மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை எஸ்.ராமகிருஷ்ணன் - 35

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை எஸ்.ராமகிருஷ்ணன் - 35


எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியங்கள் : அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35
அடிமனதில் அமிழ்ந்த ஆசை !
சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35
சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

கற்றுக்கொள்வதைப்பற்றி எப்போது நினைத்தாலும் மனதில் ததும்பும் ஒரு புத்தகம்... 'டோட்டோ சான்'. ஜப்பானிய மொழியில் டெட்சுகோ குரோயாநாகி எழுதி பல லட்சம் பிரதிகள் விற்பனையான இந்தப் புத்தகம், தமிழிலும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு வீட்டில் அம்மாக்கள் போராடுவதையும், அழுது வீங்கிய முகத்துடன் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதையும் காணும்போது இந்தப் புத்தகம்தான் நினைவுக்கு வரும்.

பள்ளிக்கூடம் ஏன் பயமாகிப்போனது? வகுப்பறையைவிட்டுத் தப்பி ஓடுவதைப்பற்றியே ஏன் மாணவன் நினைத்துக்கொண்டு இருக்கிறான்? அச்சம் இல்லாத இயல்பான பள்ளிகளே உலகில் கிடையாதா? 1937-ல் டோக்கியோவில் அப்படி ஒரு பள்ளி இருந்தது. அதன் பெயர் டோமாயி. அதை உருவாக்கியவர் கோபயாஷி. அந்தப் பள்ளியில் படித்த ஒரு மாணவி எழுதிய புத்தகமே 'டோட்டோ சான்'.

இது ஒரு 'மாதிரிப் பள்ளி'. ஆறுரயில் பெட்டிகளை வாங்கி வந்து, அதையே வகுப்பறையாக அமைத்திருந்தார் கோபயாஷி. மாணவர்கள் சுயமரியாதை மற்றும் தனித்தன்மையுடன் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர் விருப்பம். அதற்கு அவர்கள் இயற்கையோடு இணைந்த வழியில் கற்பது ஒன்றே வழி. ஒரு வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்தால், கற்றுத்தருவது சிரமமாகிவிடும். அக்கறை இல்லாமல் போய்விடும். ஆகவே, அவர் முன்மாதிரிப் பள்ளி ஒன்றை உருவாக்கி னார்.

இங்கே மாணவர்கள் கெடுபிடிகள், தண்டனைகள் எதுவும் இல்லாமல் படித்தார்கள். பள்ளி முடிந்த பிறகும் அவர்கள் வெளியே செல்ல மனம் இல்லாமல் பள்ளி வளாகத்துக்குள்ளேயே சுற்றி அலைவார்கள். அந்த அளவு பள்ளி அவர்களைச் சுதந்திரமாகவைத்திருந்தது.

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

கற்றுத்தருவதன் பல முன்மாதிரிகளை இந்த நூல் விரிவாக விளக்குகிறது. இரண்டாம் உலகப் போரின்போது டோக்கியோ நகரம் தாக்கப்படுகையில், இந்தப் பள்ளியும் இடிந்து தரைமட்டமாகியது. அந்தப் பள்ளி உருவாக்கிய மாணவர்கள், ஜப்பானின் தலை சிறந்த மனிதர்களாக விளங்கினார்கள். அவர்கள் ஒருநாளும் டோமாயி பள்ளியை மறக்கவில்லை.

கற்றுக்கொள்ளல் வயது வரம்பற்றது. அதற்குத் தேவை விருப்பமும், பொருளாதார உதவிகளும், இடைவிடாத தன்னம்பிக்கையும் மட்டுமே. என் நண்பரின் தந்தை அரசு ஊழியராகப் பணியாற்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். அதற்காக அவரது வீட்டில் சிறிய விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன்.

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

ஓய்வுபெற்ற பிறகு, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற பேச்சு வந்தது. கோயில்களுக்கு «க்ஷத்ராடனம் போய் வரலாம், பகுதி நேர வேலை செய்யலாம், வீட்டில் முழுமையாக ஓய்வு எடுக்கலாம் என்று பல்வேறு யோசனைகள் சொல்லப்பட்டன. ஆனால், நண்பரின் தந்தை எல்லாவற்றையும் மறுத்துவிட்டு, தான் படிக்கப் போவதாகச் சொன்னார். பலரும் அவரைக் கேலியாகப் பார்த்தார்கள். அவரோ தொலைதூரக் கல்வி மூலமாக தான் எம்.ஏ., படிக்கப் போவதாகச் சொன்னார்.

இனிமேல் எதற்காகப் படிக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டபோது, அவர் உற்சாகத்துடன், "இனிமேல்தான் படிக்க வேண்டும். 20 வயதில் கல்லூரியில் சேர்ந்து வரலாறு படிக்க வேண்டும் என்று விரும்பினேன். வரலாறு படித்தால் வேலை கிடைக்காது என்று சொல்லி, என்னை சிவில் இன்ஜினீயரிங் படிக்கவைத்தார்கள். அதைப் படித்து வேலைக்குப் போய் 35 வருடங்கள் வேலையும் பார்த்து முடித்துவிட்டேன். ஆனால், எம்.ஏ., வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசை அடிமனதில் அப்படியே இருக்கிறது.

இப்போதுதான் சுதந்திரமாக நான் படிக்க முடியும். வேலையை எதிர்பார்க்காமல் படிக்கும்போதுதான் படிப்பின் உண்மையான அர்த்தம் புரியும். ஓய்வுபெற்ற பிறகு படிக்கத் துவங்குவதால், மனது மீண்டும் மாணவப் பருவத்தின் உற்சாகத்துக்குத் திரும்புகிறது. பேரன் பேத்திகளுடன் போட்டியிட்டுக்கொண்டு நானும் படிக்கப்போகிறேன் என்பது சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கு இதைவிட வேறு நல்ல வழி எனக்குத் தெரியவில்லை'' என்றார்.

எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. 58 வயதில் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று தடுமாறும் பலருக்கு நடுவில், வாழ்க்கையை இப்படிப் புதுப்பித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட விருப்பம் உன்னதமாக இருந்தது. அவரது விருப்பத்தை வீடும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது. நண்பரின் தந்தை, இரண்டு ஆண்டுகளில் எம்.ஏ., படித்து முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். அவருக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னேன். உற்சாகத்துடன் அவர் தன் மனதில் இருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.

"இத்தனை வருட வாழ்வில் நான் அடைந்த மிகப் பெரிய சந்தோஷம் இதுவே. இந்த இரண்டு ஆண்டுகளில் என்னை ஒரு மாணவனைப்போலவே நினைத்துக்கொண்டேன். நூலகத்துக்குச் சென்று படிப்பது, பரீட்சைக்குத் தயார்செய்வது, என்னோடு படிக்கும் இளைஞர்களுடன் கலந்து உரையாடுவது என்று நாட்கள் போனதே தெரியவில்லை.

பரீட்சைக்கு முதல் நாள் என்னுடைய பேத்தி எனக்காகப் பேனா வாங்கிப் பரிசு தந்தாள். வீடே உற்சாகமாக என்னைப் பரீட்சைக்கு அனுப்பிவைத்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பரீட்சை எழுதப் போகிறேன் என்று உள்ளூர நடுக்கமாக இருந்தது. பள்ளி வயதில் வீட்டில் அம்மா என் தலைக்கு எண்ணெய் தேய்த்து, நெற்றியில் திருநீறு பூசி மனம் நிறைய வாழ்த்தி பரீட்சைக்கு அனுப்பிவைத்தது நினைவில் ஊசலாடியது. அந்த மனவெழுச்சியுடன் சென்று பரீட்சை எழுதினேன். ஜெயித்தும்விட்டேன். இனி, அடுத்து எம்.ஏ., பிலாசஃபி படிக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.

கற்றல் தரும் சந்தோஷத்துக்கு இணையாக வேறு என்ன இருக்கிறது! என்ன படிப்பது என்பது அவரவர் விருப்பம். சிலருக்கு அது இசை, நாடகம், ஓவியம் போன்ற கலைத் துறையாக இருக்கலாம். சிலருக்கு விளையாட்டாக இருக்கலாம். விரும்பினால், வேற்று மொழிகளில் ஏதாவது ஒன் றைக் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்வதால் இனி என்ன பிரயோசனம் இருக்கிறது என்று யோசிக்க வேண்டாம். மாறாக, எந்த ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ளும்போதும் நம் மனது விசாலமடைகிறது. அக்கறைகொள்ளத் துவங்குகிறது. நம்மைப் புத்துருவாக்கம் செய்யவைக்கிறது. அதற்காகவாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

புத்தகம் படிப்பதில் யார் அக்கறை காட்ட மறுக்கிறார்கள் என்பதைப் பற்றி, அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. அதில் 40 வயதில் இருந்து 55 வரை இருப்பவர்கள் படிப்பதே இல்லை. அவர்களில் 80 சதவிகிதம் பேர் வருடத்துக்கு ஒன்றிரண்டு புத்தகங்களைக்கூட வாசிப்பது இல்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலகம் முழுவதும் இதுதான் உண்மை. வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கியவுடன், படிப்பை முற்றாகக் கைவிட்டுவிடுகிறோம். அது பட்டப் படிப்பு என்றில்லை; விருப்பத் துக்காகக்கூட எதையும் தேடிப் படிப்பது இல்லை. மத்திய வயது தடுமாற்றம் நிரம்பியது. குழப்பத்தின் விளைநிலம் அது. ஆனாலும், நமது அக்கறையே நம்மை வழிகாட்டக் கூடியது.

ருதா நாடா என்ற பெண் இயக்குநரின் கனேடியத் திரைப்படமான 'ஷிணீதீணீலீ' மத்திய வயதின் தடுமாற்றங்களை அழகாகச் சித்திரிக்கிறது. ஷாபா என்ற 40 வயதுப் பெண்ணின் கதையே இந்தப் படம். அவள் கணவன் இறந்துபோகிறான். மகள் மற்றும் வயதான தாயுடன் தனியே வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். மரபான இஸ்லாமியக் குடும்பம். ஷாபாவின் சகோதரன் அதே நகரில் மனைவியோடு வசிக்கிறான். அவன் தீவிர மத நம்பிக்கைகொண்டவன்.

ஷாபாவின் பிறந்த நாளில் படம் துவங்குகிறது. அவளுக்குப் பிறந்த நாள் பரிசாகச் சிறு வயதில் அவள் அப்பாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சகோதரன் தருகிறான். அதைக் கண்ட ஷாபா மிகவும் சந்தோஷம் கொள் கிறாள்.

அந்தப் புகைப்படத்தில் ஷாபா ஒரு நீச்சல் குளத்தில் 10 வயதுச் சிறுமியாக அப்பாவுடன் ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறாள். அதைக் கண்ட ஷாபாவின் மகள் ஆச்சர்யத்துடன், 'அம்மா உனக்கு நீச்சல் தெரியுமா? நீ நீந்துவாயா?' என்று கேட்கிறாள். அப்போதுதான் ஷாபா தான் பல வருடங்களாக நீந்தவேயில்லை என்பதை உணர்கிறாள்.

அவள் பள்ளி வயதுக்குப் பிறகு நீந்துவதற்கு அனுமதிக்கப்படவே இல்லை. வயது வந்த பெண் நீச்சல் உடை அணிவது மோசமானது என்ற குடும்பத்தின் கட்டுப்பாடு காரணமாக அவள் நீச்சல் குளத்துக்குப் போவதே நின்றுபோனது.

மறுபடியும் ஒரு முறை குளத்தில் இஷ்டம்போல நீந்திக் குளிக்க முடியுமா என்று ஆசைகொள்ளத் துவங்குகிறாள். வீட்டில் அவளது மகளுக்கு நீந்தத் தெரியாது. துணைக்கு ஆள் யாரும் இல்லை. ஒருநாள் தனியே அவளே கடையில் போய் நீச்சல் உடை வாங்குகிறாள். ஆள் அதிகம் வராத ஒரு நேரத்தில் நீச்சல் குளத்துக்குச் சென்று நீந்துகிறாள். அப்போது அவள்கொள்ளும் சந்தோஷம் அளவில்லாதது. தன்னை மறந்து ஷாபா நீந்துகிறாள். யாரோ ஆள் வரும் சத்தம் கேட்டு அவசரமாக ஓடி ஒளிகிறாள்.

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

அன்றிலிருந்து வீட்டுக்குத் தெரியாமல் தனியே நீந்துவதற்குச் செல்கிறாள். ஒருநாள் அப்படி நீந்தும்போது, அவள் வயதை ஒத்த ஒரு ஆண் அருகில் நீந்துவதைக் கவனிக்கிறாள். அவன் தினமும் அவளைக் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறான். ஆகவே, புன்சிரிப்போடு, 'எதற்காக இப்படிப் பயந்து பயந்து நீந்துகிறீர்கள்?' என்று கேட்கிறான். அவளுக்குப் பதில் சொல்ல நா வர வில்லை. ஓடிவிடுகிறாள். ஆனால், அடுத்த முறை அவனிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசத் துவங்குகிறாள்.

நீச்சல் அவளுக்கு ஒரு நண்பனை உருவாக்கித் தருகிறது. அவர்கள் ஒன்றாகக் குளத்தில் நீந்துவதில் சந்தோஷம் கொள்கிறார்கள். அதைத் தவிர, அவர்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. இந்த நட்பு தன்னுடைய வீட்டுக்குத் தெரிந்தால் தன்னைத் துரத்திவிடுவார்கள் என்று பயப்படுகிறாள் 40 வயது ஷாபா. இதற்காக வீட்டில் நாடகம் ஆடுகிறாள். ஒருநாள் மகள் அவளை அழைத்து, 'அம்மா உன் பையில் புதிதாக நீச்சல் உடைகள் இருக்கின்றன. நீ ஆளே மாறிக்கொண்டு இருக்கிறாய். யார் அந்த உன்னுடைய புது நண்பன்?' என்று கேட்கிறாள்.

எப்படிக் கண்டுபிடித்தாள் என்று புரியாமல் தாய் தன் மகளிடம் தனது நீச்சல் குள அனுபவங்களைச் சொல்கிறாள். அதைக் கேட்ட மகள், 'இதில் என்ன தப்பு இருக்கிறது. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம்' என்கிறாள். ஆனால், ஷாபா நினைத்ததுபோலவே அவளது சகோதரன் இதைக் கண்டுபிடித்து, அவளைத் திட்டுகிறான். 'நீச்சல் குளத்துக்குப் போனால் காலை உடைத்துவிடுவேன்' என்று மிரட்டுகிறான். 'வயதாகியபோதும் உனக்கு அறிவே இல்லை. குடும்ப மானத்தைக் கெடுக்கிறாய்' என்று கூச்சலிடுகிறான்.

ஷாபாவின் வயதான தாய் ஆத்திரமாகி, 'நீந்திக் குளிப்பதற்குக்கூட ஒரு பெண் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது. ஏன் அதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாய்?' என்று கத்துகிறாள். ஷாபாவின் சகோதரன் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்த மறுப்பும் பிடிவாதமும் ஷாபாவை நிறைய யோசிக்கவைக்கிறது. ஏன் அந்த ஆணோடு தான் சேர்ந்து வாழக்கூடாது என்று முடிவு செய்கிறாள். அவனைக் காதலிக்கவும் துவங்குகிறாள். முடிவில் அவர்கள் ஒன்று சேர்க்கிறார்கள்.

இந்தப் படம் பார்க்கையில், இன்றுள்ள இளைஞர்களில் பெரும்பான்மையினருக்கு நீச்சல் தெரியாது என்ற உண்மை நினைவில் வந்தபடியே இருந்தது. எதற்காக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறோம். நீந்துதல் ஒரு தனித்துவமான அனுபவம். அது தரும் சந்தோஷம் சொல்லில் அடங்காது. இன்னொரு பக்கம் பெண்கள் நீந்திக் குளிப்பதற்கு இன்றும் எண்ணிக்கையற்ற தடைகள் இருப்பதை உணர முடிகிறது.

பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீர்வைத்துக் குளிக்கும் அவசர உலகில் நீச்சல் குளம்பற்றிப் பேசுவது அர்த்தமற்ற கனவுபோல இருக்கிறது. ஆனாலும், நீந்துதல் மகிழ்ச்சியோடு சிறப்பான உடற்பயிற்சியும்தானே! அதை ஏன் விலக்கிவைத்திருக்கிறார்கள் என்பதே என் ஆதங்கம்!

இன்னும் பரவும்...

பார்வை வெளிச்சம் !

சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35

இரண்டாம் உலகப் போர் காரணமாகத் தனது பள்ளிப் படிப்பைப் பாதியில்விட்ட துருக்கியைச் சேர்ந்த ஹாலிஸ் பேஹனால், தனது 86-வது வயதில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் படித்துப் பேராசிரியர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டார். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது. அதற்காகவே இன்று படித்து முடித்திருக்கிறார். 'இனி, பேராசிரியர் ஆக முடியாது. ஆனாலும் நினைத்ததைச் சாதித்த சந்தோஷம் இருக்கிறது' என்கிறார், ஐந்து பேரக் குழந்தைகள் உள்ள இந்த முதியவர்!

 
சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35
சிறிது வெளிச்சம்! -அடிமனதில் அமிழ்ந்த ஆசை   எஸ்.ராமகிருஷ்ணன்  - 35