைக் காலம் பார்த்துக்கொள்ளும். அது தானாக நடக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும், இனி இப்படி நேராமல் இருக்க வேண்டும் என்று சிந்திப்பதும் செயல்படுத்துவதும்தான் ஆறாவது அறிவின் அடையாளம்.

இரண்டாம் உலகப் போர் எவ்வளவோ இழப்புகளையும் காயங்களையும் தந்துவிட்டுப் போயிருந்தாலும், உலகத்துக்கு ஓர் உண்மையையும் சொல்லிவிட்டுப்போனது. 'போர் என்று ஒன்று நடந்தால், அது இரு தரப்புக்கும் இழப்பைத் தருகிற தவறாகும்.' அழு குரல்களை நிறுத்திவிட்டு, ஆத்திரங்களை அடக்கிக்கொண்டு, இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்ற புரிதலோடு உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை. 'இழப்புகளின் கவலைகளில் இருந்து மீளாமல், எதிர்காலத்தைத் திட்டமிட முடியாது' என்பார் ராபர்ட் ஹீப்பர்.

இழப்புகளின் வலிகளோடு, அதே இடத்தில் தங்கிவிட்டால் என்ன ஆவது. எத்தனை நாள் கவலையோடு இருப்பீர்கள்? எத்தனை நாள் அழ முடியும்? எத்தனை நாள் நினைவுகளோடு உங்கள் பயணம் தொடரும்... கண்ணீரைத் துடைத்துவிட்டு, உங்கள் பயணத்தைத் தொடருங்கள். காலம் உங்கள் காயங்களுக்கு மருந்துபோடும்.

ஆனால், இனியரு முறை இப்படி இழப்பு நேராமல் இருப்பது காலத்தின் கையில் இல்லை... நம் கையில் இருக்கிறது.

அப்படிச் செய்திருந்தால் என் வாழ்க்கை இப்படி இருந்திருக்கும்... 'ப்ளஸ் டூவில் மட்டும் ஆயிரத்துக்கு மேல் வாங்கியிருந்தால் என் வாழ்க்கையே திசை மாறி இருக்கும்'. 'அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா?' 'போச்சு... எல்லாம் போச்சு... அத்தனையும் எரிஞ்சுபோச்சு. நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.' 'என் மனைவி மட்டும் அன்றைக்கு அவங்க

நீயும்... நானும்! : கோபிநாத் - 08

அப்பாகிட்ட இருந்து பணம் வாங்கிக் கொடுத்திருந்தா, இப்படி அல்லல்பட வேண்டியது இல்லை.' 'நாலு மார்க் சார்... வெறும் நாலு மார்க், அந்த காலேஜ் கரஸ்பாண்டன்ட் மனசு வெச்சிருந்தா நான் இன்ஜினீயர் ஆகியிருப்பேன்.' 'திட்டமிட்டபடி விசா கிடைச்சிருந்தா?' 'ஆசைப்பட்டபடி லாட்டரி அடிச்சிருந்தா?'

எதிர்பார்த்தபடி நடந்திருந்தால் எல்லாமே நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அதுதான் நடக்கவில்லையே.

நடக்காததைப்பற்றிய, இழந்ததைப்பற்றிய கவலையும் சோகமும் உங்களை மேலும் முன்னேறிப் பேசவிடாமல் முட்டுச்சந்தின் மூலையில் நிறுத்தி இருக்கிறது.

துரோகம் செய்த நண்பன், கைவிட்டுப் போன காதலி, அவசரத்தில் உதவாத உறவுக்காரர்களின் கயமை... இப்படி நிறைய வலிகள் அடுத்த நிலைக்கு நகர விடாமல் நம்மை நிறுத்திவைக்க அனுமதிப்போம் என்றால், நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அதிகாரத்தை இழந்துவிடுகிறோம்.

இழப்புகளின் வலியும் அதன் வீரியமும் நம் எதிர்காலத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலையை ஏற்படுத்துவதைவிட அபத்தம் வேறு இல்லை.

இந்த உலகில் ஒன்று மட்டுமே சாசுவதம் 'எல்லாம் கடந்து போகும்!'

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும்... நானும்! : கோபிநாத் - 08
நீயும்... நானும்! : கோபிநாத் - 08