மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

சிறிது வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிது வெளிச்சம்! ( எஸ்.ராமகிருஷ்ணன் )

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

எஸ்.ராமகிருஷ்ணன்
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08
சிறிது வெளிச்சம்!
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்யும் ஒரு வாசகர், தன் அப்பா பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். தன் ஊர் மயிலம் அரு கில் உள்ள கிராமம் என்று குறிப்பிட்டு, 'பள்ளி ஆசிரிய ராக வேலை செய்து ஓய்வு பெற்ற என் அப்பாவிடம் அரிய சேமிப்பு ஒன்று இருக்கிறது; நீங்கள் விரும்பினால், அவரைச் சந்திக்கலாம். ஒருநாள் என் அப்பாவைச் சந்திக்க நீங்கள் வருவீர்களா?' என்று கேட்டு இருந்தார்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

திடீரென ஒரு நாள் போன் வந்தது. தான் இப்போது கிராமத்துக்கு வந்திருப்பதாகவும், நான் விரும்பினால் வரலாம் என்றும் அழைத்தார். 'உங்கள் அப்பாவின் சேமிப்பு பற்றி எழுதியிருந்தீர்களே, அது என்ன?' என்று கேட்டேன். 'என் அப்பா புகைப்படங்கள் எடுக்கக் கூடி யவர். நிறைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அவரிடம் உள்ளன. நீங்கள் வந்து பாருங்கள்' என்றார். அடுத்த நாள் அவரது கிராமத்தில் இருந்தேன். அவரால் நம்பவே முடியவில்லை.

நண்பரின் அப்பாவுக்கு 65 வயது இருக்கும். சவரம் செய்யப்படாத, நரைத்த முகம். பேசுவதற்கு மிகுந்த தயக்கத்துடன் இருப்பதை அவரது கண்கள் காட்டிக்கொண்டு இருந்தன. நான் அருகில் அமர்ந்து, 'உங்களைப் பார்க் கத்தான் வந்திருக்கிறேன்' என்று சொன்னேன்.

'பையன் ஏதோ சும்மா சொல்லியிருக்கான். நான் அப்படி ஒண்ணும் பெரிசா போட்டோ எடுத்திடலை. ஏதோ ஆசையில் ஒரு கேமரா வாங்கினேன். அதிகம் எடுக்க வில்லை' என்று தயங்கித் தயங்கிச் சொன்னார். 'பரவாயில்லை. நீங்கள் எடுத்த புகைப்படங்களைக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றேன்.

அவர் தன்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு வரும்படி பையனி டம் சொன்னார். அந்த சூட்கேசுக்கு வயது நிச்சயம் முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கக்கூடும். அப்படியான சூட்கேஸ்கள் இன்று காண முடிவது இல்லை. அவர் பெட்டியைத் திறந்து, நாளிதழ்களில் இருந்து துண் டிக்கப்பட்டு இருந்த செய்தி கள், சான்றிதழ்கள் ஆகியவற் றைத் தனித்து எடுத்ததும் உள்ளே கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் நிரம்பி இருந்தன.

ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். இறந்து போய் தாடை கட்டப்பட்ட ஒருவரின் புகைப் படம். இன்னொரு புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நிறைய மலர் மாலைகள் போடப்பட்ட இறந்து போன மனிதனின் புகைப்படம். 'என்ன இது' என்று புரியாமல் நாலைந்து புகைப்படங்களைக் கையில் எடுத்துப் பார்த்தபோது, எல்லாமே செத்துப்போன மனிதர்களின் புகைப்படங்கள்.

அவராகவே சொன்னார், 'நான் எங்க கிராமத்தில் யார் செத்துப் போனாலும் அவங்களை ஒரு போட்டோ எடுத்து வெச்சுக்கிடுவேன். எதுக்குன்னு தெரியலை. ஆனா, என் 30 வயசுல இப்படி ஒரு ஆசை வந்துச்சு. அதுக் காகவே ஒரு கேமரா வாங்கினேன். வீட்ல இருக்கிறவங் களை ஒன்றிரண்டு படம் எடுத்திருக்கிறேன். மற்றபடி எங்க ஊர்ல வெவ்வேறு வயசுல செத்துப்போன எல்லோரது புகைப்படங்களும் என்கிட்டே இருக்கு.

எதுக்காக இந்தப் பழக்கம்னு தெரியலை. ஆனா, அது வளர்ந்து, பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கும் போய் செத்துப்போன ஆட்களை போட்டோ எடுக்க ஆரம்பிச் சேன். ஆரம்பத்தில் எல்லாம், இறந்துபோன ஆளை ஏன் போட்டோ எடுக்கிறேனு என்கூட சண்டை போடுவாங்க. அப்புறம் அவங்களுக்கும் பழகிப்போயி ருச்சி. யாரும் ஒண்ணும் சொல்றதில்லை.

சில சமயம், செத்துப்போன ஆளோட போட்டோ வேணும்னு கேட்பாங்க. பிரின்ட் போட்டுத் தருவேன். இப்படி என்கிட்டே ரெண்டாயிரத்துக்கும் மேல போட்டோ இருக்கு. இன்னொரு பெட்டி நிறைய வெச்சிருக்கேன். இப்போ இதை என்ன செய்றதுன்னு தெரியலை' என்றார்.

எனக்கு அவரது செயலின் பின்னுள்ள மனத் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. 'உயிரோடு இருப்பவர்களின் முகங்கள் உங்களுக்குப் பிடிப்பதில்லையா?' என்று கேட்டேன். 'அப்படி எல்லாம் இல்லை. செத்துப்போன மனுசங்கள் மீது ஏனோ எனக்கு ஈடுபாடு. அதைப் பயம்னு சொல் றதா... இல்லை, இந்த மனுசன் இனிமே உலகத்தில் இருக்க மாட்டான்கிறதாலயே அவன் நினைவைப் பதியவைக்கிற ஆசையான்னு தெரியலை. ஆனா, மனுஷ வாழ்க்கையோட அர்த்தம் இந்த போட்டோக்களைப் பார்த்தா புரியுது!' என்றபடியே அந்தப் புகைப்படத்தின் கட்டில் இருந்து பழைய புகைப் படம் ஒன்றை உருவி எடுத்தார். ஒவ்வொரு புகைப் படத்தின் பின்னாலும் தேதி இருக்கிறது. அந்தப் புகைப் படத்தில் இருந்த மனிதனைக் காட்டி, 'இவர் என்கூட வேலை பார்த்த வாத்தியார். இவரால நான் ரெண்டு முறை பள்ளிக்கூடத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருக்கிறேன். ஆனால், அவர் செத்த அன்று அவரது உடலைப் பார்க்கப் போயிருந்தேன். என்னை மீறி அழுகை அழுகையாக வந்தது. எதற்காக இந்த மனுசன் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்று புரியவில்லையே என்று தோன்றியது.

உயிரோடு இருந்தால் அவரை ஒருமுறைகூடப் புகைப் படம் எடுத்திருக்க மாட்டேன். அவரும் அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், இறந்த உடலைப் புகைப்படம் எடுத் துக்கொண்டு வந்து நாலைந்து நாட்கள் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை, நான் அவரைப் புகைப்படம் எடுத்துவைக்காமல் போயிருந்தால், அவர் மீதான வெறுப்பு இன்றைக்கும் அப்படியேதான் இருக்கக் கூடும்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

இதை எல்லாம் ஏன் செய்றேன்னு என் பிள்ளைகள், பொண்டாட்டிக்குக்கூடப் புரியலை. எனக்கு ஏதோ இந்தப் படங்கள் நிறைய கத்துக் கொடுத்திருக்கு. இன்னும் சில வருஷங்களில் நானும் இப்படியரு புகைப்படமாக மிஞ்சப்போகிறேன். இதை என்ன சார் செய்வது?' என்று கேட்டார்.

என்னிடம் பதில் இல்லை. வாழ்க்கையின் விசித்திரம் இதுதானோ! ஒவ்வொரு புகைப்படமும் நினைவின் சாட்சிதானே! எண்ணிக்கை அற்ற புகைப்படங்களின் வழியே பூமியில் வாழ்ந்து மறைந்து போன மனிதர்கள் இன்றும் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கி றார்கள். மனிதர்கள் எங்கிருந்து வாழ்க்கையின் அர்த் தத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்று யார் முடிவு செய்ய இயலும்?
சாவு சில கேள்விகளை விட்டுச் செல்கிறது; சில ரகசியங்களைப் புதைத்துவிடுகிறது; சில ஆறாத ரணங்களை உருவாக்கிவிடுகிறது. அவ்வகையில் யாசுனாரி கவாபட்டாவின் 'கடவுளின் எலும்புகள்' சிறுகதை நம் மனச்சாட்சியின் குரலாக வெளிப்படுகிறது. கவாபட்டா நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய இலக்கியவாதி.

ஒரு நடிகர், ஒரு மாணவன், ஒரு வணிக நிர்வாகி, ஓர் உணவக உரிமையாளர் என நான்கு வேறுபட்ட மனிதர்களுக்கு ஒருநாள், ஒரே மாதிரியான கடிதம் ஒன்று வந்திருந்தது. அந்தக் கடிதத்தை அனுப்பியவள் யூமிகோ என்ற பணிப் பெண். அந்தக் கடிதம் இப்படி எழுதப்பட்டு இருந்தது.

'நான் உங்களுக்கு எலும்புகளை அனுப்பிவைத் துள்ளேன். அவை கடவுளின் எலும்புகள். ஆமாம்! அது என் இறந்துபோன குழந்தையுடையது. பிறந்த சில நிமிடங் களில் இறந்துபோய்விட்டது. குழந்தை யாருடைய சாய லிலும் இருக்கவில்லை. குறிப்பாக, என் சாயல் அதில் துளிக்கூட இல்லை. உங்களில் ஒருவர் அதன் தகப்பன் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் ஜாடை எதுவும் அந்தக் குழந்தையிடம் இல்லை.

என் பாலைக் குடிப்பதற்கு முன்பே அது இறந்துவிட் டது. தான் யாருடைய சாயலிலும் இருக்க விரும்பவில்லை என்று அந்தக் குழந்தை கர்ப்பத்திலேயே நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் பிறந்தவுடன் இறந்துவிட்டது. உங்க ளுக்குப் பெண் வெறும் சுகப்பொருள் மட்டுமே! நான் கர்ப்பமானவுடன் நீங்கள் எவ்வளவு கலக்கமும் கோபமும் அடைந்தீர்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் படித்த அறிவாளிகள். உங்களைச் சுகப்படுத்துவதோடு நான் விலகிப் போயிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

என் கர்ப்பம் உங்களின் ரகசியச் செயலுக்கான வெளிப் படையான அடையாளம் போலாகியதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் குழந்தையின் மரணம் உங்களைச் சந்தோஷம்கொள்ள வைக்கக்கூடும். ஆகவே, அதன் எலும்புகளை உங்களுக்குப் பரிசாக அனுப்பி இருக்கிறேன்'.

அந்தக் கடிதத்தை நான்கு பேரும் ரகசியமாகப் படித்துவிட்டுத் தூர எறிந்து போனார்கள். அவர்களைப் பொறுத்தவரை, யூமிகோ அவர்கள் சந்தித்த எத்தனையோ பெண்களில் ஒருத்தி, அவ்வளவுதான் என்று கதை முடிகிறது.

அவர்களைப் பொறுத்தவரை குழந்தையின் மரணம் வெறும் செய்தி மட்டுமே! ஒரு வகையில், இந்த சாவைக் கண்டு அவர்கள் உள்ளூற சந்தோஷம் கொள்ளவும் கூடும். தங்களது இந்தக் காம இச்சையின் காரணமாக ஒரு குழந்தை பிறந்து இறந்துபோன குற்ற உணர்ச்சி எவருக்குமே இல்லை. இதுதான் நம் காலத்தின் அனுமதிக்க முடியாத பேரவலம்.

இப்படியான அற்ப மனிதர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சாவை எதிர்கொள்வதில்கூட சந்தோஷமும் தேடுதலுமாக இருக்க முடியும் என்று அடையாளம் காட்டும் சிலரும் உலகில் இருக்கவே செய்கிறார்கள். அப்படியான இருவரைப் பற்றிய படமே 'ஜிலீமீ ஙிuநீளீமீt லிவீst'. ராப் ரெய்னர் இயக்கிய இந்தப் படத்தில் ஜாக் நிக்கல்சன், மார்கன் ப்ரீமென் இருவரும் நடித்து இருக்கிறார்கள். சென்ற ஆண்டு வெளியான அற்புதமான படம் இது.

ஜாக் நிக்கல்சன் மிகப் பெரிய பணக்காரர். இவருக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். அங்கே தன்னைப் போலவே சாவுக்காகக் காத்திருக்கும் இன்னொரு புற்றுநோயாளி மார்கன் ப்ரீமெனைச் சந்திக்கிறார். நட்புகொள்கிறார்.

ஜாக் உல்லாச வாழ்க்கை அனுப வித்தவர். மார்கன் ப்ரீமெனோ குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று இருந்தவர். மெக்கானிக். சிறு வயதில் இருந்தே சரித்திரப் பேராசிரியராக ஆக வேண்டும் என்று கனவு கண்டவர். ஆனால், வாழ்க்கை நெருக்கடி அவரை அனுமதிக்கவே இல்லை.

ஆகவே, ஒருநாள் மார்கன் தான் சாவதற்கு முன்பாக எதை எதையெல்லாம் தான் அடைய வேண்டும் என்று ஒரு திட்டம் போடுகிறார். அந்தப் பட்டியல்தான் 'பக்கெட் லிஸ்ட்'. அந்தப் பட்டியல் விசித்திரமானது. உலகின் அதிசயங்களைக் காண வேண்டும் என்பதில் துவங்கி, கண்ணீர் வரும் வரை சிரிக்க வேண்டும் என்பது வரை உள்ளது.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

அதைக் கண்டுபிடித்த ஜாக், 'அந்தச் சந்தோஷங்களைத் தேடி இருவரும் புறப்படலாம். அதற்கான முழுச் செல வும் தன்னுடையது' என்று அழைக்கிறார். இருவரும் பயணம் கிளம்புகிறார்கள். ரேஸ் கார் ஓட்டுவது துவங்கி எகிப்திய பிரமிடில் ஏறுவது, ஆப்பிரிக்காவில் சிங்க வேட்டையாடுவது, ஸ்கை டைவிங், தாஜ்மகாலைக் காண்பது என்று விரும்பியதை எல்லாம் தேடி அனுபவிக்கிறார்கள். உலகின் சிறந்த காபியைக் குடிக்கிறார்கள். இந்தப் பயணம் அவர்களுக்குள் ஆழ்ந்த நட்பை உருவாக் குகிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதோடு, சொந்த வாழ்க்கையின் அந்தரங்கங்களையும் பகிர்ந்துகொள் கிறார்கள்.

ஜாக் நிக்கல்சன் பிரிந்து போன தன்னுடைய மகள் குறித்து ஆதங்கம்கொண்டு இருப்பதை அறிந்த மார்கன், அவளை ஜாக்கோடு ஒன்று சேர்ந்துவைக்க ஆசைப் படுகிறார். அது இருவருக்குள்ளும் கருத்து வேறுபாட்டை உருவாக்கிவிடவே, பிரிந்துவிடுகிறார்கள். சில மாதங்களுக்குப் பின், புற்றுநோய் அதிகமாகி மருத்துவ சிகிச்சை பலன் இன்றி இறந்துபோகிறார் மார்கன். தன் நண்பனுக்கான இறுதிப் பாடலுடன் வரும் ஜாக் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்கிறார்...

'இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நாங்கள் முகம் தெரியாத மனிதர்களாக இருந்தோம். ஆனால், பயணம் எங்களைப் பிரிக்க முடியாத நண்பர்களாகிவிட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்திக்கொண்டோம். மனிதர்கள் தனியாக சாவதற்குப் பயப்படுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. ஒருவேளை சாவில் எங்கள் கண்கள் மூடி இருந்தாலும் இதயம் திறந்தே இருக்கும்' என்கிறார்.

45 வருடங்கள் கண் முன்னே கடந்து போய்விட்டதே என்று ஓர் இடத்தில் மார்கன் நெகிழ்வுறும்போது, ஜாக் சொல்கிறார்... 'துவாரத்தின் வழியே புகை வெளியேறிப் போவது போலத்தான் நம் வயதும். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே எந்தச் சத்தமும் இன்றி வெளியேறிப் போய்விடுகிறது.'

அது 100 சதவிகித உண்மை. பெரும்பான்மை மனிதர் கள் அதை மறந்து, நான் யார் தெரியுமா என்று சுய மோகத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதுதான் பரிதாபகரமான நிஜம்!

பார்வை வெளிச்சம்

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

வ்ஜென் பாவ்கர் (Evgen Bavcar) பார்வையற்ற புகைப்படக் கலைஞர். வெனிஸ் அருகில் உள்ள ஸ்லோவெனிய நகரில் 1946-ல் பிறந்த இவர், 12 வயதில் ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்தார். நான்கு வருடங்கள் முன்பு, தான் விரும்பிய ஒரு பெண்ணைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நண்பனின் உதவியால் அவளைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதுதான் முதல் முயற்சி. அன்று துவங்கிய புகைப்படக் கலை மீதான ஆசை அவருக்குள்ளாகவே வளர்ந்து, இன்று உலகம் அறிந்த புகைப்படக் கலைஞராக மாற்றியுள்ளது.

பாரீஸின் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த பாவ்கர், 'சிட்டி லைட்ஸ்' என்ற பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். தனது கண்கள் மட்டுமே செயல் இழந்துபோயிருக்கின்றன; மனது ஆரோக்கியமாக, மிகுந்த கற்பனை உணர்வுடன் இருக்கிறது. தனது புகைப்படங்கள் மனதின் வெளிப்பாடுகளே எனும் பாவ்கர், நண்பர்களின் உதவியோடு புகைப்படம் எடுத்து வருகிறார்.

கேமராவைத் தன் உதடு அளவிலான உயரத்தில் வைத்துக்கொள்வதாகவும் தனக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தைத் தன் காலடியால் அளந்து முடிவு செய்துகொண்டு, கேமராவின் லென்ஸை முடிவு செய்வதாகவும் கூறும் இவர், 'பார்வை அற்றவர்களுக்காக கேமராவில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அப்படியான விசேஷ கேமராக்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை' என்கிறார்.

சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08

'கண்ணால் காண முடியும் புகைப்படக் கலைஞர்களைப் போல என்னால் புகைப்படம் எடுக்க முடியாது; ஆனாலும், என் புகைப்படங்கள் அகக் கண்ணால் உருவாக்கப்படுபவை. உள்ளுணர்வு தான் என்னை இயக்குகிறது. நான் நினைத்தபடி அந்தப் புகைப் படம் வந்துள்ளதா என்பதை நண்பர்கள் உதவியால் மட்டுமே தெரிந்துகொள்கிறேன்' என்று தனது புகைப்படங்கள் குறித்து உற்சாகமாகச் சொல்கிறார் பாவ்கர்.
இன்று நவீன டிஜிட்டல் கேமராக்கள் வந்துள்ளதால், பார்வைஅற்ற எவரும் எளிதாகப் புகைப்படம் எடுக்க முடியும். எனவே, பார்வையற்ற சிறுவர்களுக்காகப் புகைப்படக் கலைப் பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகச் சொல்லும் பாவ் கரின் புகைப்படங்கள், உலகின் பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது.

பார்வை இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த புகைப்படக் கலையில்கூட பார்வையற்றவர்கள் சாதனை புரிய முடியும் என்பதற்கு இவர் ஓர் உலகறிந்த உதாரணம்!

 
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08
-இன்னும் பரவும்...
சிறிது வெளிச்சம்! -எஸ்.ராமகிருஷ்ணன் - 08