மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 02

நீயும் நானும்
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 02


30-12-09
. நீயும்... நானும் !
நீயும் நானும்!  - 02
நீயும் நானும்!  - 02
கோபிநாத் படம் : 'தேனி' ஈஸ்வர்
எனர்ஜி பக்கங்கள்
நீயும் நானும்!  - 02
.

நீயும் நானும்!  - 02

உலகின் இளமையான தேசம்... மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதிப் பேர் இளைஞர்கள். உலகின் வேறெந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு மாபெரும் சக்தி. இருந்தாலும், இங்கே ஒரு புலம்பல் தொடர்ந்து கேட்கிறது... ''இந்தக் காலத்து இளைஞர்கள் பொறுப்பாக இல்லை!''

ரெட் சிக்னல் விழுந்ததும், எல்லோரும்வண்டி யின் வேகத்தைக் குறைக்கும்போது, எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்து சடாரென்று சிக்னலைக் கடக்கிற யமஹா இளைஞனைப் பார்க்கிறபோது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

கலர் கலராக லைட் தோரணம் தொங்கவிடப்பட்டுள்ள ஹோட்டல்களில், வெளிநாடா இது என்று நினைக்கும் அளவுக்குப் பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட ஆடம்பர அலுவலகங்களில்,கையில் காபி கோப்பையோடு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு இருக்கும் இளைஞர்களைப் பார்க்கும் போது, இவர்களின் சம வயது உள்ள நகர வாசனை அறியாத நண்பர்களின் வாழ்க்கைத் தரம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழும்.

ஒரு பழைய லாரி டயரில் வெள்ளைபெயின்ட் டில் வட்டமாக, 'இங்கு பங்ச்சர் ஒட்டப்படும்' என்று தானே எழுதிவிட்டு... யாராவதுசைக்கி ளைத் தள்ளிக்கொண்டு வருகிறார்களா என்று ஆவலாகப் பார்க்கிற பையன்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

'உன்ன மாதிரிப் பயதானே அவனும். நீயும் இருக்கியே' என்ற வசவுகளைக் கேட்டுக்கொண்டே, அவன் வீட்டிலும் இரவுச் சாப்பாடு நடக்கும். ஆனால், கைநிறையச் சம்பாதிக்கிற அந்தயமஹா பையனுக்கும், பணம் சம்பாதிக்க முடியாதபங்ச்சர் ஒட்டும் பையனுக்கும் சேர்த்தேதான் இந்தப் புலம்பல் நடக்கிறது. ''இந்தக் காலத்துஇளைஞர் களுக்குப் பொறுப்பே இல்லை!''

புரோநோட்டில் கையெழுத்துப் போட்டு கல்லூரிக் கட்டணத்துக்குப் பணம் வாங்கித் தந்த அப்பாவையும், அவரின் நைந்துபோன வேட்டி யையும் நினைத்துக்கொண்டு கல்லூரிக்குப் போகிற இளைஞனுக்கும், காரில் வந்து இறங்குகிற இளைஞனுக்கும் சேர்த்தே சொல்லப்படுகிறது, ''பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள்'' என்று.

போட்டிகள் நிறைந்த உலகத்தில் நன்றாகப் படித்து, கேம்பஸில் தேறி 25 ஆயிரம் ரூபாய்சம்பளத் துக்கு ஐ.டி-யிலோ, பேங்க்கிலோ வேலைக்குப் போய்விட வேண்டும் என்பதுதான் பொறுப்பாக இருப்பதற்கான இலக்கணம் என்றால், இங்கே நிறைய இளைஞர்கள் பொறுப்பாக இல்லைதானே. பொறுப்பாக இருப்பதன் அடையாளம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவைக்கப்பட்டதுதான், இளைஞர் கூட்டங்களைத் தனித்தனித் தீவுகளாக ஆக்கி இருக்கின்றன.

நீயும் நானும்!  - 02

அமெரிக்காவும், ஐரோப்பாவும் பார்த்துப்பயந்து கிடக்கிற இந்த இளைஞர் சக்தி, 'சம்பாதித்தால் போதும் - சௌகர்யமாக வாழலாம்' என்று இந்த வட்டத்துக்குள் செக்கு மாடாகச் சுற்றி வருகிறது. தன்னலம் பேணுதல் சரிதான். ஆனால், தன்னைத் தாண்டி, தன் வீட்டுக்கு வெளியே, வீதி, ஊர், மாநிலம், தேசம் என்று எல்லைகள் கடக்க எழுந்து வர முடியாமல் அந்த வட்டம் வாழ்க்கையைச்சுருக்கி விடுகிறது.

இந்த உலகம் நமது பலங்களை அறிந்துவைத்துஇருப்பதைப்போல, நமது பலவீனங்களையும்அறிந்தே இருக்கிறது. இடமும் வலமும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க முடியாத அளவுக்கு இளைஞர் கூட்டத்தை ஏ.டி.எம். மெஷின் ஆக்குவதற்கான வேலைகள் ஜரூராக நடக்கின்றன. அப்புறம்எப்படி இந்தப் புலம்பலை நிறுத்துவது?

விளைவு, கட்-ஆஃப் மார்க்குகளுக்கு மத்தியில் சமூக சிந்தனைகள் செத்துப்போகின்றன. விளைவு, இளைஞன் பொறுப்பாக இல்லை என்று குடும்பமும், சமூகமும் ஒருசேரப் புலம்புகின்றன!

சர்வதேசச் செய்தியாளர் மாநாட்டுக்கு அமெரிக்கா போயிருந்தேன். அப்போதைய அமெரிக்க உள் துறை அமைச்சரான காலின் பாவலைச் சந்திக்க நேர்ந்தது. சர்வதேசச் செய்தியாளர்களுடன் ஒரு விருந்து. அப்போது பேச்சுவாக்கில் அவர் ஒரு விஷயம் சொன்னார், ''இந்திய இளைஞர் சக்தி ஒன்றிணைக்கப்பட வேண்டும்!''

இதை யாரோ ஒருவரின் பார்வையாக எடுத்துக்கொள்வதற்கு இல்லை. காரணம், இந்தியாவின் பலங்களையும் பலவீனங்களையும் அங்குலம் அங்குலமாக அளந்துகொண்டு இருக்கும் அமெரிக்காவின் பார்வை இது.

இன்றைக்கும் அடுத்தவனுக்கு ஒன்று என்றால் ஓடிப் போய் நிற்கிற கூட்டம்தான் நாம். சக மனிதனைத் தீவிரமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள்தான். அந்த நேசிப்புதான் நியாயமாக நடந்துகொள்ளச் சொல்கிறது. வாஞ்சையாக வாழச் சொல்கிறது.

சமூகத்தின் ஏழ்மை மீதும் இயலாமையின் மீதும் அக்கறை எடுத்துக்கொள்ள சொல்லித்தரப்படாத இளைஞன், எப்படிக் குடும்பத்தின்மீது அக்கறையோடு இருக்க முடியும்? 'எப்படியாவது நீ பிழைச்சுக்கோ' என்ற அறிவுரைகள், இளைஞர்கள் தங்களைத் தனித்தனி வியாபார கேந்திரங்களாகப் பார்க்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறது. ஆளப் பிறந்தவர்களை... வெறுமனே வாழப் பிறந்தவர்களாக ஆக்கியிருப்பது யார்?

வண்டலூர் ஜூவில் ஒரு சிங்கம் இருந்ததாம். சிங்கம் என்பதால், அதற்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். மாட்டுக் கறி, ஆட்டுக் கறி என்று தினமும் தடபுடல் விருந்து. ஒருநாள் அந்த சிங்கத்தை அமெரிக்க ஜூவுக்கு மாற்றினார்கள். புதிய ஜூவுக்கு வந்த சிங்கத்துக்கு முதல் நாள் கேரட்டையும் பீட்ரூட்டையும் தின்னக் கொடுத்தார்கள். சரி தான் முதல் நாள் என்பதால் இப்படித் தருகி றார்கள் என்று சிங்கம் நினைத்தது.

ஆனால், பீட்ரூட்டும் கேரட்டும் மட்டும் மாறவே இல்லை. கோபமான சிங்கம், உணவு தருபவரிடம், ''என்னய்யா கிண்டலா பண்றீங்க? நான் சிங்கம்... காட்டுக்கே ராஜா. எனக்கு மாட்டுக் கறி தர வேண்டும்'' என்று சண்டை போட்டதாம். உணவு தருபவர் பொறுமையாகச் சொன்னாராம், ''நீ சிங்கம்தான். உனக்கு விருந்து வைக்கணும்தான். ஆனா, நீ இங்கே வந்தது ஒரு குரங்கோட பாஸ்போர்ட்டில். அதனால, உனக்குக் குரங்குக்குத் தருவதுதான் கொடுக்க முடியும்!''

இப்படி நாமும் நிறைய நேரம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து, குரங்கின் பாஸ் போர்ட்டில்தான் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். இத்தனை கோடி இளைஞர்களை வைத்துக்கொண்டு, அறிவும், திறமையும், இளமையும், தகிக்கிற ஆற்றலையும் வைத்துக்கொண்டு, விவரம் புரியாமல் விழுந்துகிடப்பது யதார்த்தமான உண்மை தானே.

நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சம்பாதித்தல்தான் வாழ்க்கை என்று பயிற்று விக்கப்பட்டு இருக்கிற சமூகத்தில், நம்பிக்கை தரும் இளைஞர்கள் நாலாபக்கமும் இருக்கிறார்கள். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்கிறார்கள்.

நீயும் நானும்!  - 02

''யாருக்காவது ரத்தம் வேணும்னா, உடனே வர்றோம். என்ன எமெர்ஜென்சின்னாலும் கூப்பிடுங்க'' என்று விசிட்டிங் கார்டு நீட்டுகிறார்கள். கிராமங்களைத் தத்து எடுத்து சனி, ஞாயிறுகளில் அங்கு தங்கி, அதன் மேம்பாட்டுக்காக உழைக்கிற இளைஞர் கூட்டம் நிறைய இருக்கிறது. பார்வைச் சவால்கொண்ட மாணவர்களுக்காக பரீட்சை எழுதித் தருகிற மாணவர்கள் என இளைஞர் கூட்டம் தன்னால் இயன்றதைத் தொடர்ந்துசெய்து கொண்டேதான் இருக்கிறது.

'டி.வி-ல உங்க ஷோவைப் பார்த்துட்டு உங்க ஆர்குட் கம்யூனிட்டியில் இருக்கிற இளைஞர்கள் எல்லாம் ஒண்ணுசேர்ந்து, ஓர் அமைப்பைத் தொடங்கி இருக்கோம். சமூகத்துக்காக நிறையச் செய்யப்போறோம்' என ஒரு இ-மெயில் பார்த்தபோது,பெருமிதமாகஇருந்தது.

கேளிக்கைகளிலும்கொண்டாட்டங்களிலும் இளைஞர்கள் விழுந்துகிடக்கிறார்கள் என்பதை முழுமையாக ஏற்பதற்கு இல்லை. அவர்களின் ஆற்றல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே நிதர்சனம்.

சம்பாதிப்பதற்காகக் கொடுக்கப்பட்டு இருக்கிற வேலைகளின் பளுவுக்கு இடையே இளைஞர் கூட்டத்துக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. இன்டர்நெட்டில் முகம் தெரியாத மனிதர்களுடன் நட்பு வளர்க்கிற, ஐ-பாடில் இசை கேட்கிற, டைட் ஜீன்ஸில் 'ஹே லக்கி' பேசுகிற இளைஞர்களின் வெளிப்பாடுகளும் தோற்றங்களும் மாறியிருக்கலாம். மனசு மாறவில்லை என்று நம்பலாம்.

விருப்பமான நாயகர்களின் திரைப்படங்களை ரசிக்க விரைகிற இளைஞர் கூட்டம், சிக்னல்களைக் கடக்கிறபோது, 'இந்தப் பக்கம் ஆயிரம் குடிசைகள் இருக்கே? இவங்க எல்லாம் எப்படிச்சாப்பிடு வாங்க?' எனச் சிந்திக்கச் சில நொடிகள் போதும்.

அந்தக் கவனிப்பு கரிசனத்தைத் தரும். பொறுப்பைச் சொல்லித் தரும். உலகில் அதிகம் இளைஞர்களைப் படிக்கவைத்திருக்கிறது இந்தியா.ஆனால், இன்னமும் நாம் வேலைக்கார நாடுதான். சட்டையில் வைத்திருக்கிற பேனாவில் தொடங்கி, காலில் போட்டிருக்கிற ஷு வரை அதிகமானவை வெளிநாட்டுத் தயாரிப்புகள்தான்.

அறிவும் உழைப்பும் ஒருங்கே சேரப்பெற்ற இந்த இளைஞர் கூட்டம் இன்னமும் கட்-அவுட் கட்டப் பயன்படுத்தப்படும் கயிறுகளாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. காரணம், 'இவனுங்க எப்பவுமே இப்படித்தான்... ஒண்ணாச் சேர்ந்து எதுவும் பண்ண மாட்டானுங்க!' என்று உலகம் புரிந்துவைத்திருக்கிறது.

'சக்தே இண்டியா' படத்தில் ஒரு காட்சி வரும்... இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் ஃபார்வர்டு பிளேயர்கள் இரண்டுபேருக்கும் தனித்தனியே வெல்ல வேண்டும் என்பது ஆசை. அதனால், ஒருவருக்கொருவர் பாஸ் கொடுக்க மாட்டார்கள்.

இறுதி ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் கோமல் பந்தைத் தட்டிக்கொண்டு கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறுவார். ப்ரீத்தீ, ''பாஸ் கொடு'' என்று கத்துவார். கோமல் அதைக் கேட்காமல் தொடர்ந்து ஓடுவார். அதைப் பார்க்கிற ஆஸ்திரேலியன் கோச், தன் கோல்கீப்பரிடம், ''கோமல் பாஸ் கொடுக்க மாட்டாள். நீ முன்னே வந்து தடு!'' என்று கத்துவார்.

ஆஸ்திரேலியன் கோல்கீப்பர், கோல்போஸ்ட்டைவிட்டு வெளியே வந்து கோமலை நெருங்க... அப்போது கோமல், ''ப்ரீத்தி நாம் யாரென்று அந்த முட்டாளுக்குக் காட்டு!'' என்று கத்தியபடியே பந்தை ப்ரீத்திக்கு பாஸ் கொடுப்பார். ப்ரீத்தி கோல் அடிக்க, இந்தியா ஜெயிக் கும்.

ஆனந்தமும் பெருமையும் நெஞ்சை அழுத்தி நம் கண்கள் குளமாகும்...

வேறென்ன சொல்ல..?

நாம் யாரென்று நிறைய முட்டாள்களுக்குக் காட்டவேண்டி இருக்கிறது நண்பர்களே!

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும் நானும்!  - 02
நீயும் நானும்!  - 02