மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 02

சிறிது வெளிச்சம்!
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன் - 02


03-06-09
தொடர்கள்
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02
 
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02
- எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02

சில மாதங்களுக்கு முன்பாக, பழைய புத்தகக் கடை ஒன்றில் கொத்தமங்கலம் சுப்புவின் நாவல் ஒன்றை வாங்கினேன். அந்த நாவலின் உள்ளே ஒரு பழுப்புக் காகிதம் இரண்டாக மடித்துவைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் உள்ள ஒரு பையனுக்கு, அவனுடைய அம்மா எழுதிய கடிதம். பையன் காசநோயால் பாதிக்கப்பட்டுப் பொது மருத்துவ மனையில்கிடக்கிறான். அம்மாவால் கிராமத்தைவிட்டு வர முடியவில்லை. கையில் காசில்லாத நிலை.

இதை எப்படிச் சொல்வது என்று புரியாமல் அவனுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக மருகி மருகி எழுதியிருந்தார். யாரோ, அந்த அம்மாவுக்காக எழுதித் தந்த கடிதமாக இருக் கக்கூடும். அடித்தல் திருத்தல்களும் பிழைகளுமான அந்தக் கடிதம், ஒரு தாயின் அகத் தவிப்பை நெருக்கமாக வெளிப்படுத்தியது.

அதைப் படித்தபோது மனம் துவண்டுபோனது. எந்த வருடம் எழுதியது என்று பார்த்தேன்... 1972, நவம்பர் 16 என்று இருந்தது. நோயைவிடக் கொடியது தனிமை. நோயுற்ற நேரங்களில்தான் மனது அடுத்த வர்களின் மீதான தனது உறவை மறு பரி சீலனை செய்துகொள்கிறது... ஏங்குகிறது.

அந்தப் பையன் யார்? அவன் அம்மா எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர்கள் பிரச்னை தீர்ந்துபோனதா? எதுவும் தெரியவில்லை. ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகு படிக்கும்போதும் அந்தக் கடிதம் அப்படியே ஈரத்துடன் இருக்கிறது.

இரவெல்லாம், முகம் அறியாத அந்தப் பையனையும் அம்மாவையும் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தேன். சில நேரம் அந்தப் பையனாக என்னையே பொருத்திப் பார்த்துக்கொண்டேன். இப்படி நானே இலக்கற்ற என் பயணத்தில் யாருமற்று நோயில் கிடந்திருக்கிறேன். எவரிடம் இருந்தும் ஒரு கடிதம்கூட வந்தது இல்லை. நானும் இந்நாள் வரை ஒரு கடிதம்கூட அம்மாவுக்கு எழுதியது இல்லை. யாரை நமக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ, அவர்களுக்கு நாம் ஒரு கடிதம்கூட எழுதியிருக்கமாட்டோம் என்பதுதான் உண்மையா?

நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதப்படாமலே போன கடிதங்கள் இருக்கின்றன. அது போலவே எழுதி அனுப்பப்படாத கடிதங்களும் ஒன்றிரண்டாவது நிச்சயம் இருக்கக்கூடும். தனிமைதான் எழுதத் தூண்டும் முதல் உந்துதல்.

இது செல்போன்களின் காலம். அலைபேசியின் வருகை எங்கே சென்றாலும் நம்மைத் தொடர்பு எல்லைக்குள்ளாகவே வைத்திருக்கிறது. மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் வளர்ந்துவிட்ட சூழலில் உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டிருக்கிறது. ஒரு வகையில் இது சந்தோஷம். இன்னொரு வகையில் இந்த மிதமிஞ்சிய செய்திகள், தகவல்களால் சலிப்பாக இருக்கிறது.

நேர் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும். எழுத்து மௌனமும் வலிமையும்கொண்டது. அதை முழுமையாக நாம் உணரவே இல்லை. பேச்சு மிகையானவுடன் எழுத்து சுருங்கிவிட்டது. இன்றுள்ள சூழலில் எதைச் சொல்வதாக இருந்தா லும் ஒரு வரி அல்லது இரண்டு வரி குறுஞ்செய்திகள் அளவே போதுமானதாக இருக்கிறது. அதிலும் யாரோ எழுதிப் பரிமாற்றம் செய்யப்படும் குறுஞ்செய்தி நகல்களே அதிகம்.

உறவுகள் சுருங்கிப்போய்விட்ட சூழலில், கடிதம் அவசியமற்ற வடிவமாகவே பலருக்கும் தோன்றுகிறது. கடைசியாக ஒரு கடிதத்தை யாருக்கு எழுதினோம்? எப்போது எழுதினோம்? ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள்.

கடிதம் வெறும் பரிமாற்றம் மட்டுமே இல்லை. அது நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. ஒருவகையில் கடிதம் நம் மனதின் குரல். நேரில் சொல்ல முடியாத தவிப்பைக் கடிதம் சொல்லிவிடும். கண்ணீர்க் கறை படிந்த கடிதங்களும், பிரிவின் அழியாத மணமுள்ள கடிதங்கள், தற்கொலை செய்துகொண்டவனின் கடிதங்கள், முதல் காதலைச் சொன்ன கடிதங்கள் என ஏதேதோ கடிதங்களை நான் வாசித்திருக்கிறேன்.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02

நோபல் பரிசு பெற்ற இந்திய மகாகவியான ரவீந்திரநாத் தாகூர், கடிதம் பற்றி ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். 50 வருடங்களுக்கு முன்பு வெளியான கதை அது. கதையின் தலைப்பு, 'மனைவியின் கடிதம்'. தாகூர் சிறந்த கவிஞர் மட்டுமே இல்லை; சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட என்பதற்கு இக் கதையே உதாரணம்.

கதை, மிருணாள் என்ற பெண் முதன்முறையாகத் தன் கணவனுக்கு எழுதிய கடித வடிவில் உள்ளது. மிருணாள் திருமணமாகி 15 வருடங்களாக புனித யாத்திரை போக விரும்புகிறாள். கணவனோ தனக்கு லீவு கிடைக்காது என்று பொய்க் காரணம் சொல்லி, பல முறை மறுத்துவிடுகிறான். முடிவில் ஒரு நாள் அவளாக தனியே பூரி ஜெகந்நாத் கோயிலுக்குப் பயணம் மேற்கொள்கிறாள்.

அந்தப் பயணம் இத்தனை ஆண்டு காலம் வீட்டில் சமையல் அறைக்குள் அடைபட்டுக்கிடந்த அவளது ஏக்கம் மற்றும் மன வேதனைகளுக்கு மாற்றாக அமைகிறது. தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளத் துவங்குகிறாள். கணவனுக்காகத் தன்னை அர்ப்பணம் செய்துகொண்டு வாழ்ந்ததாகத் தான் நம்பியது எவ்வளவு போலியான வாழ்க்கை என்பதைக் கண்டுகொள்கிறாள். அவளது நினைவுகள் புரள்கின்றன.

ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொண்டபோதும் மனைவியின் குரல் பெரும் பாலும் கணவன் காதில் விழுவதே இல்லை. சமையல் தவிர்த்து வேறு எதைப்பற்றிப் பெண் பேசினாலும் அது வீண் வேலை என்று நினைக்கும் பொது புத்தியே பெரும் பான்மை கணவர்களுக்கும் இருக்கிறது. அதனால், தன் மனதை உறுத்திய அத்தனை விஷயங்களையும் அவள் ஒரு கடிதமாகக் கொட்டித் தீர்க்கிறாள். குடும்பம் எவ்வளவு வன்முறையை ஒரு பெண்ணுக்கு உருவாக்குகிறது என்ப தன் சாட்சி இக் கதை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த மிருணாளை இரண்டாவது மனைவியாகப் பெண் கேட்டு வருகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 12. முதல் மனைவி அழகாக அமையவில்லை என்பதால், அழகான பெண்ணைத் தேடி கிராமத்துக்கு வந்து மிருணாளைத் திரு மணம் செய்கிறார்கள். வங்காளத்தில் காலரா நோயும், இளம் பெண்களும்தான் தேடி அலையாமல் எளிதாகக் கிடைக்கக்கூடியவர்கள் என்று தாகூர் கோபத் துடன் சுட்டிக்காட்டுகிறார். மிருணாள் சுயமாக யோசிக்கக்கூடியவள். அது அவள் அம்மாவுக்குக்கூடப் பிடிப்பதில்லை. புத்திசாலித்தனம் பெண்களுக்குத் தீராத பிரச்னையை உண்டுபண்ணும் என்று திட்டுகிறாள்.

அழகியைத் திருமணம் செய்துகொண்ட கணவன் சில நாட்களிலே அவளை ஒரு வேலைக்காரி போல நடத்துகிறான். எந்த அழகுக்காக அவளை யாவரும் புகழ்கிறார்களோ, அந்த அழகை அவள் கணவன்கூட ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறான். அவள் கூந்தலைக்கூட முடிக்கவிடாமல் திட்டுகிறார்கள். அவளுக் குக் கணவன் வீட்டில் இருந்த இரண்டு பசு மாடுகள் மட்டுமே துணை. அந்தப் பசுக்களிடம் தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறாள்.

மாடுகளுடன் பேசக்கூடிய முட்டாள் என்று அவளை ஆண்கள் ஏளனம் செய்கிறார்கள். மிருணாள் கர்ப்பிணியாகிறாள். சுகாதாரமற்ற இருட்டு அறையில் அவளது பிரசவம் நடக்கிறது. முறையான வைத்தியம் இல்லை.

பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், சில நாளிலே அது இறந்துவிடுகிறது. பிரசவ அறையில் மரணம் வந்து நின்று அவளையும் அழைக்கிறது. நோயும் மரணமும் பெண்களை நெருங்கி வரும்போது, அதைத் தடுக்க எவருக் கும் விருப்பம் இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்கிறாள். எமனுக்கும் பெண் உயிர் அற்பம் என்று தோன்றியோ என்னவோ அவளை விட்டுவிடுகிறான்.

தனிமையும் துக்கமும் அவளை வாட்டுகிறது. அந்த வலியை அவள் கவிதையாக எழுதுகிறாள். அவளுக்கு அப்படியரு படைப்பாற்றல் இருக் கிறது என்பதை எவரும் அறியவே இல்லை. ஒருவேளை, தான் கவிதை எழுதுவதாகச் சொன்னால், அதை யும் கேலி செய்து திட்டுவார்கள் என்று மறைத்துவிடுகிறாள்.

திருமணம் அவளது வாழ்க்கையை 20 வயதுக்குள்ளாகச் சலிப்புக்கொள்ளவைத்து விடுகிறது. தான் ஒரு படுக்கையறைப் பதுமை என்பதை முற்றாக உணர்கிறாள். ஒரு நாள் அந்த வீட்டுக்கு முதல் மனைவியின் தங்கை பிந்து அடைக்கலமாக வந்து சேர்கிறாள். அவளை மிருணாளுக்குப் பிடித்துவிடுகிறது. அவளுடன் நட்பாகப் பழகுகிறாள். அந்தப் பெண் மிருணாளைச் சீவிச் சிங்காரித்து அலங்காரம் செய்து, அவள் முகத்தை அருகில் வைத்துப் பார்த்தபடியே 'அக்கா! உன் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது..! யாராவது இப்படி அருகில் வைத்து ரசித்திருக்கிறார்களா?' என்று கேட்கிறாள். மிருணாளுக்கு அழுகையாக வருகிறது.

குடும்பச் சுமை என்ற பெயரில் அவளது சிறு சிறு சந்தோஷங்கள்கூடப் பறிக்கப்படுகின்றன. பிந்துவை ஒரு பைத்தியக்கார மாப்பிள்ளைக்குக் கட்டித் தருகிறார்கள். அவள் மிருணாள் எதிரேயே தற்கொலை செய்து செத்துப்போகிறாள். வீட்டின் நெருக்கடி மிருணாளை மூச்சுத் திணறச் செய்கிறது.

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02

முடிவில் ஒரு நாள் தனியே பயணம் செய்து வெளியேறிய மிருணாள், பூரிக்கு வந்தவுடன் இனிமேல் கணவனைத் தேடி வீட்டுக்குப் போகக் கூடாது என்று முடிவு செய்கிறாள். தனித்து வாழ்வது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் விருப்பம் சார்ந்தது என்பதில் உறுதியாக இருக்கிறாள். கணவனுக்கு அதைத் தெரியப்படுத்தி, 'வாழ்க்கைக்குப் பயந்து தான் ஒருபோதும் தற்கொலை செய்ய மாட்டேன், வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்' எனக் கடிதம் எழுதுகிறாள். கடித முடிவில் 'உங்கள் கீழ்ப்படியாத மிருணாள்' என்று முடிக்கிறாள்.

இன்றைக்கும் தன் கணவனுக்கு ஒரு கடிதம்கூட எழுதாத மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மனதில் கடிதம் கடிதமாக எழுதினாலும் தீராத வலி இருக்கிறது. 'உதிரிப்பூக்கள்' திரைப் படத்தில் ஒரு காட்சி உள்ளது. கோபக்கார விஜயன், வீட்டில் இருந்து வெளியே செல்வார். அதற்காகவே காத்திருந்த அவர் மனைவியின் தங்கை ஓடி வந்து, 'மாமா போயாச்சா?' என்றபடியே உரிமையுடன் அக்கா வீட்டில் நின்றபடியே சாப்பிடுவாள். பேசிச் சிரிப்பாள்.

நம் பெரும்பான்மை வீடுகளில் ஆண்கள் வெளியே சென்ற பிறகுதான், வீடு இயல்பான நிலைக்கு வருகிறது. சந்தோஷம்கொள்கிறது. சிரிப்பும் உற்சாகமும் இருக்கிறது. வீட்டின் தலைவன் என்ற ஆணின் செருப்புச் சத்தம் கேட்டவுடன் வீடு கல்லறை போல இறுகி மௌனமாகிவிடுகிறது. அவன் இல்லாத போது வீடு எவ்வளவு நெகிழ்வாக, இயல்பாக உள்ளது என்பதை அவன் ஒருபோதும் அறிவதும் இல்லை; அறிய ஆர்வம்கொள் வதும் இல்லை.

அடுத்தவரைப் பற்றி அக்கறைப்படுகிறவர் களால் மட்டுமே கடிதம் எழுத முடியும். குப்பை களின் கவிஞன் (Poet of The Wastes) என்ற இரானியத் திரைப்படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பாகப் பார்த்தேன். அதை இயக்கியவர் முகமது அஹ்மாதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குப்பை பொறுக்க வரும் ஓர் இளைஞனைப் பற்றியது. அந்த வேலைக்குக்கூட நேர்முகத் தேர்வு நடக்கிறது. அதில் அவன் பாஸ் செய்கிறான்.

குப்பைத்தொட்டியில் ஒரு நாள், கடிதம் ஒன்று கிழிந்துகிடப்பதைக் கண்டு, அதை எடுத்து ஒட்ட வைத்துப் படிக்கிறான். அது ஒரு பெண் தன் அண்ணனுக்கு எழுதியது. அவள் தன் கஷ்டங்களை எல்லாம் மனம்விட்டு எழுதியிருக்கிறாள்.

அண்ணனோ அதைப் படிக்காமலே கிழித்துப் போட்டுவிடுகிறான். குப்பை பொறுக்குகிறவன் அந்தப் பெண்ணின் துயரங்களை நினைத்து வருத்தப்படுகிறான். அதே போல கடிதம் அடிக்கடி வருகிறது. அண்ணன் கிழித்துக் கிழித்துப் போடுகிறான். முகம் அறியாத பெண்ணைச் சமாதானப்படுத்த அந்த முகவரிக்குத் தானே கடிதம் எழுதுகிறான் குப்பை பொறுக்குகிறவன். அது அந்தப் பெண்ணை ஆறுதல்படுத்துகிறது. முடிவில் அந்தப் பெண்ணுக்காகத் தன் சேமிப்புப் பணம் முழுவ தையும் அனுப்பிவைக்கிறான். அவள் ஒரு நாள் நேரில் காண வரும்போது, தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு அவளைப் பார்க்காமலே கடந்துபோய் விடுகிறான் குப்பை பொறுக்குகிறவன்.

பிறர் துயரைப் பகிர்ந்துகொள்ளப் பணம் காசு தர வேண்டும் என்பதில்லை. ஒரு கடிதம் போதும் என்ப தையே இந்த இரானியப் படம் விளக்குகிறது. சொற்கள் கவிதையிலும் காதல் கடிதங்களிலும் மட்டுமே எப்போதும் பசுமையோடு இருக்கின்றன என்பார்கள். தபால் அட்டையோ, மின்னஞ்சலோ எதுவாயினும் உங்கள் அக்கறைகளை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

மனிதர்களின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். அது தானியத்தைப் போன்றது. விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு, இன்னொரு விதையாகவும் மாறுகிறது. சொல்லை விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது!

வாசம் இல்லா வார்த்தைகள்!

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02

மும்பையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தின் வாசலில் கடந்த 25 வருடங்களாகக் கடிதம் எழுதித் தரும் வேலை செய்து வருகிறார் ஜி.பி.சாவந்த். எழுதப் படிக்கத் தெரியாத கூலிகள், அடித்தட்டு மக்கள், வேசைகள், திருடர்கள், வீட்டைவிட்டு ஓடி வந்தவர்களுக்குத்தான் கடிதம் எழுதித் தருவதாகச் சொல்லும் சாவந்த், இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியிருக்கிறார்.

தன்னைத் தேடி வந்து கடிதம் எழுதச் சொல்பவர்களிடம், எந்தப் பணமும் வசூலிப்பதில்லை. கடிதம் எழுதித் தருவதை ஒரு சேவையாகச் செய்து வந்திருக்கிறார்.

கடிதம் எழுதச் சொல்லும்போது, பலரும் தம் கஷ்டங்களைச் சொல்லி கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிய விஷ யங்களைத் தன் மனதில் ரகசியமாகப் புதைத்துவைத்திருப்பதாகவும், அதை ஒருபோதும் எவரிடமும் தான் சொல்வதில்லை என்கிறார் சாவந்த்,

மேலும் ''காதலர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டும் நான் ஒருபோதும் கடிதம் எழுதித் தருவது இல்லை. காரணம், அவர்கள் சொல்வதை நம்ப முடியாது. எந்த நிமிடமும் மாறிவிடுவார்கள். அது பிரச்னை'' என்கிறார்.

'கடைசியாக, எப்போது யாருக்குக் கடிதம் எழுதித் தந்தீர்கள்?' என்ற கேள்விக்கு, ''இரண்டு வருடங்கள் ஆகின்றன. எவரும் என்னிடம் கடிதம் எழுதித் தரும்படியாக வரவே இல்லை.

என் பிள்ளைகள்கூட இன்று படித்து வெளியூர்களில் வேலை செய்கிறார்கள். அவர்களோடு நானே செல்போனில்தான் பேசுகிறேன். கடிதம் எழுதித் தருவது இன்று தேவையற்றதாகிவிட்டது. ஒருவகையில் இது சந்தோஷமான வளர்ச்சி. ஆனால், இன்றுள்ள தலைமுறை, கடிதத்துக்காக நாள்கணக்கில் காத்திருந்து படித்த சந்தோஷத்தை அறியவே இல்லை.

தபால் பைக்குள் வெறும் கடிதங்கள் மட்டுமே இருப்பதில்லை. நம்பிக்கைகள், ஏக்கங்கள், கவலை, அக்கறை, பெருமூச்சு கோபம், ஏமாற்றம் யாவும் கொப்பளித்துக்கொண்டு இருக்கிறது. நாம் தவறவிட்டது கடிதங்களை மட்டுமில்லை; மனித நம்பிக்கைகளையும்தான்!'' என்கிறார் சாவந்த்.

 
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02
- இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்  - 02