மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 40

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 40

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40
சிறிது வெளிச்சம்!
கசப்புச் சுவர்!
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40
.
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

ங்கள் வீட்டுக்கும் உங்களது பக்கத்து வீட்டுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கிறது? அதிகபட்சம் ஐந்தடியோ பத்தடியோ இருக்கக்கூடும். ஆனால், உண்மையில் பக்கத்து வீட்டுக்கும் நமக்குமான இடைவெளி சீனப் பெருஞ்சுவரைவிடப் பெரியது. அகற்ற முடியாத கசப்புச் சுவர் அது.

ஒவ்வொரு குடும்பமும் தனது அண்டை வீட்டை வெறுக்கிறது என்பதுதான் நம் காலத்தின் நிஜம். அந்த வெறுப்பின் புற அடையாளமாகவே நமது கதவுகள் எப்போதும் சாத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும், அவர்கள் நம்மைக் கண்காணிக்கிறார்கள். நாம் அவர்களைக் கண்காணிக்கிறோம். ஒருவரையருவர் புறம் பேசுகிறார்கள். வாய் ஓயாது குறை சொல்கிறார்கள். எல்லை மீறிப் போனால் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.

அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள் ஒன்றையன்று நேசிக்கின்றன. ஒரே வீடுபோலச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஒன்றாக உல்லாசப் பயணம் செல்கிறார்கள். ஒன்றாகப் புத்தாடை வாங்குகிறார்கள். ஒருவர் துயரத்தை மற்றவர் ஆறுதல்படுத்துகிறார்கள் என்பது எல்லாம் கடந்த காலத்தின் கதைகள். அப்படி நடந்தது என்று சொன்னால்கூட இன்று நம்ப எவரும் தயாராக இல்லை.

யோசிக்கையில் வெகு ஆச்சர்யமாக இருக்கிறது. 30 வருடங்களுக்கு முந்தைய தலைமுறை இன்று உள்ளவர்களைப்போல படிப்போ, சம்பளமோ, உயர்ந்த வேலையுடனோ இருக்கவில்லை. வாடகை வீடுகள். எட்டுப் பத்துக் குடும்பங்கள் அருகருகே வசிக்கும் நெருக்கடியான ஒண்டுக் குடித்தனங்கள் அதிகம் இருந்தன. அதுபோன்ற வீடுகளில் விருந்தாளி வந்தால் படுக்க இடம் இருக்காது. சைக்கிள் நிறுத்த இடம் இருக்காது.

ஆனால், அந்த நெருக்கடிக்குள்ளாக அடுத்த வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், பக்கத்து வீட்டில் இருந்து அவசரமாக பாலோ, காபிப் பொடியோ கடனாகக் கிடைக்கக்கூடும். இரவில் படுப்பதற்குப் பாயும் தலையணையும்கூடக் கடன் கிடைக்கும். ஒருவர் வீட்டில் உடல் நலமில்லை என்றால், மற்றவர் வீட்டில் கஷாயமோ, கஞ்சியோ செய்து தருவார்கள். சிறுவர்கள் பேதமில்லாமல் எவர் வீட்டிலும் போய்ச் சாப்பிட்டு வருவதும் நடக்கும்.

சண்டைச் சச்சரவுகள் ஏற்படுவது உண்டு. ஆனால், அன்றாடக் கோபங்கள். உடனே வடிந்துவிடக்கூடியவை. ஒரு குடும்பம் இடம் மாறி இன்னொரு ஊர் போகையில், அந்த ஒண்டுக் குடித்தனமே அந்தப் பிரிவின் வேதனையை அனுபவிக்கும். பிரிந்துபோனவர்களும்கூட மறக்காமல் கடிதம் எழுதுவார்கள். பின்பு புதிய குடித்தனம் ஒன்று அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிடும். அண்டை வீட்டுக்காரர் ஏதோ ஒரு வகையில் நண்பர், உறவினர், என்ற அடையாளங்கள் தாண்டி நெருக்கமும் அக்கறையும்கொண்டவர்களாக இருந்தார்கள்.

இன்று உள்ள மாநகரச் சூழலில் பக்கத்து வீடு என்பது இன்னொரு கதவிலக்கம் மட்டுமே. அவசரத்துக்கு காலிங்பெல் அடித்து ஏதாவது கேட்கும்போதுகூட அவர்கள் சினமேறிய முகத்துடன் பதில் பேச மறுக்கிறார்கள்.

இன்று பக்கத்து வீட்டில் யாரும் கடன் கேட்பதுஇல்லை. கறிவேப்பிலை, கொத்துமல்லி பரிமாறிக்கொள்வதுகூடப் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. நாம் பக்கத்து வீட்டுக்காரர் ரொம்ப இறுக்கமாக சிடுமூஞ்சியாக இருக்கிறார் என்று புகார் சொன்னால், அவர் இதுபோலவே நம்மைப்பற்றிய ஒரு புகார்ப் பட்டியலை வைத்திருக்கிறார்.

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

இந்தக் கசப்பும் வெறுப்பும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருகிறதே அன்றி, துளியளவுகூட மாறுவதாக இல்லை. அடுத்தவரின் வளர்ச்சியும், சந்தோஷமும், உற்சாகமும் ஏனோ பலருக்கும் பிடிக்காமல்தான் இருக்கிறது. யாரோ வாய்விட்டுச் சிரிக்கும்போது யாரோ ஆத்திரப்படுகிறார்கள். சிரித்தவன் ஒழிய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். பரஸ்பர நேசம், பகிர்ந்துகொள்வது, அன்புகாட்டுவது என்பதெல்லாம் வெறும் அலங்காரச் சொற்கள் ஆகிவிட்டன.

உண்மையில் பக்கத்து வீட்டை நாம் ஏன் வெறுக்கிறோம்? அவர்கள் காலிசெய்து போய்விட வேண்டும் என்று உள்ளூர ஏன் ஆசைப்படுகிறோம்?

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஓர் உண்மைச் சம்பவத்தினை வாசித்தேன். பெர்லின் நகரில் வில்ஹெம் என்ற வயதானவர் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியே வசித்து வந்தார். அவரது எதிர் வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டில் கல்லூரி வயதில் ஒரு பையனும் பெண்ணும் இருந்தார்கள். அவர்கள் இரவானதும் பலத்த சத்தத்துடன் இசை கேட்கத் துவங்குவார்கள். அதை வயதானவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் சில நாட்கள் எதிர் வீட்டுக் கதவைத் தட்டித் திட்டுவார். சண்டை போடுவார்.

அப்படி அவர் கோபம்கொண்டால், அன்று இரவு முழுவதும் பாட்டு போடுவார்கள். போலீஸில் புகார் செய்து பார்த்தார். அதிலும் விடிவு ஏற்படவில்லை. அது தனது சொந்த வீடு என்பதால், அங்கிருந்து வெளியேறிப் போகவும் முடியவில்லை.

ஆகவே, ஒவ்வொரு நாள் இரவும் அவர் தாள முடியாத கோபமும் ஆத்திரமும்கொண்டார். ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்யும் தொல்லைகளை ஒரு நோட்டில் எழுதி, ஆவணப்படுத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்தார்.

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

காரை நிறுத்துவதில் பிரச்னை. தனது வீட்டுச் செடிகளில் இருந்து பூ பறிப்பதில் தகராறு. அவர்கள் வீட்டு நாய் அவரது கதவில் மூத்திரம் போன பிரச்னை. குடித்துவிட்டு வந்து கத்துவது, புதிய ஆட்களை அழைத்து வந்து பார்ட்டி கொடுப்பது. காலியான மதுபுட்டிகளை உடைத்துப் போட்ட சிக்கல் என்று அவர் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போனார். ஆறு மாதங்களில் அவரது நோட்டு நிறைந்துபோனது.

ஓர் இரவு, வில்ஹெமைத் தேடி அவரது நண்பர் வந்திருந்தார். அவரிடம் அந்த நோட்டைத் தந்து புகார்களை அடுக்கியபோது அவர் சிரித்தபடியே, 'நீ சொல்வதெல்லாம் உண்மை. எனக்கும் இதுபோலவே பிரச்னை இருக்கிறது. உண்மையில் இது உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. ஆனால், இதற்கு ஒரு பாதிக் காரணம் அவர்கள். மறுபாதி நீதான். நீ யாரும் இல்லாத தனிமையில் இருப்பதுதான் இந்தப் புகார்கள் அத்தனைக்குமான ஆரம்பக் காரணம்.

யோசித்துப் பார், நீயும் 20 வயதில் அந்தப் பையன்போலவே சத்தமாக இசை கேட்பதிலும், கால்பந்து விளையாடி அழுக்கான காலணியோடு, மிகத் தாமதமாக நள்ளிரவில் வீடு திரும்பித் தொந்தரவு செய்பவனாகவே இருந்தாய். அன்று உனது அண்டைவீட்டார் உன்னைப்பற்றி என்னென்ன புகார்கள் வைத்திருந்தார்களோ, அதே புகார்கள்தான் இன்றைக்கு நீ எழுதிவைத்திருக்கிறாய். இவ்வளவு பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அது சகித்துக்கொள்ள முடியாமை.'

ஆம், நம்மால் அடுத்தவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதேபோல அடுத்தவர்களுக்கு நம்மைச் சகித்துகொள்ள முடியவில்லை. இதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆணி வேர். ஒருவருக்குஒருவர் பேசிக்கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் எதுவும் இல்லை என்று நினைக்கிறோம். ஒருவேளை

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

அப்படியான சந்தர்ப்பம் உருவாகும்போதுகூட, அதை வெறும் சம்பிரதாயமாகக் கருதிவிடுகிறோம். நமது வீடுகள் கல்லறைப் பெட்டிகளைப்போல இறுக்கமடைந்துவிட்டதற்கு இதுவே காரணம்.

குகை மனிதர்கள் நம்மைப்போல அழகான, ஆடம்பரமான வீடுகள் கட்டி வசிக்கவில்லை. ஆனால், சேர்ந்து வசித்தார்கள். பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒன்றாக ஆடிப் பாடி சந்தோஷம்கொண்டார்கள்.

நாம் குடியிருப்பைக் கல்லறைத் தோட்டம்போலாக்கி வைத்திருக்கிறோம். எங்கோ ஒரு நடன அரங்கில் முகம் தெரியாத ஆளோடு ஆடி சந்தோஷம்கொள்கிறோம். கடற்கரையில் அறியாத நபர் அருகில் அமர்ந்து பேசிவிட முடிந்த நம்மால், அருகாமை வீட்டுக்காரனை ஏன் நேசிக்க முடியவில்லை?

முக்கியக் காரணம், நமது அந்தரங்கத்தின் மீதான நமது பயம். நமது பலவீனங்களும், ஆத்திரமும் மற்றவர் அறிந்துவிடக் கூடாது என்பதில் காட்டும் கவனம். பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டின் கண்ணாடிபோல் இருக்கிறான். அவனுக்கு நம் வீட்டில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள், பிரச்னைகள் யாவும் காதில் விழுகின்றன. அவன் அதைப் பரிகசிக்கக்கூடும் அல்லது புறம்பேசக்கூடும் என்ற எண்ணம் உருவாகிறது. அதுவே, இந்த வெறுப்பை வளர்ப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. வயதான வில்ஹெம் இப்போது அந்தக் குடியிருப்பில் கேளிக்கைக் குழு ஒன்றை உருவாக்கி, இளைஞர்கள் ஆடிப் பாடுவதை ரசிக்கிறார். மற்றவர்களுடன் சேர்ந்து விருந்து உண்ணவும், விளையாடவும் துவங்கிவிட்டார். இப்போது அவரது வீட்டுக்குத் தினமும் மாலையானதும் இளைஞர்கள் கூட்டம் வரத் துவங்கிவிட்டது என்று அந்தக் கட்டுரை புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தது. இதுதான் பக்கத்து வீட்டுக்காரர் பிரச்னையைச் சமாளிப்பதற்கான ஒரே வழியா? இல்லை, இதுவும் ஒரு வழி.

58 வருடங்களுக்கு முன்பாக ஒரு குறும்படம், ஆஸ்கர் விருது பெற்றது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய படம். அதை இயக்கியவர் நார்மன் மெர்க்லென். படத்தின் பெயர் Neighbours. இன்று இப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. பக்கத்து

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

வீட்டுப் பிரச்னை எந்த அளவு விஸ்வரூபம் எடுக்கும் என்பதே கதை.

பசுமையான புல்வெளி நிரம்பிய ஓர் இடத்தில் இரண்டு வீடுகள் அருகருகே இருக்கின்றன. இரண்டு வீட்டுக்காரர்களும் படித்தவர்கள். இருவரும் வாசலில் சாய்வு நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு இயற்கையை அனுபவித்தபடியே பேப்பர் படிக்கிறார்கள். ஒருநாள் இரண்டு வீட்டுக்கும் நடுவே ஒரு மஞ்சள் நிறப் பூ பூத்திருப்பதை இருவரும் காண்கிறார்கள். வலதுபுறம் உள்ள வீட்டுகாரர் அதைக் குனிந்து முகர்ந்து பார்த்து ரசிக்கிறார். உடனே, இடது பக்க வீட்டுக்காரர் குனிந்து, தானும் அதுபோல நுகர்ந்து அனுபவிக்கிறார்.

இரண்டு பேருக்கும் அந்தப் பூ யாருக்குச் சொந்தம் என்று சண்டை உண்டாகிறது. உடனே, வலதுபக்க வீட்டுக்காரர் தன் வீட்டில் இருந்து ஒரு வேலி போடுகிறார். பூ அவரது பக்கம் வந்துவிடுமாறு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதைக் கண்டு ஆத்திரமான இடது வீட்டுக்காரர், அந்த வேலியைச் சிதைத்து புதிய வேலி ஒன்றைப் போடுகிறார். அதனால் ஆத்திரமான வலது வீட்டுக்காரர் ஆயுதத்தை எடுத்து வந்து இடது பக்க வீட்டுக்காரரைத் தாக்குகிறார். உடனே, அவரும் ஓர் ஆயுதத்தை எடுத்துச் சண்டை போடுகிறார். இருவரும் மண்டையை உடைத்துக்கொள்கிறார்கள். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. மாறி மாறி வெட்டிக் கொள்கிறார்கள். உடலெங்கும் ரத்தம் பீறிடுகிறது.

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

ஒருவர் மற்றவர் வீட்டில் புகுந்து அவர் மனைவி மற்றும் கைக்குழந்தையைக் கொல்கிறார். மற்றவரும் அப்படியே செய்கிறார். இருவரும் பரஸ்பரம் வீடுகளை நொறுக்குகிறார்கள். அந்த இடம் போர்க்களம்போல் ஆகிறது. முடிவில் இருவரும் இறந்துபோகிறார்கள். அந்த இடத்தில் இரண்டு கல்லறைகள் முளைக்கின்றன. அந்தக் கல்லறையின் மீது பூ அமைதியாக அசைந்துகொண்டு இருக்கிறது.

50 வருடங்களுக்கு முன்பாக சுட்டிக்காட்டப்பட்ட இந்தப் பிரச்னை இன்று மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. எங்கோ இருக்கும் செவ்வாய்க் கிரகத்தில் யாராவது வாழ்கிறார்களா என்பதில் காட்டும் அக்கறையும் இணையத்தின் வழியே முகம் தெரியா நபர்களுடன் நட்பாவதில் காட்டும் அக்கறையும் ஏனோ அண்டை வீட்டாரிடம் தோற்றேபோகிறது. தீர்க்கப்பட வேண்டிய இந்தச் சிக்கல் கண் முன்னே ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. இதற்கான தீர்வு நமது விருப்பத்திலும் சகிப்புத்தன்மையிலும் அக்கறையிலுமே இருக்கிறது!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம்!

சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40

ஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் நிக் வியூசிக், கை கால்கள் இல்லாதவர். பிறவியிலேயே கை, கால்கள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் போய்விட்டன. இந்தக் குறைபாட்டினைக்கண்டு மனம் ஒடிந்துவிடாமல், தொடர்ந்து படித்து இரண்டு பட்டங்கள் பெற்றதோடு, சிறந்த நீச்சல் வீரராகவும் இருக்கிறார். கால்கள் இல்லாமல் நீந்துவது வியப்பானதில்லை. நீந்துவதற்கு மனதுதான் முக்கியம் என்கிறார். இசை, விளையாட்டு, படிப்பு என்று உற்சாகமாக இயங்கும் நிக், ஆர்வமும் தொடர்ந்த முயற்சியும் புதிய கனவுகளுமே தன்னை வழிநடத்துகின்றன என்கிறார்!

 
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40
சிறிது வெளிச்சம்! - கசப்புச் சுவர்! -எஸ்.ராமகிருஷ்ணன்  - 40