மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 04

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 04


17-06-09
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04
 
எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04

ண்பன் ஒருவன் பழைய ஸ்கூட்டி ஒன்று விலைக்கு வருகிறது என்று வாங்குவதற்காக வந்திருந்தான். முகவரி கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்பட்டு என்னை அழைக்கவே நானும் சென்றிருந்தேன். அந்த வீட்டில் தூசி படிந்து கவனிப்பார் அற்றுக் கிடந்தது ஒரு ரோஸ் நிற ஸ்கூட்டி. அருகில் பார்த்தபோது, வாங்கி சில மாதங்களே ஆகியிருந்தது.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04

நண்பன் என்ன விலை என்று கேட்டான். மெலிந்த தோற்றமுடைய அந்த வீட்டு மனிதர், 'ஐயாயிரம் குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்க!' என்றார். 'இவ்வளவு மலிவான விலைக்கு ஏன் அதை விற்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'இதை வாங்கிக் குடுத்து என் மகளைப் பறிகுடுத்துட்டேன், சார்! காலேஜ் படிக்கப் போன பொண்ணு... டேங்கர் லாரி அடிச்சு செத் துட்டா!

என் பொண்ணு நல்லாப் படிப்பா சார். பத்தொன்பது வயசு... பாட்டெல்லாம் அற்புதமா பாடுவா. ரெண்டு நிமிஷத்துல ரோட்ல அடிபட்டு தலை நசுங்கிப் போயிட்டா. இந்த வண்டியை அப்படியே மயானத்தில் கொண்டுபோய் வெச்சுக் கொளுத்திப்போடலாம்னுகூட நினைச்சேன்.

என் பொண்ணு கரெக்டாத்தான் போனா. ஆனா, லாரிக்காரன் அடிச்சிட்டான். கேஸ் நடக்குது. என்ன பிரயோசனம்? நானே கார் எல்லாம் விட்டுட்டு இப்போ டவுன் பஸ்லதான் போறேன். ரோட்டைக் கடக்கப் பயமா இருக்கு. என் பொண்டாட்டி வீட்ல இருந்து வெளியே வர்றதே இல்லை. நீங்களாவது இதைப் பத்திரமா ஓட்டுங்க. என் பொண்ணு அநியாயமாச் செத்துப்போயிட்டா. யாரைத் தப்பு சொல்றதுனு தெரியலை'' எனத் தன் அடங்காத துக்கத்தை வெளிப்படுத் தினார்.

அந்த ஸ்கூட்டியை விலை கொடுத்து வாங்க மனதின்றி நண்பன் ஒடிந்து போய் நின்றான். நான் ஒருபோதும் முகம் பார்த்தறியாத அந்த மாணவியின் சாவுச் செய்தி என்னை கலக்கமடையச் செய்தது.

என்ன தவறு செய்தாள் அந்த மாணவி? ஏன் அதை விபத்து என்று நாம் ஒரு செய்தியாகக் கடந்து போகிறோம்? பெண்ணை இழந்த குடும்பம் கொள்ளும் இந்த வலி, ஏன் யாரோ ஒருவரின் துயரமாகக் கைவிடப்படுகிறது?'

ஒவ்வொரு நாளும் தினசரியைப் புரட்டும்போது, சாலை விபத்துகளில் பலியானவர்களைப் பற்றிய செய்திகள் கண்ணை உறுத்துகிறது. எத்தனை மனிதர்கள்... எவ்வளவு உயிரிழப்புகள்? இவற்றைச் செய்திகளாக மட்டும் படித்து எப்படிக் கடந்து போவது? ஏன் நாம் விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறோம்?

கோயிலுக்குச் செல்லும் அம்மாவைத் தன் பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்துப் போகிறான் மகன். எங்கிருந்தோ வந்த லாரி அந்த பைக்கில் மோத, பின்னாடி இருந்த அம்மா அந்த இடத்திலேயே நசுங்கிச் சாகிறாள். பையனுக்குச் சிறிய காயம் மட்டுமே! சாலையில் படிந்த ரத்தத்தைத் தன் கையில் அள்ளி 'அம்மா, அம்மா' என்று அலறுகிறான் பையன். என்ன கொடுமை இது? அதை விபத்து என்று வேடிக்கை பார்த் துக் கடக்கிறார்கள் மக்கள்.

வேலைவிட்டு வீட்டில் இருக்கும் கைக்குழந்தையைக் காண, புறநகர்ச் சாலையில் பைக்கில் செல்கிறார்கள் ஒரு கணவனும் மனைவியும். பிரேக் இல்லாத வேன் மோதி அதே இடத்தில் சாவு. வீட்டில் ஒன்றரை வயதுக் குழந்தை பெற்றவர்களின் இறப்பை அறிந்துகொள்ள முடியாமல் கரைந்துகொண்டு இருக்கிறது. துணைக்கு இருக்கும் கிழவி மாரில் அடித்து அழுகிறாள்.

சாலையைக் கடந்து மருந்துக் கடை நோக்கிச் செல்கிறார் ஒரு முதியவர். வேகமாக வந்த வாகனம் மோதி, அதே இடத்தில் சாகிறார். அவரது மருந்துச் சீட்டு காற்றில் பறக்கிறது. நோயில் இருந்து தன்னைப் பல ஆண்டுகள் காத்துக்கொள்ளத் தெரிந்தவரை, ஒரு நிமிடத்தில் சாலை பலிவாங்கிவிட்டது.

இப்படி திருமணத்துக்காகச் சென்றவர்கள், விடுமுறை கழிக்க வந்தவர்கள், வீடு திரும்பியவர்கள், யாத்திரை சென்ற குடும்பம் என்று எத்தனை எத்தனை மனிதர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்கள். வயது வேறுபாடு இன்றி, விபத்தில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

சாலையில் என்ன பிரச்னை? வாகன நெரிசல் என்பது கண்கூடான காரணம். மற்றொன்று... அவ சரம். இந்த இரண்டுடன் மிதமிஞ்சிய சாலை ஆக்கிர மிப்புகள், போதை, முறையற்ற வாகன ஓட்டும் உரிமம், சாலை விதிகளைப் பற்றிய முற்றிலுமான அலட்சியம், அதை முறைப்படுத்தவே முடியாத சாலைக் காவலர்கள். இப்படி அலட்சியமும் அக்கறை இன்மையும் ஒன்று சேர, நமது சாலைகள் உயிர் குடிக்கும் எமன்களாக மாறிவிட்டன.

மனித உயிர் இவ்வளவு அற்பமானதா என்ன? விபத்தில் செத்துக்கிடக்கும் மனிதன் எத்தனை கனவுகளுடன் சென்றிருப்பான்! எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்க்கையை இறுக அணைத்துப் பற்றியிருப்பான்! எதற்காக அவன் உயிரிழக்க வேண்டும்? எதிர்பாராமல் நடப்ப தன் பெயர்தான் விபத்து. ஆனால், இன்று நடப்பதோ சாலைப் பலிகள்.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04

ஒரு பக்கம் வாகன விபத்துகள் தரும் அச்சம். மறுபக்கம் காயம்பட்டவர்களின் குருதி உறிஞ்சிக் குடித்துப் பணம் பிடுங்கும் கோர வைத்தியம். பயணம் தரும் சந்தோஷம் பறிபோய் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்ற பதைபதைப்பே மேலோங்கி நிற்கிறது.

எட்வினா ஒ ப்ரேன் என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பு... ஒரே நம்பிக்கை. ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக், சாலை விபத்தில் இறந்துவிடுகிறான். அந்தக் குடும்பம் எந்த இழப்பீடும் கிடைக்காமல் தெருவில் நிற்கிறது. பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், மெக்கானிக்கின் மனைவி சாரா வீட்டு வேலைகள் செய்கிறாள். துணிக்குப் பூவேலை செய்து விற்கிறாள். ஓய்வே இல்லாமல் ஓடி ஓடி வேலை செய்கிறாள்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் சாரா தன் பிள்ளைகளுடன் உள்ளூர் வங்கிக்குச் செல்வாள். வங்கியின் வரவேற்பு அறையில் பிள்ளைகளை உட்காரவைத்துவிட்டு, அவள் தனியே உள்ளே செல்வாள். சில நிமிடங்களில் தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டுவிட்டதாகச் சொல்லி பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வாள். இப்படிப் பல வருடங்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.

ஒரு நாள் அந்த வீட்டின் மூத்த மகள் தன் அப்பாவின் சாவையும் அதில் இருந்து தன் அம்மா தங்களை எப்படி வளர்த்து எடுத்தாள் என்பதையும் ஒரு கதை போல எழுதி, பிரபலமான இதழ் ஒன்றுக்கு அனுப்பிவைக்கிறாள். அது பிரசுரமாகிறது. அந்த கதைக்கு 50 டாலர் பணம் கிடைக்கிறது.

அது தன் முதல் சம்பாத்தியம் என்று சொல்லி, அம்மாவிடம் தனக் கென ஒரு வங்கிக் கணக்கைத் துவக் கச் சொல்கிறாள் மகள். தாய், மகள் இருவரும் வங்கிக்குப் போகிறார்கள். உள்ளே போன அம்மா மிகுந்த தயக் கத்துடன் மகளிடம் சொல்கிறாள்... ''எனக்கு இந்த வங்கியில் ஒருபோதும் கணக்கு இருந்ததில்லை. அம்மாவிடம் பணமில்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது என்பதற்காக அடிக்கடி இந்த வங்கிக்கு உங்களை அழைத்து வரு வேன். உங்களை வெளியே நிறுத்தி விட்டுத் தனியே உள்ளே சென்று வருவேன். அது உங்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான நாடகம். அதை நிஜம் என்று நீங்கள் நம்பினீர்கள். கையில் காசில்லாமல் கஷ்டப் படும்போது, அதை நினைத்து நீங்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஏதாவது ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் வாழ்க்கை செல்கிறது. படிப்பறிவு இல்லாத எனக்குத் தெரிந்த ஒரு நம்பிக்கை இதுதான். இன்று நீ எழுத்தாளராகி, ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கப் போகிறாய். சந்தோஷமாக இருக்கிறது'' என்று வாய்விட்டு அழுதாள்.

எல்லோர் குடும்பமும் இப்படி ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டுதான் துளிர்த்து வந்திருக்கிறது. கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப் பதுதான் பெருந்துயரம். அவமதிப்பு, வெறுப்பு என எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையின் மீதான பற்றுடன் இருக்கிறார்கள் மனிதர்கள். சாலை விபத்து, இவை யாவற்றையும் ஒரே நிமிடத்தில் அபத்தமாக்கிவிடுகிறது.

வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது. ஆனால், எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை; எந்த வாழ்க்கையும் பயனற்றதும் இல்லை.

தன் வாழ்க்கைக்கு என்ன பயன் இருந்திருக்கிறது என்பதை மனிதர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. அப்படித் திரும்பி பார்த்தால் என்ன நடக்கும் என்பதை மிக அழகாகச் சொல்கிறது. It's a Wonderful Life என்ற பிராங் காப்ராவின் படம்.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04

1946-ல் வெளியான இது, உலகின் சிறந்த 10 படங்களில் ஒன்று. வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அரிய திரைப்படம். பிலிப்வாரன் டோர்ன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை பிராங் காப்ரா படமாக்கினார். ஜார்ஜ் பெய்லி என்ற பிசினஸ்மேன் வேடத்தில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடித்திருந்தார்.

கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய பிசினஸ்மேன் ஜார்ஜ் முடிவு செய்து, ஆற்றுப் பாலம் ஒன்றின் மேல் ஏறி நிற்கிறான். இதை வானுலகில் உள்ள தேவதைகளில் இரண்டு வேடிக்கை பார்க்கின்றன. மனிதர்கள் ஏன் இப்படி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் சாக முடிவு எடுக்கிறார்கள் என்று அனுதாபம்கொள்கின்றன. ஜார்ஜைக் காப்பாற்ற ஒரு தேவதையை அனுப்பிவைக்கின்றன. அந்தத் தேவதை ஜார்ஜைக் காப்பாற்றுகிறது.

ஜார்ஜ், ''நான் உயிர்வாழ்வதில் அர்த்தமே இல்லை. தன்னால் யாருக்கும் பயன் இல்லை. எல்லோருக்கும் தான் தேவையற்றவன்'' என்று புலம்புகிறான். ''இல்லை... உன் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது'' என்கிறது தேவதை. அவன் நம்ப மறுத்து, ''நான் பிறக்காமலே போயிருக்கலாம்'' என்கிறான். ''சரி... உன் விருப்பப்படியே நீ பிறக்காமல் இருந்தால், உன் வீடு, மனைவி என்னவாகி இருப்பார்கள் என்பதை நீ இப்போது பார்ப்பாய்'' என்று தேவதை ஒரு வரம் தருகிறது.

ஜார்ஜ், தான் இல்லாத உலகைக் காணத் துவங்கு கிறான். அவன் பிறக்காமல் போயிருந்தால், அவ னால் காப்பாற்றப்பட்ட தம்பி, பனி ஆற்றில் மாட் டிச் செத்துப்போயிருப்பான் என்பது அவனுக்குப் புரிகிறது. வீட்டில், தன் பள்ளியில், தன் நண்பர்களி டம் தான் எவ்வளவு நெருக்கமும் அன்பும் செலுத்தி னோம், எத்தனை பேருடன் தன் உறவு அர்த்தபூர்வ மாக இருந்திருக்கிறது என்பதை உணர்கிறான்.

அவன் மனைவி வேறு ஒரு ஆளைத் திருமணம் செய்து வறுமையில் வாடி, தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதைக் காண் கிறான். தன் ஒவ்வொரு செயலும் யாரோ ஒருவ ருக்குப் பயன்பட்டிருக்கிறது. அர்த்தம் நிறைந்திருக் கிறது என்பதை உணர்கிறான். இப்போது தேவதை கிறிஸ்துமஸ் கொண்டாடும்படியாக அவனை அவனது வீட்டுக்குத் திரும்பி அழைத்துச் செல்கிறது.

மனித வாழ்க்கை கிடைத்தற்கு அரிய சந்தர்ப்பம். அதைச் சிறப்பாக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்பது ஜார்ஜுக்குப் புரிகிறது. தன் குடும்பம், நண்பர்கள், அறியாதவர்கள் என யாவர் மீதும் அன்பு பீறிடுகிறது. வாழ்க்கையை ஜார்ஜ் நேசிக்கத் துவங்குகிறான்.

இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறுகச் சிறுக நம்பிக்கைகளும் கனவுகளும் கலந்து உருவான வாழ்க்கையை எந்த முகாந்திரமும் இன்றி நமது அலட்சியம், அவசரம் ஒரு வாகன விபத்தாகி உருமாறி அழித்துவிடுகிறது.

உடனடித் தேவை... கடுமையான சட்டங்கள். அதைக் கடைப்பிடிக்க வேண்டிய பொதுமக்களின் மனது. அது நாம் யாவரும் சேர்ந்து பின்பற்ற வேண்டியது. ஆனால், இந்த இரண்டையும் கைவிட்டு சந்தை நெரிசல் போல சாலை இருப்பதுதான் நிஜம். அதுதான் விபத்தைவிடவும் மிகுந்த வலி தருகிறது!

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04
பார்வை வெளிச்சம்

விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உடனடித் தேவை, ரத்தம். ரத்த தானம் என்பது மிக அரிய சேவை. ரத்த தானத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர் ஹாவேர்ட் பி. ட்ரூ (Howard P. Drew) அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இதுவரை 106 லிட்டர் ரத்தம் தந்திருக்கிறார். ராணுவ வீரரான இவர், இரண்டாவது உலக யுத்தத்தின்போது காயம் அடைந்த சிப்பாய்க்கு முதன்முறையாக ரத்தம் தந்தார்.

தமிழகமும் ரத்த தானம் தருவதில் அரிய சாதனை செய்திருக்கிறது. பிப்ரவரி 2009-ல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒரே நாளில் 50 ரத்த தான முகாம்களின் மூலம் 13,264 யூனிட் ரத்தம் தானமாக வழங்கி கின்னஸ் சாதனை செய்திருக்கிறது. இந்த முகாமில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்திருக்கிறார்கள்.

இணையத்தில் எத்தனையோ பேர் வலைப்பக்கம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன வகை ரத்தம்கொண்டவர்கள், தாங்கள் ரத்தம் தரத் தயாரா என்பதை யாவரும் அறியும்படி போட்டுவைக்கலாம். அது போலவே ரத்தம் தருபவர்கள் பட்டியலை தமிழ் இணையத்தளங்கள் அல்லது வலைப்பக்கம் சேவையாக வெளியிடலாம். காரணம், Blood is liquid love, give it to others என்பதே!

 
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 04