தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கைக்கு மாறி இருந்தாலும், இயந்திரங்களோடு புழங்குவது அதிகரித்து இருந்தாலும், அதைப் பயன்படுத்துவது தவிர, வேறெதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எண்ணமும் இருப்பதில்லை.
ஒரு நிலையில் நாம் பயன்படுத்துகிற, நமக்குத் தேவைப்படுகிற பொருட்கள் குறித்தும், விஷயங்கள் குறித்தும் தன்னிறைவோடு இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்... பயன்படுத்துதல் மட்டுமே என் வேலை என்பது ஒரு குணமாக மாறிவிடுகிறது.
இந்தக் குணம் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் எதிரொலிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 'என்னய்யா நெனைச்சுட்டு இருக்கீங்க. நான் என்ன இளிச்சவாயனா? ஒருநாள் லேட்டா பணம் கட்டினதுக்கு இவ்வளவு ரூபா அபராதம் போடுவீங்களா? உங்க கிரெடிட் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கத்திக்கொண்டு இருப்பவரிடம், 'ஹலோ! ரொம்பச் சத்தம் போடாதீங்க. நாங்க கார்டுகூடவே ஒரு கையடக்கப் புத்தகம் அனுப்பினோமே, எல்லா விவரமும் அதுல இருக்கு' என்று பதில் சொல்வார், பணம் வாங்க வந்த பேங்க்காரர்.
கிரெடிட் கார்டு விவரங்களை, வங்கி அனுப்பும் சட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை எத்தனை பேர் படித்திருப்போம். ஏ.சி-யோடு, வாஷிங்மெஷினோடு, மொபைல் போனோடு வரும் விவரப் புத்தகங்களைப் படித்து, அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தான் பயன்படுத்தும் பொருள் குறித்து தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும் என்ற குணமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.
ஆனால், மார்க்கெட்டில் புதிதாக ஒரு பொருள் வந்ததும் ஓடிப் போய் வாங்குகிற முதல் ஆள் நாம்தான். தரம் இல்லாத பொருள்களை ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள். சரியான விவரம் சொல்லாமல் கிரெடிட் கார்டைத் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே ஒழிய... அது குறித்து ஒன்றுக்குப் பத்து கேள்விகள் எழுப்பி, விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை.
எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதில் இருக்கிற முனைப்பு... கோளாறு ஏற்பட்டால், பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை. காரணம், தெரியாததைக் கேட்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது. 'இதுகூட இவருக்குத் தெரியவில்லையே என்று மற்றவர் கள் கேவலமாக நினைத்துவிடுவார்களோ' என்ற எண்ணமே முதலில் வருகிறது.
'எல்லாம் தெரிந்துவைத்திருப்பவன் சிறந்தவன்' என்ற நினைப்புதான் எதையுமே தெரிந்துகொள்ளவிடாமல் தடுத்துவிடுகிறது.
'ச்சே! நான் எவ்வளவு பெரிய ஆளு... இதப்போயி கேப்பாங்களா' என்று யோசித்தால், எங்கோ ஓரிடத்தில் அந்த விஷயம் தெரியாததால் தவிக்க வேண்டி இருக்கும்.
நான், எனது நண்பர், அவருடைய நண்பர் மூவரும் ஒரு காரில் பயணித்துக்கொண்டு இருந்தோம். என் நண்பரின் நண்பர் ஐ.நா சபையோடு இணைந்து பணியாற்றும் ஒரு நிறுவனத்தின் ஊழியர். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் என் நண்பரிடம், 'இந்தக் கதவை எப்படித் திறப்பது?' என்றார். என் நண்பர் கிண்டலாக, 'இவ்வளவு பெரிய பணியில் இருக்கிறீர்கள், இதுகூடத் தெரிய வில்லையா' என்றார். அவர் நிதானமாக, 'ஐ.நா. சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்னவென்று தெரியுமா?' என்று கேட்டார். 'அதெப்படி எனக்குத் தெரியும்' என்றார் நண்பர். 'அப்போ எனக்கு மட்டும் உன் கார் கதவைத் எப்படித் திறக்கத் தெரியும்' என்றார்.
விஷயம் இவ்வளவுதான்... ஒருவருக்குத் தெரிந்த விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் போலவே உங்களுக்குத் தெரிந்த விஷயம் இன்னொருத்தருக்குத் தெரியாமல் இருக்கும். இங்கு எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. தெரிந்துகொள்வதற்காகக் கேட்பது கேவலமும் இல்லை.
கூச்சமில்லாமல் கேட்பது குறித்து வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொள்ளலாம். அடுத்தவர் அற்பமாக நினைப்பாரோ என்றெல்லாம் யோசிக்காமல், தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். உணவகத்துக்குப் போனால்கூட, தான் கேட்கிற உணவு எப்படி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் சேர்ப்பீர்கள், அதன் விலை என்ன என்றெல்லாம் கேட்பார்கள்.
புதிதாகப் போன ஏரியாவில் வழி தெரியாமல் அரை மணி நேரம் சுற்றிக்கொண்டே இருக்கிற நம்மில் பலரும்... அது எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூச்சப்படுபவர்கள்தான். பேருந்து நிலையத்திலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ, விமான நிலையத்திலோ யாரிடமும் எதையும் கேட்காமல் சிறுநீரை அடக்கிக்கொண்டு கழிவறை தேடிக்கொண்டு இருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.
கேட்டுத் தெரிந்துகொள்வதில் தீவிரம் இல்லாமல் போனதால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் போய்விடுகிறது. ஏனோதானோவென்று பல விஷயங்களைச் சொல்கிறோம். பிறகு, நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சிருக்கே என்று சண்டை வரும்.
ஐந்து ஆண்டு ஆளப்போகிறவர்கள் தொடங்கி, மூன்றாண்டு படிப்பு சொல்லித் தரப்போகிற கல்லூரி வரை எங்கும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்பதில் வரும் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக நாம் செய்த கோமாளித்தனங்களால், இன்று எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்குச் சமூகச் சூழல் மாறி இருக்கிறது.
யாராவது கேட்பார்கள், அப்போது தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் காத்திருப்பதைப்போலவே எல்லாரும் காத்திருக்கிறார்கள். விளைவு, தான் செய்கிற செயல் குறித்த தெளிவான தகவல் யாரிடமும் இல்லை. ஓட்டுப் போடுவது வரை இதுதான் நிலைமை. எலெக்ட்ரானிக் மெஷினில் எப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை... ஓர் ஓட்டின் பலம் என்ன என்பதை உணர்வதே அவசியம்.
கேள்வியை எங்கு அதிகாரமாக வெளிப்படுத்த முடியுமோ, அங்கு மட்டுமே அதைப் பிரயோகிப்பதில் என்ன பயன்? ஒரு ரூபாய்க்கு மூன்று வாழைப் பழம் என்று பஸ் ஜன்னல் வழியே நீட்டுகிறவரிடம் அத்தனை கேள்வி கேட்கிற நாம், தேனும் பாலும் ஓடும் என்று சொல்லி ஓட்டுக் கேட்டு வருபவ ரிடம் என்ன கேட்கிறோம்?
நாம் செய்கிற வேலையில், வாங்குகிற பொருட்களில் அது குறித்த தன்னிறைவைப் பெற... புரிதலை உணர... கூச்சப்படாமல் கேளுங்கள். அது எனக்குத் தேவைஇல்லை என்கிற மனோபாவம்தான், வண்டியை ஸ்டார்ட் செய்யத் தெரியாமல் நடுரோட்டிலும், வாழ்க்கையை ஆளத் தெரியாமல் இந்தச் சமூகத்தை வீதியிலும் நிறுத்தியிருக்கிறது.
கிடைக்கிறதோ
கிடைக்கவில்லையோ
கேளுங்கள்- அது நமது உரிமை.
'கேளுங்கள் தரப்படும்!'
- ஒரு சிறிய இடைவேளை
|