மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 01

சிறிது வெளிச்சம்!
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 01


27-05-09
தொடர்கள்
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01
 
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01
- எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01

திடீரென நீங்கள் ஒரு வாசனையாக மாற வேண்டும் என்று சொன்னால், என்ன வாசனையைத் தேர்வு செய்வீர்கள்? நிறம் என்று கேட்டால்கூடச் சட்டென ஒரு நிறத்தைச் சொல்லிவிடுவோம். யாராக மாற விருப்பம் என்றால், எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், ஒரு வாசனையாக மாற விருப்பம் என்றால், என்ன வாசனையைத் தேர்வு செய்வது? எது நம் மனதின் நீங்காத வாசனை?

எலினார் அபோட் என்ற அமெரிக்கப் பெ2ண் எழுத்தாளர், இதை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இரண்டு குழந்தைகள் சாலையில் போகிற வருகிறவர்களை நிறுத்தி, 'நீங்கள் என்ன வாசனையாக மாற விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். 'இது என்ன அசட்டுத்தனமான கேள்வி?' என்று ஒருவர் எரிச்சல் படுகிறார். மற்றவரோ, 'தனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை' என்று ஒதுங்கிப் போகிறார்.

ஒரு நடுத்தர வயதுப் பெண், அவர்கள் கேள்வியைக் கண்டு ஆச்சர்யமடைகிறாள். உடனே, பதில் சொல்ல முடியாமல் யோசிக்கிறாள். குழந்தைகள் அவள் பின்னாடியே நடக்கிறார்கள்.

முடிவில் அந்தப் பெண், 'எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்தமான வாசனை, விளையாட்டு வீரன் காலில் அணிந்துள்ள கால் உறையிலுள்ள வியர்வையின் வாசம். அது எவ்வளவு அற்புதமானது தெரியுமா? விளையாட்டு வீரன் தன்னை மறந்து விளையாடுகிறான். கால்கள்தான் அவனது பலம். ஓடி ஓடி அந்தக் கால்கள் மைதானத்தை எத்தனையோ வழிகளில் கடக்கின்றன. வியர்வை அவன் காலணியை நனைக்கிறது. அந்தக் காலுறையில் ஒரு தனித்துவமான மணம் இருக்கிறது. அதை விளையாட்டு வீரன்கூடக் கவனிப்பதில்லை. என் மகன் ஓர் ஓட்டப் பந்தய வீரன். அவனது காலுறைகளில் அந்த வாசனை இருப்பதை அறிந்திருக்கிறேன். அதுதான் நான் மாற விரும்பும் வாசனை!' என்கிறாள்.

உண்மையில் நாம் ரோஜா, முல்லை என்று வாசனைப் பூக்களில் துவங்கி, உலகின் அரிதான வாசனைத் திரவியம் வரை பயன்படுத்துகிறோம். எல்லா வாசனையும் அதை நுகரும் நிமிடங்களில் மட்டுமே மனதில் தங்குகிறது. பிறகு, தானே கரைந்து போய்விடுகிறது. எந்த வாசனை நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருக்கிறது?

வாசனைகளுக்குத் தனியே பெயர்கள் இல்லை. நன்றாக இருக்கிறது... நன்றாக இல்லை என்று இரண்டே பிரிவுகள். எதிலிருந்து பிறக்கிறதோ, அதன் பெயரே வாசனைக்கு வந்துவிடுகிறது. வாசனையை நாற்றம் என்று சொல்கிறாள் ஆண்டாள். இன்று 'நாற்றம்' என்ற சொல் வாசனைக்கு நேர் எதிரான அர்த்தம் கொண்டுவிட்டது.

பெயரில்லாத சில வாசனைகள் மனதில் புகையெனக் கடந்து செல்கின்றன. பக்கத்து வீட்டில் உணவு தயாரிக்கும்போது, என்ன உணவு அது என்று தெரியாமல் கசிந்து வரும் வாசனை... பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்த பெண்ணின் கூந்தல் சரிந்து பின்னால் விழுந்து அதிலிருந்து வெளிப்படும் சீயக்காயோ, ஷாம்புவோ என அறிய முடியாத சுகந்தம்... பிறந்த குழந்தையை உச்சி முகரும்போது, அதன் உடலில் இருந்து கசியும் மணம்.

சாவு வீட்டின் வாசலில் நின்றாலும், முகத்தில் அடிக்கும் ஒரு மணம். மழை தூறத் துவங்கியதும் மண் புரளும் வாசம். அழுக்குத் துணியில் கிடந்த சில்லறைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மணம். இருள் பாதையைக் கடக்கும்போது புதரில் நெளியும் பாம்பின் வாசனை. டீக்கடையின் வடிகட்டியிலிருந்து சக்கையாகித் தூக்கி எறியப்பட்ட தேயிலைத் தூளின் வாசனை. ரஷ்யப் புத்தகங்களுக்கு மட்டுமே உள்ள காகித வாசனை. இன்னும்... அப்பாவின் வாசனை, மனைவியின் வாசனை, குழந்தைகளின் வாசனை, காதலியின் வாசனை, வெறுப்பின் வாசனை என எத்தனையோ வாசனைகள்!

சொற்களுக்கும் வாசனை இருக்கிறது. அது எப்போதோ, யார் கவிதையிலோ, அரிதாக மனம் நழுவும் தருணங்களில் உணரப்படுகிறது. ஆனால், நெடுநாள் அந்த மணம் நினைவில் இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01

'தி பெர்ஃப்யூம்' என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது பேட்ரிக் சஸ்கின்ட் என்ற ஜெர்மன் எழுத்தாளரின் நாவல். இந்தப் படத்தை இயக்கியவர் 'ரன் லோலா ரன்' படத்தை இயக்கிய டாம் டிவிக்கர்.

தன் உடலில் வாசனைச் சுரப்பிகளே இல்லாத மனிதன். அதனால் அவனுக்கு வாசனையை நுட்பமாக உணரும் புலன் இருக்கிறது. ஒரு நாள், அவன் அதுவரை அறியாத வாசனை ஒன்றைப் பின்தொடர்ந்து செல் கிறான். அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய ஆவல்கொள்கிறான். அது ஒரு பெண்ணின் வாசனை.

அந்த வாசனையைத் தனதாக்கிக்கொள்வதற்காக அவளைக் கொலை செய்துவிடுகிறான். ஆனால், வாசனை மறையத் துவங்குகிறது. அதைக் காப்பாற்றித் தன்னுடன் வைத்துக்கொள்ளப் போராடுகிறான்.இயலாதபோது அவனது மனம் மூர்க்கமடைகிறது. மனித உடலில் உள்ள தோலை உரித்து, அதிலிருந்து மகத்தான வாசனைத் திரவியம் ஒன்றைத் தயாரிக்க முயற்சித்து, வீழ்ச்சி அடைகிறான்.

படத்தில் வாசனை என்பது மனிதர்களின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வாசனையை இழப்பதும், வாசனையை அடைவதும் வெறும் புலன் கிளர்ச்சி மட்டுமல்ல. மாறாக, அது ஓர் அடையாளத்தைப் பெறுவது அல்லது அடையாளத்தை உருவாக்குவது என்பதாகிறது.

ஆழமான மன வேதனையைத் தருவது, அடையாள மற்ற தன்மை, இவைதான் வாசனையை நாடுவதற்கான காரணங்கள் என பேட்ரிக் சஸ்கின்ட் தனது நாவலில் விவரிக்கிறார். இந்தப் படத்தின் தனிச் சிறப்பு, படம் பார்ப்பவர்கள் திரையில் ஒளிரும் காட்சிகளின் வழியே வாசனையை நுகர்வது போன்ற மனநுட்பம் கொள்கிறார்கள் என்பதே!

எனது 'யாமம்' நாவலும் வாசனையைப் பற்றியதே! நான் வாசனை என்று குறிப்பிடுவது, இரவை. நான் அறிந்தவரை உலகில் எப்போதும் மாறாத பரிமளத்துடன் இருக்கக்கூடிய ஒரே வாசனைத் திரவியம் இரவு மட்டுமே!

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01

பகலைப் பற்றி நமக்கு விஸ்தாரமாகத் தெரியும். ஆனால், இரவைப் பற்றிய குறிப்புகள் அதிகம் தெரியாது. பரபரப்பான சென்னையில் அண்ணா சாலையில் ஒரு நாள் இரவு மூன்று மணியளவில் தேநீர் குடிக்கக் கடை தேடி நடந்துகொண்டு இருந்தேன். ஒரு எலி சாலையின் நடுவில் நின்றபடியே யாரோ சாப்பிட்டு மீதமாகியிருந்த மீன் துண்டைத் தின்றுகொண்டு இருந்தது. நிமிஷத்துக்கு ஒரு முறை தலையைத் திருப்பிப் பார்த்துக்கொள்வதும், பிறகு வாலை ஆட்டியபடியே மிச்சம் இருந்த மீனைக் கொறித்துத் தின்பதுமாக இருந்தது. பகலில் ஒருபோதும் இந்தக் காட்சி சாத்தியமானதே இல்லை.

பகல் - உலகின் பேரியக்கம். இரவு - அலை அடங்கிய கடல். அதன் உள்ளே எண்ணிக்கையற்ற இயக்கங்கள் உள்ளன. ஆனால், அவை நம் கண்ணில் தென்படுவதில்லை. இரவின் வாசனை ஒவ்வொரு நகரிலும் ஒருவிதமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஓர் அடர்த்தியும் நறுமணமும்கொண்டு இருக்கிறது.

'யாமம்' நாவலுக்காக ரோஜாப் பூவில் இருந்து அத்தர் தயாரிக்கும் தொழிலில் உள்ளவர்களைக் காண்பதற்காக ஒரு முறை அலிகார் சென்றிருந்தேன். அழிந்து வரும் தொழில்களில் ஒன்று அத்தர் தயாரிப்பது. சூஃபி மரபில் நித்யமான கடவுளின் அடையாளம், ரோஜா. கடவுளை அடைவதற்கான வழியாகவே வாசனையைக் கருதுகிறார்கள். நூற்றாண்டு காலமாக வாசனைத் தைலம் தயாரிப்பவர்கள் அவர்கள். ரோஜாவின் இதழ்களைப் பிய்த்து, அதைக் கலனில் இட்டுக் கொதிக்கவைத்து, நாலைந்து நிலைகளில் வடித்து எடுத்து, அதிலிருந்து பரிமளத் தைலம் தயாரிக்கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01

அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கி ருந்த வயதானவர் சொன்னார், 'இந்த வாசனை எல்லாம் நாம் உருவாக்கியது. அரை மணி நேரமோ, அரை நாளோ, ஒரு நாளோ, இந்த வாசனை இருக்கக்கூடும். ஆனால், மனிதர்களிடம் எப்போதும் மாறாத வாசனை ஒன்று இருக்கிறது. அதை நாம் முக்கியம் கொள்ளவே இல்லை.

மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு. குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை. அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக்கொண்டு இருக்கிறது.

குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்துவிடுகிறது. காரணம் இல்லாமல் சிரிக்கக் கூடாது என்று பழக்கிவிடுகிறோம். பொது இடங்களில் வாய் விட்டுச் சிரிப்பவர்களைக் காண முடிவதே இல்லை. காசு கொடுத்துச் சிரிப்பை வாங்க வேண்டியதாகி உள்ளது.

பல நேரம் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம். நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாகக் கைவிட்டுவிடுகிறோம். தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, சிரிப்பை இழப்பது. அதை நாம் உணர்வதே இல்லை. ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்குக் காரணத்தை நாடுவதில்லை. பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதின் இயல்பாக வெளிப்படுகிறது.

சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது. அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாங்கள் வாசனைத் தைலங்களைத் தயாரிக்கும் நாட்களில் மனதில் தீய எண்ணங்களும் குரோதங்களும் கொண்டு இருந்தால் அது வாசனையில் மாற்றத்தை உண்டாக்கிவிடும். என் அனுபவத்தில் பலமுறை அப்படி நடந்திருக்கிறது. ஆகவே, மனச் சாந்தம் இல்லாதவன் வாசனையை நெருங்கிச் செல்ல முடியாது' என்றார்.

'ரோஜாவில் இருந்து இத்தனை அற்புதமான வாசனைத் திரவியத்தை உருவாக்குகிறீர்களே... உங்களுக்குப் பிடித்த வாசனை எது?' என்று கேட்டேன். அவர் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் சொன்னார்... 'களிமண்ணின் வாசனை. அந்த வாசனையைப் பற்றி நினைத்தவுடன், அதன் பிசுபிசுப்பு நினைவுக்கு வரும்.

சிறு வயதில் கையில் களிமண்ணை உருட்டி விளையாடிக்கொண்டு இருப்பேன். அதைக் கண்டதும் அம்மா என்னைத் திட்டுவாள். களி மண்ணைத் தூக்கி வீசிவிட்டு ஓடுவேன். நீண்ட நேரத்துக்குப் பிறகும் கையை முகர்ந்து பார்த்தால், அதே வாசனை வரும். இப்போது என் வயது 72. இது நடந்தது என் 12 வயதில். ஆனால், இன்றும் உள்ளங்கையில் களி மண்ணின் வாசனை அடிப்பதாகவே உணர்கிறேன்' என்றார்.

வாசனை மூக்கின் வழியே உணரப்படுகிறது. ஆனால், மனம்தான் அதை உணர்கிறது. மனது எப்போதும் ஏதோ ஒரு வாசனைக்கு ஏங்குகிறது; காத்திருக்கிறது; அறிந்தவுடன் குதூகலம் கொள்கிறது; வாசனை மறைவதைக் கண்டு வருத்தப்படுகிறது. ஒரு வகையில் வாசனைதான் வாழ்வின் ஆதார இச்சை.

அதனால்தானோ என்னவோ, மனிதனின் பிறப்பே ஒரு வாசனை என்று சொல்கிறார்கள் நமது மூதாதையர்கள்!

பார்வை வெளிச்சம்

சமீபத்தில், அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில், பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண், மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார். இவள்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது. இனி, அந்த மொழி பேசும் இனக் குழு உலகில் இல்லை. பல்கலைக்கழகங்களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதைப் பேசத் தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை!

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01

ப.சிவனடி எழுதி 14 தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம், மிக முக்கியமான தமிழ் நூலாகும். 18-ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு 10 ஆண்டுக் காலத்தையும் தனியே எடுத்துக்கொண்டு, அந்தக் கால கட்டத்தில் உலகெங்கும் பல துறைகளில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்தியச் சரித்திரத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், சமகால வரலாற்றுப் புத்தகங்களில் முக்கியமானது. நான் அறிந்தவரை இந்திய வரலாற்றைப் பற்றி 7,000 பக்கங்கள் எழுதியுள்ள ஒரே தமிழ் வரலாற்று ஆசிரியர் இவரே!

சிவனடி, விருதுநகரைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித் திருக்கிறார். அதாவது, அந்தக் காலத்து நாலாவது ஃபாரம். அதோடு படிப்பு நின்றுபோனது. இரண்டாம் உலகப் போரின் நாட்களில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு சென்னை திரும்பி, ஒரு பதிப்பகத்தில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில காலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இந்திய சரித்திரக் களஞ்சியத்தின் முதல் தொகுதியை வெளியிட்டபோது, அவரது வயது 60. 30 தொகுதிகளாக 1700-ல் இருந்து 2000 வரையான இந்தியாவின் வரலாற்றை எழுத வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால், 1831 முதல் 1840 வரையான காலகட்டத்தைப் பற்றிய 14-வது தொகுதியை வெளியிட்டதோடு மரணம் அடைந்தார். அவரது கனவு பாதியிலேயே துண்டிக்கப்பட்டுப் போனது. இதில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே மறுபதிப்பு வந்திருக்கிறது. மற்ற 13 தொகுதிகளும் முதல் பதிப்போடு நின்று போய்விட்டது.

7,000 பக்கங்கள் எழுதிய சிவனடி தனது புகைப்படத்தைக்கூட எங்கும் வெளியிட்டுக்கொண்டது கிடையாது. தன்னை எதிலும் முன்னிறுத்திக்கொண்டதும் இல்லை!

 
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01
- இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 01