மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36


. எஸ்.ராமகிருஷ்ணன்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36
திறமையே அதிர்ஷ்டம் !
.
சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36
சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

அறையில் 15 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஒரே ஒரு நாற்காலி கால் உடைந்து உள்ளது. அந்த அறைக்குள் ஒரு மனிதன் நுழைகிறான். அவன் எந்த நாற்காலியில் உட்கார்வது என்று தெரியாமல், ஒரு நிமிடம் யோசிக்கிறான். பிறகு, அதில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் போய் உட்காருகிறான். அவன் தேர்வு செய்தது கால் உடைந்த நாற்காலி. அதில் உட்கார்ந்ததுமே நாற்காலி முழுவதும் உடைந்து, அவன் கீழே விழுந்து அடிபடுகிறான். அது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்று அலுத்துக்கொண்டு வெளியே எழுந்து போய்விடுகிறான்.

உடனே, அந்த அறையில் மறைந்திருந்து அதைக் கவனித்துக்கொண்டு இருந்த வயதான மனிதர், 'சிலருக்கு துரதிர்ஷ்டம் எப்போதாவது நடக்கும். இவனுக்கோ துரதிர்ஷ்டம் மட்டும்தான் நடக்கும். மறுபடியும் சோதனை செய்கிறேன், பாருங்கள்' என்கிறார். ஏழெட்டு கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு, அதில் ஒன்றில் மட்டும் உப்பைக் கலந்துவிடுகிறார். அதே மனிதன் திரும்ப உள்ளே நுழைகிறான். முன்புபோலவே எதை எடுத்துக் குடிப்பது என்று யோசிக்கிறான். மிகச் சரியாக உப்பிட்ட தண்ணீரை மட்டும் குடிக்கிறான். பிறகு, தனது துரதிர்ஷ்டம் என்று அலுத்துக்கொள்கிறான்.

இப்படித்தான் பிரெஞ்சு மொழியில் 1982-ம் ஆண்டு வெளியான 'The Goat' என்ற படம் துவங்குகிறது. பிரான்சிஸ் வெபர் என்ற இயக்குநரின் படம்.

நம்மில் பெரும்பாலானோர் இந்தப் படத்தில் வரும் மனிதனைப்போல தவறான ஒன்றை மிகச் சரியாகத் தேர்வு செய்கிறவர்களாக இருக்கிறோம். நம்மை அதிர்ஷ்டம் அற்றவன் என்று குறை கூறிக்கொள்கிறோம். மன வருத்தம் அடைகிறோம். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதைப் பற்றிப் புலம்புகிறோம்.

இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் இப்படி அறிமுகமாகும் பிரான்சிஸ் பெரின், முடிவில் என்னவாகிறான் என்று தெரிந்துகொண்டால், அப்புறம் எது அதிர்ஷ்டம்... எது துரதிர்ஷ்டம் என்று நீங்களே முடிவுசெய்துவிடுவீர்கள்.

பாரீஸின் மிகப் பிரபலமான ஒரு வணிக நிறுவனம். அதன் தலைவருக்கு ஒரே மகள். செல்ல மகள். பெயர் மேரி. அவளுக்கு எதைத் தொட்டாலும் பிரச்னை. விமான நிலையத்துக்குச் சென்றால், விமானம் இயந்திரக் கோளாறு ஆகிவிடுகிறது. லிஃப்ட்டில் ஏறினால் பாதியில் நின்றுவிடுகிறது. அறைக்குச் சென்றால் கதவைத் திறக்க முடியவில்லை. டி.வி-யைப் போட்டால் அதில் சத்தமே வருவதில்லை. இப்படி துரதிர்ஷ்டம் அவளது கூடப்பிறந்த நிழல்போல வருகிறது.

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

ஒருநாள் மெக்ஸிகோ கடற்கரை விடுதியில் தங்கியிருக்கும் அவள், தன் அப்பாவுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது, தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்து மூர்ச்சையாகிவிடுகிறாள். அவளை யாரோ கடத்திக்கொண்டு போய்விடு கிறார்கள். தன் மகளை மீட்பதற்கு கம்பனா என்ற துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவரால் அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவளைப்போலவே துரதிர்ஷ்டம் மிக்க ஒருவனைச் சோதனை எலிபோல கூடவே வைத்துக்கொண்டால் கண்டுபிடித்துவிடலாம் என்று மனோதத்துவ டாக்டர் ஒரு யோசனை சொல்கிறார். அதற்காகத்தான் பெரினுக்கு ஆரம்ப கட்டத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

பெரின், தன் வாழ்வில் ஒரு முறைகூட அதிர்ஷ்டம் வந்ததே இல்லை என்று வருந்துகிறான். தன்னைப் பரிசோதனை எலியாக நடத்தப்போகிறார்கள் என்று தெரியாமல், அவன் அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறான். அவனுக்கு நேர் எதிர் கம்பனா. எதையும் திட்டமிட்டுத் துல்லியமாகச் செய்பவன். அதிர்ஷ்டம் எப்போதும் தன் பக்கம் என்று நம்புகிறவன். தன்னைப்பற்றியே பெருமை அடித்துக்கொண்டு இருப்பவன்.

அதிர்ஷ்டக்கார கம்பனாவும் அதிர்ஷ்டம் கெட்ட பெரினும் பெண்ணைத் தேடிப் பயணம் போகிறார்கள். அவளுக்கு நடந்ததைவிட மிக மோசமாக பெரினுக்கு நடக்கிறது. தண்ணீர் பிடிக்கப் போகிறான். குழாய் உடைந்து அவன் மீது பீய்ச்சியடிக்கிறது. சாப்பிட உட்காருகிறான். சூப் கொட்டி உடை முழுவதும் அசிங்கமாகிவிடுகிறது. அறைக்குப் போனால், மின்சாரம் வருவதில்லை. ஆத்திரமாகி வெளியேபோனால், அங்கே சாலைச் சண்டையில் ஒருவன் பெரினை அடித்துப் போட்டுவிடுகிறான். பெண்ணைத் தேடிக் கண்டுபிடிப்பதைவிட, இந்தத் துரதிர்ஷ்டசாலியை வைத்துக்கொண்டு அல்லாடுவதில் மிகச் சிரமம்கொள்கிறான் கம்பனா. என்ன மனுஷன் இவன்... எதைத் தொட்டாலும் கரியாகிவிடுகிறதே என்று பயப்படுகிறான்.

ஆனால், பெரின் இந்தத்தடை களால் உற்சாகம் இழப்பதே இல்லை. அவன் ஆர்வமாக எதையும் செய்ய முன்வருகிறான். இருவரும் குதிரையில் ஏறி பெண்ணைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள். பெரின் ஏறிய குதிரை, வெறிபிடித்து அவனை இழுத்துக்கொண்டு போய் தூக்கி எறிகிறது. எழுந்து அடிபட்ட உடம்போடு நடந்து வந்து ஓசி கார் ஒன்றில் ஏறுகிறான். அந்த காரை ஒரு லாரி அடித்துப் போட்டுவிடுகிறது. கிழிந்த உடை யோடு அறைக்குப் போய் கதவைத் திறந்தால், பூட்டு பிரச்னை பண்ணுகிறது. தன்னை மீறிக் கத்துகிறான். கதவு திறக்கப்படுகிறது. தனது துரதிர்ஷ்டத்தைச் சபித்தபடி பசியோடு படுத்துக்கொள்கிறான். உறக்கம் வரவில்லை. மனம் உடைந்து அழுகிறான்.

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

மறுநாள் காலை அவன் அறைக்கு கம்பனா போன் செய்து, 'உன் அறையில் தண்ணீர் வருகிறதா?' என்று கேட்கிறான். பெரின் திறந்து பார்த்துவிட்டு, 'நன்றாக வருகிறதே' என்கிறான். ஆனால், கம்பனா அறையில் தண்ணீர் வரவில்லை. குளித்து ரெடியாகச் சாப்பிட வருகிறான் பெரின். ஆனால், அழுக்கடைந்து போய் வந்து உட்காருகிறான் கம்பனா. பெரினுக்கு மிக ருசியான உணவு வருகிறது. ஆனால், கம்பனாவின் மீது சூப்பைக் கொட்டிவிடுகிறார் சர்வர்.

அதிர்ஷ்டம் இப்போது பெரின் பக்கம் திரும்பி இருக்கிறது. அவனது துரதிர்ஷ்டம் தன்னைப் பிடித்துக்கொண்டுவிட்டது என்று கத்துகிறான் கம்பனா. அவன் பயந்ததுபோலவே அடுத்தடுத்து நடக்கிறது. கம்பனா எதைச் செய்தாலும் அது தப்பாகி, பிரச்னை உருவாகிறது. ஆனால், இத்தனை நாளாக அதிர்ஷ்டம் கெட்டவன் என்று சபிக்கப்பட்ட பெரின், எதைச் செய்யும்போதும் அது வெற்றியாகி, தனி ஆளாக அவனே அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். படத்தின் முடிவில் அவ்வளவு பெரிய கோடீஸ்வரி மேரி, பெரினை விரும்பத் துவங்குகிறாள்.

படத்தின் ஒரு காட்சியில் அவனது அதிர்ஷ்டம் எப்படிச் சாத்தியமானது என்று கேட்டபோது பெரின் சொல்கிறான்,

''தனது திறமைகளின் மீது நம்பிக்கை இல்லாதவன்தான் அதிர்ஷ்டத்தை நம்புகிறான். தனது சுய உழைப்பையும், தனித்திறமையையும் நம்புகிறவன் ஒருபோதும் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அவன் அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வரும் என்று காத்திருப்பதில்லை. அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்கொள்கிறான். என்னை நான் உணரவே இல்லை. அதனால்தான் அத்தனை பிரச்னைகள். எனது தவறுகளை அடையாளம் கண்டு சரிசெய்தேன். எது எனது குறையோ அதைவைத்தே எனது பலத்தை உருவாக்கினேன். அதே நேரம், கம்பனா தன்னைப்பற்றி சுயபெருமை அடித்துகொண்டு இருந்தான். அதுதான் அவனது துரதிருஷ்டமாகியது'' என்கிறான்.

வாய்விட்டுச் சிரிக்கவைத்த இந்தப் படம், மனித வாழ்வில் எது அதிர்ஷ்டம் என்பதை ஆராய்கிறது. கடைசி வரை பெரின் எதையும் வேடிக்கையாகவே எதிர்கொள்கிறான். தனது கஷ்டங்களுக்குப் புலம்புவது இல்லை. தனது திறமைகளுக்காகப் புல்லரிப்பதில்லை. அவன் ஒவ்வொன்றையும் முழுமையாக எதிர்கொள்கிறான். அதுவே அவனது பலம். படத்தின் அடிநாதம்போல நம்பிக்கையின் வெளிச்சம் பரவிக்கொண்டு இருக்கிறது.

நம் காலம் இலவசத்தின் காலம். எதை இலவசமாகத் தந்தாலும் வாங்கிக்கொள்ள ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். வீட்டுக் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பினாயில் விற்பவன், உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கிறது என்று ஒரு துடைப்பத்தைப் பரிசாகத் தந்து போகிறான். அதை வாங்கத் தள்ளுமுள்ளு. அடிதடி போட்டிகள். காத்திருப்புகள்.

இன்னொரு பக்கம் தொலைக்காட்சியில் விருப்பமான பாடல் ஒன்றைக் கேட்பதற்கு தொலைபேசி இணைப்பு கிடைத்துவிட்டால்கூட, இன்னிக்கு நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்படும் மத்தியதரத்து மனிதர்கள். 'நல்லவேளை! ஹோம் வொர்க் இல்லே. ஐ ஆம் லக்கி' என்று குதூகலிக்கும் பள்ளிக் குழந்தை என்று அதிர்ஷ்டம் நம்மிடம் சிக்கிக்கொண்டு பாடாய்ப்படுகிறது. விளையாட்டில் துவங்கி, விண்வெளிப் பயணம் வரை உழைப்பைவிட அதிர்ஷ்டமே பிரதானமாகப் பேசப்படுகிறது.

இந்த அலுப்புகள், சலிப்புகள் நமது பொது வருத்தங்களை ஒன்றாகத் தொகுத்து மர்ஃபி விதிகள் என்று வைத்திருக்கிறார்கள். நமக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ என்று நாம் சலித்துக்கொள்ளும் தருணங்களைத்தான் மர்ஃபி விதி நினைவூட்டுகிறது. எட்வர்ட் மர்ஃபி தொகுத்த விதிகள். நம் அதிர்ஷ்டக் குறைவின் அடையாளச் சின்னங்கள். அல்லது ஆதங்கங்கள்.

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

நாம் ஒரு வரிசையில் நின்றிருந்தால் நமக்குப் பக்கத்து வரிசைதான் வேகமாக நகரத் துவங்கும். ஆசிரியருக்கு மிக ஆர்வமாக இருக்கும் பாடம், மாணவர்களுக்கு மிக அறுவையாக இருக்கும். நீங்கள் பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி வந்த மறுநாள், அதன் விலை மிகவும் குறைந்து இருக்கும். நீங்கள் பைக்கில் சாலையைக் கடக்கும்போதுதான் சிவப்பு விளக்கு எரியத் துவங்கும். நீங்கள் ஒரு பெண்ணை மிக அழகாக இருக்கிறாள் என்று ரசித்தால், அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவளாக இருப்பாள். இப்படி ஆயிரக்கணக்கில் மர்ஃபி விதிகள் நீள்கின்றன. இவை வெறும் விதிகள் அல்ல. நமது காரணமற்ற ஆதங்கங்கள். இந்தத் தடைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடைபெறும்போது, ஒருவன் தனது அதிர்ஷ்டத்தைக் கேள்வி கேட்கத் துவங்குகிறான். மறுபரிசீலனை செய்கிறான். பயப்படத் துவங்குகிறான்.

இன்றுவரை எத்தனையோ பேர் கோடி ரூபாய் லாட்டரிச் சீட்டுகள், எதிர்பாராத பரிசு மழை களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அவர்களது புகைப்படத்தையும் நாளிதழ் களில் பார்த்திருக்கிறேன். ஆனால், அதன் பிறகு அவர்கள் என்னவானார் கள், அந்த அதிர்ஷ்டக் காரர்களில் ஒருவராவது வாழ்வில் நிம்மதியாக உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார்களா என்று இன்று வரை தெரியவில்லை. மாறாக, எதிர்பாராமல் கிடைத்த பணம் அவர்களது நிம்மதியைக் கெடுத்திருக்கிறது. குடும்பங்களில் பிளவை உண்டு பண்ணிஇருக்கிறது.

வறுமையில்கூடச் சேர்ந்து வாழ்ந்தவர்கள், பணம் வந்தவுடன் சண்டையிட்டுப் பிரிந்து போய் விட்டார்கள். அதிர்ஷ்டம் எப்போதும் தனித்து வருவதில்லை. பிரச்னை என்ற தனது தோழனையும் அழைத்துக்கொண்டுதான் வருகிறதுபோலும். உண்மையில் தடைகள், பிரச்னைகள், சிக்கல்கள்கூட ஒருவிதமான அதிர்ஷடமே என்கின்றன வாழ்வியல் நிகழ்வுகள்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. சுதமோ யமோகுசி என்பவர் அன்று தனது அலுவலக வேலை காரணமாக அந்த நகருக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அணுகுண்டு வீச்சுபற்றி எதுவும் தெரியாமல் அதில் மாட்டிக்கொண்டுவிட்டார். அணுவீச்சின் காரணமாகத் தோல் உரிந்துபோய் கண் பார்வை மங்கி, இனிமேல் அங்கே இருந்தால் தன்னால் பிழைக்க முடியாது என்று உடனே கிளம்பி அவர் நாகசாகி நகருக்குச் சென்றுவிட்டார்.

அவரது நேரம், நாகசாகியில் இரண்டு நாட்களில் அணுகுண்டு வீசப்பட்டது. நகரமே அழிந்து சிதறியது. பல்லாயிரம் மனிதர்கள் இறந்துபோனார்கள். உடல் சிதைவுற்று ஆனால், உயிர் பிழைத்துக்கொண்டார் யமோகுசி. இரண்டு அணுகுண்டு வீச்சிலும் பாதிக்கப்பட்ட ஒரே மனிதர் அவர் மட்டுமே! அதை துரதிர்ஷ்டம் என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால், ஜப்பானிய மக்கள் இரண்டு அணுகுண்டு வீச்சில் மாட்டிக்கொண்டும் பிழைத்த அதிர்ஷ்டக்காரர் என்று அவரைக் கொண்டாடினார்கள். அவர் நம்பிக்கையின் சின்னமாக உருவாகினார். தன் 93 வயது வரை வாழ்ந்த யமோகுசி அணு ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை வலுவாக நடத்தி வந்தார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமும் தேவையும் இருக்கிறது. அதை அவர்கள் உணர்ந்து கொள்ளத் துவங்கும்போது அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமானதாகிவிடும் என்பதே நிஜம்!

இன்னும் பரவும்...

சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36

ராபர்ட் ஃபாசெட் (Robert Fawcett) என்ற அமெரிக்க ஓவியர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்குச் சித்திரம் வரைந்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். ஆனால், இவருக்கு நிறங்களைத் தனித்து அடையாளம் காண முடியாத பார்வைக் குறைபாடு இருந்தது. நிறக்குருடு என்ற நோய்மையுற்ற ராபர்ட்டுக்கு, அவரது மனைவி ஒவ்வொரு வண்ணமாக எடுத்துச் சொல்வார். அவருடைய வழிகாட்டுதலில் வரைந்த சித்திரங்கள் உலகின் தனித்திறன்கொண்ட ஓவியங்களாக விளங்கியதோடு, சிறந்த வண்ண ஓவியங் களுக்கான தங்கப் பதக்கங்களையும் வென்றிருக்கின்றன!

 
சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36
சிறிது வெளிச்சம்! - திறமையே அதிர்ஷ்டம் ! -எஸ்.ராமகிருஷ்ணன் - 36