மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

புத்தகச் சந்தையில் ஓர் இளம் பெண் எனது 'உறுபசி' நாவலை வாங்கிக்கொண்டுபுத்த கத்தில் என்னைக் கையெழுத்திடக் கேட்டார். 'உங்கள் பெயரைச் சொல்லுங்கள் கையெழுத்திட்டுத் தருகிறேன்' என்று சொன்னேன். 'அநித்யா' என்றார். 'கேள்விப்படாத பெயராக இருக்கிறதே... வட இந்தியரா?' என்று கேட்டேன். அந்தப் பெண் சிரித்தபடியே, 'அது என் பெயர் இல்லை' என்றார். 'அப்படியானால் யாருக்காக இந்தப் புத்தகம்?' என்றேன்.

தயங்கிய குரலில் அவர் பேச ஆரம்பித்தார். 'என் கணவருக்கு நான் பணம் கொடுத்துப் புத்தகம் வாங்குவது பிடிக்காது. வீட்டில் புத்தகம் படித்தால் திட்டுவார். கோபம் வந்தால் கிழித்துப் போட்டுவிடுவார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக நானாக உண்டாக்கிக்கொண்ட தோழியின் பெயர்தான் அநித்யா.

நிஜமாக அப்படி யாரும் இல்லை. அநித்யா என்னோடு வேலை பார்க்கிறாள். நிறையப் படிப்பவள் என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். அதனால் இந்தப் புத்தகங்களை அவர் எதுவும் செய்வது இல்லை. பத்து, இருபது புத்தகங்கள் சேர்ந்தவுடன் அவற்றை நானே கொண்டுபோய் முதியோர் காப்பகம் ஒன்றில் கொடுத்துவிடுவேன். இந்த உலகத்தில் என் கணவருக்குப் பிடிக்கவே பிடிக்காத பொருள் புத்தகம் மட்டுமே. புரட்டிக்கூடப் பார்க்க மாட்டார்' என்றார்.

'உங்கள் கணவர் என்ன வேலை செய்கிறார்?' என்று கேட்டேன். 'பன்னாட்டு வங்கியின் நிதி ஆலோசகராக இருக்கிறார். எம்.பி.ஏ., படித்து இருக்கிறார்' என்றார். 'எதனால் புத்தகங்கள் மீது அவருக்குக் கோபம்?' என்று கேட்டேன். 'தெரியவில்லை. இதைப்பற்றிப் பேசினாலே கோபம் வந்துவிடும். அதனால் வீட்டில் அதிகம் படிக்க முடியவில்லை. ரயிலில்தான் நிம்மதியாகப் புத்தகம் படிக்க முடிகிறது' என்றபடியே கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு போனார்.

புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட சரஸ்வதி என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு எப்படிப் புத்தகம் மீது இவ்வளவு கசப்பு உணர்வு உருவானது?

புத்தகம் படிக்க விருப்பம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், புத்தகங்களைப் பிறர் படிப்பதைப் பார்த்தாலே கோபம் வருவதை, புத்தகங்களை எரித்துவிடுவதை எப்படிப் புரிந்துகொள்வது? என்ன மனக் கோளாறு இது?

நான் சென்னை வந்த புதிதில் ஒரு மேன்ஷனில் தங்கி இருந்தேன். அந்த மேன்ஷனில் 80 சதவிகிதம் பேர் மாத வருமானம் உள்ளவர்கள். அதில் சிலர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். ஒன்றிரண்டு பேர் ஆய்வு மாணவர்கள். விதிவிலக்காக என்னைப் போன்ற இரண்டு உதவாக்கரைகள் இருந்தோம்.

எனது அடுத்த அறையில் இருந்த நபர் தினமும் காலை எட்டரை மணிக்கு அறைக்கு வந்து ஆங்கில நாளிதழ் வேண்டும் என்று கேட்பார். பரவாயில்லை, படிப்பதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என்று தந்துவிடுவேன். அடுத்த அரை மணி நேரத்துக்குப் பிறகு அதை மடித்தபடியே திரும்பக் கொண்டுவந்து தருவார்.

ஒரு நாள் பேப்பரை அவர் வாங்கிக்கொண்டு போன மறு நிமிஷம், தண்ணீர் வேண்டும் என்று அவரது அறைக்குப் போனபோது, அந்த ஆங்கில நாளிதழைத் தரையில் விரித்து உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்தவுடன் பேப்பர் வேண்டுமா சார் என்று கேட்டார். ஆத்திரமாக வந்தது.

'தரை ரொம்ப அழுக்கா இருக்கு சார். அதான்...' என்று இயல்பாகச் சொன்னார். அவரை என்ன செய்வது என்று புரியவே இல்லை. அவராவது பரவாயில்லை என்பது போல இன்னும் சிலர் மின்சாரம் இல்லாத நேரங்களில் விசிறுவதற்கும், ஆடும் கட்டிலுக்குக் கீழே முட்டுக்கொடுப்பதற்கும் மட்டுமே புத்தகங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

அந்த மேன்ஷனில் குடிப்பதற்கும் புகைப்பதற்கும் சினிமா பார்ப்பதற்கும் என ஆளுக்கு 300 ருபாய்க்கும் மேலாக வாரந்தோறும் செலவழிப்பார்கள். ஆனால், பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்குங்கள் என்றால், விரும்ப மாட்டார்கள். அத்துடன் அதெல்லாம் வேஸ்ட் சார் என்று அறிவுரை வேறு சொல்வார்கள். இந்த மனப்பாங்கு இன்று பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் எங்கும் புத்தகக் கண்காட்சிகள் சிறப்பாக நடந்து உள்ளன. கோடிக்கணக்கான ரூபாய்களுக்குப் புத்தகங்கள் விற்பனையாகின்றன என்கிறார்கள். இதன் மறுபக்கம் முன் எப்போதையும்விட புத்தகங்களின் மீதான ஏளனமும், வெறுப்பும், புறந்தள்ளுதலும் இப்போதுதான் அதிகமாகி இருக்கின்றன. அது எப்படி என்றுதான் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு நூலக விழாவுக்குச் சென்று இருந்தேன். டெல்லியில் வசிக்கும் ஒரு நண்பர் தனது தந்தையின் நினைவாக நூலகம் ஒன்றினைச் சொந்த ஊரில் உருவாக்கி அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைத்து இருந்தார்.

அவர்களது பூர்வீக வீட்டினை நூலகமாக்கி இருந்தார்கள். வசதியான மர இருக்கைகள், பெரிய மேஜை. இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பம், இலக்கியம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அழகாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அந்த ஊரின் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று கேட்டேன். '5 ஆயிரம் இருக்கக்கூடும். அருகில் இது போல இரண்டு சிறிய கிராமங்கள் உள்ளன' என்றார்கள். விழா நாளில் நிறையக் கூட்டம் வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு நண்பர் போன் செய்தார். எப்படி இருக்கிறது நூலகம் என்று கேட்டேன். கடந்த பத்து நாட்களாக ஒருவர்கூடப் புத்தகம் படிக்க வரவே இல்லை. இந்த நூலகம் கட்டிய பணத்தில் நாலு அடிபம்பு போட்டுக் கொடுத்திருந்தால்கூட குடிதண்ணீருக்கு ரொம்பப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஊர்க்காரர்கள் கோபப்படுகிறார்கள் என்றார். என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருந்தேன். அவராகவே தொடர்ந்து சொன்னார்.
'யாருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இல்லை. நாள் முழுவதும் வீட்டுக்குள்ளாக அடைந்துகிடந்து தொலைக்காட்சி மட்டுமே பார்க்கிறார்கள். அது ஏன் என்றுதான் புரியவில்லை. இன்னும் மூணு மாசம் பார்ப்பேன். இல்லாவிட்டால் மூடிவிடுவேன்' என்றார்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

தினசரி பண்பலை ரேடியோவுக்குச் சொந்த செலவில் போன் செய்து பிடித்த பாட்டு போடச் சொல்லிக் கேட்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். விடிய விடிய கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதில் உற்சாகம் பெருகி வழிகிறது. வெட்டிப் பேச்சு, ஊர்வம்பு எனத் தேடித் தேடிப் பேசுகிறார்கள். ஆனால், புத்தகம் படிக்க ஆர்வமாக முன்வரவில்லை என்பது மக்கள் மனதில் புரிந்துகொள்ள முடியாத நோய்மை உருவாகி இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

'புத்தகம் என்ன செய்யும்? ஏன் புத்தகம் படிக்க வேண்டும்' என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதிலாக உள்ளது ஒரு திரைப்படம். அது பிரபல பிரெஞ்சு இயக்குநர் த்ரூபா இயக்கிய 'Fahrenheit 451' என்ற படம், அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைகதையை த்ரூபா படமாக்கி இருக்கிறார். த்ரூபா இயக்கிய ஒரே ஆங்கிலப் படம் அது. ஃபாரன்ஹீட் 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலை.

எதிர்கால அமெரிக்காவில் இக்கதை நடக்கிறது. அங்கே புத்தகங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன. யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவரது புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீ எரிப்பதற்கு என்று தனியே தீ எரிப்புத் துறை ஒன்று இருந்தது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை செய்கிறான்.

எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையில் அபாய மணி அடிக்கப்படும். தீ வைப்பதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அங்கே அனுப்பிவைக்கப்பட்டு, புத்தகங்களைக் கொளுத்தி வருவார்கள்.

ஒரு நாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக். அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண், தன்னைக் கொளுத்திக்கொள்கிறாள்.

புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன் பிறகு தீவைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். திருடிய புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள் வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விஷயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். அவனை வேட்டையாடுகிறார்கள்.

உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைகிறான். அப்படி அலையும்போது நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினரைக் கண்டுபிடிக்கிறான். அவர் கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழு வதுமாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக் கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம் போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்து புத்தகம் எரிக்கப்பட்டாலும் அவர்கள் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து தருவதாகச் சொல்கிறார்கள்.

அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் பைபிளின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான். அந்த நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டுமழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று நடமாடும் புத்தக மனிதர்கள் வேறுஇடம் நோக்கிப் பயணம் செய்யத் துவங்குகிறார்கள். அவர்களை வழி நடத்திப் போகிறான் மாண்டெக்.

த்ரூபாவின் இப்படம் புத்தகம் வெறும் காகிதமல்ல என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறது. கண்ணாடி நம் முகத்தைக்காட்டுகிறது என்றால், அகத்தைக் காட்டுவதற்குப் புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்தப் பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.

ஹோவெர்டு பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் பூமியின் பொக்கிஷம் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். வேற்றுக் கிரகம் ஒன்றில் இருந்து இருவர் பூமிக்கு வருகிறார்கள். பூமியில் மனிதர்கள் உருவாக்கியதில் மிக விசித்திரமானதும் விலைமதிப்பு இல்லாததும் எது என்று தேடி அலைகிறார்கள். வைரம், தங்கம், வியப்பூட்டும் விஞ்ஞானப் பொருள்கள் என்று எதைக் கண்டபோதும் அதைவிடச் சிறப்பாகத் தங்கள் கிரகத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

முடிவில் அவர்கள் மியூஸியம் ஒன்றுக்குப் போகிறார் கள். அங்கே ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் பிரதி கள் பாதுகாத்துவைக்கப்பட்டு இருக்கின்றன. அதை இரவு பகலாக வாசிக்கின்றனர். முடிவில் வேற்றுக் கிரகவாசிகள் எங்கள் கிரகத்தில் இல்லாதது, பூமியில் இருப்பதில் சிறந்தது ஷேக்ஸ்பியர் நாடகங்களே. இந்தப் பூமியில் உள்ள எல்லா செல்வங்களைவிடவும் அற்புத மானது புத்தகம் மட்டுமே என்று ஒரு குறிப்பை வைத்து விட்டுத் தங்கள் கிரகத்துக்குப் பறந்து சென்றுவிடுகின்றனர் என்று கதை முடிகிறது.

மனிதர்களுடனேயே நினைவுகள் அழிந்துபோவது இல்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில்ஒளிந்துகொண்டு, தன்னை உயிர்ப்பித்துக்கொள்கின்றன. புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்!

பார்வை வெளிச்சம்

புத்தக வாசிப்பை அதிகப்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் அரசு, ஆண்டில் ஒரு மாதம் புத்தக வாசிப்பு மாதமாக அறிவித்து, எல்லா இடங்களிலும் புத்தக வாசிப்பு இயக்கம் நடத்துகிறது. எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீதியிலும் வாசிப்பு இயக்கத்துக்குச் சேவை செய்யும் இளைஞர்கள் நின்று தங்களுக்கு விருப்பமான கதையை வாசித்துக் காட்டுகிறார்கள். காபி ஷாப், அரசு அலுவலகம், பொது நூலகம். வணிக வளாகம், ரயில் நிலையம் என்று எல்லா இடங்களிலும் ஒரு மாத காலம் தொடர்ந்து புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெறுகிறது. நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியச் செயல்பாடு இது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10

பஞ்சாப் மாநிலத்தில் பறக்கும் நூலகங்கள் என்று பெயர்கொண்ட நடமாடும் கிராம நூலகம் இயங்கி வருகிறது. ஒரு பேருந்தை மாற்றி அமைத்து நடமாடும் நூலகம் ஆக்கியிருக்கிறார்கள். 1,600 புத்தகங்கள் உள்ள இந்தப் பேருந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து, அங்கு உள்ள கிராமங்களுக்கு வருகை தருகி றது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு நாள் என்று அந்தப் பேருந்து சுற்றி வருகிறது.

மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் இருப்பவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 22 லட்சம் செலவில் இப்படியான நடமாடும் நூலகத்தைத் துவக்கிஇருக்கிறார் டாக்டர் ஜஸ்வந்த் சிங். இவர் அமெரிக்காவில் நூலகராகப் பணியாற்றுகிறார்.

தனது சொந்தப் பணத்தில் கிராமங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக நடமாடும் நூலகம் உருவாக்கிஇருக்கிறார். இந்தப் பேருந்தில் புத்தகங்கள் மட்டுமின்றி பிரபஞ்சம், விஞ்ஞான வளர்ச்சி பற்றிய துண்டுப் படங்களும் திரையிடுவதற்கு வசதி உள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் தாங்களே தேர்வு செய்து எடுத்துச் செல்லும்படியாகப் புத்தகங்கள் உள்ளன. இந்த நடமாடும் நூலகத்தினால் கிராமப்புற பெண்கள் அதிகம் பயன் பெறுகிறார்கள்.

அரசின் முயற்சியோடு தனியார் கல்வி நிறுவனங்களும் வசதியான வணிக நிறுவனங்களும் முன் வந்தால் தமிழகத்திலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும்படியான இது போன்ற நடமாடும் கிராம நூலகங்களை உருவாக்கலாம்!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 10