மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09
 
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

மாலை நேரம். பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் எனது பையன்களுக்கான உடைகள் வாங்க நின்று இருந்தேன். ஓர் இளம் பெண் கையில் மிக அழகான கைக்குழந்தை. அந்தப் பெண்ணின் கணவர் ஏதோ உடைகளைத் தேர்வு செய்துகொண்டு இருந்தார். உடைந்து சிதறும் பனிக்கட்டி போன்ற சிரிப்புடன் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கையசைத்துக்கொண்டு இருந்தது குழந்தை. அதன் கண்கள் யாவரையும் தன்னை நோக்கி அழைத்துக்கொண்டு இருந்தன.

எவரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அந்தக் குழந்தையை அருகில் சென்று கொஞ்ச வேண்டும் என்று தோன்ற வும் இல்லை. எனக்கு அந்தக் குழந்தையை ஒரு நிமிஷமாவது கையில் தூக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.

அந்தக் குழந்தை தன்னைப் பார்க்கிறது என்று அங்கு இருந்த பலருக்கும் நன்றாகவே தெரிந்தது. ஆனாலும், எவரது கையும் குழந்தையைக் கொஞ்ச நீளவில்லை. ஒருவேளை அதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்களோ என்றுகூடத் தோன்றியது. என் மனைவி 'ஆமாம். அது அவர்கள் குழந்தையாயிற்றே... எந்த உரிமையும் இல்லாமல் எப்படித் தொடுவது, தூக்குவது?' என்று கேட்டாள். 'வேறு எப்படி அந்தக் குழந்தையின் மீதான அன்பைப் பகிர்ந்துகொள்வது?' என்று கேட்டேன்.

இப்போது எவரும் அடுத்தவர் குழந்தைகளைக் கொஞ்சுவதும் இல்லை. தூக்கி வைத்துக்கொள்ள விரும்புவதும் இல்லை. காலம் நிறைய மாறி இருக்கிறது.

எதற்காகக் கைவிட்டோம் என்று தெரியாமல் நமது இயல்பான பழக்கங்கள் வெகுவாக மாறி இருக் கின்றன.

நம் குழந்தை, மற்றவர் குழந்தைகள் என்ற பேதம் இன்று துல்லியமாக உள்ளது. அடுத்தவர் குழந்தைகள் என்பதால், அதன் வயதை மறந்து தன் இயல்பை மறந்து அதை வெறும் பொருளாகக் கருதும் சூழல் வந்திருக்கிறது.

ஒரு முறை சித்தூரில் இருந்து பேருந்தில் வந்துகொண்டு இருந்தபோது, ஒரு பெண் இரண்டு வயதுக் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தார். குழந்தை இடைவிடாமல் அழுதபடியே இருந்தது. 'இந்த ஸீட்டில் உட்காருகிறீர்களா?' என்று கேட்டேன். 'வேண்டாம்' என்றார். பேருந்தில் இருந்த பெண்கள் ஒருவர்கூட எழுந்து அவருக்கு ஸீட் கொடுக்கவில்லை.

பேருந்தில் எவ்வளவு நெருக்கடியான கூட்டத்திலும்கூட அந்நிய ஆண் அருகில் உட்காரக் கூடாது என்ற அர்த்தமற்ற நம்பிக்கைகொண்டவர்களாக, எதற்குப் பெண்களை வளர்த்து இருக்கிறோம் என்று கலாசாரச் சூழல் மீது கோபமாக வந்தது.

'குழந்தையையாவது என்னிடம் கொடுங்கள்' என்று கேட்டேன். தயக்கத்துடன் அதைக் கேட்காதவர் போல் இருந்தார். நான் கையை நீட்டியதும் குழந்தையை என்னிடம் தந்தார். மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு காற்று வரும்படியாக ஜன்னலை முழுமையாகத் திறந்துவைத்தேன். சில நிமிஷங்களில் அதன் அழுகை நின்றது. என் கைகளில் குழந்தையின் வெதுவெதுப்பும் மென்மையும் ஏறியது.
அதுவரை பேருந்துப் பயணம் ஏற்படுத்தி இருந்த அசதியும் களைப்பும் அப்படியே

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

கரைந்து போய், அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சின்னஞ் சிறு விரல்கள். பால் வெண்மையான கண்கள். சுருள் கேசம். வெளிறிய ரோஜா நிற உதடுகள். மடங் கிய காது. உதட்டில் ஒளிந்து இருந்த சிரிப்பு. குழந்தை என் கைவிரல்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண் டது. அந்த நிமிஷம் அது யாருடைய குழந்தையாகவோ எனக்குத் தோன்றவில்லை. அதற்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பது போன்றே இருந்தது.

பேருந்து குலுங்கும்போது அந்தக் குழந்தை குலுங்கிவிடாமல் கவனமாகப் பிடித்துக்கொண்டு வந்தேன். அடுத்த சிறுநகரில் அந்தப் பெண் இறங்குவதற்காக முயன்றபோது குழந்தையைத் தன்னிடம் கேட்டார். அதற்குள் குழந்தை உறங்கி இருந்தது. அதை என் கையில் இருந்து நீக்கி அவரிடம் தர மனமே இல்லை. குழந்தை பாதி உறக்கத்தில் விழித்து அழுதது. அந்தப் பெண்ணும் குழந்தையும் இறங்கிப் போனார்கள். ஆனால், சென்னை வந்து சேரும் வரை என் கைகளில் அந்தக் குழந்தையின் வெம்மையும் அது இல்லாத வெறுமையும் அப்படியே ஒட்டிக்கொண்டு இருந்தது.

குழந்தையைக் கையில் வாங்கும் நிமிஷத்தில் உலகம் மிகவும் பிரகாசமாகவும் பலூன் போல எடை இன்றி மிதப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. குழந்தைகள் எதையோ கற்றுத்தருகிறார்கள். மொழி இன்றி அவர் கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை. அதை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிது இல்லை.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் தயாரித்து, பீட்டர் அன்டோனிஷிவிக் இயக்கிய 'சேவியர்' (savior) திரைப்படம், ஒரு ராணுவ வீரனுக்கும் பச்சிளம் குழந்தைக்குமான உறவைப் பற்றியது. டெனிஸ்குவாய்ட் கதாநாயகனாக நடித்து இருந்தார். டெனிஸ், அமெரிக்க ராணுவத்தின் அதிரடிப் படை வீரர். அவரது மனைவியும் குழந்தைகளும் ஒரு வெடி குண்டு விபத்தில் இறந்து போகிறார்கள். அதில் இருந்து எந்தப் பிடிமானமும் அற்று வாழ்கிறார்.

அவரை போஸ்னிய யுத்த முனைக்கு செர்பிய ராணுவத்துக்கு உதவி செய்ய அமெரிக்கா அனுப்பிவைக்கிறது. அங்கே ஒரு முறை யுத்தக் கைதிகளைப் பரிமாற்றம் செய்யும்போது, வேரா என்ற கர்ப்பிணிப் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் சிறைச்சாலையில் கற்பழிக்கப்பட்டு கர்ப்பம்கொண்டு இருக்கிறாள். அதனால், பிரசவித்தவுடன் குழந்தையைக் கொன்றுவிட வேண்டும் என்று விரும்புகி றாள். அந்தப் பெண்ணை எல்லை கடந்து, கொண்டுபோய்விடும் வேலை டெனிசுக் குத் தரப்படுகிறது.

வழியில் வேரா பிரசவ வலி காண்கிறாள். குழந்தை பிறக்கிறது. 'இது என் குழந்தை இல்லை. யாரோ ஒருவன் என்னோடு வன்புணர்ச்சிகொண்டதால் உருவானது' என்று குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் வேரா. 'குழந்தை என்ன தவறு செய்தது. எதற்காக அது புறக்கணிக்கப்பட வேண்டும்?' என்று டெனிஸ் கோபப்படுகிறான். அதற்குள் வேராவின் அப்பாவும் சகோதரர் களும், 'அந்தக் குழந்தை வேறு மதத்தைச் சேர்ந்தது. கற்பழித்துப் பிறந்தது. அது கொல்லப்பட வேண்டும்' என்று துரத்துகிறார்கள்.

யுத்தம், மத துவேஷம், பாலியல் வன் புணர்ச்சி என்று இந்த உலகின் எந்தக் கொடுரமும் அறியாத குழந்தை... பசியில் அழுது துடிக்கிறது. வேராவையும் குழந் தையையும் பாதுகாப்பாகக் காப்பாற்றி அனுப்பிவைக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் வலிகளுமே படத்தின் மையக் கதை. முடிவில் குழந்தையை ஐ.நா. அமைதிப் பிரிவிடம் ஒப்படைத்து விட்டு, 'உலகம் எவ்வளவு கருணையற்றது' என்று கதறி அழுகிறான் டெனிஸ். அந்தக் கதறல் ராணுவ வீரனுக்கு உள்ளும் ஒரு மனிதன், ஒரு தகப்பன் இருக்கிறான் என்பதன் வெளிப்பாடாக அமைந்து இருக்கிறது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

சாவின் விளிம்பில் பிறக்கும் குழந்தை யின் போராட்டத்தைப் பற்றி இந்தத் திரைப்படம் ஒரு தளத்தில் வெளிப் படுத்துகிறது என்றால், சாவிலும் குழந் தையைக் கைவிட மாட்டேன் என்று மன உறுதிகொண்ட இளம் தாயின் கதையைச் சொல்கிறது மார்க்ரெட் யூரிசனாரின் 'மரணத்தின் பால்' என்ற சிறுகதை. பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான மார்க்ரெட் யூரிசனார் கீழைநாட்டுக் கதைகளை எழுதுவதில் தேர்ந் தவர். இவர், பிரெஞ்சு கலை - இலக்கிய அகாடமியின் தலைவராகப் பணியாற்றிய முதல் பெண் எழுத்தாளர்.

அக்கதை அல்பேனிய கிராம மக்களின் நம்பிக்கையில் ஒன்று. ஓர் ஊரில் மூன்று சகோ தரர்கள் இருந்தார்கள். மூவருக்கும் திருமணம் ஆகி இருந்தது. அவர்கள் அடிக்கடி கொள்ளைக் காரர்கள் வந்து, தங்களது பண்ணையைத் தாக்கிவிட்டுப் பொருட்களை கொள்ளை அடித்துப் போவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்புக் கோபுரம் உள்ள ஒரு கோட்டையைக் கட்ட முனைந்தார்கள்.

ஒரு கட்டடம் இடிந்து விழாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்றால், அதன் அடிப் பகுதி யில் ஒரு பெண்ணை நிற்கவைத்து அவளைச் சுற்றி சுவர் எழுப்பிவிட்டால், அந்த எலும்புக்கூடு கற்களின் பளுவைத் தாங்கிக்கொள்ளும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்தது. அதன் படியே சகோதரர்கள் மூவரும் எந்தப் பெண் ணைப் பலி கொடுப்பது என்று யோசித்தார்கள். மறு நாள் வேலை துவங்கும்போது யாருடைய மனைவி அவர்களுக்கு உணவு கொண்டுவரு கிறாளோ... அவளைப் பலி கொடுத்துவிடுவது என்று முடிவு செய்கிறார்கள்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

மறுநாள் கடைசித் தம்பியின் மனைவி தொட்டிலில் உறங்கும் கைக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் செய்துவிட்டு, உணவை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். கோபுர வேலை நடக்கும் இடத்துக்கு வந்த அவளை களப் பலியாகக் கொடுப்பது என்று முடிவுசெய்து, அதை அவளிடம் சொல்கிறார்கள். அவள் கதறுகிறாள். 'தன் குழந்தை இன்னமும் வளரவில்லை. அதற்காகவாவது தன்னை விட்டுவிடுங்கள்' என்கிறாள். அவர்கள் மறுக்கிறார்கள். அவளைச் சுற்றி ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கட்டுகிறார்கள். அவள் தனது கடைசி ஆசை ஒன்றை வெளிப்படுத்துகிறாள்.

தன் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதால் 'மார்பகங்கள் மட்டும் தெரியும்படியாக ஒரு செங்கல் அளவு இடைவெளி விடுங்கள். ஒவ்வொரு நாளும் என் குழந்தையைக் காலையிலும் மாலையிலும் இங்கே தூக்கிக்கொண்டு வாருங் கள். நான் இறந்துபோனாலும் என் மார்பில் பால் சுரக்கும்' என்கிறாள். அப்படியே கோட்டைச் சுவர் கட்டுகிறார்கள். அந்தப் பெண் சுவரினுள் புதைந்து போய்விடுகிறாள். அவளது மார்பகங்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன.

ஒவ்வொரு நாளும் குழந்தையை அந்தச் சுவரின் அருகில் கொண்டுபோகிறார்கள். சுவர் மெல்லிய சேலை போலாகி அந்தக் குழந்தையைத் தடவுகிறது. மார்பில் பால் சுரக்கிறது. குழந்தை குடித்தவுடன் வீட்டுக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள். இப்படி இறந்த பிறகும் அவள் மார்பில் பால் கசிந்துகொண்டே இருக்கிறது. குழந்தை வளர்ந்த பிறகு, அந்தப் பெண்ணின் ஸ்தனங்கள் மெள்ள வற்றி, உலர்ந்து, அவள் மார்பகம் இருந்த இடம் வெண்மை நிறச் சாம்பல் போலாகி சுவரில் விரிசல் காண்கிறது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

இடிந்து விழுந்த கற்களில் காணப்பட்ட பெண்ணின் பால் வடிந்த கறையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கினார்கள். பின்பு, சில வருஷங்களில் அந்தக் கோபுரம், கோட்டை யாவும் முற்றாக விழுந்துவிட்டது. ஆனாலும், அந்தக் கல்லில் இருந்த பாலின் மணம் மாறவே இல்லை என்று முடிகிறது கதை.

குழந்தைகள் உறங்கும்போது கடவுள் அதோடு பேசிக் கொண்டு இருப்பார். அதனால்தான் உறக்கத்தில் குழந்தை சிரிக்கிறது என்பார்கள். கடவுளே எதிரே வந்தாலும் 'இப்போது நேரம் இல்லை, விடுமுறை நாளில் வாருங்கள்' என்று கடந்து போய்விடும் நமக்குக் குழந்தைகள் மீது மட்டும் கூடுதல் அக்கறை வந்துவிடுமா என்ன?

பார்வை வெளிச்சம்

நினைவாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் கலைகளில் மிக முக்கியமானது அவதானம். கவனகம் என்றும் சொல்வார்கள். ஒரு நபர், ஒரே சமயத்தில் நடக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்பு இல்லாத நிகழ்வுகளை அவதானித்து, அதை வரிசை தவறாமல் துல்லியமாகக் கூறுவது இதன் தனிச் சிறப்பு.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09

அதாவது, ஒருவர் அவதானம் செய்பவரின் முதுகில் மயில் இறகால் தடவுகிறார். மற்றவர் மணி அடிக்கிறார். அடுத்தவர் எண்களைப் பலகையில் எழுதுகிறார். இன்னொருவர் ஒரு செய்யுளில் ஒவ்வொரு வார்த்தையாக எழுதிக்கொண்டு இருக்கிறார். மற்றவர் கம்பராமாயணப் பாடல் ஒன்றைக் கேட்கிறார். வேறு ஒருவர் மல்லிகைப் பூவைப் போடுகிறார். மணி கேட்கிறார். இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத 100 காரியங்கள் நடக்கின்றன. அத்தனையும் அவதானம் செய்பவர் சரியாகக் கூறுவதே இந்தக் கலையின் சிறப்பு அம்சம். அவதானம்செய்ப வர்களுக்கு ஆழ்ந்த தமிழ் அறிவு, இலக்கணப் புலமை, கணித அறிவு, கவிதை எழுதும்திறன், பாடல்களை நினைவில்கொள்ளும் திறன், கூர்ந்த புலன் நுட்பம் போன்றவை தேவை.

ஒரு நபர் ஒரு நேரத்தில் 10 விஷயங்களைச் செய்து காட்டினால் அவர் தசாவதானி. சோடஷாவதானம் என்றால் 32 விஷயங்களைச் செய்து காட்டுவது. 100 விஷயங்களைச்செய்து காட்டினால் அதன் பெயர் சதாவதானம். இக்கலையில் அஷ்டாவதானம் வீராச்சாமி செட்டியார், பூவை கல்யாணசுந்தர முதலியார் போன்றவர்கள் முன்னோடிக் கலைஞர்கள்.

தமிழகத்தில் சதாவதானம் செய்து பெரும் புகழ்பெற்றவர் செய்குதம்பிப் பாவலர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையைச் சேர்ந்த இவர், மிகச் சிறந்த தமிழ் அறிஞர். பாவலரின் நினைவாக தக்கலையில் ஒரு நினைவு மண்டபம் உள்ளது. அவரது பெயரால் ஒரு அவதானக் கலைப் பள்ளி உருவாக்கபட்டால், அது மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்கப்பெரிதும் உதவியாக இருக்கக்கூடும். இக்கலையில் இன்று 16 கவனகம் செய்யும் கனக சுப்புரத்தினம் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு இளம் அவதானிகளை உருவாக்கி வருகிறார்.

நினைவாற்றல் குறைவாக உள்ளது என்பதே மாணவர்கள் மீதான முதன்மையான குற்றச்சாட்டு. நம்மிடையே மரபான நினைவாற்றல் வளர்க்கும் கலையாக உள்ள அவதானத்தை, பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால், மாணவர்களுக்கு மிகப் பயன் உள்ளதாக அமையக்கூடும்!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09
- இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 09