மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 03

நீயும் நானும்
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 03


கோபிநாத் படம்.'தேனி' ஈஸ்வர்
நீயும் நானும்!  - 03
எனர்ஜி பக்கங்கள்
.நீயும்...நானும்!
நீயும் நானும்!  - 03
நீயும் நானும்!  - 03

கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு பேட்டி. "உங்கள் துறையில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டேன்.

"என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. அது உங்கள் பார்வைதான். இந்த வருடம் எனக்குத் தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையில் வெற்றியாகக் கருதினால், அடுத்த வருடம் எனக்குக் கிடைக்க£மல் போனால், அது தோல்வியாகக் கருதப்படலாம். என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்!'' என்றார்.

தோல்வி என்பதும் வாழ்வின் ஒரு சம்பவம் என்று எல்லோராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிவது இல்லை. காரணம், தோல்வியை யாரும் கொண்டாடுவது இல்லை. வெற்றி என்பது என்ன, தோல்வி என்பது என்ன என்ற இரண்டையும் யாரோதான் தீர்மானிக்கிறார்கள். அந்த அளவுகோலுக்குள் நாம் செய்கிற வேலையை அடக்க முயற்சிக்கும்போது மூச்சு முட்டுகிறது. இலக்கு, குறிக்கோள், அதை அடைவதற்கான முயற்சி அத்தனையும் என்னுடையதாக இருக்கும்போது அதன் வெற்றி, தோல்வியை எப்படி அடுத்தவர் தீர்மானிக்க முடியும்? ஆனால், அப்படித்தானே நடக்கிறது!

வெற்றி என்பது அடுத்தவருக்கு நிரூபித்துக் காட்டுவதற்கான விஷயம் என்கிற எண்ணம் மாறாத வரை, தோல்விகளின் வலிகளில் இருந்து விலகி இருக்க முடியாது. இந்த உலகத்துக்கான மாபெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய யாரும் ஊருக்கு நிரூபிப்பதற்காக அதைச் செய்யவில்லை. செய்கிற வேலையில் அவர்களுக்கு இருந்த தீராக் காதல் அவர்களைத் தொடர்ந்து போராடவைத்தது.

'ஆசைப்பட்டதை எங்க செய்யவிடுறாங்க? அப்பாவுக்காக இன்ஜினீயரிங் படிக்கிறேன்', 'நான் டாக்டர் ஆகணும்கிறது எங்க அம்மாவோட ஆசை. கிடைக்கலை. அதனால, பி.ஏ., ஹிஸ்ட்ரி படிக்கிறேன்'...

நீங்களோ, நானோ யாருக்குமே ஆசைப்பட்டது அனைத்தும் கிடைத்துவிடுவது இல்லை. ஆனால், 100-க்கு 80 பேர் ஆசைப்பட்டதை நோக்கிய பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறோம். 'அவ்வளவுதான், முடிஞ்சுபோச்சு' என்று அவசர முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

விரும்பிய விஷயத்தின் மீது ஆழமான, ஆத்மார்த்தமான ஈர்ப்பு இருக்கும் என்றால், அது எப்படியும் நம்மிடம் வந்துதானே ஆக வேண்டும். இருந்தாலும் பாதிக் கிணறு தாண்டுவதற்குள் பயந்து திரும்பிவிடுவதற்கான காரணம், பயம். செய்கிற வேலையில் காதல் இல்லாமல் செய்கிறபோது தடைகளும், சவால்களும் பயமுறுத்துகின்றன. ஆத்மார்த்தமாகச் செய்யும்போது அவை உத்வேகம் தரும் அனுபவங்களாக மாறுகின்றன.

அந்தப் பெண் யாரென்றே தெரியாது. எந்த ஊர்? எங்கு படிக்கிறாள்? அம்மா, அப்பா, யார்? அண்ணன்காரன் அடிப்பானா? இதெல்லாம் தாண்டி அந்தப் பெண்ணுக்கு என்னைப் பிடிக்குமா? ஏரியா பசங்க பிடிச்சு உதைச்சா தப்பிக்க முடியுமா? நம்ம வீட்டுல சாமியாடுவாங்களே? 'அதெல்லாம் எனக்குத் தெரியாது... அந்தப் பொண்ணு எனக்கு வேணும். என் வாழ்க்கை முழுக்க வேணும்' என்று எப்படி ஒரு மனசுக்குத் தோன்றுகிறது?

பிடித்த விஷயத்தை அடைய வேண்டும் என்பதில் இருக்கிற ஆழமான ஈடுபாடு. நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல; எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.

வரலாறுதான் கஜினி முகம்மது 16 முறை தோற்றதாகச் சொல்கிறது. ஆனால், கஜினி முகம்மது 16 முறை முயற்சித்து 17-வது முறை சோமநாதபுரத்தைக் கைப்பற்றினான் என்பதுதான் விஷயம்.

நீயும் நானும்!  - 03

நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான் என்று தேமே என்று வாழ்ந்தால், அதில் என்ன சுவாரஸ்யம்? மோதாமல், முழங்கையில் அடிபடாமல், வியர்க்காமல் வாழ்க்கை போகுமென்றால் போரடிக்காதா? 'விரும்பியது கிடைக்காமல் போய்விட்டால்...' என்கிற தோல்வி பயத்தோடே வாழ்க்கை பயணித்தால் அதில் என்ன அர்த்தம் இருக்கும்?

கெவின் கேர் நிறுவனத்தின் எம்.டி. ரங்கநாதன் ஒரு விஷயம் சொன்னார்... "நீங்கள் செய்துகொண்டு இருக்கிற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஈடுபாட்டோடு நடக்கவில்லை என்றால், நீங்கள் தேடிக்கொண்டு இருப்பது இதுவல்ல. முதலில், உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடியுங்கள். அதைவிட முக்கியமானது, இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையை இன்னும் ஈடுபாட்டோடு செய்யுங்கள். அந்த பேலன்ஸ் ரொம்ப முக்கியம்!''

நம் இளைய தலைமுறைக்கு இந்த பேலன்ஸ்தான் பெரிய பிரச்னை. நினைத்தது கிடைக்கவில்லை என்ற வெறுப்போடு, இருப்பதையும் ஈடுபாடு இல்லாமல் செய்துகொண்டு இருப்பது. இடறி விழுவது பிரச்னையே இல்லை. எழுந்து நிற்கமுடியாது என்ற அவநம்பிக்கை தான் பிரச்னை.

தீராக் காதலுடன் ஒரு வேலையைச் செய்யும்போது அதன் ஒவ்வொரு படி நிலைகளும் அடுத்தவரால் தோல்வி என்று சொல்லப்பட்டாலும், அதன் தாக்கம் ஏதுமின்றி வெற்றியின் அருகில் நாம் வந்துவிட்டதை உணரமுடியும்.

உலகத்தின் பார்வையில் யார்தான் தோற்கவில்லை? எடிசன் தோற்றார்; ஃபோர்டு தோற்றார்; நெப்போலியன் தோற்றார்; ஆபிரகாம் லிங்கன் தோற்றார்; கார்ல் மார்க்ஸ் தோற்றார். பலரும் 'நீ தோற்றுவிட்டாய்' என்று சொன்னபோது வெற்றிக்கு அருகில் வந்துவிட்டதை அவர்களுக்கு உணரவைத்தது, செய்கிற பணியில் இருந்த நேசிப்பு.

நீயும் நானும்!  - 03

''20th Century Fox' நிறுவனத்துக்காகப் படம் பண்ணப்போகிற இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை முன்பு பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். "டைரக்டர் இன்னும் வரலை, வெயிட் பண்ணுங்க'' என்றார்கள்.

கொஞ்ச நேரத்தில் பழைய டி.வி.எஸ். 50-யில் ஒரு பையன் வந்தார். "ஸாரி சார்... கொஞ்சம் லேட்டாயிடுச்சு'' என்று தன்னை அவர் அறிமுகம்செய்துகொண்டபோது, இந்த சின்னப் பையனா டைரக்டர் என்று தோன்றியது. பேச ஆரம்பித்த பிறகுதான் அவருடைய தன்னம்பிக்கையும், சினிமா மீதான அவரின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டையும் உணர முடிந்தது.

"எட்டு வருஷம் போராடி இருக்கீங்க. 'போதும்டா சாமி. ஊருக்குப் போயிடலாம் என்று தோன்றியது இல்லையா?'' என்று கேட்டேன். "போயிருக்கலாம். ஆனா, எனக்கான கதவு நாளைக்குத் திறக்கலாம். நான் இன்னிக்குப் போயிட்டேன்னா, என்னோட எட்டு வருஷ உழைப்பு போச்சே!'' என்றார்.

உங்கள் இலக்கு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாக இருக்கலாம். இப்போது நீங்கள் அந்த இடத்தைத் தொடுவதற்கான எந்தத் தடயமும் தெரியாமலும் இருக்கலாம். அதற்காக உங்கள் சாம்ராஜ்ய தாகத்தை தணித்துக்கொள்ளாதீர்கள். செய்கிற வேலையை ஈடுபாட்டோடு செய்துகொண்டே இருங்கள்.

'எதுவுமே செய்வதற்குத் தகுதியான வேலைதான், அதனை ஈடுபாட்டோடு செய்கிறபோது!' என்று சொன்ன மார்ட்டின் லூதர் கிங், 'நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதனை நேர்த்தி யோடும், ஈடுபாட்டோடும் செய்! சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப்பற்றிப் பேசவைக்கும்!' என்கிறார்.

இப்போது என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு இருங்கள். உங்கள் இலக்கை நோக்கிய பயணம் ஈடுபாட்டோடு இருக்கட்டும்.

ஆம், நண்பர்களே... வருங்காலம் நம் வாசலுக்கு வரும் காலம் வரும்!

- ஒரு சிறிய இடைவேளை

 
நீயும் நானும்!  - 03
நீயும் நானும்!  - 03